ஒரு மனிதன் செய்யும் செயல் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாக வும் மற்றவரை பாதிக்கும். இது இராமாயணம்மூலம் நமக்கு உணர்த்தப் படுகிறது.
இராமன் அதற்கு முந்தைய பரசுராம அவதாரத்தில், தந்தையின் சொற்படி தன் தாயை வெட்டிக்கொன்றார்.
அப்போது அதனைத் தடுக்கமுயன்ற ஒரு பாமரப் பெண்ணையும் கொன்றார். அந்தப் பெண்ணுக்கும் பரசுராமருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவளைக் கொன்றதால் ஏற்பட்ட பாமரப் பெண் சாபம் இராமாவதாரத்தில் கூனி மந்தரை வடிவில் தொடர்ந்தது.
கைகேயியின் பணிப்பெண் மந்தரை. அவளுக்கும் இராமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அயோத்தியை யார் ஆட்சி செய்யவேண்டும் என்னும் கவலை அவளுக்குத் தேவையில்லை. ஆனால் இந்த மந்தரைதான் இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்லவேண்டும்; கைகேயியின் மகன் பரதன் நாடாளவேண்டும் என்னும் யோசனையை கைகேயியிடம் கூறி தசரதனிடம் கேட்கவைத்தாள்.
இராமன்மீது அளவற்ற பாசம் வைத்திருந்த கைகேயி, மந்தரையின் பேச்சைக்கேட்டு இராமன்மீதுள்ள பாசம் நீங்கி, மனம் மாறி இராமனைக் காட்டுக்கு அனுப்பவேண்டும்; பரதனுக்கு அயோத்தி மன்னனாக முடிசூட்டவேண்டும் என்று கூறி, தசரதனை ஒப்புக்கொள்ளச் செய்தாள்.
பரசுராம அவதாரத்தில் தனக்கு சம்பந்தமில்லாத ஒரு பாமரப் பெண்ணைக் கொன்றதால், அந்த வினையானது இராமனுக்கு சம்பந்தமில்லாத ஒரு பாமரப் பெண்மூலம் செயல்பட்டு, அந்த வினைக்கு எதிர்வினையாக இராமனை நாடாளவிடாமல், அரண்மனையிலும் இருக்கவிடாமல் வெளியேறச் செய்தது.
ஒரு மனிதன் தன் வாழ்வில் ஒரு பாவத்தை அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் அது அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்துவந்து பாதிப்பைத் தரும். பரசுராமரின் கோபச்செயல் இராமனை வனவாசம் செல்ல வைத்தது.
இன்றைய நாட்களிலும் ஒருவர் பதவிபலம், உடல்பலம், ஆள்பலம், அதிகாரபலத்தைக்கொண்டு பிறருக்குச் செய்யும் தீமைகளுக்குரிய தண்டனையை, அவர் அடுத்த பிறவியிலோ அல்லது அவரது வம்ச வாரிசுகளையோ அடைந்து சிரமப்படுத்தும் என்பதை இராமாயணத்தின் இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
இராமனின் மனைவி சீதை, மகாவிஷ்ணுவின் மனைவியான பூமாதேவி என்று கூறப்படுகிறது. பூமாதேவி அனைத்து ஞானமும் உடையவள். இந்த பூமியில் உண்மை எது- பொய் எதுவென்று தெரிந்தவள். இந்த மண்ணுலகிலுள்ள அனைத்து உயிரினங்களையும், தாவரங்களையும், உலோகங்களையும், பஞ்சபூதங்கள் என அனைத்தையும் தன்னுள் தாங்கிக் காப்பாற்றுபவள். இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருப்பவள். அத்தகைய பூமாதேவியின் அம்சமான சீதையால் இராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தையும் இங்கு காண்போம்.
இராமனும் சீதையும் வனவாசம் சென்று காட்டில் வசித்தபோது, மாரீசன் என்னும் மாயாவி பொன்மான் வடிவம் கொண்டு சீதையின்முன்பு தோன்றினான். அந்த மானைப் பார்த்து அதன் அழகில் மயங்கிய சீதை, அந்த மானைப் பிடித்துத் தருமாறு தன் கணவனிடம் கேட்டாள்.
இந்த பூமியிலுள்ள அனைத்து உயிரினங் களும் ரத்தமும் சதையும்கொண்டு தோலால் மூடப்பட்டுதான் இருக்கும். இதுபோன்ற பொன்மான் இந்த பூமியில் இருக்காது என்பது பூமாதேவியான சீதைக்குத் தெரியாமலில்லை. ஆனால் இராமனுக்கு உண்டான பெண்சாபம், குடும்பத்திற்கு வாழவந்த பெண்ணான மனைவியின் மதியை மயக்கி செயல்படவைத்தது. சீதை கூறியதைக்கேட்டு இராமனும், பொன்மான் பூமியில் இருக்காது என்பதை ஆராய்ந்துபாராமல் அந்த மாயமானைப் பிடிக்க விரட்டிச் சென்றான். விதி வேலைசெய்யத் தொடங்கியது. இந்த நிகழ்வுதான் முதன்முதலில் இராமனும் சீதையும் பிரிய ஆரம்பப் புள்ளியாக அமைந்தது.
இந்த நிகழ்வுக்குப்பின்தான் இராமனது அமைதியான வாழ்வில் புயல்வீசத் தொடங்கியது. இராவணன் சீதையை அபகரித்துச் சென்று அசோகவனத்தில் சிறை வைத்தான். இராமன் தன் மனைவியைத் தேடியலைந்து அனுமன், சுக்ரீவன், அங்கதன் போன்ற வானரங்கள் உதவியுடன் இராவணனு டன் போர்புரிந்து, அவனைக்கொன்று சீதையை மீட்டான். காட்டில் அன்பும் அமைதியுமாக சென்றுகொண்டிருந்த இராமனையும் சீதையையும் வாழ்வில் மிகவும் துன்பம்கொள்ளச் செய்தது சீதையின் செயல்தான்.
இராவணனைக் கொன்று சீதையை மீட்டுவந்தாலும், அதன்பின் இராமனுடன் சேர்ந்து சீதை முழுமையாக- நிம்மதியாக வாழமுடியவில்லை. மறுபடியும் இருவரும் பிரிந்தார்கள். பெண்சாபம் உண்டாக்கிய வினையால் அதன்பின் இருவரும் ஒன்றுசேரவே இல்லை.
இராமாயணம் கூறும் இந்த நிகழ்வு மூலம் குடும்பத்தில் மனைவி என்பவள் தன் சுய விருப்பங்களை நீக்கி, எதிலும் உண்மையாக இருந்து பொய்யறியாமல் வாழவேண்டும். தன் மனம்போன போக்கில் வாழக்கூடாது. தங்களிடம் உள்ளதை வைத்து நிம்மதியான வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். பெண்ணால் குடும்பம் குலைந்துவிடக்கூடாது என்னும் கருத்தை இராமாயணம் பெண் களுக்கு அறிவுறுத்துகிறது. குடும்பப் பெண்கள் ஆசையை அடக்கி பொறுப்புடன் வாழ வேண்டும். தன் குடும்ப நிலை தெரியாமல் மனம்போன போக்கில் செயல்பட்டு வாழ்ந்தால், சீதை இராவணனிடம் சிக்கி சிரமப்பட்டதுபோல இந்தப் பெண்களும் மற்றவரிடம் சிக்கி மரண அவஸ்தை அடைய நேரிடும். குடும்ப கௌரவமும் தாழ்ந்துவிடும்.
ஒருவருக்கு ஜாதகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் வாழ்வில் இராமருக்கு ஏற்பட்டதுபோல தாய், மனைவி, உறவுப் பெண்கள் மற்றும் சம்பந்தமில்லாத பெண்களால் இது போன்ற சிரமங்கள் இருந்தால், அவருக்கு பெண் சாபப் பாதிப்புண்டு என்று அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பெண் சாபம் உள்ளவர்கள் ஜோதிடம் பார்த் தாலோ, குறி கேட்டாலோ கன்னி தெய்வம் சம்பந்தம் இருப்பதாக சொல்வார்கள். இரவில் குடுகுடுப்பைக்காரர்கள் "இந்த வீட்டில் கன்னி தெய்வம் இருக்கிறது' என்று கூறுவார்கள். அது கன்னி தெய்வமல்ல. வம்சத்தில் பாதிக்கப்பட்டு இறந்துபோன பெண்களின் ஆன்மா என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். பாதிக்கப்பட்ட அந்த ஆன்மா பல சிரமங்களைத் தந்து அனுபவிக்கச் செய்யும்.
(தொடரும்)
செல்: 99441 13267