இந்த கட்டுரைத் தொடரைப் படித்துவரும் பல "பாலஜோதிடம்' வாசகர்கள் மற்றும் ஜோதிடப் பெருமக்கள் பல கேள்விகளைக் கேட்டனர்.
இராமரின் வாழ்க்கை திரேதாயுகத்தில் நடந்து முடிந்து போனது.
அதனை இப்போது அறிந்துகொள்வதால் எங்களுக்கு என்ன பயன்? இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் வாழ்வில் அனுபவித்துக்கொண்டி ருக்கும் பிரச்சினை, தடைகள், குறைகள் தீர்ந்து நல்வாழ்வடைய வழி என்ன?
முற்பிறவி- இப்பிறவி- மறுபிறவி என கூறுகிறீர்கள். மறுபிறவி என்பது உண்மையா? அதை எவ்வாறு அறிந்துகொள்வது? புராணங்கள், இதிகாசங்களுக்குள்ள வேறுபாடு பற்றி விளக்கம் கூறுங்கள்.
எங்கள் வம்ச முன்னோர்களில் யாரோ செய்த தவறுகள், பாவங்களுக்கு நாங்கள் ஏன் சிரமத்தை அனுபவிக்க வேண்டும்? நாங்கள் எவ்வாறு பொறுப்பாளியாவோம்?
ஒருவர் செய்த பாவம்தீர இந்த பூமியில் பல பிறவிகள் பிறக்கவேண்டுமென்று கூறுகிறீர்கள். மண்ணுலகில் பிறவியில்லாத நிலையை அடைவதற்கு வழி என்ன?
மனிதர்களுக்கு பாவ- சாபப் பதிவுகள் எங்கே- எவ்வாறு உருவாகிறது? முற்பிறவி பாவ- சாபங்களால் வாழ்வில் உண்டாகும் சிரமம், காரியத்தடைகள் போன்றவை பரிகாரங்கள் செய்தால் பலன் கிடைக்காதா? தடைகள் விலகாதா?
வேதமுறை கணித ஜோதிடத்திற்கும், சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை ஜோதிடத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதே? இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? என கேட்டுள்ளார்கள்.
சிலர் ஜோதிடர்கள், "கிரகங்கள் தான் மனிதர்களின் வாழ்க்கையில் நன்மை- தீமைகளை தீர்மானித்து செயல்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள், ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ- புண்ணியச் செயல்களால்தான் இப்பிறவி வாழ்வில் நன்மை- தீமைகள் உண்டாகின்றன என்று கூறுகிறீர்கள். முற்பிறவியில் செய்த பாவம், சாபம் யாருக்குத் தெரியும்?'
என்று கேட்டு, பின்னர் நான் கூறிய விளக்கத்தை ஏற்றுக்கொண்ட ஜோதிடப் பெருமக்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொள்கிறேன்.
பல வாசகர்கள், "நீங்கள் எழுதியுள்ளதுபோல எங்கள் ஜாதகத் திலும் கிரகங்கள் அமைந்துள்ளன. நீங்கள் எழுதியுள்ளபடியே பலன்களை அனுபவித்து வருகிறோம்' என்று தங்கள் அனுபவத்தைக் கூறினர். அந்த அன்பர்களுக்கும் நன்றி.
இன்றைய நாளில் பிரபலமான மிகப்பெரிய ஜோதிடர்கள், சாதாரண நிலையிலுள்ள ஜோதிடர்கள் என பலரும், கணித ஜோதிட முறையில் ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலையைக் கணக்கிட்டு பலன்கூறி வருகின்றனர்.
ஜோதிடத் தொழில் செய்துவரும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையும், ஆண் வாரிசு இல்லாத நிலையும், அற்ப ஆயுளில் குழந்தைகள் இறந்துபோவதும், பெண் குழந்தைகள் மட்டும் இருப்பதும், தந்தை- மகனுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாதலும், பிள்ளைகளுக்கு கல்வி, தொழில், திருமணம் போன்றவற்றில் தடையான நிலையும், சிலருக்கு கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, விவாகரத்து, பிரிவுபோன்ற நிகழ்வுகளும், குடும்ப உறவுகளிடையே பகையும், சிலருக்கு பூர்வீக சொத்துகள் இல்லாமல் போவதும், இருந்தாலும் அதில் பிரச்சினையும், சிலர் வீட்டில் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதும் என இதுபோன்ற இன்னும் பல சிரமங்களை அனுபவித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஜோதிடர்கள் தங்கள் வாழ்விலுள்ள இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் காரணம் கேட்டு, ஜீவநாடியில் பிராயச்சித்தம் அறிந்து நிவர்த்தி வழிமுறைகளைக் கேட்டுச் செல்கிறார்கள். கணித ஜோதிடம் மூலமாக காரணம் அறியமுடியாமல்தான் ஜீவநாடியில் பலனறிந்தனர்.
கிரகங்கள் மனித வாழ்வில் நன்மை- தீமைகளைத் தருவதில்லை. அவரவர் முற்பிறவி பாவ- சாப- கர்மவினைகளே இப்பிறவி வாழ்வில் அனைத் தையும் தீர்மானித்துத் தருகின்றன என்பதை அனுபவத்தால் அறிந்து உண்மையைத்தான் கூறுகிறேன்.
"தன்னைத் தானும் அறிந்துகொண்டு ஊருக்கு சொல்லவேண்டும்' என்பது என் பணிவான கருத்து.
ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்கள் அவரவரின் குடும்ப உறவுகளைக் குறிக்கும் உதாரண கிரகங்கள்தான். ஒருவர் ஜாதகத்திலுள்ள சூரியன் அவரது தந்தை, மகனைக் குறிக்கும். சந்திரன் தாயையும், சுக்கிரன் மனைவியையும் குறிக்கும் என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்த கட்டுரைத் தொடக்கத்தில் வாசகர்கள் கேட்ட முதல் கேள்விக்கான பதிலை அடுத்த இதழில் கூறுகிறேன்.
(தொடரும்)
செல்: 99441 13267