கிருஷ்ணர் வரலாற்றை பராசரர் மைத்ரேயருக்குக் கூறி வருகிறார்.

"ஒருபெண் தன் சொந்தக் கணவனுடன் உறவுகொண்டு குழந்தை பெறாமல், மற்றொரு ஆணுடன் உறவுகொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால், அந்தக் குழந்தைக்கு குடும்ப சொத்தில் பங்கு, உரிமை கிடையாது என்ற நியாயத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

இராமன் வில்லையொடித்து சீதையை மணந்தார். ஆனால் தன் மனம் விரும்பி மணந்த மனைவியை, தனது நாட்டுக் குடிமகன் ஒருவன் தவறாகக் கூறியதை தனது சந்தேக குணத்தால் நன்கு ஆராய்ந்து பார்க்காமல கர்ப்பிணியான மனைவியைத் தன்னைவிட்டுப் பிரித்துக் காட்டிற்கு அனுப்பிவிட்டார்.

அதன்பிறகு சீதை தன் ஆயுள் இறுதிவரை வாழாவெட்டியாக இருந்து இறந்து போனாள். கட்டிய மனைவிக்கு செய்த பாவத்தால் இராமனுக்கு களத்திர தோஷம் பற்றிக் கொண்டது.

Advertisment

dd

இராமரை ஏகபத்தினி விரதன் என்று பெருமையாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்த ஒரு மனைவி சீதைக்கு சந்தோஷமான வாழ்க்கையை இராமனால் அமைத்துக்கொடுத்து வாழவைக்க முடியவில்லை. அரச குமாரியாகப் பிறந்த சீதை, இராமனை மணந்ததால் அனாதையைப்போல் வனத்தில் மரணமடைந்தாள். இராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையை இராவணனைப் போரில் கொன்று மீட்டுவரும்போது, அவள் கற்பின்மீது சந்தேகங்கொண்டு தீக்குளிக்கச் செய்து, சீதை கற்பு தவறாதவளா? புனிதமானவளா என்று பரிசோதித்துதான் அழைத்துவந்தார். ஆனால் பிறர் சொல்வதைக் கேட்டுப் பிரித்துவைத்தார்.

இராமாவதாரத்தில் இராமர் தன் மனைவிக்குச் செய்த பாவத்தால் உண்டான களத்திர தோஷத்தை, கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் எவ்வாறு நிவர்த்தி செய்தார் என்பதையும் அறிந்துகொள்வோம்.

கிருஷ்ணர் ஓரிடத்தில் பிறந்து, ஓரினத்தில் வாழ்ந்து, பல இனத்தைச் சேர்ந்த 16,100 பெண்களை மணம்புரிந்தார். தனது அனைத்து மனைவியர்களும் மகிழ்ச்சி யாக வாழ அவர்கள் கேட்டதையெல் லாம் செய்துகொடுத்தார். ருக்மணி, தேவ லோகத்தில் இந்திரனின் தோட்டத்திலுள்ள பாரிஜாத மலர்கள்மீது ஆசைப்பட்டு, அம்மலர்கள் வேண்டுமென்று கேட்டாள். மனைவியின் ஆசையை நிறைவேற்ற, கிருஷ்ணர் இந்திரனுடன் போரிட்டு இந்திரனைத் தோற்கடித்து, பாரிஜாத மரத்தையே பூமிக்குக் கொண்டுவந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டுவைத்தார். 16,100 மனைவியரையும் எந்தவிதமான பாகுபாடுமில்லாமல், அனைவரிடமும் ஒன்றுபோல் பாசமாக இருந்தார்.

இராமரின் செயலால் அந்த குடும்பத்தில் வாழவந்த பெண் சீதை விட்ட சாபத்தை, கிருஷ்ணர் தன் வாழ்க்கையில், தனது வீட்டிற்கு வாழவந்த தனது மனைவியரை மகிழ்ச்சியாக வாழவைத்து, பெண் சாபத்தை நிவர்த்தி செய்தார். ஒருவருக்கு பெண் சாபம், களத்திர தோஷம் இருந்தால், அவர் கள் தன் மனைவியை மதித்து, அவளை மகிழ்ச்சியாகவும், மதித்தும் வாழவைத்தால் தான் அவருக்குள் பெண் சாபம் நிவர்த்தி யாகும். களத்திரதோஷம் நீங்க இது மட்டும் தான் பரிகாரம்.

கண்ணன் தனது அனைத்து மனைவி களையும் கண்ணுக்குள் வைத்துக் காப்பற்றி களத்திர தோஷத்தைத் தீர்த்தார். கிருஷ்ணர் பல இனத்தைச் சேர்ந்த பெண்களை மணம்புரிந்தார். சாதி, மதம், பேதம் பார்க்காமல், கலப்புத்திருமணம் செய்தவர். கலப்புத் திருமணத்தின் முன்னோடி கிருஷ்ணர்தான்.

இன்றையநாளில், சாதி, மதம், குலம், இனம் என மக்களிடையே பாகுபாட்டைக் கூறி, நம்பவைத்துவிட்டார்கள். அதனால் சிலர் கலப்புத்திருமணம் செய்துகொள்பவர்களை, ஆணவப் படுகொலை செய்து வருகிறார் கள். கண்ணனையும், இராமனையும் கடவுளாக வணங்கி வாழும் இவர்கள், கண்ணனால் உருவாக்கப்பட்ட கலப்புத் திருமணத்தை எதிர்த்தே செயல் படுகிறார்கள். இதனால் இந்த சாதித் தலைவர்கள், சாஸ்திரக் கொள்கையைக் கூறுவர்களின் எண்ணங்கள் நிறைவேறாமல் கண்ணன் தடுத்து விடுவார். இவர்கள் அடைய நினைக்கும் உயர்வை அடையமுடியாது. திட்டத்தை செயல்படுத்தமுடியாது. சம்பந்தமில்லாதவர்களைக் கொலை செய்த பாவம்தான் சேரும். வம்சமும் வாரிசு களும்தான் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இராமாவதாரத்தில் இராமனால் பெண்கள் துன்புறுத்தப்பட்டார்கள். மந்தரை, சூர்ப்பநகை போன்ற பெண்களால், இராமன் நிறைய பெண் சாபங்களை அடைந்தார். அந்த சாபங்களை கிருஷ்ணர் எவ்வாறு நிவர்த்தி செய்தார் என்பதையும் அறிவோம்.

இராமனின் சிறிய தாயாரான கைகேயியின் பணிப் பெண்ணாக மந்தரை இருந்தாள். இவள் முதுகு வளைந்திருந்ததால் இவளைக் கூனி என்றே எல்லாரும் அழைத்தனர். வயது முதிர்ந்த கூனியின் வளைந்த முதுகில், இராமன் சிறுவனாக இருந்தபோது, சேற்று மண்ணை உருண்டையாக்கி, அதை ஒரு குச்சியின் நுனியில் பொருத்தி, அதனை அம்புபோல் வில்லில்வைத்து கூனியின் முதுகில் எய்து விளையாடினான். இதனால் உடல் ஊனமுற்ற ஒரு பாமரப் பெண்ணைத் துன்புறுத்தியதால் இராமனுக்கு பெண் சாபமும், பாமர கூலியாள் சாபமும் பற்றியது.

இராமாவதாரத்தில் மந்தரையாகப் பிறந் திருந்தவள், கிருஷ்ணாவதாரத்தில் கம்சனின் தலைநகரான மதுராபுரியில் பிறந்து, "நைகவக்கிரை' என்ற பெயருடன் கம்சனுக்கு சந்தனம் முதலான வாசனைப் பொருட்களை அரைத்துப் பூசும் பணிப்பெண் வேலையைச் செய்து வாழ்ந்துவந்தாள். இந்தப் பிறவியிலும் கூனல் முதுகுடனேயே பிறந்திருந்தாள்.

(தொடரும்)

செல்: 99441 13267