ஜோதிட சாஸ்திரத்தை வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டு மக்கள் வாழ்ந்துவரும் நிலையில், ஜோதிடம் குறித்து பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.
இந்த சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும், ஜோதிடர்களும் ஜோதிடத்தின்மீது நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களும் என்று இரண்டு தரப்பினருமே காரணம் என்று சொல்லலாம்.
ஜோதிடம் பார்ப்பவர்கள் ஜோதிடர்களை வரம் கொடுக்கும் சாமிகளாக எண்ணுவது முதலில் தவறு. அதேபோல், சில ஜோதிடர் கள் தம்மிடம் வந்த ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து அதிலுள்ள பலன்களைச் சொல்லாமல் அவர்களை நம்பி வருகிறவர்களுக்கு சரியான வழிகாட்டாமல் போவதும் தவறுதான்.
ஜோதிடம் என்பது சாஸ்திரம். ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்து, ராசி, லக்னம், தசாபுக்தி என்று பலவற்றையும் கணித்து, அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை உறுதியாகத் தெரிந்துகொள்ளமுடியும்.
ஒன்பது கிரகங்களும் பன்னிரண்டு பாவகங்களுக்குள் சஞ்சரிக்கின்ற நிலையை வைத்து மேலோட்டமாகப் பார்க்கின்றபோது அந்தக் குழந்தையின் வாழ்க்கை செல்வச் செழிப்புள்ளதாக இருக்கும். மிகப்பெரிய யோகங்களை உடைய ஜாதகமென்று சொல்லக்கூடியதாக அந்த ஜாதகத்தின் நிலை இருக்கும்.
இப்படி பார்க்கின்றபோதுதான், தசாபுக்தி நன்றாக இருக்கிறது; கோட்சாரத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலை சிறப்பாக இருக் கிறது; யோகத்திற்குரிய காலமாக இக்காலம் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஜாதகத்திற்கு பலன் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், ஜோதிடர்கள் சொன்ன எந்தவொரு யோகப்பலனும் அந்த ஜாதகருக்குக் கிடைப்பதில்லை. அப்படி பார்க்கின்றபோது, அந்த ஜாதகம் பொய்யா அல்லது அந்த ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொன்ன ஜோதிடர் சொன்ன வார்த்தைகள் பொய்யா என்று கேள்விகள் எழும்.
இங்கே ஒரேயொரு தகவல்தான். அதை உறுதியாக சொல்ல வேண்டுமென்றால் ஜோதிடம் என்பது வானியல் சாஸ்திரம். ஒரு கணிதம். நாம் பிறந்த நேரத்தில் கிரகங்கள் சஞ்சரித்த நிலையை வைத்தும், தற்பொழுது அந்த கிரகங்கள் சஞ்சரிக்கின்ற நிலையை வைத்தும் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தெளிவாக அறியமுடியும்.
பலன்களை மாற்றும் கர்மவினை
இந்த இடத்தில் மிக முக்கியமானதொரு தகவல், கர்மவினை என்பது- ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையின் பலன்கள் வெவ்வேறானதாக இருக்கும். ஒருவர் அதிர்ஷ்ட வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பார். அடுத்தவர் போராட்ட வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருப்பார். இருவரும் பிறந்த நேரம் ஒன்றுதான் என்றாலும் அவர்களுடைய முன்ஜென்ம கர்மவினையானது இருவருக்கும் வெவ்வேறானதாக இருக்கும். பூர்வபுண்ணியப்பலன்கள் இருவருக்கும் வெவ்வேறானதாக இருக்கும். அதைவைத்து ஒருவர் அதிர்ஷ்ட நிலையையும், அடுத்தவர் சங்கடத்தையும் அடைந்திருப்பார்கள்.
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய பூர்வபுண்ணியப் பலன்கள் மிகமிக முக்கியமானது. அதற்கும் மேலாக ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் அவர் களுடைய லட்சியத்தை அடையமுடியாத அளவிற்கு, எதிர்பார்த்த வாழ்க்கையை வாழமுடியாத அளவிற்கு, ஜோதிடர்கள் சொல்கின்ற பலன்களை அனுபவிக்க முடியாத அளவிற்கு ஏதேனும் தோஷங்கள் அவர்களுடைய ஜாதகத்தில் மறைந் திருக்கும்.
தோஷங்கள் என்பது எப்படி உருவாகின்றது என்று பார்க்கின்றபோது, முதலில் பாவம்.
நாம் செய்கின்ற பாவம் அடுத்த பிறவியிலும் நம்மைத் தொடரும் அதற்குரிய பலனை நம் அடுத்தடுத்த பிறவிகளில் நாம் அனுபவித்தேயாக வேண்டும்.
பாவம் என்பது நாம் தெரிந்தே செய்வதுதான். அதற்கடுத்து, நாம் செய்கின்ற பாவத்தினால் நாம் பெறுகின்ற சாபம்.
சாபங்களே தோஷங்கள்
இந்த இடத்தில் மிகவும் முக்கியமான தகவல், சாபம் என்பதை முற்றும் துறந்த முனிவர்தான் வழங்கவேண்டும்; ரிஷிகள்தான் வழங்கவேண்டும்: பத்தினிகள்தான் வழங்கவேண்டும் என்பதில்லை. ஒருவருக்கு நாம் செய்யும் பாவம் அல்லது துரோகத்தின் காரணமாக அவர் ஏமாற்றப்பட்ட நிலையில் மனக்குமுறலுடன் அவருடைய வாயிலிருந்து வெளிப்படும் கோப வார்த்தைகள்தான் நமக்கு அவர்கள் அளிக்கும் சாபமாகும். அந்த சாபமே நம் பிறப்பு ஜாதகத்தில் தோஷங் களாக அமைந்து நம் வாழ்க்கையை சின்னா பின்னமாக்கிவிடுகிறது.
ஜாதகத்தில் யோகங்கள் என்று இருப்பது போல் தோஷங்களும் பலருடைய ஜாதகத்தில் இருக்கிறது. அதை நாம் சரிவர கவனிக்காமல், அதற்குரிய பரிகாரங்களை மேற்கொள்ளா மல் போவதால் நம் ஜாதக ரீதியாக நமக்கு நடந்திட வேண்டிய பலன்கள் நடைபெறுவதில்லை.
இந்த இடத்திலும் ஒரு தகவலைச் சொல்லியாக வேண்டும். எந்தவொரு ஜாதகருக்கும் அவர்கள் பிறந்தபிறகு அவர்கள் செய்கின்ற பாவங்களுக்கும், பெறுகின்ற சாபங்களுக்கும் அவர்களுடைய ஜாதகத் தில் தோஷங்கள் உண்டாவ தில்லை. கடந்த ஜென்மத்தில் பெற்ற சாபங்களும் செய்த பாவங்களுமே இந்த ஜென்மத்தில் தோஷங்களாக ஒவ்வொருவருடைய ஜாத கத்திலும் மறைந்திருக்கிறது.
இந்த தோஷங்களையெல்லாம் கண்டு பிடித்தாலே ஒருவருடைய வாழ்க்கைக்கு தடையாக இருப்பது எது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். அந்த தோஷம் எத்தகையது, எப்படி ஏற்பட்டது என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய கிரக அல்லது ஆலய பரிகாரத்தின் வழியாக அந்த தோஷத்தின் பாதிப்பிலிருந்து நம்மால் விடுபடமுடியும். தடைகளை உடைத்து வாழ்க்கையில் வெளிச்சத்தையும் முன்னேற்றத்தையும் காணமுடியும்.
ஜாதகத்திலுள்ள தோஷங்களை எப்படி கண்டுபிடிப்பது?
அந்த வகையில், இந்த வாரம் புணர்பூ தோஷம் பற்றி பார்ப்போம்.
புனர்பூ தோஷம்
முற்பிறவியில் நாம் செய்யும் கர்மவினைகளின் காரணமாகவே இந்த புனர்பூ தோஷம் நமக்கு உண்டாகிறது. இந்த தோஷத்தை சந்நியாச யோகம் என்றும் சொல்லலாம். சந்நியாசிகள் பலரின் ஜாதகத்தில் இந்த தோஷத்தைப் பார்க்கமுடியும்.
ஒருவர் ஜாதகத்தில் சனிபகவானும் சந்திரனும் ஒரே வீட்டில் இணைந்திருந்தாலும், சனிபகவானும் சந்திரனும் ஏழாம் பார்வை யாக பார்த்துக்கொண்டாலும், சந்திர பகவானின் நட்சத்திரங் களான ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத் திரங்களில் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் சஞ்சரித்தாலும், சனிபகவானின் நட்சத் திரங்களான பூசம் அனுஷம் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் சந்திரபகவான் சஞ்சரித்தாலும், சனிபகவான் தனது மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வையில் ஏதேனும் ஒரு பார்வையை சந்திரன்மீது செலுத்தினா லும், சனியும் சந்திரனும் ஒரே ராசி அதிபதி யின் வீட்டில் சஞ்சரித்தாலும் அந்த ஜாத கருக்கு புனர்பூ தோஷம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
புனர்பூ தோஷத்தால் ஏற்படும் பாதிப்பு!
இந்த தோஷம் எத்தகைய பாதிப்பை ஜாதகருக்கு ஏற்படுத்தும் என்ற கேள்வி எழும் போது, அந்த ஜாதகர்கள் திருமணத்திற்கு முன்பாகவே காதல், கலப்பு என்ற நிலைக்குச் செல்வார்கள். திருமணத்தின்மீது பெரிய நாட்டமில்லாதவர்களாகவும் இருப்பார்கள். அதனால் வருகின்ற வரனெல்லாம் தட்டிச்செல்லும், திருமணத்தில் தடை உண்டாகும். திருமணம் முடிவுசெய்யப்பட்ட நிலையில் ஆணோ பெண்ணோ வேறொரு வரை திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்களாக மாறுவார்கள். ஒருசிலருக்கு திருமணம் நிச்சயமான நிலையில் நின்றுபோகும். சிலருடைய திருமணங்கள் காவல் நிலையம்வரை சென்று பிரச்சினைக்கு வழிவகுக்கும். ஒருசிலருக்கு திருமணம் நிச்சயம் செய்தநிலையில் பெற்றோர்களில் யாராவது ஒருவர் மரணிப்பதால் அவர் களுடைய திருமணத்தில் தடையை உண்டாக்கும். ஒருசிலருக்கு மேடைவரை சென்றும் திருமணம் நின்றுபோகும். இத்தகைய நிலைகளுடன் தலைவலி, அச்ச உணர்வு, மன அழுத்தம், படபடப்பு, குழப்பம், சஞ்சலம், சந்தேகம், மனதில் தெளிவில்லா மல் தானும் குழம்பி தன்னைச் சார்ந்தவர் களையும் குழப்புகின்றவர்களாவும் இந்த தோஷமுடையவர்கள் இருப்பார்கள். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பதால் மற்றவர்களுடன் இணக்கமாக இல்லாமல் போவார்கள். தவறே செய்யாதவர்களாக இருந்தாலும் கெட்ட பெயரும் இவர்களுக்கு உண்டாகும், சனி சந்திரன் தொடர்பு எந்த பாவகத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகத்தின் பலன் கெடும் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அதேநேரத்தில் தாம் மேற்கொண்டுள்ள தொழிலில் அதிக அக்கறை உடையவர்களாகவும், அதன் வெற்றிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து முயற்சிப்பவர்களாகவும், சுய தொழிலில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.
புனர்பூ தோஷம் உண்டாக காரணம்!
தெரிந்தோ தெரியாமலோ யாருடைய திருமணத்திலாவது சங்கடங்களை ஏற்படுத்தி அதன்காரணமாக அவர்களுடைய திருமணம் நடைபெறாமல் நின்று போனா லும், ஒருவரையொருவர் பிரிவதற்கு அல்லது விவாகரத்து செய்வதற்குத் துணையாக இருந்தாலும் நம்முடைய சந்ததிக்கு புனர்பூ தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இந்த தோஷத்திற்கு நம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் வாயிலாகவும் பரிகாரம் இருக்கிறது. அது, சந்திரன் சனியுடன் சூரியன் இணைந்திருந்தாலும் அல்லது சந்திரன் சனியை சூரியன் பார்த்தாலும், குருபகவானின் பார்வையோ சேர்க்கையோ பெற்றாலும், குருபகவானின் தனுசு, மீனம் வீடுகளில் சந்திரன் சனி இணைந்திருந்தாலும், பௌர்ணமியில் பிறந்திருந்தாலும், குருவுடன் சந்திரனும் சுக்கிரனுடன் சனியும் இணைந்து சப்தம பார்வை கொண்டாலும், குரு சுக்கிரன் இணைந்து சனி சந்திரனைப் பார்த்தாலும், குருபகவானின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களிலோ சூரியபகவானின் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களிலோ சனியோ சந்திரனோ அமர்ந்திருந்தாலும் புனர்பூ தோஷம் ஜாதகத்திலேயே நிவர்த்தி ஆகிவிட்டது என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக, தோஷத்தை கொடுக்கும் கிரகங்களை குருவோ சூரியனோ பார்த்தால் அந்த தோஷம் வலுவிழந்து போகும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
திருமண வாழ்க்கையில் குழப்பம், தடை, பிரச்சினை, வழக்கு, பிரிவு, திருமணமே நடக்காமல் சந்நியாசிபோல் வாழக்கூடிய நிலையினை ஜாதகருக்கு உண்டாக்கும் புனர்பூ தோஷத்திற்கு மிகவும் எளிமையான பரிகாரங்கள் உண்டு. அவற்றை செய்வதன் வழியாக தோஷம் விலகும். தடைகள் அகலும்.
பரிகாரம்
புனர்பூ தோஷத்திற்குரிய பரிகாரத்தில் முதன்மையானது குலதெய்வத்திற்கு முடி காணிக்கை செலுத்தி படையலிட்டு பூஜை செய்வதாகும்.
அடுத்து சனி அல்லது திங்கட்கிழமையில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வதுடன், ஒவ்வொரு முறையும் மூன்று துறவிகள்வீதம் மூன்று மாதமும் ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்வதால் தோஷம் நிவர்த்தியாகும்.
சந்திர தலமான திருப்பதிக்கு நடந்து சென்று சனி அல்லது திங்கட்கிழமையில் வேங்கடாசலபதியை தரிசனம் செய்து, வேண்டிவருவதாலும் தோஷம் நீங்கும்.
திருமணஞ்சேரிக்கு சென்று அங்கு நடக்கும் பரிகார பூஜையில் பங்கேற்பதாலும், இராமேஸ்வரம் சென்று இராமநாத சுவாமியை அர்ச்சனை செய்து வருவதாலும் திருமணத் தடைகள் விலகும்.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவிசெய்வதாலும், திருமாங்கல்யம் வாங்கி உதவிபுரிவதாலும் புனர்பூ தோஷம் விலகும். திருமண வாழ்க்கை சிறக்கும்.
செல்: 94443 93717