புராண, இதிகாசக் கதைகள், ஒரு மனிதன் (ஆத்மா) தன் முற்பிறவி பாவ- சாப வினைப்பதிவுகள் நிவர்த்தியாக, இப்பிறவி வாழ்வில் வழிபாடுகள், பரிகாரங்களைக் கூறும் நூல்களா அல்லது நடைமுறை வழிகளைக் கூறும் நூல்களா என்ற கேள்விக்கு சித்தர்கள் கூறும் பதிலை அறிவோம்.

இம்மண்ணுலகில் மனிதனாகப் பிறந்துவாழும் ஒவ்வொருவரும் தன் முற்பிறவிகளில் செய்த பாவம், அதனால் அடைந்த சாபத்தால் அடுத்தடுத்துப் பிறக்கும் வாழ்க்கையில், எந்தெந்த வழிகளில் இயற்கை நிர்ணயித்த எந்த சக்தியாலும் மாற்றமுடியாத தண்டனைகளான சிரமம், தடை, வறுமை, நோய், பித்ரு, புத்ர, களத்திரம், கர்மம் (தொழில்), சொத்து போன்றவற்றில் குறையுடன் வாழ்வான் என்பதை மக்கள் அறிந்துகொள்ளவே ரிஷிகள், முனிவர்கள் புராண, இதிகாசக் கதைகளில், கடவுள்களையே மனித கதாபாத்திரங்களாக்கி, அவர்கள் அனுபவித்த துன்பங்கள்போல் பாவம் செய்தவர்கள் அனுபவித்து வாழ்வார்கள் என்ற கருத்தைக்கூறி எழுதிவைத்துள்ளனர்.

raa

Advertisment

இராமாயண காவிய நாயகன் இராமனைப் போன்று, பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, பூர்வீக சொத்துகளை இழந்து, உறவுகளால் ஒதுக்கப்பட்டு, குடும்பம் குலைந்து வாழ்பவர்கள்-

தர்மனைப்போன்று, தவறான செயல்களைச் செய்து பட்டம், பதவி, பணம், சொத்து, மரியாதை இழந்து, வசிக்கக்கூட வீடில்லாமல் தானும் சிரமப்பட்டு, தன் மனைவி, மக்கள் என குடும்பத்தாரையும் கஷ்டப்படச் செய்து வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்-

நிடத நாட்டு மன்னன்

நளனைப்போன்று சொத்து, சுகங்களை இழந்து, மனைவி, குடும்பத்தை மறந்து, பிரிந்து, மனநோயுடன் தனித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்-

அரிச்சந்திரனைப்போன்று மனைவி, குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்வைப்பற்றி சிந்திக்காமல், தான் செய்வதுதான் சரியென்று கூறி, தன்நலன் விரும்புபவர்களின் பேச்சைக் கேளாமல், ஆணாதிக்கச் செயலால் அரசபதவி, பட்டம் சொத்துகளை இழந்து கடனாளியாகி, தன் மனைவி, குழந்தையை பசியும், பட்டினியுமாய் அலையவிட்டு, அரசனாக இருந்தவன் தானும், தன் குடும்பத்தாரும் ஒருவேளை சோற்றுக்காக அடுத்தவரிடம் அடிமைவேலை செய்து வாழ்ந்தான். இதுபோல வாழ்பவர்கள் இன்றைய நாளிலும் உண்டு.

இராமர், தர்மர், நளன், அரிச்சந்திரன் போன்றோரின் வாழ்க்கையைப் போன்று, உயர்ந்த நிலையில், செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள் பலகோடி பேர், தங்களின் முற்பிறவி பாவ- சாபங்களுக்கு உண்டான தண்டனையாக, இப்பிறவி வாழ்வில் அனைத்தையும் இழந்து வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்று இருப்பவர்கள்தான் தர்மர், நளன், அரிச்சந்திரன் போன்றவர்களின் மறுபிறவிகள். இவர்களை முன்னுதாரணமாகக்கொண்டு வாழக்கூடாதென்று மனிதனுக்கு புராணங்கள் கூறும் கருத்தாகும்.

பிறப்பு ஜாதகம் இல்லாதவர்களும்கூட, இதுபோன்ற வாழ்க்கை நிலை அமைந்திருந்தால், தனக்கு இந்த கஷ்டநிலை ஏன் வந்தது என்றும், தன் முற்பிறவி பாவ- சாப வினைப்பதிவுகள் எவை என்றும் தங்களின் வாழ்க்கை அனுபவத்திலேயே தெரிந்துகொள்ளலாம்.

ஒரு மனிதன் வாழ்வில், சிரமம், தடை, எதிர்ப்பு இருந்தால் அவர்கள் சுந்தரகாண்டம் படிக்கவேண்டும்; எதிரிகளால் தொல்லை, வழக்கு வியாஜ்ஜியம் இருந்தால் அவை தீர்வதற்கு "கீசகவதம்' படிக்கவேண்டும்; நாட்டில் மழைபெய்யவில்லை, வறுமை தீரவேண்டும் என்றால் "விராட பர்வம்' பாராயணம் செய்யவேண்டும்; வாழ்வில் உண்டாகும் சிரமம், தடைகள் விலக நாம பாராயணம், அபிஷேகம், அர்ச்சனை, பூஜை, ஹோமம், பலவிதமான பிரார்த்தனைகள் என செய்தால் சிரமங்கள் தீர்ந்துவிடுமென்று புராண, இதிகாசங்களை உதாரணமாகக் கூறி சிலர் தவறான வழிகளைக் காட்டிவருகிறார்கள்.

ஒரு மனிதன் (ஆன்மா) தன் பாவ- சாபம் நிவர்த்தியாக ஆன்மிக வழிபாடுகளை செய்யவேண்டும் என்று புராண, இதிகாசக் கதைகளில் அவற்றை எழுதிய ரிஷிகள், முனிவர்கள் கூறவில்லை. இராமர், கிருஷ்ணர், தர்மர், நளன், அரிச்சந்திரன் போன்றோர் தங்கள் கஷ்டங்கள் தீர வழிபாடு, பரிகாரங்களைச் செய்து நன்மைகளை அடைந்துகொள்ளவில்லை. புராண, இதிகாசங்கள் மனிதர்கள் காலத்தையறிந்து, கர்மவினையறிந்து, தன்சுய அறிவாலும் அனுபவத்தின்மூலமும் சிரமம் தீர வழிகாட்டும் நூல்கள்தானே தவிர, ஆன்மிக வழிபாடுகளை செய்யச் சொல்லும் நூல்கள் அல்ல என்கிறார்கள் சித்தர்கள்.

புராண, இதிகாசங்களைப் பொருளறிந்து படித்தால், இதன் உண்மையைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். மனிதர்கள் நல்வாழ்வடைய முனிவர்கள் மனிதர்களின் இயல்பு, குணம், நடைமுறை வாழ்க்கை, அதனால் உண்டாகும் நன்மை- தீமைகள், அறிவுசார்ந்த வாழ்க்கைமுறை, அனுபவ அறிவு என இதுபோன்று இன்னும் ஏராளமான நல்ல கருத்துகளை எழுதி வழிகாட்டியுள்ளார்கள். இவை வாழ வழிகாட்டும் நூல்களாகும்.

இன்றையநாளில் பொருளாசை கொண்ட சில மனிதர்கள் புராண, இதிகாசக் கதைகள் கூறும் உண்மைக் கருத்தை மாற்றிக்கூறி பட்டிமன்றம், உபான்யாசம், சினிமா, டி.வி., சீரியங்கள்மூலம், தங்கள் விருப்பம்போல், புதிது புதிதாக கதைகளைச் சேர்த்துக்கூறி, மக்களை நம்பவைத்து பணம் சம்பாதித்து கொள்கிறார்கள். முனிவர்கள் கூறிய மூலக்கருத்தையே மாற்றிவிட்டார்கள். புராண, இதிகாசங்களை பகுத்தறிவுடன் படித்தால் உண்மைப்பொருள் புரியும், பாவ- சாபம் தீர சுலபமான வழியும் உங்களுக்குக் கிடைக்கும்.

இராமாயண காவிய நாயகன் இராமன் கடவுள் அவதாரப் பிறவி என்றாலும், அவரும் பூவுலகில் மனிதானகப் பிறந்து, தன் கடவுள் சக்திகளைப் பயன்படுத்தாமல் ஒரு சாதாரண மனிதனைப்போல். போட்டியில் வென்று, சீதையை மணந்து, திருமணத்திற்குப்பின் பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, வனவாசம் சென்று பல துன்பங்களை அனுபவித்தார்.

வனவாசம் முடிந்து அயோத்திக்கு திரும்பவந்து மன்னனாக முடிசூட்டிக் கொண்டார்.

அயோத்தி மன்னனான பின்பும், தன் மனைவியைக் காட்டிற்கு அனுப்பிவிட்டு, இவர் மட்டும் தனித்து வாழ்ந்தார். இராமருக்கும் சீதைக்கும் பிரிவு ஏற்பட்டது. இறுதிவரை இராமனும் சீதையும் ஒன்றுசேரவில்லை. இளம்வயதில் எல்லாராலும் பாசத்துடன் வளர்க்கப்பட்ட இராமர், தன் திருமணத்திற்குப்பிறகு எல்லாராலும் புறக்கணிக்கப்பட காரணம் என்ன என்பதை சித்தர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிட ஆய்வின்மூலம் அறிவோம்.

அதற்குமுன்பு மனிதர்கள் வாழ்வில் கணவன்- மனைவியைக் குறிக்கும் குரு, சுக்கிரன் ஒரு ஆணின் ஜாதகத்தில் அமர்ந்துள்ள நிலையைக்கொண்டு சுருக்கமாக அறிவோம்.

ஒரு ஆணின் ஜாதகத்தில் குரு, ஜாதகனைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும். சுக்கிரன் அவரின் மனைவி யைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.

ஆண்களின் ஜாதகத்தில், குரு (கணவன்) இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 12-ஆவது ராசிகளில் சுக்கிரன் (மனைவி) இருந்தால், அவருக்கு பூர்வ ஜென்மத்தில் யார் மனைவியாக இருந்தாளோ, அந்தப் பெண்ணே இந்தப் பிறவியிலும் மனைவியாக வருவாள்.

குருவுக்கு 1, 5, 9, 12-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருக்கும், ஆண்கள் சிலருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்துவிடும். ஆனால் குருவுக்கோ அல்லது சுக்கிரனுக்கோ ராகு- கேது சம்பந்தம் இருந்துவிட்டால், திருமணம் முடிந்து, ஒரு குறிப்பிட்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்தபின்பு, சிலர் வாழ்வில், கணவன்- மனைவியிடையே ஏதாவதொரு காரணத்தால் கருத்து வேறுபாடு ஏற்படும். விவாகரத்து, பிரிவு, இழப்பு ஏற்பட்டுவிடக்கூடும். அல்லது இருவருக்கும் தாம்பத்திய உறவில்லாமல் போய்விடும். ஒரே வீட்டில் வசித்தாலும், கணவன்- மனைவி ஒற்றுமையின்றி, பேச்சுவார்த்தைக் குறைந்து, அவரவர் விருப்பம் போல் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

ஆண்கள் சிலரின் ஜாதகத்தில், குரு இருக்கும் ராசிக்கு 1, 5, 9, 12-ஆவது ராசிகளில் சுக்கிரன் இருந்தால், எவ்வளவு பெண்களைப் பார்த்தாலும் பிடிக்காமல் போகும் அல்லது ஜாதகம் பொருத்தமில்லாமல் போகும். இது போன்று ஏதாவது ஒரு காரணத்தால், திருமணம் தடை, தாமதமாகிக்கொண்டே போகும். வயதும் அதிகமாகிக்கொண்டே போகும். இன்னும் சிலர் தனக்குத் திருமணமே நடக்காது என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள்.

(தொடரும்)

செல்: 99441 13267