நம் வாழ்க்கையை நமது பிறப்பு ஜாதகமே தீர்மானிக்கிறது என்பதைக் கோள்களின் அடிப்படையிலான ஜோதிட சாஸ்திரம் நமக்கு உணர்த்துகிறது.
தாயின் கருவறையிலிருந்து நம் சிரசு வெளிப்பட்ட நொடியில், பன்னிரண்டு ராசிகளுக்குள் எந்தெந்த கிரகம் எந்த நிலையில் சஞ்சரித்தன- எந்த கிரகத்துடன் இணைந் திருந்தன- எந்தெந்த கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தன என்பதை வைத்தும், அப்போது என்ன லக்னம், சந்திரன் எந்த ராசியில் இருந்தாரோ அதை வைத்து என்ன ராசி என்பதையும், அன்றைக்குரிய நட்சத்திரத்தை வைத்து என்ன நட்சத்திரம் என்பதையும், நட்சத்திரத்தின் அடிப்படையில், நட்சத் திரத்தின் இருப்பை வைத்து என்ன தசாபுக்தி என்பதையும் தெரிந்து நம்முடைய வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகளை அறிவியல்ரீதியாக நாம் அறிந்துகொள்கிறோம்.
ஒரு மனிதரின் வாழ்க்கையை உயர்த்து வதும் வீழ்த்துவதும், ஆண்டியை அரசனாக் குவதும் அரசனை ஆண்டியாக்குவதும் அவர வருடைய ஜாதகத்தின் அடிப்படையில்தான் என்பதை நாம் அனைவருமே அறிந்துள் ளோம்.
கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்பவே ஒழுக்கசீலர்கள் ஒழுக்கம் தவறுவதும், ஒழுக்கமற்றவர்கள் ஞானவானாவதும், அடிமட்டத்தில் இருந்தவர்கள் உயர்பதவியை அடைவதும், உச்சத்தில் இருந்தவர்கள் வம்பு வழக்குகளில் சிக்குவதும் என்று எல்லாவற்றுக்கும் காரணமாகிறது.
இந்த நிலையில்தான் நமக்கு வேண்டி யதை நாம் பெறுவதற்காக விரதம், பூஜை, தவமென்று மேற்கொள்கிறோம். இறைசக்தியால் இயக்கப்படும் கிரகங்களையும், தேவாதி தேவர்களையும் நோக்கி விரத மிருந்தும் தவமிருந்தும் நம் கோரிக்கைகளை நமக்கும் மேலான அந்த சக்திகளிடம் வைக்கிறோம்.
புராணங்களை நாம் ஒரு பார்வை பார்த்தால் அக்காலத்திருந்தே தவம் மேற்கொள்ளல், அதன் வழியே வேண்டிய வரத்தைப் பெறுதல் என்பதெல்லாம் தெரியவருகிறது.
அசுரர்கள், முனிவர்கள் எல்லாம் தங்களுக்கு வேண்டிய வரத்தைத் தாங்கள் அடைவதற்காக கடுமையாகத் தவமிருந்து வேண்டிய வரத்தைப் பெற்றுள்ளதும், தாங்கள் பெற்ற வரத்தை வைத்து அதிகாரம் புரிய ஆரம்பித்ததும் பல்வேறு கதைகளின் வழியாக நாம் தெரிந்துகொள்கிறோம்.
பொதுவாகவே நம் ஒவ்வொருவரின் உள்மனதிற்கும் மிகப்பெரிய ஆற்றலுண்டு. நினைத்ததைத் தம் வயப்படுத்தும் சக்தியும் அதற்குண்டு.
அதேநேரத்தில் நாம் விரும்பியதைப் பெறவேண்டும் என்றால் அதற்குரிய வேண்டுதலை நாம் வைக்கும்போது, நம் மனதிற்குள் அதுபற்றிய ஒற்றை சிந்தனை மட்டுமே இருக்கவேண்டும்; வேறு எந்தவிதமான சிந்தனையும் அந்த நிமிடங்களில் நம் மனதில் வெளிப்படவே கூடாது. இது மிகமிக முக்கியமான ஒன்றாகும்.
ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில், ஆசைகளுக்கு மனம் ஆட்பட்டுவிட்ட நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆலயத்திலோ, வீட்டிலோ படையலிட்டு இறைவனை நினைத்து நாம் வேண்டும்போதே நமக்குள் வேறு சிந்தனைகள் உள்புகுந்து விடுகின்றன இக்காலத்தில். இந்த நிலை அனைவருக்குமே பொதுவானதாக இருக்கிறது.
இந்த நிலையில் நமக்கு வேண்டியதை நாம் அடைவது எப்படி? அதற்காக நாம் என்ன செய்யவேண்டும்? கிரகங்களையும் இறைவனையும் எப்படி வணங்கவேண்டும்? அதற்குரிய சூட்சுமம் என்ன?
இதையெல்லாம் நாம் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற நிலையில் நம்முடைய வேண்டுதலையும் வழிபாட்டையும் பூஜைகளையும் வைத்துக்கொண்டால் நிச்சயமாக நாம் கேட்பது கிடைக்கும்; நாம் விரும்பியது நம்மை வந்தடையும்.
எப்படி இது? சாத்தியமாகுமா என்று கேட்பவர்களுக்கு ஒரு எளிய விளக்கம்...
நம் முன்னோர்கள் எந்த ஒன்றாக இருந்தாலும் ஒரு மண்டலம் என்கிற அளவீட்டை வைத்திருந்தார்கள். இன்றும் வைத்தியத்திலிருந்து வழிபாடுகள்வரை இந்தநிலை உள்ளது.
ஒரு மண்டலம் என்றால் அதன் கால அளவு என்னவென்பது பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான். ஒரு மண்டலம் என்பது நாற்பத்தெட்டு நாட்கள்.
எந்த ஒன்றாக இருந்தாலும் நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து விரதமிருக்கும் பழக்கம் இன்றும் நம்மிடையே உள்ளது. இன்றைய நிலையில் நமக்கெல்லாம் அதற்கு நேரமும் இருப்பதில்லை; சூழலும் அமைவதில்லை.
ஏதோவொரு காரணத்திற்காகவோ, வேண்டுதலுக்காகவோ ஏதோவொரு ஆலயத்திற்கு நாம் போகிறோம்.
அல்லது கிரகத் தலத்திற்குப் போகிறோம்.
அங்குள்ள குறிப்பிட ஒரு கிரகத்தையோ, இஷ்ட தெய்வத்தையோ வழிபட்டுவிட்டு வருகிறோம்.
உதாரணத்திற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடைய விருப்பமான ஆலயத்திற்கு மட்டுமே போவோம். அல்லது கிரகப்பெயர்ச்சியா? குருப்பெயர்ச்சி என்றால் ஆலங்குடி, சனிப்பெயர்ச்சி என்றால் திருநள்ளாறு, ராகு - கேதுப் பெயர்ச்சி என்றால் காளஹஸ்தி என்று போய்வருவோம்.
இந்த ஒன்றின் காரணமாக நம் வேண்டுதல் நிறைவேறி விடுமா? நாம் கேட்டது கிடைத்துவிடுமா?
இங்கேதான் நாம் யோசிக்கவேண்டும்! கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வலிமையுண்டு என்பதால் ஒன்பது கிரகங்களுமே நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்த உண்மையை நம் முன்னோர்கள் உணர்ந்திருந்த காரணத்தினால்தான் அவர்களுடைய வேண்டுதலை, வழிபாட்டை, விரதத்தை நாற்பத்தெட்டு நாட்கள் என்ற நிலைக்குள் கொண்டு வந்தார்கள்.
அந்த நாற்பத்தெட்டு என்பது, நம்மை ஆளும் கிரகங்கள் ஒன்பது, அந்த ஒன்பது கிரகங்களுக்குமுரிய நட்சத்திரங்கள் இருபத்தேழு, அவர்களின் ஆட்சி வீடுகள் பன்னிரண்டு.
இந்த மூன்றையும் கூட்டினால் நாற்பத்தெட்டு வருகிறதல்லவா? இதன் காரணமாகவே ஒட்டுமொத்த ராசி அதிபதிகளையும், நட்சத்திரங்களையும், கிரகங்களையும் வழிபட்டால் மட்டுமே அவர்களின் அருள் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும். நமக்கு வேண்டியதை அவர்கள் அனைவரும் இணைந்து நமக்கு வழங்குவார்கள் என்று நம் முன்னோர்கள் தெரிந்திருந்தனர்.
இந்த வழிபாடுகளிலும், பூஜைகளிலும் நாம் நூற்றெட்டு முறை மந்திரங்கள் சொல்லி இறைவனைத் துதிப்போமல்லவா? அதற்கும் சூட்சும காரணமுண்டு.
அஸ்வினி முதல் ரேவதி வரையில் இருபத்தேழு நட்சத்திரங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்கிறபோது இருபத்தேழு நட்சத்திரங்களுக்கும் நூற்றெட்டு பாதங்கள்.
இதன் காரணமாகவே, நாம் வேண்டியதை அடைந்திட, நினைப்பதைப் பெற்றிட நாற்பத்தெட்டு நாட்கள், நூற்றெட்டு முறை நம் வேண்டுதலுடன் ஒரே சிந்தனையுடன் தொடர்ந்து இறைவனை வணங்கி வழிபட்டுவர, பூஜித்துவர நம்முடைய கோரிக்கைகள் வெற்றியாகும்.
இந்த விஞ்ஞான உலகில், பரபரப்பாக வாழும் சூழலில் அதற்கு சாத்தியமில்லை என்று நினைப்பவர்கள் நாற்பத்தெட்டு மணி நேரமாவது ஒரே சிந்தனையுடன், ஒரே வேண்டுதலுடன் ஒவ்வொரு கிரகத்திடமும், நட்சத்திரங்களிடத்திலும், இஷ்ட தெய்வங்களிடத்திலும், நூற்றெட்டு நூற்றெட் டாக நூற்றெட்டு முறை மந்திரம் ஒலித்து, மனதிலுள்ள வேண்டுதலைச்சொல்லி வழிபட அனைத்து சக்திகளும் ஒருமுகமாகி, நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவார்கள். நீங்கள் கேட்பதை அருள்வார்கள்.
செல்: 94443 93717