இரு உறவுகளின் நட்புநிலையை நிர்ணயிப்பதில் ஏழாம் பொருத்தம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. இருவர் எலியும் பூனையுமாக இருந்தால் "ஏழாம் பொருத்தம்' என்று பேச்சுவழக்கில் கூறுவது வழக்கம். ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்பந்திகள், பழகும் தன்மை, வெளிவட்டாரத் தொடர்பு என பலவகைப்பட்ட அம்சங்களைக் குறிக்கும். அதாவது லக்னம் என்பது ஜாதகரின் குணாதிசயத்தையும், ஏழாமிடம் என்பது அவரது தொடர்பாளர்களின் குணங்களையும் குறிக்கும்.
ஏழாம் பொருத்தம் என்று சொல்லப்படுவதன் உட்பொருள், ஒருவருக்கு இருக்கும் திறமை, குணநலன்கள், பண்புகள் மற்றவருக்கு இருக்காது; அதேபோல் எதிராளிக்கு இருக்கும் திறமை இவருக்கு இருக்காது என்பதாகும்.
திருமணப் பொருத்தத்தில் சமசப்தம ராசிகளை இணைப்பதில் இரண்டு மாறுபட்ட கருத்துகள் நிலவிவருகின்றன. சமசப்தம ராசியினர் கருத்து ஒருமித்து வாழ்வார்கள் என ஒரு பிரிவினர் கூறினால், கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும்; சேர்க்கக்கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர். இதை ஜோதிடரீதியாக சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
ராசியாதிபதி பொருத்தம்
ராசியாதிபதி பொருத்தமிருந்தால் பெண்ணும் ஆணும் அன்புடன் வாழ்வார்கள். அத்துடன் எந்தவொரு முடிவெடுக்கும்போதும் தம்பதிகளிடையே கருத்தொற்றுமை இருக்கும். மேலும், ஜாதகர்களின் பெற்றோர்கள் ஒற்றுமையுடன் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பு பாராட்டி வாழ்வார்கள். இந்தப் பொருத்தம் இல்லாவிட்டால் கணவன்- மனைவியும் அவர்களைச் சார்ந்தவர்களும் மாற்றுக் கருத்துகளால் பகைகொண்டு மன அமைதியின்றி இருப்பர். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாகத் திகழ்கின்றன. நவகிரகங்களில் ராகு- கேது நீங்கலாக மீதமுள்ள ஏழு கிரகங்களும், 12 ராசிகளுக்கும் அதிபதிகளாக வருவார்கள். இந்த கிரகங்கள் ஒன்றுக்கொன்று நட்பு, சமநிலை, பகை என்னும் மூன்று நிலைகளில் இருப்பார்கள். ஆணின் ராசியாதிபதியும் பெண்ணின் ராசியாதிபதியும் நட்பு அல்லது சமநிலை என இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. ஆணின் ராசியாதிபதியும் பெண்ணின் ராசியாதிபதியும் பகையாக இருந்தால் பொருத்தம் கிடையாது.
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் வீரம், தைரியம், கோபம், ஆளுமை, முரட்டுப்பிடிவாதம், அதீத காமமுடைய கிரகம். அதன் ஏழாவது ராசியான துலாத்தின் அதிபதி சுக்கிரன் அழகு, ஆடம்பரம், சொகுசு, சாந்தம், பெண்தன்மை நிறைந்திருக்கும் கிரகம். இந்த இரண்டு கிரகங்களும் அடிப்படையில் நேரெதிரான குணங்களைக் கொண்டிருந்தாலும் ஒருவர்மீது ஒருவர் ஈர்ப்புள்ளவர்கள். இந்த கருத்து சுக்கிரனை ராசிநாதனாகக்கொண்ட ரிஷபத்திற்கும் அதன் ஏழாமிடமான விருச்சிகத்திற்கும் பொருந்தும். அதேபோல் மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன். புதன் இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவர்.
அவற்றின் ஏழாம் ராசிகளான தனுசு, மீனத் திற்கு அதிபதி குரு. இயற்கையில் குரு நீதி, நேர்மை, நியாயம் என்று நேரான வழியில் பயணிப்பவர். எதற்காகவும் தன் கொள்கையைத் தளர்த்திக்கொள்ளாதவர்.
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். எதற்கெடுத்தாலும் கௌரவம் பார்ப்பார்கள். கௌரவக் குறைவான செயலை ஒரு போதும் செய்யமாட்டார்கள். அதேநேரத்தில் அதற்கு ஏழாமிடமான கும்ப ராசிக்கு அதிபதி சனி. கௌரவம் பார்க்காமல் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருப்பார்கள். சந்திரனை ராசி அதிபதியாகக்கொண்ட கடக ராசிக்காரர்கள் அமைதி, அடக்கம், சுறுசுறுப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். இதற்கு ஏழாமிடமான மகரத்திற்கு அதிபதி சனி. சோம்பல், அழுக்கு என நேரெதிர் குணங்களை நிரம்பப் பெற்றவர்கள்.
திருமணத்திற்குப் பத்து பொருத்தம் பார்க்கும்போது ஏழாவதாக வரும் ராசியாதிபதி பொருத்தம் என்பதும் இந்த அடிப்படையில் வகுக்கப்பட்டதேயாகும்.
அதாவது ஒருவரின் குணத்திற்கு நேரெதிரான குணாதிசயம் உடையவர்கள் சமசப்தம ராசியினர்கள்.
நேரெதிர் ராசிகளைக்கொண்ட தம்பதிகள் தங்களுக்குள் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதுபோல் தோன்றினாலும், உண்மையில் அன்யோன்யம் அதிகமாக இருக்கும். பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையையும் பிறரைவிட அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்பது ஒரு பிரிவினரின் கருத்து.
ஜாதகரீதியான ஒப்பீடு
ஜாதகத்தில் ஒவ்வொரு ராசிக் கட்டமும் ஒவ்வொரு குணத்தை வெளிப்படுத்தும். ஒவ்வொரு கட்டத்திற்கும் அதன் ஏழாமிடம் எதிர் குணாதியசத்தைக் காட்டும். ஒரு கிரகம் தான் உச்சமடையும் வீட்டிற்கு (அதிகபலம்) நேர் ஏழாம் வீட்டில் நீசமடையும். (பலமற்ற நிலை). இதனால் குணநலன்களில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாக சூரியன் மேஷ ராசியில் உச்சம். அதற்கு ஏழாமிடமான துலா ராசியில் நீசம். (உச்சம்பெற்ற கிரகம் இருமடங்கு பலம்; நீசம்பெற்ற கிரகம் முற்றிலும் பலமிழந்த நிலையில் இருக்கும்.) மேஷத்தில் சனி நீசம்; துலாத்தில் சனி உச்சம். ரிஷபத்தில் சந்திரன் உச்சம்; விருச்சிகத்தில் சந்திரன் நீசம். குரு பகவான் கடக ராசியில் உச்சம்; அதற்கு ஏழாம் ராசியான மகரத்தில் நீசம். கடகத்தில் செவ்வாய் நீசம்; மகரத்தில் செவ்வாய் உச்சம். கன்னியில் புதன் உச்சம்; சுக்கிரன் நீசம். ஏழாம் வீடான மீனத் தில் சுக்கிரன் உச்சம்; புதன் நீசம்.
இப்படி ஒவ்வொரு ராசிக்கட்டமும் தன் வீட்டிற்கு ஏழாமிடத்தில் எதிரெதிரான செயல்களைச் செய்யும். ஒரு வீடு நன்மையென் றால் ஏழாமிடம் தீமை. ஒரு வீடு மந்தபுத்தி என்றால் ஏழாமிடம் புத்திசாலி. ஒரு வீடு வீரமென்றால் எதிர்வீடு கோழை. இப்படி பலன்கள் எதிரெதிராகவே இருக்கும்.
உடல் என்பது பிறந்த ராசி. ஒருவர் பிறந்த ராசிக்கேற்பவும், ராசியில் உச்சம், நீசம்பெறும் கிரகத்தின் தன்மைக்கேற்பவும் ஆழ்மனதில், சிந்தனையில், உள்ளுணர்வில் மாறுபாடிருக்கும். உச்சம்பெற்ற கிரகத்தின் ஆதிக்கத்தால் மிகுதியாகும் உள்ளுணர்வு, நீசம்பெறும் கிரகத்தால் வலிமையிழக்கும் என்பதால் சமசப்தம ராசியை இணைக்கக் கூடாது என்பது ஒரு சாரரின் கருத்து.
உளவியல்ரீதியாக சமசப்தம ராசியினரில் ஒருவர் கற்பூர புத்தி படைத்தவராவும், எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை படைத்தவராகவும் இருப்பார். எதிர் ராசியினர் சுய முடிவெடுக்கத் தெரியாத வர்களாக இருப்பார்கள். உதாரணமாக கணவன் வெகுளியாக இருந்தால் மனைவி நுண்ணறிவு மிக்கவராக இருப்பார். அதனால் ஒருவரின் கோபமும் எதிராளியின் சாந்தமும் திருமண வாழ்க்கையை பாதிப்பது குறைவு. அதேநேரத்தில் கோட்சார கிரகங் களால் ஏற்படும் தாக்கம் இரட்டிப்பாக இருக்கும்.
உதாரணமாக தற்போது கோட்சார குரு மீனத்தில் நின்று சமசப்தம ஸ்தானமான கன்னியைப் பார்க்கிறார். இந்த காலகட்டத்தில் குருவின் இரண்டு ராசியினருக்கும் பொருளாதாரத்தில் தன்நிறைவு உண்டாகும். கன்னி ராசிக்கு இரண்டில் கேதுவும், எட்டில் ராகுவும் நிற்கிறார்கள். மீன ராசிக்கு இரண்டில் ராகுவும், எட்டில் கேதுவும் நிற்கிறார்கள். பல கன்னி, மீன ராசியினர் கருத்து வேறுபாட்டால் ஜோதிடரையும், வழக்கறிஞரையும் தேடியலைகிறார்கள். சிலர் வாழ்க்கைத் துணையின் குணக்கேட்டை சீராக்க கோவில், குளம், பரிகாரம் என விரக்தியில் வாழ்கிறார்கள்.
அதேபோல் கன்னி ராசிக்கு 5-ஆமிடத்தில் நின்ற கோட்சார சனி பகவான் 3-ஆம் பார்வையால் 7-ஆமிட மான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையால் 11-ஆமிடமான லாப ஸ்தானத் தையும், 10-ஆம் பார்வையால் 2-ஆமிட மான குடும்ப ஸ்தானத்தையும் பார்த்தார். ஆக, கன்னி ராசியினருக்கு சனிபகவான் 5- 7, 11- 2-ஆமிடத்தை இயக்கினார்.
அதேபோல் மீனத்திற்கு லாப ஸ்தானத் தில் நின்ற சனிபகவான் தனது 3-ஆம் பார்வையால் ராசியையும், ஏழாம் பார்வையால் 5-ஆமிடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும், 10-ஆம் பார்வையால் எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தையும் பார்த்தார். ஆக, மீன ராசியினருக்கு 11, 1, 5, 8-ஆமிடங்களை இயக்கினார். (தற்போது சனி அதிசாரமாக கும்பத்தில் இருந்தாலும் ஜூலை 12-ஆம் தேதி மகரத்துக்கு வந்துவிடுவார்.)
ஆக, இரு ராசியினருக்கும் குழந்தை யின்மை, பிள்ளைகளால் நிம்மதியின்மை, அதிர்ஷ்டக் குறைவு, சிந்தனைக் குறைபாடு, வம்பு, வழக்கு, வாழ்க்கைத் துணையிடம் இணக்கமற்ற சூழல், தொழில்ரீதியான பிரிவினை, நிரந்தரப் பிரிவினை போன்றவற்றைத் தந்துகொண்டிருக்கிறது. மேலும் ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும்போது எதிர் ராசியினருக்கு கண்டகச்சனி, அஷ்டமச் சனியின் பாதிப்பிருக்கும்.
"சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பது பழமொழி. அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்துபவர்களின் பிடிவாதத் திற்கு மதிப்பு கிடையாது. வெகுவிரைவில் மறைந்துவிடும். அமைதியாக, பொறுமையாக அடங்கிப் போகும் ஒருவர் கோபம் கொண்டால் யாராலும் தாங்கமுடியாத வகையில் விளைவு விபரீதமாக இருக்கும். எனவே, திருமணமான குறுகிய காலத்திற்கு குறைந்தது பத்து வருடத்திற்கு சாதகமான தசாபுக்தி மற்றும் கோட்சார கிரகங்களால் எதிர்வினை ஏற்படாமல் இருந்தால் சமசப்தம ராசி நல்ல மன நிறைவான வாழ்க்கையை, மணவாழ்க்கைத் துணையைத் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
செல்: 98652 20406