"வெற்றி வேண்டுமா போட்டுப் பாராடா எதிர் நீச்சல்; சரி தான் போடா தலைவிதி என்பது வெறும் கூச்சல்.'

ஒருவருக்கு வெற்றியைத் தருவது ஜனனகால ஜாதகத்தின் மூன்றாமிடமான உபஜெய ஸ்தானம், சகாய ஸ்தானம், முயற்சி ஸ்தானம்.

மேலும் இது ஒரு வரின் தைரிய, வீரிய ஸ்தானம். ஞாபக சக்தி மற்றும் வாழ் வில் ஏற்படக்கூடிய மாற்றத்தைப் பற்றிக் கூறுமிடம். இளைய உடன்பிறப்பு பற்றிக் கூறும் 3-ஆம் பாவகத் தின்மூலம் விடாமுயற்சி, வெற்றி, கண்ணியம், கட்டுப்பாடு, கலையார்வம், சகோதர பாசம், தைரியமான பேச்சு, கீர்த்தி, சகாயம், அணிகலன்கள், காது தொடர்பான நோய்கள், வேலையாட்கள், போகம், தொழிலின் அபிவிருத்தி, முதலாளித்தன்மை, பூமி லாபம், உணவுக்கு கஷ்டமாகும் நிலை, சிறு தூரப் பயணங்கள் இவற்றையெல்லாம் அறியலாம்.

ஒருவர் விடாமுயற்சியை வீரமாகக் கொண்டவரா அல்லது விரல்நீட்டும் தூரத்தைக்கூட தொடமுடியாதவரா? போகத்தில் மூழ்கி வாழ்வின் ஒரு பாகத்தைப் பறிகொடுப்பவரா அல்லது கண்ணியம், கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து சாதனையாளராக வலம் வருபவரா என்பது போன்றவற்றை ஒரு ஜாதகத்தின் 3-ஆமிடம், 3-ஆமதி பதியின் நிலையைக் கொண்டு அறிய முடியும்.

Advertisment

லக்ன பாவத்தின் பாவாத்பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சி யைக் கொடுக்கும் பாவகம்.

ஆக, ஒருவர் வாழ்வில் அனைத்து விதமான சகாயமும் பெற்றிட மூன்றாமி டம் பலமாக இருப்பது மிக அவசியம். வாழ்வில் வெற்றிபெற உழைப்பு அவசியம்.

ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றிபெற விடாமுயற்சி மிகமிக அவசியம். விடா முயற்சியால் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்றவர்கள் பலரின் ஜாதகத்தில் 3-ஆமிடம் மிக வலிமையாக இருக்கும். ஒரு ஜாதகத்தில் மூன்றாமதிபதி, மூன்றாமிடத்தில் நின்ற கிரகம், பார்த்த கிரகத்தினைக்கொண்டு ஒரு மனிதன் தன் முன்னேற்றத்திற்குச் செய்யும் முயற்சியினைத் தெளிவாகக் கூறமுடியும்.

Advertisment

மூன்றாமதிபதி லக்னத்தில்

முயற்சியை மூலதனமாகக்கொண்டு முன்னேறுபவர்கள். விடாமுயற்சி, தன் நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழுடையவர்கள்.

உடல் வலிமையுடையவர்கள். அமைதி யான தோற்றமுடையவர்கள். பொறுமை யானவர்கள். பொறுப்பானவர்கள். ஆன்மிக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். இளைய சகோதரத் தால் ஆதாயமுள்ளவர்கள். இயல், இசை, நாடகப் பிரியர்கள். வேலையாட்கள் யோகமுண்டு. பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். தெளிவான திட்டமிடுதல் இருக்காது. சகோதரர் கலகம் நிறைந்தவராக இருப்பார். பயணங்களால் ஆதாயமின்மையும் அசௌகரியமும் ஏற்படும். செவ்வாய்க் கிழமை சுவாமிமலை முருகனை வழிபட வேண்டும்.

மூன்றாமதிபதி இரண்டில்

முயற்சி, திறமை, முன்னேற்றமான வாழ்க்கை, உறவினர்களால் லாபமுண்டு. உடன்பிறந்தவர்களுக்காக நிறைய விரயத்தை சந்திக்க நேரும். சகோதரர் உழைப்பில்லாமல் வாழ விரும்புவார்கள். அல்லது தம்பியின் குடும்பம் ஜாதகரை நம்பிப் பிழைக்கும் நிலை இருக்கும். சகோதரருக்கு நோய்த்தாக்கம் மிகுதியாக இருக்கும். அல்லது சகோதரர் வெளிநாட்டில் வாழலாம்.

அசுப கிரகங்களின் சம்பந்தமிருந்தால் இளைய சகோதரத்தின்மீது அக்கறை இல்லாத சுயநலவாதியாக இருப்பார். சகோதரத்துடன் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்படும். செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவில்சென்று வரவும்.

dd

மூன்றாமதிபதி மூன்றில்

முயற்சியால், உழைப்பால் உயர்ந்த- உயர விரும்பும் உத்தமர். ஜாதகர் தைரியமானவர். பலசாலி. வீரியமுடையவர். இளைய சகோதரம் உண்டு. தெய்வ நம்பிக்கை நிறைந்த வர். சொகுசு வாழ்க்கை, ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை, போகசுகம் உண்டு. இளைய சகோதரர் பெயர், புகழுடையவர். சகோதரர்கள் ஒற்றுமை உள்ளவர்கள். ஓருயிரும், ஈருடலுமாக வாழ்பவர்கள். லக்ன பாவத்தின் பாவாத்பாவம் என்பதால் தொட்டது துலங்கும். எண்ணியதை ஈடேற்றும் திறமைசாலிகள். கலையார்வம் மிகுந்தவர். சாஸ்திர ஞானம் மிகுந்தவர்கள்.

மூன்றாமிடத்திற்கு அசுப கிரகங்களின் சம்பந்தம் இருந்தால் சகோதரர்கள் உதட்டளவில் மட்டும் உறவாடுவார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்கள். ஜாதகருக்கும் சகோதரருக்கும் வயது வித்தியாசம் அதிகமிருக்கும். வீரியக் குறைவு, செவித்திறன் குறைவுண்டு. எடுப்பார் கைப்பிள்ளையாக வாழ்வார்கள். செவ்வாய்க்கிழமை முருகனும் விநாயகரும் இணைந்த படத்தை வைத்து வழிபடவும்.

மூன்றாமதிபதி நான்கில்

இரண்டாம் பாவத்தின் பாவாத்பாவம் என்பதால் தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சியுண்டு. இன்பம், செல்வம், அறிவு நிரம்பப்பெற்றவர். தாய்வழி, மனைவி ஆதரவுண்டு. தன்னைச் சார்ந்தவர்களும் உயர உதவுபவர். இன்பம், தைரியம், மகிழ்ச்சியுடையவர். வீடு, வாகன வசதியுண்டு. தாயார், இளைய சகோதரரின்மேல் அதிக அன்பைப் பொழிவார். பொருளாதரம் சேரும். உற்றார்- உறவினர்களால் போற்றப்படுவார்கள். ஆரம்பக்கல்வி, பள்ளிப் படிப்பில் முதன்மை யான மாணவராகத் திகழ்வார்கள்.

இதற்கு அசுப கிரக சம்பந்தமிருந்தால் சில கெட்டபழக்கங்கள் அல்லது உடல் நிலையைப் பாதுகாக்க நேரமின்மை போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் மிகுதியாக இருக்கும். குடும்ப உறவுகளின் ஆதரவின்மை, பங்கு துரோகம் உண்டு. தாயன்பு கிடைக்காது. கல்வி தடைப்படும். செவ்வாய் கிழமை முருகன், விநாயகர், பார்வதி, பரமேஸ்வரருடன் இணைந்த குடும்பப் படத்தை வைத்து வழிபடவும்.

மூன்றாமதிபதி ஐந்தில்

பிறக்கும்போது சாதாரண மனிதராக இருப்பார்கள். இறக்கும்போது சாதனை மனிதர்களாக சரித்திரத்தில் இடம்பிடிப்பார் கள். சமுதாயத்தால் மதிக்கக்கூடிய நபராக இருப்பார்கள். நல்ல குடும்ப வாழ்க்கை, குழந்தைகளால் பெருமையடைவார்கள். பூர்வீகச் சொத்துகளால் ஆதாயமுண்டு. முன்னோர்களின் சாஸ்திர சம்பிரதாயத்தை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். குலதெய்வம் வீட்டின் அருகிலிருக்கும். ஜாதகருக்கும் இளைய சகோதரருக்கும் வயது வித்தியாசம் குறைவாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட காதல் அனுபவமுண்டு. ஜாதகரின் தாத்தா, இளைய சகோதரர்மேல் அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்.

அசுப கிரகங்களின் சம்பந்தமிருப்பின் குழந்தைகளால் மனவருத்தம், குலதெய்வ அனுக்கிரகமின்மை போன்ற அசுபப் பலன்கள் தோன்றும். சுய சிந்தனை குறைவுபடும். பூர்வீகத்தில் வசிக்கமுடியாது. பதவியில் களங்கம் உண்டாகும். செவ்வாய்க் கிழமை குலதெய்வத்திற்கு சிவப்பு அரளி சாற்றி வழிபடவும்.

மூன்றாமதிபதி ஆறில்

விபரீத ராஜயோகம் நிறைந்தவர்கள். 4-ஆம் பாவத்தின் பாவாத்பாவம் என்பதால் வீடு, வாகன யோகம் பெருகும். சிலருக்கு கடன்தொகை தள்ளுபடியாகும். அரசியல் ஆதாயமுண்டு. எதிர்பாராத திடீர் திருப்ப முண்டு. ஜாதகருக்கு முயற்சியால் வளமான வாழ்வு நிச்சயம். சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள். தைரியம், வீரியம் நிறைந்தவர். ஜாதகரும், இளைய சகோதரரும் இணைந்து கடன் வாங்குவார்கள்.

இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால் ஜாதகர் முயற்சியற்றவர். உறவுகளின் ஆதரவற்றவர். கடன், வியாதி, நோய்த் தாக்கம் மிகுந்தவர். உடல்நல பாதிப்பால் இல்லற இன்பம் குறையும். உறவுகளின் வெறுப்பை சம்பாதிப்பவர். அடிமைத் தொழில் செய்யநேரும். சில சமயங்களில் தோளில் சுமந்து வளர்த்த இளைய சகோதரர்களே எதிரியாவார்கள். சஷ்டி திதியில் பாலமுருகனை வழிபடவும்.

மூன்றாமதிபதி ஏழில்

திருமணத்திற்குப்பிறகு வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். வெற்றிக்குப்பின் வாழ்க்கைத் துணையின் பங்களிப்பு இருக்கும்.

அசுபகிரக சம்பந்தமிருந்தால் ஜாதகருக்கு இருதார யோகமுண்டு. இளவயது திருமணம் தோல்வியைத் தரும். திருமணத்திற் காக வீட்டைவிட்டு வெளியேறுவார்கள். பெரும்பான்மையாக காதல் திருமண வாய்ப்பு அதிகம். 27 வயதிற்குமேல் திருமணம் செய்வது சிறப்பு. நயவஞ்சக எண்ணம் மிகுந்தவர்கள். நண்பர்களை, பங்காளிகளை ஏமாற்றிப் பிழைப்பார்கள். தீராத காம எண்ணம் மிகுந்தவர்கள். மனசாட்சி இல்லாதவர்கள். செவ்வாய்க்கிழமை துர்க்கையை வழிபடவும்.

மூன்றாமதிபதி எட்டில்

வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். தன் காரியத்திற்காக அனைவரையும் பயன்படுத்துவார்கள். குறுக்குவழியில் முன்னேறுவார்கள். உடன் பிறந்தவர்களை அனுசரிக்க மாட்டார்கள்.

இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால் முயற்சிகள் தோல்வி தரும். சகோதர பகை, கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை, கடன், அவமானம் ஏற்படும். வாழ்நாள் முழுவதும் சிறிய முயற்சிகூட பலிதமாகாமல், அடிப்படைத் தேவைக்குக்கூட போராடும் நிலை இருக்கும். அங்க குறைபாடு உண்டு. குடும்பத் தேவைகளை நிறைவுசெய்ய முடியாது. 8-ஆமிடம் வலுப்பெற்றால் சிலருக்கு விபரீத ராஜயோகம் உண்டு. செவ்வாய்க் கிழமை பகல் 11.00-12.00 மணிவரையி லான சனி ஓரையில் வீரபத்திரரை வழிபடவும்.

மூன்றாமதிபதி ஒன்பதில்

தைரியம், வீரம், பூர்வபுண்ணியம் மிகுந்தவர்கள். வம்சாவளியாக புதிய முயற்சி களில் ஈடுபாடு மிக்கவர்கள். வாரிசுகளாலும் மனைவியாலும் அதிர்ஷ்டம் தேடிவரும். சுமாரான குடும்பத்தில் பிறந்தவர்கள்கூட படிப்படியாக கோடீஸ்வர யோகம் அடை வார்கள். உறவுகளிடம் நல்ல மதிப்பு, மரியாதை இருக்கும். நல்ல தேக ஆரோக்கியம் இருக்கும். பிரச்சினைகளுக்குத் தீர்வு, உதவிகள் கிடைக்கும். ஆகையால் எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கமுடியும். தந்தை, தந்தைவழி உறவுகளால் ஆதாயமுண்டு. அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்க விதியை மதியால் வெல்பவர்கள். கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தும் பாக்கியம் பெற்றவர்கள். முறையான நீத்தார் வழிபாடு செய்பவர்கள்.

இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால் எதையும் சமாளிக்கும் திறனற்ற கோழையாக இருப்பார்கள். கடுமையான பித்ரு தோஷத் தாக்கமுண்டு. உடன்பிறந்தவர்களால் மனக் கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும். இவரின் உணர்வுகளை உறவுகள் புரிந்துகொள்ள மாட்டார்கள். செவ்வாய்க்கிழமையும் அமாவாசையும் இணைந்து வரும் நாட்களில் பித்ருக்களை வழிபடவேண்டும்.

மூன்றாமதிபதி பத்தில்

புதிய புதிய தொழில் முயற்சியால், சுய வருமானத்தில் செல்வம் சேரும். சுய தொழில் ஆர்வம் மிகுந்தவர்கள். கவர்ச்சி யான விளம்பரத்தால் தொழிலில் உச்சத்தை அடைவார்கள். உடன்பிறந்தவர்களுடன் இணைந்து கூட்டுத்தொழில் செய்வார்கள். பெரிய அந்தஸ்து, அதிகாரம் நிறைந்த பதவியில் இருப்பார்கள். செவ்வாயும் ஆட்சி, உச்சம்பெற்று, சுபத்தன்மைபெற்று லக்னம் மற்றும் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ள காவல்துறை, இராணுவம் போன்ற சீருடைப் பணிகளில் பணியாற்றமுடியும்.

இதற்கு அசுபகிரக சம்பந்தமிருந்தால் தகுதி, திறமைக்குத் தகுந்த நிரந்தரத் தொழில், உத்தியோகம் அமையாது. சிலர் உடன்பிறப் பிற்காக, குடும்பத்திற்காக மாடாக உழைத்தும் கெட்டபெயர் எடுப்பார்கள். வளர்பிறை தசமி திதியில் பழநி முருகனை வழிபட வேண்டும்.

மூன்றாமதிபதி பதினொன்றில்

அண்ணன்- தம்பி என குடும்பமே முன்னேற் றத்திற்காக முயற்சி செய்வார்கள். கூட்டுக் குடும்பமாக இருந்து தொழில் முயற்சியில் வெற்றிபெற்றவர்களுடைய ஜாதகத்தில் இந்த அமைப்பிருக்கும். இளைய உடன்பிறப் பைப் பற்றி 3-ஆம் பாவகத்தின்மூலமும், மூத்த உடன்பிறப்பைப் பற்றி 11-ஆம் பாவகத்தின்மூலமும் அறியமுடியும். உப ஜெய ஸ்தானங்களான 3, 6, 10, 11-ஆம் பாவகங்கள் வலிமைபெற்ற சகோதரர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தங்களுக்கென்று தனி முத்திரை பதித்து வருகிறார்கள்.

பாவகிரக சம்பந்தமிருந்தால் இரு திருமண யோகமுண்டு. குலகௌரவம் கெடும். வம்பு வழக்குகளால் சகோதர பிரிவினை ஏற்படும். செவ்வாய்க்கிழமை திருத்தணி முருகனை வழிபடவும்.

மூன்றாமதிபதி பன்னிரண்டில்

முயற்சியில் தோல்வி, சகோதர இழப்பு, சகோதர சச்சரவு, சொத்து விரயம், தூக்கமின்மை ஏற்படும். செல்வநிலையும் சீராக இருக்காது. 3-ஆமிடம் வீரத்தையும், ஆண்மையையும் பற்றிக் குறிப்பிடுவதால், இந்த பாவகம் பாதிக்கப்பட்டால் ஆண்மைக் குறைவு, சோம்பேறித்தனம், பயந்த குணம் போன்ற பலன்கள் ஏற்பட்டு, ஜாதகர்கள் எந்த முயற்சியும் செய்யாமல் மனோ பலமும் குறைந்தவராக இருப்பார்கள். 12-ஆமிடம் சுபவலுப்பெற்றால் இன்பமான இல்வாழ்க்கை அமையும். செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகிலுள்ள காவல் தெய்வத்தை வழிபடவேண்டும்.

ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதியும், மூன்றாமிடத்து அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் அல்லது லக்னாதிபதி நின்ற வீட்டதிபதி சுப பலம்பெற்றிருந்தாலும் ஜாதகர் தன் வாழ்நாளில் தைரியசாலியாக வலம்வருவார். இந்த அமைப்புடன் செவ்வாய் இணைந்தால் ஜாதகருக்கு அந்தஸ்து மேலும் உயரும். பிடிவாத குணமும் ஏற்படும்.

ஜனன ஜாதகத்தில் மூன்றாமிடம் சுப பலம்பெற்றிருந்து, செவ்வாய், மூன்றா மிடத்ததிபதி மற்றும் மூன்றாமிடத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்து, இவையனைத் தும் சுப பலம்பெற்றுமிக்க வலிமையுடன் இருந்தால், ஜாதகர்கள். தம் வாழ்வில் நடக் கும் எத்தகைய நிலைகளையும், சம்பவங்களை யும் மிகவும் சர்வசாதாரனமாக எதிர்கொள்வார் கள். திறமையான அணுகுமுறையுடைய, பெருமைக்குரிய சாமர்த்தியசாலியாகத் திகழ்வார்கள்.