மண்ணுலகில் ஜனித்த மாந்தர்கள் ஒவ்வொருவரின், ஆழ்மன எண்ணத்திலும் பொறிக்கப்பட்ட எண்ணமாக செல்வச் செழிப்பு அமைந்துள்ளது.
அப்படி அமைந்தாலும், ஆசைப்படும் அத்தனை பேருக்கும் இந்த அம்சம் கிட்டிவிடுகின்றதா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் உண்மை.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வ சிறப்பு.
பொருள் என்னும் செல்வம் அற்றவரை இகழ்வதும், பொருள் உள்ளவரை மதிப்பதும் மாந்தர்களின் மனோ நிலையாக உள்ளது. என்று ஈரடியில் உலகளந்த வள்ளுவன் உரைக்கிறான்.
இதுவே இன்றைய காலகட்டத்தில் 100 சதவிகித உண்மையாகவும் திகழ்கின்றது.
அடிப்படையில் ஒருவர் பிறப்பின் பொழுதே யோக பாக்கியங்களோடு பிறக்கிறார். மற்றொருவர் வறுமையில் பிறந்து வாழ்நாள் முழுவதும் வறுமையின் வாடையிலேயே வாழ்ந்து மடிகின்றார்.
இன்னும் சிலர் பிறப்பில் அடிமட்டத்தில் இருந்தாலும் வளர வளர பெரும் பொருளாதாரத்தை எட்டிவிட முடிகின்றது.
சிலரோ கையிலிருக்கும் அத்தனையும் இழக்கும் நிலை உருவாகின்றது.
இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு ஆராயும்பொழுது ஜாதகரீதியாக அவர்களின் அமைப்பு என்ன என்பதும் இதற்கான கிரக நிலைகள் என்னென்ன என்பதையும் பார்க்கும்பொழுது, 2, 11 ஆகிய இடங்களும், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களும், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதைக் காணமுடிகிறது. மேலும் நடக்கும் தசா, புக்தி, அந்தரங்களும், கோட்சார கிரகங்களும் இதில் பெரும் பங்காற்றுகின்றன என்பது உண்மை.
செல்வ வளர்ச்சி என்பது பணம், நகை, சொத்து, என்று மட்டும் முடிவதில்லை அது சுபிட்சமான சூழலையும் உட்படுத்துகின்றது. அப்படியென்றால் இன்பமான இல்லம், இடர்ப்பாடற்ற உறவுமுறை, நியாயமான எண்ணங்கள் ஈடேறும் தன்மை, ஆரோக்கியம், மற்றவர்களிடையே மதிப்பு, கௌரவம் ஆகியவற்றையும் குறிக்கும். இதனை உணர்த்தவே 16 செல்வங்களும் அடைய ஆசிர்வதிக்கப்படுகிறோம்.
ஒரு ஜாதகத்தில் செல்வம் என்று கூறக் கூடிய தனம், அதாவது பணம் எவ்வாறு அமையும் அல்லது அவர் உழைப்பால் தனம் ஈட்டுவாரா, இல்லை பிறரின் உழைப்பால் லாபம் எடுப்பவரா? பூர்வீக சொத்து சுகத்தினால் யோகங்களை அடைவாரா. அல்லாமல் கடன் இன்னல்களில் சிக்குவாரா, சிக்கியவர் அதிலிருந்து விடுபடுவாரா என்ற கணக்கற்ற கேள்விகளுக்கு சில பதில்களை அறிய முற்படுவோம்.
பிறப்பு ஜாதகத்தில் ஒருவரின் செல்வ நிலையை ஆராய்வதற்கு 2 மற்றும் 11-ஆம் பாவகங்கள் பெரும் துணைபுரிகின்றன, அதாவது இரண்டாமிடம் என்று சொல்லக்கூடிய தனஸ்தானமும், குரு என்று கூறக்கூடிய தனகாரகனும் ஒருவரின் செல்வநிலையைத் தக்கவைக்க பேருதவி புரிகின்றனர் .
அதோடு மட்டுமல்லாமல் லக்னாதி பதியும், 11-ஆம் அதிபதியும், பாக்கியாதிபதி என்று கூறக்கூடிய ஒன்பதாம் அதிபதியும் இதைச் சார்ந்து இயங்குகின்றனர்.
சுபிட்சமான, செல்வநிலை பொருந்திய கிரகம் என்று சொல்லக்கூடிய சுக்கிரனும் இதற்குப் பொறுப்பேற்றுக் கொள்கின்றார்.
எப்படி என்று ஆராயும்பொழுது தனப் பிராப்தத்தில் சிறக்க இரண்டாம் அதிபதி 6, 8, 12-ஆம் இடங்களில் மறையாமலும், 6, 8, 12 அதிபதிகள் இரண்டாம் இடத்தில் தொடர்புகொள்ளாமல் இருப்பது சிறப்பு.
இப்படி இருக்கும் ஜாதகங்கள் பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் பெரிய பாதிப்பை அடையாமல் இருப்பதை கண்கூடாக காணமுடிகின்றது.
அப்படி 6, 8, 12-ஆம் பாவகங்களோடு தொடர்பு பெறும்பொழுது, வரும் தனத்தை அதாவது வருமானத்தை நோய், கடன் அல்லது எதிர்ப்புக்காக செலவிடுதலும், வம்பு, வழக்கு, மறைமுக செலவு போன்றவற்றிற்காக செலவிடுதலும், தேவையற்ற விரயங்களுக்காக செலவிடும் சூழ்நிலையும் உருவாகின்றது. இந்த சூழ்நிலை இவர்களுக்கு பெரும் பணமுடையும், கடனையும், சேர்த்துவிடுகின்றது.
ஒன்பதாம் அதிபதி சிறப்பான இடத்தில் அமர்ந்து அவரை சுபர் பார்த்து, ஒன்பதாம் அதிபதியும் அவருக்கு இடம் கொடுத்தவரும் உச்சமாக, தந்தைவழி சொத்தின்மூலம் அதீத யோக பாக்கியங்களைப் பெறமுடிகின்றது இவர்கள் தங்களின் சுய உழைப்பைவிட தந்தையின் செல்வத்தை கட்டிக்காத்து அதன்மூலம் தனக்கான ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கிக்கொள்கின்றனர்.
இரண்டில், ஆறாம் அதிபதி இருக்க அல்லது ஆறாம் அதிபதி தசா புக்திகளில் கடன், நோய், எதிர்ப்பு நிச்சயம் ஜாதகரை பின்தொடரும்.
இரண்டாம் அதிபதியோடு 12-ஆம் அதிபதியின் தொடர்பானது, பெரும் விரயத்தினை சுட்டிக்காட்டுவதோடு, கொடுத்த பணத்தைத் திரும்பி வாங்கமுடியாத சூழ்நிலையை தந்துவிடுகின்றது. அல்லது அசலை மீறிய வட்டிக்கட்டும் சூழ்நிலையை உருவாக்கிவிடுகின்றது.
பிறப்பு ஜாதகத்தில் இந்நிலை இருந்தால் அதுவே விதி என்று செல்லமுடியுமா என? அதிலிருந்து விடுபட வழி ஏதேனும் உண்டா என்றால் நிச்சயமாக உண்டு.
நம்மிடையே ஒரு பழமொழி உண்டு. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது சிறப்பு என்று. அதேபோல் பணப் பிரச்சினையில் சிக்கியவர்கள் 6, 11, 2 ஆகிய பாவகங்களில் அதிபதிகளின் வழிபாட்டினை மேற்கொள்ளும்பொழுது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபடுவதை கண்கூடாகக் காணமுடிகின்றது.
மேலும் சுபிட்சமானதொரு சூழ்நிலை யினை, வீட்டினில் உருவாக்கிக் கொள்ள வடகிழக்கு மூலையையும் தென்மேற்கு மூலையையும் எந்தவித இடர்ப்பாடுகளும் இல்லாமல் பார்த்துக்கொள்வது சிறப்பு.
கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருப்பவர்கள் சனிக்கிழமையில் வரும் செவ்வாய் ஓரையிலும், செவ்வாய்க்கிழமையில் வருகின்ற சனி ஓரையிலும், கடன்தொகையில் சிறுபகுதியை அடைக்கும்பொழுது, நிச்சயமாக முழுக்கடனும் விரைவில் அடைந்துவிடும்.
மேலும் இரண்டாம் அதிபதி மற்றும் 11-ஆம் அதிபதி ஏறிய நட்சத்திரத்தின் விருட்சத்தை வழிபடுவதின்மூலம் பணவரவையும் குடும்பத்தில் தன பிரார்த்தி யும் சுபிட்சமான சூழ்நிலையையும் அடைவது திண்ணம்.
மேலும் ஜென்ம நட்சத்திரத்திற்கு ஆறாம் அதிபதி ஏறிய நட்சத்திரத்தின் விருட்சங்களை வீட்டினில் வளர்க்கும் பொழுது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் ஒரு ஜாதகரை அணுகுகின்றது.
பணம் ஈர்ப்புக்கான சில பரிகாரங்களைப் பின்வருமாறு காணலாம்.
பரிகாரம் ஒன்று
வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து பசுமாட்டினை ஒன்பதுமுறை வலம்வந்து வணங்க வேண்டும்.
பரிகாரம் இரண்டு
பணம் வைக்கும் இடத்தில் ஒரு வெள்ளைத் துணியில், ஏலக்காய் 3, சோம்பு சிறிதளவு, பச்சைக் கற்பூரம் சிறிதளவு இதுபோன்ற ஆறு முடிச்சுகள் கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும்.
பரிகாரம் மூன்று
கல்லாப்பெட்டியில் மேற்கூறிய சிறுசிறு முடிச்சுகள் வைப்பதுடன் மல்லிகைப் பூக்களைப் போட்டு வைக்கவும்.
செல்: 80563 79988