முற்பிறவி, மறுபிறவி உண்டு என்பது உண்மையா என்று வாசகர்கள் கேட்ட சந்தேகத்துக்கு தமிழ்ச் சித்தர்கள் கூறியுள்ள பதிலை அறிவோம்.
இம்மண்ணுலகம் தோன்றிய நாள்முதல், பரிணாம வளர்ச்சியால் உருவாகிப் பிறந்து வாழ்ந்து மரணமடையும் மனிதன், விலங்கு, பறவைகள் என அனைத்தும், தன் விந்தணுக்கள்மூலம் தனது இனத்தினை, உடல், உயிர், ஆன்மா என தன்னைப் போலவே உருவாக்கி விருத்திசெய்துகொண்டே வருகின்றன.
இந்த பூமி தனக்குத்தானே சுழன்று இரவையும், பகலையும் உருவாக்கிக் கொள்வதுபோன்று, ஒவ்வொரு உயிரினமும், தனது விந்தின்மூலம், திரும்பத் திரும்ப தன்னை உருவாக்கிக்கொண்டு, பூமியில் தான் அழியா வண்ணம் நிலை நிறுத்திக்கொள்கிறது.
"அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்று கலந்தது உணரார்.'
ஒரு மனிதனுக்கு அவனது ஏழு தலைமுறை முன்னோர்களான பாட்டன்களின் ஜீவ அணுக்கள் அவனது உடம்பில், விந்தணுக்களில் கலந்திருக்கும். ஒவ்வொரு பிறப்பிலும் அவரவர் முன்னோர்களும் உடல், உயிர், ஆன்மாவில் கலந்திருக்கின்றார்கள். இந்த உண்மையை எவரும் உணர்ந்து கொள்ளவில்லை என்கிறார் திருமூலர்.
ஒரு மனிதனின் விந்தில் அவனின் முன்னோர்களின் குணமும், உருவமும், அவர்களின் வாழ்வில் உண்டான பாவ- சாப- புண்ணியப் பதிவுகளும் சூட்சுமமாக மறைந்துள்ளன. அவை அவனின் விந்தின்மூலம் பிறக்கும் வாரிசுகளிடமும் கலந்திருக்கும். வம்சத்தை தொடங்கி வைப்பவன், வம்ச வாரிகளுடன் சூட்சுமமாக மறைந்திருப்பான். இதுதான் மனிதன் பிறப்பில், ஒரு ஆத்மாவின் சுழற்சிமுறை சூட்சும ரகசியம்.
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், ஒரு பிறவியில் தன் மனதால் பிறருக்குச் செய்த பாவங்களை ஏழு பிறவிகள் பிறந்து தீர்த்து முடிக்க வேண்டும்.
ஒருவன் தன் மனம், வாக்கு, காயம் (சரீரம்) ஆகிய மூன்றினாலும் பிறருக்குச் செய்த பாவங்களை மூவேழு இருபத்தோரு பிறவிகள் பிறந்துதான் தீர்த்து முடிக்கவேண்டும். இந்த பாவங்களுக்கு எந்தவிதமான பூஜை, யாகம், பிரார்த்தனை, தானம், தருமம் செய்தாலும் பலன் தராது என சித்தர்கள் கூறுகின்றார்கள்.
இன்றையநாளில், முன்னோர் வழிபாட்டினைச் செய்யும்போது நம்முள் இருக்கும் முன்னோர்களுக்கும், நமக்கு நாமே செய்துகொள்கிறோம். நம்மை நாமே வழிபட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதே முன்னோர் வழிபாட்டின் ரகசியம். ஆத்மா என்பது நாம்; பரமாத்மா என்பது நமது முன்னோர்கள். இவையிரண்டும் இணைந்து ஒன்றினுள் ஒன்றாகக் கலந்திருப்பதே நமது உடல், உயிர், ஆன்மா.
நமது முன்னோர்கள், நமது வீட்டில்தான் பிறந்து வாழ்ந்து இறந் தார்கள். அவர்களது ஆன்மா, அவர்களது வாரிசுகளுடன், வாரிசுகள் வசிக்கும் வீட்டில்தான் உலவிக்கொண்டிருக்கும். அதனால், முன்னோர் வழிபாட்டினை அவரவர் வீட்டில்தான் செய்யவேண்டும் என்று அகத்தியர் கூறியுள்ளார்.
இன்றையநாளில் மக்கள் முன்னோர் வழிபாட்டினை "திதி' என்ற பெயரில் நீர்நிலைகளிலும் நதிக்கரைகளிலும், சமுத்திரக் கரைகளிலும், செய்கிறார்கள். இதுபோன்ற வழிபாடு, செயல்களினால், நமது முன்னோர்களின் அருளையும், ஆசியையும் அடைய முடியாது என்பதே அகத்தியர் வாக்காகும். தமிழ்மக்கள் அனைவரும் அவரவர் வசிக்கும் வீட்டில் முன்னோர் வழிபாட்டினை முறையாகச் செய்து அவர்கள் அருளாசியைப் பெற்று, தங்கள் வம்ச பாவ- சாபத்திற்கு நிவர்த்தி பெற்றுக்கொள்ளவேண்டும்.
அகத்தியர் முதலான 18 தமிழ்ச் சித்தர்களும், மகான்களும் முற்பிறவி இப்பிறவி பற்றி தங்கள் அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் தங்கள் பாடல்களில் கூறியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை சுருக்கமாக அறிவோம்.
"முன்னை யெத்தனை யெத்தனை கர்மமோ
மூடனாய் அடியேனு மறிந்திலேன்'.
"பின் செய்த தீவினை யாதொன்றுமில்லை பிறப்பதற்கு முன்செய்த தீவினையே இங்கனே வந்து மூண்டதுவே.'
"இந்த பூமியில் இதற்குமுன்பு எத்தனையெத்தனை பிறவிகள் பிறந்து வாழ்ந்து இறந்தேனோ எனக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் நான் யாருக்கும் தீமைகள், பாவங்கள், துரோகங்கள் என எதனையும் செய்ததில்லை. ஆனால் இப்பிறவி வாழ்வில் இப்போது நான் அனுபவிக்கும் சிரமங்களுக்கு, எனது முற்பிறவிகளில் செய்த பாவங்களும், தீமைகளும்தான் காரணம் என்று முற்பிறவி, இப்பிறவி பற்றி பட்டினத்தார் கூறுகிறார்.
"முந்தின பிறப்புவந்த முதன்மையும் அறியாய்
பிந்தின பிறப்புவந்த சிறுமையும் அறியாய்.'
"ஒரு மனிதன் முதன்முதலாக இந்த பூமியில் பிறந்ததற்கு உண்டான மூலகாரணத்தையும் அறியமாட்டான்.
அடுத்தடுத்து பலபிறவிகள் பிறப்பதற்குக் காரணமான பாவ- சாப வினைப் பதிவுகளை அறிந்து, அதனை நடைமுறை வாழ்வில் தடுத்துக்கொண்டு பூமியில் பிறவியில்லா மோட்ச நிலையை அடைவதற்கு வழியும் அறிய மாட்டான்.'
இதுபோன்று, இன்னும் ஏராளமான பாடல்கள்மூலம் முற்பிறவி, இப்பிறவி, அடுத்த பிறவி என்ற நிலை மனிதர்களுக்கு உண்டு என சித்தர் பெருமக்கள் கூறியுள்ளார்கள்.
இனி ஜாதகத்திலுள்ள புதன் கிரகம் தரும் பலனைப் பற்றி அறிவோம். புதன் கிரகம் தாய்மாமன், இளைய உறவுகள், நட்பு, காதல், பிளாட் (மனை), கட்டிய வீடு, வாணிபம், கடைகள், மக்கள் தொடர்பு, பொது அறிவு போன்ற இன்னும் பலவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகமாகும்.
இராமரின் ஜாதகத்தில் புதன் சூரியனுடன் இணைந்து, மேஷ ராசியில் உள்ளது. அதற்கு 9-ஆவது இடமான தனுசு ராசியில் முற்பிறவி பாவவினைகளைக் குறிப்பிடும் ராகு இருக்கிறது. இந்த மூன்று கிரகங்களும் ஒரே நட்சத்திர மண்டலத்திலுள்ளன.
சூரியன், புதன் இருக்கும் மேஷ ராசிக்கு 3-ஆமிடமான மிதுனத்தில், முற்பிறவிகளில் நமது செயல்களால் பெற்ற சாபங்களைக் குறிப்பிடும் கேது உள்ளது. மேஷம், மிதுன ராசிகளுக்கிடையிலுள்ள ரிஷப ராசியில் எந்தவொரு கிரகமும் இல்லாததால், இந்த கிரகங்கள் கேதுவின் தொடர்பையும் பெறுகின்றன.
ஜாதகத்தில் இதுபோன்று சூரியன், புதன், ராகு- கேது சம்பந்தம் பெற்றுள்ள ஒவ்வொருவரும், இராமர் அனுபவித்தது போன்ற பலன்களைத் தங்கள் வாழ்வில் அனுபவிப்பார்கள்.
புதன் இளைய உறவுகளைக் குறிப்பதாலும், அது ராகுவுடன் சம்பந்தம் பெற்றதாலும், இளைய தாயாரான கைகேயியின் உறவு பாதிக்கப்பட்டது. சிறிய தாயார் கைகேயி இராமனுக்குப் பட்டம் சூட்டவிடாமல் தடுத்து எதிராக செயல்பட்டாள்.
இராமரின் தந்தை தசரதன், தன் இளைய மனைவியின் மகனான பரதனுக்கு அயோத்தி அரசனாக முடிசூட்டி ஆட்சியைத் தந்தார். இதனால் இராமனுக்கு தந்தையின் பாசமும், சொத்தும் பறிபோனது. பொதுவாக சூரியன், புதன் ஒருவர் ஜாதகத்தில் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு தந்தையால் பெரிய நன்மைகளை அடையமுடியாது. பூர்வீக சொத்துகளையும் அடையமுடியாது.
அவரின் தம்பி, தங்கைகளுக்குதான் தகப்பன் சொத்தினைத் தருவான்.
(தொடரும்)
செல்: 99441 13267