மனித வாழ்வின் நிகழ்வுகள் எப்போதும் ஒன்றுபோல் நடப்பதில்லை. ஒவ்வொரு நாளும் வேறுவேறு அனுபவங்கள் மனிதர்கள் பெறுகிறார்கள். இதற்கு காரணம் கிரகங்களின் நகர்வுதான். கிரகங்களின் கோட்சாரமே மனிதர்களை நகர்த்திக்கொண்டே செல்கிறது.
தற்போது வாக்கியப்படி 2023 மார்கழி 4-ஆம் தேதி, டிசம்பர் 20-ல் சனிபகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்கிறார். சனிபகவான் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்கிறார். சனி கும்ப ராசியில் அவிட்டம் 3, 4-ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்களில் சஞ்சரித்து அதனதன் பலன்களைத் தரப்போகிறார்.
சனி இருந்த இடத்தை விருத்தி செய்வார், பார்த்த இடத்தை பாழாக்குவார் எனும் ஜோதிட விதியுண்டு. அதற்கு பெரிய புராண கதையுமுண்டு. சனி பார்த்த இடத்தை எரிப்பதால், என்ன வெளிச்சம், எத்தகைய நன்மை ஜாதகருக்கு கிடைக்கும் என்பதை, இந்த சனிப்பெயர்சி கட்டுரை விளக்குகிறது. 12 ராசிக்கும், சனிபார்வை பட்டு, கெட்டுப் போனதால் என்னவித நன்மை கிடைக்கும்
மேஷம்
மேஷ ராசிக்கு பதினோரா மிடமான லாபத்தில் லாப சனியாக அமர்ந்துள்ளார். இருக்குமிடத்தை வளப்படுத்துவார் எனும் விதிப்படி, சனிபகவான் மேஷ ராசியாரின் லாபத்தை பெருக்கி, எண்ணியதை நிறைவேற்றி, மூத்த சகோதர, அரசியல் லாபத்தையும் அள்ளித் தருவார். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்கள் அவமானங்கள் அழிந்துவிடும். நெடுநாட்களாக சுமந்துவந்த அபவாதத்தை இறக்கிவைப்பார். உங்களுக்கு வரவிருந்த ஒரு ஆயுள் கண்டம் நீங்கிவிடும். ஆயுள்விருத்தி ஏற்படும். இது சனிபகவான், உங்களின் 8-ஆமிடத்தைப் பார்த்த பலனாகும். உங்களின் ஒரு கூடா நட்பு உங்களைவிட்டு பிரிந்து விடும். சில முறையற்ற காதல் காணாமல் போகும். புத்திசாலித்தனமாக குழி பறித்த சில எதிரிகளை சனிபகவான் விலக்கிவிடுவார். தொழில்முறையில், சில சட்ட புறம்பான செயல் களுக்கு தடைவிதித்து விடுவார். மேஷ ராசியின் வெகு இயல்பான பரபரப்பு குறைந்து, சற்று அமைதியாகி விடுவீர்கள். உங்களின் மது போன்ற கெட்ட பழக்கங்களை சனி விட்டொழிக் செய்வார். சனியின் பார்வை, உங்களுக்கு வரும் ஆபத்தை தவிர்த்து, காப்பாற்றும் என்பது அதிமுக்கியமான விஷயமல்லவா!
பரிகாரம்: ஏரிக்குப்பம் சனீஸ்வரரை வழிபடலாம். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு தீபமேற்றி வணங்கவும். எவர்சில்வர் கிண்ணம் நிறைய துவரம் பருப்பை கொடுக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் பத்தாம் வீட்டில் சனி அமர்ந்து தொழில் சனியாக பெயர் பெறுகிறார். சனி அமர்ந்த இடத்தை விருத்தி செய்வார் எனும் கூற்றுப்படி, ரிஷப ராசியார் வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும் சொந்தத் தொழில் ஆரம்பித்துவிடுவீர்கள். இந்தத் தொழில் தொடங்க, உங்களின் சில மாமியார்கள் தொகை கொடுத்து உதவுவர். இந்த சனி உங்களின் செலவுகளை குறைப்பார். அலைச்சல்களை அடக்கி வைப்பார். செலவை குறைக்கவேண்டும் எனும் எண்ணத்தில், பங்குதாரரை நீக்கிவிடுவார். பார்ட்னர் என்று கேள்வி கேட்பார், அதற்கு பதில் சொல்லணுமா என ரெடிமேட் பதிலாக கூறிவிடுவார். நிறைய ரிஷப ராசியாரின்மேல் இருந்த குற்றச்சாட்டுகளை சனி பொசுக்கிவிடுவார். ஏன் சிலரின் அந்தரங்க வாழ்க்கை சம்பந்தமான சில இக்கட்டுக்களை, சனி இடித்து தள்ளுவார். சிலரின் "வேண்டாத கனெக்ஷன்களை' சனி கட் பண்ணி விடுவார். சில காதல்களை பிரித்து ஜாதகருக்கு நன்மை தருவார். வீடு, வாகன விஷயங்களில் ரிஷப ராசியாருக்கு நாலு அறைக்கொடுத்து, கவனமாக இரு என மிரட்டுவார். களவுபோன பொருளை திரும்பக் கிடைக்கச் செய்வார்.உங்களுக்கு வரும் லாபம் பாதியளவு நேர்வழியிலும், மீதி குறுக்குவழியிலும் அமையும். உங்களுக்கு இதுவரையில் தொல்லை தந்த நோயும், எதிரியும், குறிப்பாக பெண் எதிரிகள் இடம்விட்டு நகர்வர். நோய் தாக்கம் மறையும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வரும் ஒரு விபத்து தவிர்க்கப்படும். உங்களின் சில வாழ்க்கைத் துணைவர், வெளிநாட்டில் கஷ்டம் அனுபவித்துக் கொண்டிருந்தால், அவர் இப்போது பத்திரமாக உங்களிடம் வந்துசேர்வார்.
பரிகாரம்: சென்னை பொழிச்சலூர் சனீஸ்வரரை வணங்கலாம். எள் மிட்டாய் கொடுக்கவும். பசுமாட்டிற்கு பழம் வாங்கிக்கொடுக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் ஒன்பதாம் இடத்திற்கு சனி அதிர்ஷ்ட சனியாக மாறியுள்ளார். யோகத்தை தரும் சனிபகவான் மிக மெதுவாகத்தான் கொடுப்பார். ஆனால் அந்த அதிர்ஷ்டம் ஸ்தரமானதாக இருக்கும். இதுவரையில் நோய் தாக்கத்தால், மருத்துவமனையில் இருந்தவர்கள், நோய் நீங்கி, வீடு திரும்பலாம். வீடு, மனை, வாகன, வயல், தோட்டம் சம்பந்த கடன் அடைபடும். உங்கள் தொழிலில் தொல்லை கொடுத்த எதிரிகள் விலகிவிடுவர். வீடு மற்றும் அலுவலகத்தில் இம்சை கொடுத்து கொண்டிருந்த நபர்கள் இடம் மாறிவிடுவதால், நீங்கள் சற்று நிம்மதியாக இருக்கலாம். அரசு துறை சார்ந்த வரி போன்ற இன்னல் களிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். வேலையாட்கள் மூலமிருந்துவந்த சங்கடங்கள் விலகும். சிலர் வீடு வாங்க. அலுவலகத்தில் வாங்கியிருந்த கடன், ஏதேனும் ஒருவகையில் தள்ளுபடி செய்யப் படும். அரசியல்வாதிகள், அவர்களின் பெயரைக் கெடுத்துகொண்டிருந்த சில பணியாளர்கள் நீங்குவதால், சற்று ஆசுவாசம் அடைவர். சமயலறை சங்கடங்கள் நீங்கும். சிலருக்கு, நஷ்டமும் கஷ்டமும் தந்துகொண்டிருந்த ஒப்பந்தம் ரத்து பெறும். உங்களை பாடாய்படுத்திக்கொண்டிருந்த மாமனார் வேறிடம் செல்வார், உங்களின் சில வாரிசுகள் சொன்ன பேச்சைக் கேட்காமல், மானாவாரியாக சுற்றிக்கொண்டிருப்பின் அவர்களை இந்த சனி கட்டுப்பாட்டுடன் இருக்கச் செய்வார். வீடு விற்கும்போதும், வீடு மாற்றும்போதும் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: அரக்கோணம், மங்கள சனீஸ்வரரை வணங்கலாம். அருகிலுள்ள சனீஸ்வரரை புதன்கிழமைதோறும் வணங்கவும். பள்ளி மாணவர்களுக்குத் தேவையறிந்து உதவவும்.
கடகம்
கடக ராசிக்கு, சனிபகவான் எட்டாமிடத்தில் அஷ்டமச்சனியாக அமர்ந்துள்ளார். அஷ்டமச்சனி அனைவரையும் கலவரப்படுத்தும். சனியும், எட்டாமிடமும் சேரும்போது ஆயுள் பெருக்கம் கண்டிப்பாக உண்டு. வெகு சிலர் ஏதேனும் புதையல் கிடைக்கப்பெறுவர். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்கள் வாக்கு கட்டுக்குள் இருக்கும். மௌனமாக இருக்கவேண்டிய சூழல் உருவாகும். "மௌனம் கலக நாஸ்தி' என்பர். எனவே அநாவசிய சண்டை வராது. பணவரவை அடுக்குவார். எனவே வேண்டாத மது, போதை பழக்கங்கள் தவிர்க்கப்படும். உங்கள் வாரிசுகளும், வேறு வழியில்லாமல் ஒழுக்கமாக இருப்பர். கடக ராசியின் கலை, சினிமா மனிதர்களும் அகலக் கால் வைக்க சனிபகவான் சம்மதிக்கமாட்டார். எனவே ஒரு லிமிட்டுக்குள்தான் வாழ்வுநிலை அமையும். இதனால் பொறாமை, விளையாட்டுப் போட்டிகள், பங்குவர்த்தம் இவைகளின் வெற்றி சற்று எட்டாக்கனியாகிவிடும். ஆனாலும் அதில் பங்கேற்கச் செய்வார். அரசியல்வாதிகள் கொஞ்சம் மட்டுப்படுத்து வால் இதனால் வீண் அலைச்சலை தவிர்ப்பார். சொந்தத் தொழிலில், உங்கள் மாமனார்- மாமியார் தலையிடை விலக்கி விடுவார். இதனால் சில முடிவுகளை நீங்கள் தன்னிச்சையாக எடுக்க இயலும். கடக ராசி குழந்தைகளின் ஆரம்பக்கல்வி பல்டியடித்தாலும், உயர் கல்வி மாணவர்கள், ஒரு எதிர்பாராத நல்லது பெறுவர். உங்களின் முதலாளி அல்லது மேலதிகாரி, ஏதோ ஒரு காரணம் பொருட்டு, உங்களை சற்று மரியாதையாகவும் அன்பாகவும் நடத்துவர். சில உள்ளூர், வெளிநாட்டு பயணங்களின்போது, இடையூறு ஏற்பட்டாலும், அதுவும் ஒரு நன்மையாகவே இருக்கும்.
பரிகாரம்: அஷ்டமச்சனி ஆதலால், திருநள்ளாறு சென்று வணங்கவும். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, அபிஷேகத் திற்கு எண்ணெய் வாங்கி கொடுக்கவும். வயதான பெண்களின் ஆரோக்கிய குறைபாடு தீர, தேவை கேட்டு மருந்து வாங்கி கொடுக்கவும்.
சிம்மம்
சிம்ம ராசியின் ஏழாவது, களஸ்த்திர ஸ்தான சனியாக அமர்ந்து, ராசியை நேர்பார்வையாக பார்த்து எரிக்கிறார். சிம்ம ராசி எப்போதும் ஆர்ப்பாட்டமான ராசியாகும். சனி இதனை பார்க்கும்போது, அந்த அதீத ஆர்ப்பரிப்பை அடக்கி, சிம்ம ராசியாரை அமைதிபடுத்துவார். சிம்ம ராசியார் அமைதியாக இருப்பது என்பது அரிதிலும் அரிது. ஒத்தக்காட்டு ராஜாவாக இருந்ததுபோதும். நாலுபேருடன் பழகு என சிம்ம ராசியாரை இழுத்துச் செல்வார். இவர்களுக்கு இவ்விஷயம் பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் சனி அதனை செய்யச் செய்வார். அது உடல்நிலை காரணமாக இருக்கலாம். வீடு சம்பந்தமாக அமையலாம். ஆன்மிக தேடல் காரணமாகலாம். சில ஒப்பந்த குத்தகை விஷயம் பிறருடன் கோர்த்துவிடலாம். பேரன்- பேத்தி விஷயமாக அமையலாம். உங்களின் பதவி உயர்வு காரணமாக இருக்கலாம். அரசியல் நிகழ்வு, அரசியல்வாதிகள் அனைவருடனும் பழகும் நிர்ப்பந்தமாக இருக்கலாம். சில சட்டபுறம்பான செயல்களை செய்ய பிறர் உதவி கண்டிப்பாக தேவையாக இருக்கலாம். வேலை விஷயமான அனுசரணை விஷயமாக அமையலாம். எது எப்படி இருப்பினும், சனிபகவான், சிம்ம ராசியாரை தங்களது கெத்து காட்டுவதிலிருந்து ஒருபடி இறக்கிவிடுவார். இது சிம்ம ராசியால் தாங்கமுடியாத விஷயமாக இருக்கும். சனிப்பெயர்ச்சி ஆனவுடன் நிறைய சிம்ம ராசியாருக்கு திருமணம் நடந்து விடும்.
பரிகாரம்: தஞ்சாவூர், விளங்குளம். திருமணக்கோல சனீஸ்வரரை வணங்க லாம். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் விளக்கேற்றலாம். வயதான பெரியவரின் துயரம் அறிந்து உதவுங்கள்.
கன்னி
கன்னி ராசியின் ஆறாம் வீட்டில், ருண சனியாக அருள்பாலிக்கிறார். 6-ஆமிட சனி, கன்னி ராசியினை கடன் வாங்கச் செய்வார். அது பயனுள்ள செலவுக்குரிய கடனாக அமையும். இந்த பெயர்ச்சியின்போது, சனிபகவான், கன்னி ராசியாரின் அவமானங் கள் துடைத்து எறிவார். இதுவரையில் உங்கள்மீது இருந்துவந்த கெட்ட பெயர் ஒழியும். வீண் அபவாதங்கள் நீங்கும். ஒரு விபத்து தடுக்கப்படும். ஆயுள் கண்டத்திலிருந்து, சனி மீட்டெடுப்பார். சனியின் பார்வையை, 8-ஆமிடம் பெறுவதால் ஆயுள் தீர்க்கம் ஏற்பாடு, அரசு சம்பந்தமான, வீண் வெட்டிச் செலவுகளை கட்டுப்படுத்துவார். நீங்கள் எந்த பகுதி அரசியல்வாதிகளிடம், பணம் கொடுக்க வேண்டி இருப்பினும், சனி அதற்கு கட்டையை போட்டு, செலவை நிறுத்தி வைப்பார். 6-ஆமிடத்தில் அமர்ந்த சனி, கன்னி ராசியினரை கடுமையாக உழைக்கச் செய்வார். அதிக உழைப்பு இருக்குமிடத்தில், தூக்கம் குறைவது இயல்புதானே! செலவைக் குறைக் கும் நோக்கத்தில், வேலை செய்யும் பணியாட்களை குறைத்துவிடுவார். இதன் பொருட்டும் கன்னி ராசியினரின் வேலைப்பளு அதிகரிக்கும். இளைய சகோதரனுடன், ஒரு இடைவெளி ஏற்படுத்துவார். இதேபோல் உங்கள் மாமனாரின் தொல்லையிலிருந்து, உங்களை காப்பாற்றி கரை சேர்ப்பார். சனி பார்வையால் செலவை சுருக்குகிறார்களா அல்லது பணவரும்படி குறைவதால் கொஞ்சமாக செலவழிக்கிறீர்களா என பட்டிமன்றம் நடத்தலாம். வீடு விற்கும்போதும், புதிய வேலையாட்களை நியமிக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். அரசு சார்ந்த ஒப்பந்தங்களின்போது, அதன் சட்டபிரிவை நன்கு கவனியுங்கள். 6-ஆமிட சனி, கன்னி ராசியின் நோய், எதிரியை அழிப்பதோடு, உங்களை நல்ல உழைப்பாளியாக மாற்றி விடுவார். நல்ல உழைப்பு உள்ள இடம் ஆரோக்கியமாக இருப்பதில் என்ன அதிசயம்!
பரிகாரம்: புதுக்கோட்டை ஆலங்குடி சனீஸ்வரரை வணங்கவும். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, புதன்கிழமைதோறும் தீபமேற்றி வணங்கவும். ரொம்பவும் உடல்நிலை பாதித்து, ஒரே இடத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் தேவையறிந்து உதவவும்.
துலாம்
துலா ராசியின் ஐந்தாமிடத்தில் சனி பகவான் பூர்வபுண்ணிய சனியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். துலா ராசிக்கு சனி ராஜயோகாதிபதி. அவர் ஐந்தாமிடத்தில் அமர்வது நல்லது. இதுவரையில் குழந்தைக்கு ஏங்கி கொண்டிருந்த, துலா ராசி தம்பதிகள், புத்திர பேறு கிடைக்கப்பெறுவர். அதுபோல், வீடு, வயல், தோட்டம், வாகனம் என இவை சரிவர வசப்பட்டு வராதவர்கள் அவையனைத்தும் சரியாக வரக்காண்பார்கள். இந்த சனிப்பெயர்ச்சி, உங்கள் வியாபாரர் பங்குதாரரின் தொல்லையிலிருந்து விடுபட செய்யும். எனில் முழு வியாபாரத்தையும் நீங்கள் ஒற்றை ஆளாக செய்ய நேரிடும். உங்களில் சிலர், உங்களின் வாழ்க்கைத்துணை தந்துகொண்டிருந்த நச்சரிப்பில் இருந்து மீள்வீர்கள். சில வேண்டாத கேள்விகளிலிருந்து தப்பிவிடுவீர்கள். சில விரும்பத் தகாத சந்திப்புக்கள் விலக்கப்படும். உங்கள் மூத்த சகோதரனின் தொல்லை நீங்கும். அரசியல்வாதிகளில் சிலர், அரசியலே வேண்டாம்டா சாமி என விலகி, நிம்மதி பெறுவர். சமையல் வேலை குறையும். சிக்கனம் அதிகரிக்கும். அதிக அலைச்சல் தவிர்க்கப்படும். உங்களின் லாபஸ்தானத்தையும், பணவரவு ஸ்தானத் தையும் ஒருங்கே பார்க்கும் சனி, அதனை சுருக்குகிறார். இதனால் உங்களுக்கு பணத்தின் அருமையை ஆழமாக சொல்லித் தருகிறார். இது பெரிய விஷயமல்லவா!
பரிகாரம்: திருநாரையூர்- நாச்சியார் கோவில் சனீஸ்வரரை வணங்கலாம். அருகிலுள்ள சனீஸ்வரரை, வெள்ளிக் கிழமைகளில் கற்கண்டு கொண்டு வணங்கவும். இளம்பெண்களுக்கு, இரும்பு, எவர்சில்வர் சார்ந்த பொருட்கள் வாங்கிகொடுங்கள்.
விருச்சிகம்
சனிபகவான், விருச்சிக ராசியின் நான்காமிடத்தில் வந்து அமர்வதால், கண்டகச் சனி எனும் பெயர் பெறுகிறார். சனி, இருந்த இடத்தை செழிக்கச் செய்வார் எனும் விதிப்படி வீடு, வாகனம், வயல், தோட்டம், காடு, கரை விவசாயம், தண்ணீர் சார்ந்த இனங்கள் என இவற்றை காப்பாற்றி கரை சேர்ப்பார். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்கள் கடன் அழியும். எதிரிகள் விலகுவர். நீண்டநாள் நோய்கள் கட்டுக்குள் அடங்கும். இந்த சனிப்பெயர்ச்சி, விருச்சிகத்தாருக்கு ஏறுமாறான ஒரு விஷயத்தை கொடுக்கும். நிறைய விருச்சிக ராசியினர், ஒரு ஆர்வத்தில், வேலையைவிட்டு தொழில் தொடங்கியிருந்து அதில் நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள். சனிபார்வை நீ தொழில் நடத்தியது போதும் ராசா மூட்டையைக்கட்டு என சொந்தத் தொழிலை இழுத்து மூடவைத்துவிடுவார். நீங்களும் இருக்கிறதை விற்று கடனை அடைத்துவிட்டு, வேலைக்கு போக ஆரம்பித்து விடுவீர்கள். இதில் இன்னொரு புறமாக, இருக்கிற வேலையை விட்டுவிட்டு, சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம் என எண்ணம்கொண்டு, அதற்கான செயல் திட்டத்தில் ஈடுபடும்போது, அச்செயல் அப்படியே அந்தரத்தில் நின்றுவிடும். நீங்கள் என்ன செய்வது என தெரியாமல், முழியாய் முழித்து, கடைசியில் விவசாயம் பக்கம் போகலாம் என காடு கரை பக்கம் சென்று செட்டில் ஆவீர்கள். இந்த அல்லாட்டத்திற்கு காரணம், சனி உங்கள் ராசியை பார்ப்பதுதான். அவர் உங்களை மண்டை காயவைத்து, பைத்தியம்போல அலைய வைத்துவிடுவார். எனவே விருச்சிக ராசியினர் உள்ளதைக் கொண்டு நல்லதாக வாழுங்கள். இந்த சனி, உங்களின் கடன்களை அழித்துவிடுகிறாரே அது பெரிய விஷயமல்லவா?
பரிகாரம்: ஆரணி- படவேடு சாலையில் ஏரிக்குப்பம் சனீஸ்வரரை வணங்கலாம். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு செவ்வாய்கிழமை தீபமேற்றவும். குழாய் தோண்டும் தொழிலாளரின் தேவை கேட்டு உதவவும்.
தனுசு
தனுசு ராசிக்கு வீரிய தைரிய சனியாக வீற்றிருக்கிறார். இருக்கும் இடத்தை பெருக்குவார் எனும்படி, சனி தனுசு ராசிக்கு, வீரம், தைரியம், தன்னம்பிக்கை என வாரி வழங்குவார். மேலும் நிறைய ஒப்பந்தங்களில் கையெழுத்துடுவதும், அதிக வேலையாட்களை வைத்து வேலை வாங்குவதும் செழிப்பாக நடக்கும். இளைய சகோதர அனுசரணை தருவார். இந்த சனி உங்களின் செலவுகளை கட்டுப்படுத்துகிறார். எனவே, குஜாலாக மது குடிப்பது, சீட்டு விளையாடுவது, மானா வாரியாக சுற்றுவது என இன்ன பிற வௌங்காத பழக்கங்களை விட்டொழிக்கச் செய்வார். கலையுலகினரில் சிலர், சில அரசியல்வாதிகளின் மிரட்டிலில் இருந்து மீள்வர். விளையாட்டுத்துறையினருக்கு தரும் தோல்விகள்மூலம், அவர்களை இன்னும் கடுமையான பயிற்சி மேற்கொள்ளச் செய்வார். உங்கள் வாரிசுகள் வாங்கிய கடன்கள் அடையும். சில தனுசுக்காரர்கள் தங்களது மறைவான இரகசியத் தொடர்புகளிலிருந்து விடுதலை பெறுவர். மூத்த சகோதரியால் இருந்துவந்த இன்னல் தீரும். சில பெண் அரசியல்வாதிகள், மிகப்பெரிய பதவியை இழக்கக்கூடும். எனினும் இந்நிகழ்வு, அவர்கள்மீது நெடுங்காலமாக இருந்துவந்த களங்கத்தை துடைத்தெறியும். சில அரசின் சட்ட சிக்கல்களிலிருந்து வெளிவந்து விடுவீர்கள். சில நல்ல அதிர்ஷ்டம் கை கூடாமல் போகலாம். ஆயினும் அவை தரும் நக்கல்களும், அவமானச் சொற்களும் நையாண்டியும் களங்க கண்ணோட்டமும் கட்டுப்படும் அல்லவா!
பரிகாரம்: வழுவூர்- மயிலாடுதுறை, வில்லேந்திய சனீஸ்வரரை வழிபடலாம். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, வஸ்திரம் அணிவித்து வணங்கவும். வயதான, ஏழ்மை அந்தணரின் தேவையறிந்து உதவவும்.
மகரம்
மகர ராசிக்கு ஏழரை மற்றும் வாக்கு சனியாக வாகாக அமர்ந்துள்ளார். எனவே வாக்கு காத்ரம் பெறும். பணம் ஸ்த்ரமாக வர ஆரம்பிக்கும். குடும்பம் நிலைக்கும். வீடு விஷயம் விருத்திபெறும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்களின் கருத்துகள், மற்றவர்களால் முழு மனதுடன் அங்கீகரிக்கப்படும். உங்கள் வீடு, மனை விஷயங்கள், உங்கள் பூர்வீக சொந்தம் அல்லது அரசு அல்லது எதிரிகள், பொறாமையால் வில்லங்கம் செய்துகொண்டிருந்தவர்கள் என இவர்களை சனிபகவான் செயலிழக்கச் செய்துவிடுவார். வீடு, மனை உடனே கைக்கு கிடைக்கிறதோ இல்லையோ, அது சார்ந்த படபடப்பு கவலை இல்லாமல் இருக்கலாம். இதுவரையில் இருந்துவந்த அவமானங்கள் அடியோடு நீங்கும். முக்கியமாக அரசு சார்ந்த, தந்தை சார்ந்த மிகுந்த மனத்துயரம் இவை நீங்கும். ஆயுள் கண்டங்கள் நீங்கும். உங்களின் அறியாமையால், இதுவரையில் இருந்துவந்த நஷ்டம் விலகும். அரசியல்வாதிகள், உங்களுக்கு எதிராக செயல்பட்டுவந்த உதவியாளர்களை இனங்கண்டு நீக்குவீர்கள். சில அரசியல்வாதிகள், வேறு கட்சிக்கு போவதற்கு துண்டு போட்டு முயற்சித்தாலும் வேறு கட்சியில், இவர்களை சேர்க்கமாட்டார்கள். இதனால் மகர ராசியின் அரசியல்வாதிகள், குரங்கு மாதிரி கட்சிவிட்டு கட்சி மாறுவது தடுக்கப்படும். வெளிநாட்டு பயணங்கள் தடைப்படுவதால், அதனால் ஏற்படும். இன்னலிருந்து தப்பிவிடுவீர்கள். உங்கள் மூத்த சகோதரனின் துரோகம் வெளிவரும். சில அரசு அதிகாரிகள் சிறைக்கு செல்லும் சூழ்நிலையை, ஏதோ ஒன்று செய்து, அதிலிருந்து வெளிவந்துவிடுவர். மகர ராசிக்கு சனி, அவர்களின் அவமானம் துடைத்து, ஜெயிலுக்கு செல்லாமல், பொதுஜனத்தோடு நடமாடவிடுவது எவ்வளவு சிறப்பு.
பரிகாரம்: குச்சனூர் சென்று சனீஸ்வரரை வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரருக்கு தீபமேற்றி வழிபடவும். ஊனமுற்றவர்களுக்கு, ஏதேனும் எவர் சில்வர் பாத்திரம் வாங்கிகொடுங்கள்.
கும்பம்
கும்ப ராசியின் ஏழரைச்சனியின் காலத்தில், அவர் ராசியிலேயே அமர்ந்து ராஜாங்கம் செய்கிறார். ஏற்கெனவே, கும்ப ராசி அழுத்தமான ராசி. இதில் மந்த சனியும் சேர்ந்துவிட்டால், இவர்களை புரிந்துகொள்வது மிக கஷ்டமாகிவிடும். ராசியில் அமர்ந்த சனி சுற்றி உள்ளவர் களையும், எதிரில் நடப்பதையும், ஆழ்ந்து உள்வாங்கிச் செய்வார். மனதில் ஒரு தெளிவான புரிதல் கிடைக்கச் செய்வார். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு தொல்லை கொடுத்த குத்தகைதாரர் கள் விலகிவிடுவர். உங்களின் இளைய சகோதரன் சார்ந்த இன்னல் நீங்கும். உங்களைப் பற்றிய வதந்தி, உங்கள் தொழில் பற்றிய புகார்கள் இவை மறைந்துவிடும். உங்களில் சிலருக்கு உங்கள் தொழில் பங்குதாரர்களே உங்களுக்கு எதிரான செய்தியை கிளப்பி விட்டுக்கொண்டிருப்பர். அவர்கள் உங்களைவிட்டு நீங்குவதால், அவச்சொல் நீங்கப் பெறுவீர்கள். இன்னும் சில பெண்களுக்கு, அவர்களின் கணவர்களே குசும்புத்தனமாக ஏதாவது செய்துகொண்டு இருப்பர். சனி இந்த இன்னலையும் நீங்கச் செய்வார். அரசு சம்பந்தமான அபராதம் குறையும். உங்கள்மீது அரசுவகை வரி வழக்கு இருப்பின் அதையும் சனி குறுக்கிவிடுவார். உங்களுக்கு சரியான தொழிலாளர்கள் கிடைப்பது சிரமம் ஆவதால், முழு தொழில், வியாபாரத்தை நீங்களே பார்த்துக்கொள்ள வேண்டிவரும். உடையவன் உழைத்தால் ஒரு படிமேல் என இதை எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.
பரிகாரம்: சேர்ந்தமங்களம் சென்று சனீஸ்வரர் வழிபாடு செய்யவேண்டும். அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, சனிக்கிழமை தோறும் எளெண்ணெய் விளக்கேற்றவும். ஓரிடத்தில் முடங்கி இருப்பவர்களுக்கு, முடிந்த உதவிசெய்யவும்.
மீனம்
மீன ராசிக்கு ஏழரைச்சனியில் விரயச்சனியாக உள்ளார். சனிபகவான் இருக்கும் இடத்தை விருத்தி செய்வார். எனவே உங்களின் பன்னிரண்டாமிடத்தில் அமர்ந்த சனி நிறைய அலைச்சலைத் தருவார். வெளிநாடு, உள்நாடு என சீசன் டிக்கெட் எடுத்து சுற்றுவீர்கள். நிறைய செலவைத் தருவார். நிறைய தூக்கத்தை தருவார். இந்த சனிப்பெயர்ச்சி, காசு பணத்தை கையில் தங்கவிடாமல் செய்துவிடுவதால், வேறுவழியே இன்றி சிக்கனமாக இருக்க ஆரம்பித்துவிடுவீர்கள். சனிபகவான், உங்களின் பேச்சைக் குறைப்பதால், சண்டை, சச்சரவு இன்றி காலம் ஓடும். நீங்கள் அரசு சார்பில் வாங்கிய கடனை, அரசாங்கமே தள்ளுபடி செய்துவிடும். ஓரிடத்தில் நிற்காமல், சதா அலைந்துகொண்டிருப்பதால், எதிரிகளை சந்திக்க நேரமிருக்காது. எப்போதும் பயணத்திலேயே இருப்பதால், அதுவே உடம்புக்கு ஓரு உடற்பயிற்சி மாதிரி ஆகி, நோய் அண்டாது. உங்களின் தந்தையின் வீடு சம்பந்தமான, நீண்டநாள் இழுபறி விஷயமாக, மத்தியஸ்தர்மூலம் பேச்சு தொடங்கப்படும். உங்கள் வாழ்க்கைத் துனையின், வேலை, வழக்கு விஷயமாக ஒரு தீர்வு கிடைக்கும். இதுவரையில் வந்துகொண்டிருந்த சில கனவுகள் வராது. சில அரசியல்வாதிகள், சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து, ஜெயிலுக்கு போகாமல் தப்பிவிடுவர். சில களவுகளை சனி தடுத்துவிடுவார். சில கருத்து வேறுபாடுகளுக்கு, சனி பகவான் முற்றுப்புள்ளி வைத்து விடுவார். மீன ராசிக்கு, சனிபகவான் நோய், எதிரி, கடன் தாக்கத்தி லிருந்து விடுவிப்பது மேன்மையான விஷயமல்லவா!
பரிகாரம்: குச்சனூர் சனிபகவானை வழிபடுவது நல்லது. அருகிலுள்ள சனீஸ்வரருக்கு, தீபமேற்றுவதோடு, நெய் வாங்கியும் கொடுங்கள். அந்தணருக்கு ஆடை வாங்கி கொடுக்கவும்.
சனி காயத்ரி பாராயணம் நன்று
காகத்வஜாய வித்மஹே
கடக ஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தப் ப்ரசோதயாத்
இதை தினமும் கூறி வழிபடவும்!