னிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வாழ்க்கை அமைகிறது. ஒருசிலருக்கு வெற்றி வாய்ப்பு வீடு தேடிவந்து அழைக்கிறது. ஒருசிலருக்கு வாய்ப்பை தேடிப்போனாலும் கிடைப்பது இல்லை. என்ன உழைத்தாலும், அதற்குரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்குப் பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.

பிரம்மஹத்தி தோஷம் என்பது, நெஞ்சை பதைபதைக்க வைக்கும் கொடுமையான பஞ்சமகா பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

பூமியில் ஒரு உயிர் ஜனனமாகக் காரணமாக இருக்கும் பிரபஞ்ச சக்தியே அந்த உயிரை எடுத்துக்கொள்ளவேண்டும். அப்படியில்லாமல் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தாலோ, பாதிப்பை ஏற்படுத்தினாலோ, உயிரை எடுத்தாலோ உருவாகும் தோஷமே பிரம்மஹத்தி தோஷமாகும்.

ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரைக் கொலை செய்வது அல்லது அதற்கு சமமான பாவங்கள் செய்தவருக்கே இந்த தோஷம் ஏற்படுகிறது.

Advertisment

parigaramபிரம்மஹத்தி தோஷம் யாருக்குகெல்லாம் வரும் என்றும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.

1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்து வருக்கும் வரும்.

அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் நிம்மதியின்மை ஏற்படும்.

Advertisment

2. பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்குகொடுத்து, அவளை அனுபவித்து, திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும்

3. பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய சம்பளம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும் இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழிலில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.

4. குருவுக்கு தட்சணை தராமல் இருப்பது, குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுபவர்களுக்கு அல்லது அவர்களது குழந்தைகளுக்கு கற்ற கல்வியைப் பயன்படுத்த முடியாத நிலை. குலதெய்வ சாபத்தைவிட குரு சாபம் மிகக் கொடியது.

5. வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை அடிப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது அந்நிய பாஷை பேசுபவர்களால் தொல்லை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் கலப்புத் திருமணம் செய்து கொண்டு வாழ்வைத் தொலைத்துவிடுகிறார்கள்.

6. சென்ற பிறவிகளில் ஆலயத்தைத் தகர்த்தல், சாமி சிலையைத் திருடுதல், குலதெய்வ சொத்தைக் கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குலதெய்வக் கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது.

7. கட்டிய மனைவிக்குத் தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படைத் தேவையைக்கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டியடிப்பவருக்கு, கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கு, நன்றி மறந்தவர்களுக்கு இந்த தோஷம் ஏற்படுகிறது.

அதனால் வருடக்கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டனை, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்திவரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும். சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடையமுடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள்.

ஒருவரின் உயிரை எடுத்தால் அவரது மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோஷம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி- அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.

ஜோதிடரீதியாக ஒருவரது ஜாதகத்தில் குருவும் சனியும் இணைந்தாலோ, இந்த இரு கிரகங்களுக்கும் சாரப்பரிவர்த்தனை பெற்றாலோ, சமசப்தம பார்வை பெற்றாலோ பிரம்மஹத்தி தோஷம் உள்ளது என்று கூறலாம். 75 சதவிகித ஜாதகத்தில் குரு, சனி ஏதாவது ஒருவிதத்தில் சம்பந்தம் பெற்றிருக்கும். இந்த கிரக இணைவு ஜாதகருக்கு யோகமா, சாபமா என்பதை ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் பாவகங்கள் பெற்ற வலிமை, குரு, சனி அஷ்டம, பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தத்தை வைத்து முடிவு செய்யவேண்டும். குரு, சனி சம்பந்தம் மட்டுமே பிரம்மஹத்தி தோஷமாக நிச்சயம் உருவெடுக்காது. மேலும் இந்த தோஷம் தசாபுத்தி அந்தர நாதர்களுடனும், கோட்சாரத்துடனும் சம்பந்தம் பெறும்போதே வினைப்பயனை முழுவதும் அனுபவிக்கச் செய்கிறது.

ஜோதிட உலகமே தோஷம் என்று கூறும் இந்த குரு, சனி சம்பந்தம் ஒருசிலருக்கு பெரிய திருப்புமுனையைத் தந்திருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த கிரக சம்பந்தம் கூரை வீட்டில் வாழ்ந்தவரைக்கூட குபேரனாக மாற்றியுள்ளது என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.

பல்வேறு காரணிகளை ஆய்வுசெய்து இந்த கிரக இணைவு யோகம் என்று முடிவு செய்தால் "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தலாம். யோகத்தை அனுப்பவிப்பவரைப் பற்றிய ஆய்வு நமக்கு இப்பொழுது தேவையில்லை.

தோஷத்தை அனுபவிப்பவரது பிரச்சினையை சரிசெய்து கொடுப்பது ஒரு ஜோதிடரின் தலையாய கடமைதானே. என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களில் பலர் பிரம்மஹத்தி தோஷத்தை சரி செய்ய பல்வேறு பரிகார ஸ்தலங்களுக்குச் சென்றும் பிரச்சினை தீரவில்லை என்பதே. தோஷத்தின் வலிமையை முடிவு செய்தபிறகு எந்த முறையில் தோஷத்தை சரி செய்வது என்பதை குரு, சனி, செவ்வாய்க்கு உள்ள சம்பந்தமே தீர்மானிக்கிறது. அத்துடன் பாக்கியஸ்தானம் வலுப்பெறும் காலத்தில் செய்யும் பரிகார வழிபாடே உடனே பலன்தரும் என்பதை என்னுடைய கட்டுரையில் பலமுறை தெரிவித்துள்ளேன்.

குரு, சனி, செவ்வாய்யுடன் சம்பந்தம் பெறுபவர்கள் நீண்ட நாள் வழிபாடும் பெரிய அளவில் செலவில்லாத முறையான அமாவாசை, சிவ வழிபாடு, வயதான ஏழைத் தம்பதிகளுக்கு உணவு, உடை கொடுத்து ஆசி பெறுதல் போன்ற எளிய பரிகாரங்களைச் செய்தாலே போதும். நல்ல பலன்கள் கிடைத்து மேன்மை அடைவார்கள்.

குரு, சனி, செவ்வாய்யுடன் சம்பந்தம் பெறாதவர்கள் ராமர் வணங்கிய தேவிபட்டினம், ராமேஸ்வரம், திருவிடைமருதூர், கொடுமுடி, ஸ்ரீவாஞ்சியம், திருப்புல்லாணி போன்ற பரிகார வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று தோஷ நிவர்த்தி செய்து பயன்பெறாலம்.

செல்: 98652 20406