குடும்பம் என்பது நிம்மதி, மகிழ்ச்சி நிறைந்ததாகவும், தெய்வம் வாழும் கோவிலாகவும் இருக்கவேண்டும். செல்வாக்கு மற்றும் சொல்வாக்கே குடும்பத்தைக் கோவிலாக்கும். இதில் குற்றம் ஏற்படும்போது குடும்பத்தில் கலகலப்பு குறைந்து சலசலப்பு மிகுதியாகும்.
தனம், குடும்பம், வாக்கு எனும் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுவது ஜாதகத்தில் லக்னத்திற்கு இரண்டாமிடமான தன ஸ்தானமாகும். குறிப்பாக ஒருவரின் செல்வநிலையைப் பற்றி அறிய உதவும் இடமும் இதுதான். செல்வாக்குள்ள ஒருவரால் மட்டுமே தன் சொல்வாக்கால் குடும்ப உறவுகளைத் தன் வசப்படுத்த முடியும்.
ஒருவரின் வாழ்க்கை செல்வச் செழிப்பானதா அல்லது வறுமையில் கஷ்டப்பட நேரிடுமா? சுயதொழில்மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா அல்லது உத்தியோகத்தின்மூலம் செல்வச் சேர்க்கை ஏற்படுமா? வாழ்க்கைத்துணைமூலம் செல்வச் சேர்க்கை உண்டாகுமா? அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகருக்கு உண்டா என்பது போன்றவற்றை இரண்டாமிடமே தீர்மானிக்கும்.
செல்வச் சேர்க்கை மட்டுமல்ல; ஒருவர் உண்மை பேசுபவரா அல்லது பொய் பேசுபவரா என்பதையும், அவருக்கு அமையும் குடும்ப உறவுகளையும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஒருவரின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் பன்னிரு பாவகங்களும் தன ஸ்தானத் துடன் சம்பந்தம் பெறுவதால் ஏற்படும் நன்மை- தீமைகளையும், தன ஸ்தானத்தை வலிமைப்படுத்தும் பரிகாரங்களையும் இந்தக் கட்டுரையில் காணலாம்.
இரண்டாமதிபதி லக்னத்தில்
ஜாதகர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறக்கும்போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும், இவர் பிறந்தபிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜாதகரிடம் பொதுநல சிந்தனை மிகுதியாக இருக்கும். இடம், பொருள், ஏவல் பார்த்து வாக்குப் பிரயோகம் செய்வார். அதிகாரமான தெளிவான பேச்சால் அனைவரையும் கவர்பவர். தனத்தைப் பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தைக் காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பார். இவர்கள் பூர்வீகத்தில் வருமானம் ஈட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். மகிழ்சியான குடும்ப வாழ்க்கை அமையும். இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வீகத்தில் வாழமுடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு, மரியாதை இன்மை, பிறரை அண்டிப் பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்க பொருள் வரவு அதிகரிக்கும்.
இரண்டாமதிபதி இரண்டில்
ஜாதகர் செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர். செல்வச் சீமானாக விளங்குவார். பணக்கஷ்டம் தெரியாதவர். பேச்சுத் திறமை யால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள். பேச்சுத் தொழிலை மூலதனமாகக் கொண்டவர்கள். பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். கலகலப்பாகப் பேசி தன்னைச் சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்றுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாணயவாதிகள். பிறரை காயப்படுத்தாமல் பேசுவதில் வல்லவர்கள். வாக்கு பலிதம் உண்டு. இவர் சொல்லும் வாக்கு நிச்சயம் பலிக்கும். உண்மையைப் பேசுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அனுசரணையும் உண்டு. இளவயதில் திருமணம் நடக்கும். இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் தனது பேச்சினால் பிறரை காயப்படுத்துவார்கள். முன்யோசனை இல்லாத பேச்சினால் தனக்குக் கிடைக்கவேண்டிய நல்ல சந்தர்ப்பங்களைத் தவறவிடுவார்கள். தன்மானத்தை இழந்து வாழவேண்டிய நிலை இருக்கும். அடிமைத் தொழிலில், அதிக உழைப்பில் குறைந்த வருமானம் பெற்று வாழ்வார்கள். காலதாமதத் திருமணம் நடக்கும். இவர்கள் மீன்களுக்கு உணவிடவேண்டும்.
இரண்டாமதிபதி மூன்றில்
சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாது. உடன்பிறந்த சகோதர- சகோதரிகளை நம்பிப் பிழைப்பார்கள்.
அல்லது இவர்களுடைய பொருளாதாரம் உடன்பிறந்தவர்களுக்கே பயன்படும். சிலர் நல்ல பொருளாதாரம் இருந்தாலும் பிறருக்குக் கொடுக்கவேண்டுமே என்பதற்காக கஷ்டபடுவதுபோல் காட்டிக்கொள்வார்கள். வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். பிறரை நம்பாதவர்கள். ஞாபகசக்திக் குறைவால் திறமையை வெளிப்படுத்த முடியாதவர்கள். சிலருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் தங்காது. சகோதர பெருமைகளைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். 3-ஆமிடத்திற்கு சுபகிரக சம்பந்தம் அதிகமிருந்தால் சகோதர ஆதாயமுண்டு. தன் தனித் திறமையால் தகவல் தொடர்பு சாதனங்கள்மூலம் அதிகம் சம்பாதித்து பிரபலமடைவார்கள். தன் வீர தீரங்கள்பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். செவித்திறன் குறைந்த வர்களுக்கு உதவுவதால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும்.
இரண்டாமதிபதி நான்கில்
ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாக்கியவானாக வும், விளங்குவார். விவசாயத்தில் ஈடுபாடு, விருப்பம் உள்ளவராகவும் இருப்பார். அசையும்- அசையாச் சொத்துகள் சேர்க்கை மிகுதியாக இருக்கும். அதன்மூலம் வாடகை வருமானங்கள் அதிகமாகப் பெறுவார்கள்.தாய், தாய்வழி உறவுகளால் ஆதாயமுண்டு. தன் படிப்பு, பட்டம், சொத்து விவரம், தனது உடைமைகள், வியாபாரம், தாய்ப்பாசம் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பார்கள். உற்றார்- உறவுகளுக்கு உதவுவார்கள். கற்ற கல்வியால் பயனுண்டு. அசுப கிரகங்கள் சம்பந்தமிருந்தால் சொத்து சுகத்தால் பயனிருக்காது. உறவுகளின் ஆதரவு கிடைக்காது. நலிந்த விவசாயிகளின் தேவையறிந்து உதவ அசுபப் பலன்கள் மட்டுப்படும்.
இரண்டாமதிபதி ஐந்தில்
தனவான்களாக, அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். பூர்வ புண்ணியம், முன்னோர் களின் நல்லாசியால், நல்ல சிந்தனையால், புத்திக்கூர்மையால் ஆலோசனைகள் வழங்கி நிறைய பொருள் ஈட்டுவர். இவர்களின் வாக்கு தெய்வ வாக்கிற்கு இணையானது. எல்லாருக்கும் உதவுவார்கள். அரசினால் வருமானமுண்டு. சொகுசு வாகனங்கள், விலையுயர்ந்த நகைகள், ரத்தினங்களை வெகுமானமாகப் பெறுவர். காதல் திருமணம் புரிபவர்கள். பிள்ளைகளைப் பேணிக் காப்பவர். தன் பிள்ளைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார்கள். பிள்ளைகளால் ஆதாயமுண்டு. ஆன்மிக நாட்டம், கலை, இலக்கிய ஆர்வமுண்டு. மேடைப் பேச்சாளர்கள். பெயர், புகழ், அந்தஸ்தை உயர்த்தும் கௌரவம், பதவியுண்டு. இதற்கு அசுப கிரகங்கள் சம்பந்தமிருந்தால் புகழ், அந்தஸ்து, கௌரவம், அதிர்ஷ்டம் குறைவுபடும். குலதெய்வ வழிபாடு அவசியம்.
இரண்டாமதிபதி ஆறில்
நிலையற்ற வருமானம், கடனால் கவலை, அதிகமான வைத்தியச் செலவுண்டு. குடும்பத்தில் எப்போதும் சண்டை, சச்சரவு, கூச்சல், குழப்பம் நிலவும். கடன் கொடுப்பதாலும், கடன் பெறுவதாலும், ஜாமின் பிரச்சினையாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலைக் கைதியாக வாழ்வார்கள். குடும்ப உறவுகளே எதிரியாக இருப்பார்கள். குடும்பத்தினரின் அன்பு, ஆதரவு கிடைக்காது. கெட்ட சகவாசம், தீய பழக்கம் உள்ளவர்கள். நேரத்திற்கு சாப்பிடமுடியாது. பிறரை இகழ்வது, போட்டுக்கொடுப்பது, பொய், புரளி பேசுவது போன்றவற் றால் நிலையற்ற உத்தியோகமே அமையும். இரண்டாமிடத்துடன் சம்பந்தம் பெறும் ஆறாமதிபதிக்கு சுபகிரக சம்பந்தம் இருந்தால் வட்டி வருமானம், பினாமி சொத்து யோகம், அரசியல் யோகமுண்டு. எதிரிகள் ஓடி ஒளிவார்கள். கூலித் தொழிலாளிகளுக்கு உதவ ஆதாயம் பெருகும்.
இரண்டாமதிபதி ஏழில்
வாழ்க்கைத் துணையால் ஆதாயமுண்டு. வாழ்க்கைத் துணையின் அருமை, பெருமைகளைப் பற்றிப் பேசுவார்கள். மனைவியை அதிகமாக நேசிப்பவர். இரண்டாவது குழந்தையால் ஆதாயமுண்டு. நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களால் ஆதாயமுண்டு. அரசியல் மற்றும் பொதுஜனத் தொடர்பில் இருப்பவர்களுக்கு நன்மைகள் சேரும். பிறரை வசீகரிக்கும் ஆற்றலுண்டு. உரிய வயதில் திருமணம் நடக்கும். சிறிய வயதுமுதல் பெரிய வயதுவரை அனைத்துத் துறையினரின் நட்பும் கிடைக்கும். பாவ கிரக சம்பந்தமிருந்தால் நரகமான திருமண வாழ்க்கை, வருமானக் குறைவால் குடும்பத்தில் நிம்மதியின்மை, நண்பர்களால் அவப்பெயர், பொருள் விரயமுண்டு. வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட மேன்மையுண்டு.
இரண்டாமதிபதி எட்டில்
பேச்சால் வம்பு, வழக்குகளை உண்டாக்குவார்கள். பேசுவது நியாயமற்றது என்று தெரிந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராததைப் பேசி இன்பமடைவார்கள்.எதிர்மறையாகப் பேசுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தவறுவார்கள். பிற குடும்பத்துப் பெண்களிடம் ஆர்வம் அதிகம். தாழ்வு மனப்பான்மை மிகுந்தவர்கள். தீராத கடன், கடனால் கவலை, அவமானமுண்டு. நோயால் வருமான இழப்பு அல்லது நோய்க்காக வருமானத்தை செலவு செய்வார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பதையும் இழப்பார்கள். கோர்ட், கேஸ் என அலைந்து நிம்மதியைத் தொலைப்பவர்கள். உறவுகளின் ஆதரவு குறையும். சிலர் கெட்ட சகவாசம், செயல்களால் உறவுகளை இழப்பார்கள். வெகு சிலருக்கு விபரீத ராஜயோகம் உண்டாகும். இவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட நல்ல வருமானம், குடும்பம் அமையும்.
இரண்டாமதிபதி ஒன்பதில்
பலவிதமான யுக்திகளால் பொருளீட்ட வல்லவர். பிறநாட்டுத் தொடர்பாலும் அரசுமூலமாகவும் செல்வம் சேரும். பூமியினாலும், பயிர்களினாலும், தன் முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்குப் பயன்படுத்துவார். கடமையே கண்ணாக உள்ளவர். நல்ல பேச்சாளர். பிராமணர்களிடமும், தெய்வ காரியங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள். தர்ம காரியங்களின்மூலம் புகழ்பெறுவார். அமைச்சராகும் அந்தஸ்துண்டு. பெயர் சொல்லக்கூடிய குடும்பம். தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள்மீது பற்றும் பாசமுமுண்டு. சொந்த பந்தத்தை மதித்து நடப்பவர். தந்தையால் ஆதாயமுண்டு. குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைக்கு செவிசாய்ப்பார்கள். தமது குல கௌரவம்பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்கள். அசுப கிரகங்களின் சம்பந்தமிருந்தால் பாக்கியங்கள் குறைவுபடும். அமாவாசை நாட்களில் முன்னோர் களை வழிபட பாக்கியப் பலன் அதிகரிக் கும்.
இரண்டாமதிபதி பத்தில்
தனது பதவி, கௌரவம், தொழில் பற்றிப் பெருமை பேசிக்கொண்டே இருப்பார்கள். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் வல்லவர்கள். சாதுர்யமான பேச்சினால் தொழிலில் தனக்கென்று தனி முத்திரை பதிப்பவர்கள். எதிர்காலம் பற்றிய ஞானம் மிகுந்தவர்கள். சுய உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள். பலர் குறுகிய காலத்தில் தொழிலதிபர்களாக, சாதனையாளராக மாறியவர்கள். பிரபலமானவர்கள். அதிகாரப் பதவியுண்டு. தன்னைச் சார்ந்தவர்களையும் நம்பியவர்களையும் நல்ல அறிவுரையால் வழிநடத்துபவர்கள். நீதி, நியாயத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அசுப கிரகங்களின் சம்பந்தமிருப்பவர்கள் வாக்கினால் தானும் கெட்டு தன் குடும்பத்தினரையும் நிம்மதியிழக்கச் செய்வார்கள். சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவவேண்டும்.
இரண்டாமதிபதி பதினொன்றில்
தனது வாக்குத் திறமையை வைத்தே குடும்பத்தைக் காப்பாற்றுவதில் வல்லவர். பாக்கியவான். நல்ல குணமுள்ளவர். மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர். ஆத்ம சக்தி உள்ளவர். லாபமில்லாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அமைச்சர் பதவிக்கு நிகரான பதவி வகிப்பவர். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்குபவர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு. இரண்டு குடும்பம் உண்டு. இரண்டாவது திருமணத்திற்குப்பிறகு உயர்வுண்டு. வட்டித் தொழில், வாக்குத் தொழில், கமிஷன் தொழிலில் லாபம் பெறுவார்கள். மூத்த சகோதர ஆதாயமுண்டு. அசுப கிரக சம்பந்தமிருந்தால் வருமான வரித் துறையிடம் சிக்குவது, கொடுக்கல்- வாங்கலில் நட்டம், தொழில் இழப்பு போன்ற அசௌகரியங்கள் உண்டாகும். இவர்கள் சனிக்கிழமை சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
இரண்டாமதிபதி பன்னிரன்டில்
நிம்மதியில்லாத குடும்ப வாழ்க்கை. ஏழையாகவும் நோயுள்ளவராகவும் இருப்பார்கள். தரித்திரர். கெட்ட சகவாசம் உள்ளவர். குடும்பம், குழந்தைகள் அற்றவர்வர்கள். தூர தேச நாடுகளில் தனிமையாக- சம்பந்தமில்லாத நபர்களிடம் வாழ நேரிடும். தன்னைவிடத் தாழ்ந்தவர்களுடன் சிநேகமுள்ளவர். தந்தையின் சொத்தை நாசமாக்குபவர். பணத்தை விரயம் செய்பவர். தனது சொந்த பந்தங்களை எதிரிகளாக நினைப்பவர். பௌர்ணமி நாட்களில் மகாவிஷ்ணுவை வழிபடவேண்டும். இரண்டாம் பாவகம் எனும் தனம், வாக்கு ஸ்தானம் பலம்பெற்ற ஒருவரே தனது சாமர்த்தியமான- இனிமையான பேச்சால் அனைவரையும் கவரமுடியும். வாக்கு சாதுர்யம் இல்லாத ஒருவரால் தொழில் செய்யமுடியாது. தன ஸ்தானத் திற்கு லக்ன தொடர்பிருந்தால் தொடர் தனவரவு இருந்துகொண்டே இருக்கும். சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாக்க வேண்டுமென்ற அறிவும், பணம் மேன்மேலும் வரக்கூடிய வழிகளைப் பெருக்கக்கூடிய சுயசிந்தனையும் இருக்கும். இனிமையான இல்லறம் அமையும். இதற்கு அசுப கிரகங்களின் சம்பந்தமிருந்தால் பேச்சுத் திறமை இருக்காது. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாது. பொருள் வரவில் ஏற்ற- இறக்கம் நிலவும். இல்லறசுகம் குறைவுபடும்.
செல்: 98652 20406