கடகம்
இதுவரையில் உங்கள் ராசிக்கு களத்திர, நட்பு ஸ்தானமெனும் ஏழாமிடத்தில் சஞ்சரித்துவந்த சனிபகவான் குடும்பத்தில் நிம்மதி யற்ற நிலையையும் பல்வேறு பிரச்சினைகளையும், எதிர்பாலினரால் அலைச்சலுடன் அவப்பெயரையும் ஏற்படுத்தினார். நல்லோரிடத்தில் கருத்து வேறுபாட்டினை உண்டாக்கி அவர்களைவிட்டு விலகவேண்டிய நிலையையும் உருவாக்கினார்.
உங்கள் ஜென்ம ராசியில் அவருடைய பார்வை பதிந்ததால் உடல்நிலையிலும், மனநிலையிலும் சங்கடம், எந்தவொரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படமுடியாத நிலை, நோய்வந்த கோழிபோல் பாதிப்புக்கு ஆளானதுடன் உணவு, உறக்கம் போன்றவற்றை இழந்து விரக்தியான நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்.
உங்கள் ராசிக்கு சுகம் மற்றும் மாதுர் ஸ்தானத்தின்மீது அவருடைய பார்வை பதிந்ததால் அலைச்சல் அதிகரிப்பு, சந்தோஷமான நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியாத நிலை, தேவையற்ற எண்ணங்களால் மன உளைச்சல், உறக்க மற்ற நிலை, வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமையற்ற நிலை, தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு, பணவிரயம், கடன் தொல்லை என்று உங்கள்நிலை சங்கடத்திற்கு ஆளாகியிருக்கும்.
உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானத் தில் சனிபகவானின் பார்வை பதிந்ததால் எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றம், வருமானத் தில் தடை, தந்தையின் உடல்நிலையில் சங்கடம், தந்தைவழி உறவுகளிடம் பிரச்சினைகள், நினைத்த எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை, கையில் இருந்ததையெல்லாம் விற்றும் அடகு வைத்தும் பிரச்சினைகளை சமாளித்திருப்பீர்கள்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் மகரச்சனியின் காலம் உங்களுக்கு நெருக்கடியும் பாதகமுமான காலமென்றே சொல்லவேண்டும்.
தசாபுக்தி நன்றாக இருந்தவர்கள் ஓரளவுக்கு நன்றாக இருந்திருப்பீர்கள். இந்த நிலையில் 17-1-2023 அன்று திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி உங்கள் ராசிக்கு 8-ஆமிடமான கும்ப ராசியில், ஆயுள் ஸ்தானத்தில் பிரவேசம் செய்கிறார் சனிபகவான்.
கிரகங்களில் அசுப கிரகம் என்று பெயர்பெற்றவரான சனிபகவான், தான் பார்க்கும் 3, 7, 10-ஆமிடங்களின் பலன்களைப் பாதகமாகவும், அவர் சஞ்சரிக்கும் இடத்திற்குரிய பலனை சாதகமாகவும் வழங்குவார் என்பது பொதுவான விதி. உங்கள் ராசிக்கு சனிபகவான் பாதகராவர். உங்களுக்கு அஷ்டமம் மற்றும் ஆயுள் ஸ்தானத்திற்கு அதிபதியும் சனிபகவான்தான். எட்டாமிடமென்பது மறைவு ஸ்தானமென்றாலும், அந்த இடத்தில் அவர் ஆட்சியாகவே சஞ்சரிக்கப் போகிறார்.
ஜென்மச்சனி காலத்தில்கூட மூன்றாம் பார்வை பலன் தரும். ஆனால் அஷ்டமச் சனியின் காலத்தில் அவருடைய பார்வை களும் பாதகமான பலன்களையே வழங்கும்.
எட்டாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல்வேறு இடர்ப்பாடுகள் தோன்றும். குடும்பத்தில் கஷ்டம், வம்பு வழக்குகள், பிரச்சினைகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடும் பிரிவும் ஏற்படும். மன உளைச்சலும், முயற்சிகளில் தடையும், ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையும், எதிர்பாலினருடன் முறையற்ற நட்பும், உடல்நலனில் பாதிப்பும் உண்டாகும் என்பது பொதுவிதி.
சுய ஜாதகம் பலம்பெற்றவர்களுக்கும், நட்பான தசாபுக்தி நடப்பவர்களுக்கும் இப்பலன்கள் மாறுபடும் என்பதுடன், மற்ற கிரகங்களின் ஸ்தான பலன்களினா லும், பார்வைகளாலும், சேர்க்கைகளாலும் இக்காலத்தில் இதற்கு மாறான பலன்களும் நன்மைகளும் நிகழக்கூடும். எனவே, எட்டில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு காலமும் ஒரே மாதிரியான பலன்தான் உண்டாகுமென்று பயந்துவிடாதீர்கள்.
சனிபகவான் அங்கிருந்து உங்கள் தன- குடும்ப ஸ்தானத்தையும், பூர்வபுண்ணிய- புத்திர ஸ்தானத்தையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். பொதுவாக சனிபகவான் பார்க்கும் இடங்களுக்கெல்லாம் எதிர்மறையான பலன்களையே வழங்குவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இதன் காரணமாகத்தான் சனிபகவானை தரிசிக்கும் போது கூட அவருக்கு நேராக இருந்து தரிசிக்கக்கூடாது என்பார்கள்.
சனி பகவானின் மூன்றாம் பார்வை உங்கள் தொழில் ஸ்தானத்தில் பதிவதால், இதுவரையில் லாபகரமாக சென்ற தொழிலும் வியாபாரமும் இனி மந்தமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டமும், உத்தியோகத்தில் தேவையற்றப் பிரச்சினைகளும், நெருக்கடிகளும் ஏற்படும். இயல்பான வாழ்க்கை முறையிலும் சங்கடங்களுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகவேண்டியிருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். அரசியலில் சரிவுண்டாகும். அரசாங்கத் தால் கிடைத்துவந்த நன்மைகளில் பாதிப் புண்டாகும். முழங்காலில் வலி ஏற்படும்.
சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் பதிவதால் குடும்பத்தில் சங்கடம், தம்பதிகளுக்குள் பிரச்சினை, துன்பத்திற்குமேல் துன்பம், தொட்டதெல்லாம் தோல்வி, கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாமல் அவமானப் பட வேண்டிய நிலை, குடும்பத்தைவிட்டுப் பிரிந்து செல்லவேண்டிய நிலை, ஒருசிலருக்கு. பொருட்கள் களவு போகுதல், வலது கண் பார்வையில் குறை போன்ற நிலைக்கு ஆளாக்குவார்.
சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் பூர்வபுண்ணிய- புத்திர ஸ்தானத் தில் பதிவதால் புத்திரர்- புத்திரிகளால் ஏதேனும் ஒருவகையில் வேதனை உண்டாகும். மனம் ஒருநிலையில் இல்லாமல் தீய எண்ணங்களால் அலைமோதும். குடும்பத்தில் கலகமும் சண்டை, சச்சரவும் நிறைந்திருக்கும். வேதனை தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன்- மனைவிக்குள் தேவையற்ற இக்காலத்தில் குலதெய்வத்தை வணங்குவதில்கூட தடைகள் உண்டாகும்.
இவையெல்லாம் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவானால் நிகழக்கூடிய பொதுப் பலன்களாகும். ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சனிபகவான் சஞ்சரிப்பார் என்றாலும், அவர் ஒரே நிலையில் சஞ்சரிப்பதில்லை. அவர் சஞ்சரிக்கும் ராசியில் வக்ரமடைவதும், பின்னோக்கி செல்வதுமாய் ஒரு ஆண்டில் நான்கு மாதங்களுக்குமேல் இருப்பார்.
அத்தகைய காலங்களில் மேலே சொன்ன பலன்களில் மாற்றம் ஏற்படுவதுடன், உங்களுக்குண்டான நெருக்கடிகளும் குறையும்.
பரிகாரம்
ஒருமுறை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடிவிட்டு, தர்ப்பாரண்யேஸ்வரரை அர்ச்சனைசெய்து வழிபட்டுவாருங்கள். சனிக்கிழமை தோறும் ஊனமுற்றவர்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். நவகிரகத்திலுள்ள சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வணங்கிவாருங்கள். உங்களுக்கு வரும் சங்கடங்கள் தீரும்.
சிம்மம்
இதுவரையில் உங்கள் ராசிக்கு, ருண, ரோக, சத்ரு ஸ்தானமெனும் ஆறாம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான் உங்களுக்கு அதிகபட்சமான நற்பலன்களை வழங்கிவந்தார். மகரச்சனிக் காலம் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றியையும், அபார ஆற்றலையும், எதிரிகளை எதிர்த்து வெல்லக்கூடிய வலிமை யையும் சனிபகவான் வழங்கிவந்தார்.
உங்கள் ராசிக்கு எட்டாமிடமான ஆயுள் ஸ்தானத்தின்மீது அவருடைய பார்வை பதிந்ததால் உடல்நிலையில் ஏற்பட்ட அச்சம் விலகியிருக்கும். நினைத்ததை சாதித்திடும் நிலை உருவாகியிருக்கும்.
ராசிக்கு பன்னிரண்டாமிடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் அவரின் பார்வை பதிந்ததால், விரயங்கள் அதிகரித்தாலும் அதனால் நன்மைகளையே அடைந்திருப்பீர்கள். ஒருசிலர் உறக்க மின்றி உழைக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியிருப்பீர்கள்.
ராசிக்கு மூன்றாமிடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் அவருடைய பார்வை பதிந்ததால் கடுமையான நெருக்கடிகளை சமாளித்து முன்னேற்றம் கண்டிருப்பீர்கள். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் துணிச்சல் ஏற்பட்டிருக்கும். உடல்நிலையில் முன்னேற்றமும், மனநிலை யில் உற்சாகமும் ஏற்பட்டிருக்கும்.
கடந்த இரண்டரை வருடத்தில் சனிபகவான் பல வழிகளிலும் உங்களுக்கு நன்மைகளையே வழங்கிவந்தார். இந்த நிலையில் 17-1-2023 அன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான கும்ப ராசிக்குள் பிரவேசம் செய்கிறார் சனிபகவான்.
சனிபகவானுக்கு கும்பம் ஆட்சி வீடாகும். உங்கள் ராசியான சிம்மம் சனிபகவானுக்கு பகை வீடாகும். சம சப்தமமாக ராசிக்கு ஏழில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலம் கண்டகச்சனியின் காலமாகும். இக்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள், கருத்து வேறுபாடு, நண்பர்களிடம் விரோதம்-அதனால் பிரிவு, வீண் அலைச்சல், தீயோர் சேர்க்கையால் அவப்பெயருக்கு ஆளாகுதல், மர்ம உறுப்புகளில் ரணம் அல்லது நோய், மனைவிக்கு ரோகம், மனைவியிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் தனித்து வாழும் சூழ்நிலை உண்டாகும். எதிர்பாலினரின்மீது ஈர்ப்பு- அதனால் அலைச்சல், அவமானம், கண்டங்கள் உண்டாகுதல் என்பது பொதுவான விதி.
உங்கள் ராசிக்கு ஆறாம் அதிபதியாகவும், ஏழாம் அதிபதியாகவும் ஸ்தான பலம்பெறுகிறார் சனிபகவான். ஒரு ராசிக்கு ஏழாமிடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அங்கிருந்து ஜென்ம ராசியையும், பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாமிடத்தையும், சுகஸ்தானம் என்னும் நான்காமிடத்தையும் பார்வையிடுவார்.
பொதுவாக சனிபகவானின் பார்வை கொடியதாகும். அவர் பார்க்குமிடங்கள் பாதிப்பிற்குள்ளாகும் என்பது பொதுவிதி.
இக்காலத்தில் கும்பத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானின் மூன்றாம் பார்வை உங்கள் பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் எதிலும் நிம்மதியற்ற நிலை உருவாகும். எடுக்கும் வேலைகள் இழுபறியாகும். தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்தவேண்டி வரும். தந்தைவழி உறவினர்கள்மூலமாக பிரச்சினைகள் எழும். தொழிலில் மந்தமான நிலையும், அலைச்சல் திரிச்சலுடன் லாபமின்மையும், நேற்றுவரை ஆதாய மாக சென்றுகொண்டிருந்தவற்றிலும் பாதகமான நிலையும் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளால் கண்டிக்கப்படும் நிலையும் ஏற்படும். நினைத்தபடி எந்தவொரு செயலையும் செய்துமுடிக்க முடியாத நிலை இக்காலத்தில் உருவாகும்.
சனிபகவானின் ஏழாம் பார்வை ஜென்ம ராசியில் பதிவதால் உங்கள் அந்தஸ்துக்கு பாதிப்பு வரலாம். கௌரவம் பாதிக்கப்படலாம். உடல்நிலையில் சங்கடங்கள் தோன்றலாம். எதையோ இழந்ததுபோல் மனம் தவிக்கும். திடீரென்று உண்டாகக்கூடிய பிணி களால் ஆயுள் பற்றிய அச்சம் வரலாம். மனதில் குழப்பம் அதிகரிப்பதுடன் இருக்குமிடத்தை விட்டும், மனைவி, மக்களை விட்டும் வெளியூர் செல்லும் சூழல் சிலருக்கு உண்டாகலாம். அந்நிய பெண்களின் சகவாசத்தால் புத்தி மழுங்கி தவறான பாதையில் சென்று வருத்தப்படலாம். நட்பு வட்டத்திலும் பலவிதமான சங்கடங்கள் உண்டாகும்.
சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பதிவதால் நேற்றுவரை இருந்த நிம்மதி, கிடைத்த சுகம் இன்றைக்கில்லை என்ற நிலை உண்டாகும். உடலில் அசதி, தாயின் உடல்நிலையில் பாதிப்பு, வாகனங்களால் செலவு, இழப்பு, ஒருசிலருக்கு பூமி மற்றும் வாகனங்களை விற்கவேண்டிய நிலை உண்டாகும். இல்லையென்றால் திருட்டு போகும்.
இவையெல்லாம் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவானால் உண்டாகக் கூடிய பொதுப் பலன்களாகும். சனிபகவான் ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தாலும், அவர் தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளும் ஒரே நிலையில் இருப்பதில்லை. இருக்கும் இடத்தில் வக்ரகதியை அடைவதும், பின்னோக் கிச் சொல்வதுமாய் இருப்பார்.
அத்தகைய காலகட்டத்தில் நாம் மேலே சொன்ன கெடுபலன்கள் மாறுபடும். மற்ற கிரகங்களின் சஞ்சார நிலைகளும் சனிபகவான் உண்டாக்கும் சங்கடங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்
பரிகாரம்
சனிக்கிழமைதோறும் ஆஞ்சனேயரை வணங்கி வழிபட்டுவருவதுடன் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கி கோமாதாவின் ஆசியைப் பெற்றுவாருங்கள். ஒருமுறை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூருக்கு அருகிலுள்ள ஆதிதிருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்துவிட்டு வாருங்கள்; சங்கடங்கள் அகலும். ராமேஸ்வரத்தில் ஜீவசமாதியாகியுள்ள பதஞ்சலி முனிவரை ஒருமுறை நேரில்சென்று மனமுருகி வணங்கி வேண்டிவாருங்கள்.
கன்னி
இதுவரையில் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய- புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரித்துவந்த சனிபகவான் உங்களுக்கு நிறையவே சங்கடங்களை வழங்கிவந்தார். உங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் சோதனைகளை உண்டாக்கிவந்தார். உங்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவற்றையும் கிடைக்காத அளவுகு தடைகளை உருவாக்கிவந்தார். குடும்பத்தில் சங்கடம், காதலில் பிரச்சினை, குழந்தை பாக்கியத்தில் தடை என்றும், தாய்மாமன்வழியில் சங்கடங்கள், உறவு களிடம் மோதல் என்று நிம்மதியற்ற நிலையையும் அனுபவிக்க வைத்தார்.
கிரகங்களில் அசுப கிரகம் என்று பெயர்பெற்றவரான சனிபகவான் தான் பார்க்கும் இடங்களுக்குக் கொடிய பலன்களையும், தான் சஞ்சரிக்கும் ஸ்தானத் திற்குரிய பலன் எதுவோ அதையே ஜாதகருக்கு வழங்குவார்.
கடந்த இரண்டரை வருடத்தில் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தைப் பார்த்து வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்சினைகளை உருவாக்கினார். இரண்டாமிடத்தைப் பார்த்து குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை ஏற்படுத்தினார். பதினொன்றாம் இடத்தைப் பார்த்து லாபத்தை வழங்கி உங்கள் வாழ்க்கைக்கு ஓரளவுக்கு வழியமைத்தார் சனிபகவான்.
இந்த நிலையில் 17-1-2023 அன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய கும்ப ராசிக்குப் பிரவேசம் செய்கிறார்.
கும்பம் சனிபகவானுக்கு ஆட்சி வீடாகும். உங்கள் ராசியான கன்னி, சனிபகவானுக்கு நட்பு வீடாகும். எந்த ராசியில் பிறந்தவராக இருந்தாலும் அந்த ராசிக்கு ஆறாம் ராசியில் சனிபகவான் சஞ்சரிக்கும்போது நன்மைகளுக்குமேல் நன்மைகளைச் செய்வார்.
எல்லா ஜாதகருக்கும் அவர்களுடைய ராசிக்கு 3, 6, 11-ஆம் ஸ்தானங்களில் சனிபகவான் சஞ்சரிக்கும் காலம்தான் அவர்கள் வாழ்க்கையில் யோக காலமென்று சொல்லவேண்டும். அதேபோல் எந்த ஸ்தானத் தில் சனி பகவான் சஞ்சரித்தாலும் 3, 6, 11-ஆம் வீடுகளை அவர் பார்வையிடும்போது அந்த வீடுகளுக்குரிய பலன்களை நற்பலனாக வழங்குவார்.
உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்கும் இக்காலம் பிரபல யோக காலமாகும். இக்காலத்தில் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியடைவீர்கள். உடல்நலம் தேர்ச்சிபெற்று ஆரோக்கியம் பெறுவீர்கள். எதிர்ப்புகள் இல்லாத அளவுக்கு எதிரிகளை அடக்கி வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் உண்டாகும்.
உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியாகவும், ஆறாம் அதிபதியாகவும் ஸ்தான பலம் பெறுகிறார் சனிபகவான். ஐந்து என்பது பூர்வபுண்ணிய ஸ்தானம். ஆறாமிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகும்.
உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் அங்கிருந்து சகோதர, தைரிய ஸ்தானமான மூன்றா மிடத்தையும், ஆயுள் ஸ்தானமான எட்டாமிடத்தையும், விரய ஸ்தானமான பன்னிரண்டாம் இடத்தையும் பார்வையிடுகிறார்.
சனிபகவான் பார்க்கும் இடங்கள் பாதிப்பிற்குள்ளாகும் என்பது பொது விதி என்றாலும், சனிபகவான் ஆயுள் காரகன் மட்டுமல்ல; அவர்தான் உங்கள் பூர்வபுண்ணியாதிபதியும் யோகாதிபதியும் ஆகிறார்.
சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்கள் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல்நிலையில் இருந்த பாதிப்புகளும், பெரிய அளவில் காணப் பட்ட நோய்களும் மருந்து மாத்திரைகளில் குணமாகி விடும். கௌரவம் சிறப்படை யும் என்பதுடன், திடீர் அணுகூலமும் ஆதாயமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி களைக் காணமுடியும். எட்டிச் சென்றவர்கள் கிட்டே வருவார்கள். சட்ட விவகாரங்களிலும் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள். மனைவிவழியில் தக்கசமயத்தில் உதவிகள் கிட்டுமென்றாலும், யாரையும் நம்பி செயல்படாதீர்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்தும் போடாதீர்கள்.
சனிபகவானின் ஏழாம் பார்வை உங்கள் விரய ஸ்தானமான சிம்மத்தில் பதிவதால், பொதுச்சேவையில் ஈடுபடுவதுடன் அதன்மூலமாக ஆதாயமும் காண்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான வசதிகளை உருவாக்கிக் கொள்வீர்கள். அதன்மூலம் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். துணையின் அக்கறை உங்கள்மீது அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும். இக்காலத்தில் தந்தையின் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கவும் இக்காலத்தில் வாய்ப்புள்ளது.
சனிபகவானின் பத்தாம் பார்வை உங்கள் சகோதர, தைரிய, வீரிய, கீர்த்தி ஸ்தானத்தில் பதிவதால், சகோதர- சகோதரிகள்வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் தைரியம் கூடும். வாக்கில் தெளிவிருக்கும். மற்றவர் கள் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கும் நிலை உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இட வகையிலிருந்த பிரச்சினைகள் விலகும். அறிவாற்றல், எழுத்தாற்றல் அதிகரிக்கும்.
சனிபகவான் ஒரு வீட்டில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்தாலும், அவர் தொடர்ந்து இரண் டரை ஆண்டுகளும் ஒரே இடத்தில் ஒரே சாரத் தில் இருப்பதில்லை. இருக்கு மிடத்தில் வக்ரகதி அடை வதும் பின்னோக்கிச் செல்வதுமாக இருப்பார்.
மாத கிரகமான சூரியன், சனி நின்ற ராசியிலிருந்து 5, 6, 7, 8-ல் சஞ்சரிக்கும் மாதங்களில் எல்லாம் சனிபகவானுக்கு வக்ரகதி உண்டாகும். இத்தகைய காலகட்டத்தில் நாம் மேலே சொன்ன பலன்கள் மாறுபடும். அத்துடன் குரு, ராகு- கேது சஞ்சாரங்களின் நிலைகளை வைத்தும் பலன்கள் மாறுபடும்.
பரிகாரம்
தேனிக்கு அருகிலுள்ள குச்சனூர் சென்று, அங்கே ஓடும் சுரபி ஆற்றில் நீராடி பாவம் களைந்து, நல்லெண்ணெய் தீபமேற்றி அர்ச்சனைசெய்து ஆடைதானம் செய்ய, சனிபகவானின் தாக்கம் குறையும். தலைக்கு வரும் துன்பம் தலைப்பாகை யோடு செல்வதுபோல் உங்களுக்கு வரும் சங்கடங்கள் குச்சனூரானால் விலகிப் போகும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 94443 93717