சென்னை அலுவலகத்தில் நாடி பலன் காண சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்திருந்தார்.
"ஐயா, நான் அரசுப் பணி வகிக்கின் றேன்'' என்று கூறி, தான் பதவியையும் தான் வேலை செய்யும் அலுவலகத்தையும் கூறிவிட்டு மேலதிகாரியிடம் என்னுடைய பிரச்சினையை கூறி வருத்தப்பட்டேன். நான் கூறியதை கேட்ட அவர் அவருக்கு சில பிரச்சினைகள் இருந்தபோது தங்களிடம் வந்து ஜீவநாடியில் பலன் கேட்டதாகவும் அதில் அகத்தியர் அவரது சிரமங்கள் தீர வழிகாட்டியதாகவும் அதனை முறையாக கடைப்பிடித்து செயல்பட்டதால் தன் பிரச்சினை தீர்ந்தது என கூறி தங்களை சந்தித்து நாடியில் பலன் பார்த்தால் என் பிரச்சினைக்கு வழி கிடைக்கும் என்று கூறினார். அதனால்தான் ஜீவநாடியில் பலம் காண வந்தேன்'' என்றார்.
அவரது மாத சம்பளம், தினசரி கிடைக்கும் மேல் வருமானம் என அனைத் தையும் சேர்த்து ஒரு நல்ல தொகையை கூறினார். மாதந்தோறும் இவ்வளவு பணம் சம்பாதித்தும் கையில் பணம் தங்குவதில்லை. பணம் சேமித்து ஒரு சொந்த வீடு அமைத்துக் கொள்ளமுடியவில்லை. நானும் எனது மனைவியும் ஆடம்பர, விரையச் செலவு செய்வதுமில்லை. வீட்டில் பணம் வைத்தா லும் தங்குவதில்லை. கடனாளியாக உள்ளேன். என் குடும்பம், குழந்தைகளின் எதிர்காலம் வாழ்க்கை இருளாக தெரிகின்றது.
பணம் தங்கவும் சேரவும் யார் எதை கூறினாலும் அந்த பொருட்களையும், எந்திர தகடுகளையும், செடிகள் என அனைத்தையும் வாங்கி வைத்துள்ளேன். வீடு சரியில்லை என்று வாஸ்து பார்த்து பல வீடுகள் மாறி மாறி வசித்துப் பார்த்தேன். எதுவும் பலன் தரவில்லை. என்னுடைய பணப் பிரச்சினை, கடன் பிரச்சினை தீர்வதற்கு அகத்தியர் வழி காட்டுவார் என்று வந்துள்ளேன்.
ஜீவநாடி ஓலையை பிரித்து படிக்கத் தொடங்கினேன். இவன் வம்ச முன்னோர்கள் ஏராளமான நில புலன் சொத்துகளுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் வசித்த பகுதியில் முக்கியமானவர்கள். பரிசுத்தமான குடும்பத்தில் பிறந்தவன். அப்பகுதியிலுள்ள ஊர்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகள், குடும்பப் பிரச்சினைகள், சொத்து பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து பேசி தீர்வுகாண இவன் முன்னோர்களிடம் மக்கள் வருவார்கள்.
விசாரணை செய்து தீர்ப்பு கூறும்பொழுது இவனது முன்னோர்கள் நேர்மையான நியாயமான தீர்ப்பினை கூறாமல் வசதி படைத்த செல்வந்தர்களுக்கு சாதகமாகவும் வசதி இல்லாத ஏழை மக்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் அவர்களுக்கு பாதகமாகவே தீர்ப்பு வழங்குவார்கள்.
இவனது முன்னோர்கள் கோவில் திருப்பணிகள், திருவிழா உற்சவங்கள் என தெய்வ காரியங்களுக்கு பணம், பொருள் தானமாக, தாராளமாக கொடுத்து உதவுவார்கள். ஆனால் தன்னிடத்தில் வேலை செய்யும் பாமர தொழிலாளர்களுக்கு, வீட்டில் பணிபுரியும் வேலைக்காரர்களுக்கு முறையாக கொடுக்கவேண்டிய கூலிப்பணத்தை குறைத்துதான் கொடுப்பார்கள்.
உழைப்பிற்குரிய கூலியை பெறாதவர்கள் எதிர்த்துப் பேசமுடியாமல் குறைந்த ஒளியை கேட்டுவாங்க தைரியம் இல்லாத பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் கூலியை குறைத்துக்கொடுத்து அந்தப் பணத்தில் வாங்கி சேமித்த சொத்துகள், கட்டிய வீடுகளை உங்கள் வம்ச வாரிசுகள் ரத்த சம்பந்தமான சொந்தங்கள் அனுபவிக்க மாட்டார்கள்.
எங்கள் உழைப்பிற்கு நியாயமாக கிடைக்கவேண்டிய கூலி பணம் கிடைக்காமல் நாங்கள் வாழ்க்கையில் சிரமங்களை அனுபவித்ததுபோல் உங்கள் சந்ததிகள் தொழில்செய்து உழைத்து சம்பாதிக்கும் பணம் சொத்துகள் பொருட்கள் அவர்கள் அனுபவிக்க முடியாமல் விரையமாகிவிடும். அவர்கள் சம்பாதித்த பணத்தை அவர்கள் அனுபவித்து மகிழ்ச்சியாக வாழமுடியாது என்று முன்னோர்கள் காலத்தில் பாதிக்கப் பட்டு பணத்தை இழந்த பாமர மக்கள் வயிறு எரிந்து விட்ட சாபம் இப்பிறவியில் இவனைத் தாக்கி பண விரையத்தை தந்து அனுபவிக்க செய்கின்றது.
தெய்வங்களுக்கு எத்தனை பிரார்த்தனைகள் பரிகாரங்கள் செய்தாலும் எத்தனை வீடுகள் மாறி மாறி வசித்தாலும் இந்த பாமர சாபத்தை தீர்க்க முடியாது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பண பற்றாக்குறை ஏற்பட்டு பாமர வாழ்க்கையை வாழசெய்து அனுபவித்து வாழ செய்துவிடும். இந்த பாமர சாபத்தின் தாக்கத்தால் இவன் வம்ச முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீக சொத்துகளை இவன் அனுபவிக்க முடியாமல் போகின்றது. பூர்வீக சொத்துகளால் வில்லங்கம், வழக்குகள் என அமைந்து அந்த சொத்துகளால் எந்த நன்மையும் விருத்தியும் அடைய முடியவில்லை.
அகத்தியனை நம்பி என்னை நாடிவந்த இவனுக்கு நடைமுறை நிவர்த்தி வழிகள் சிலவற்றை கூறுகிறேன். நான் கூறுவதுபோல் இவன் வாழ்வின் நடைமுறை செயல்களில் கடைப்பிடித்து வாழ்ந்தால் பண விரயம் தடுக்கப்பட்டு பணம் சேமிக்கும் நிலை உண்டாகும். பாமர சாபத்தை தடுத்துக் கொள்ளமுடியும். சேமித்த பணத்தில் இந்த பூமியில் என்றும் அழியாத பூமி, நிலம் என சொத்துகளையும் தங்க ஆபரணங்களையும் வாங்கி மகிழ்ச்சியாக வாழட்டும் என்று கூறி பாமர சாபத்தை தடுக்கும் வழிமுறைகளை கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
ஜீவநாடியில் பலன் கேட்டு வந்தவர், "ஐயா அகத்தியர் கூறிய வழியில் இனி என் வாழ்க்கை அமைத்து வாழ்ந்து என் கஷ்டத்தை பணவிரையத்தை தடுத்துக் கொண்டு நல்ல வாழ்க்கையை நானே அமைத்துக்கொள்கிறேன்'' என்று கூறிவிட்டு சென்றார்.
மனிதர்கள் வாழ்க்கையில் உண்டாகும் உயர்வும் தாழ்வும் நம்பிக்கை சார்ந்த செயல்களில் இல்லை. தனக்கு நன்மைகளைத் தரும் நடைமுறை செயல்களில்தான் உள்ளது. செல்வத்தை சம்பாதிப்பவன் செல்வந்தனாக முடியாது. செல்வத்தை எதிர்கால வாழ்வுக்கு சேமித்து வைத்துக்கொள்பவனே செல்வந்தன் ஆவான் என்பதை நானும் புரிந்து கொண்டேன்.
செல்: 99441 13267