மகாவிஷ்ணு மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன் என்று ஏழு அவதாரங்கள் எடுத்து, பிறர் நன்மையடையவும், தனக்கு எந்தவொரு நன்மையுமில்லாத, தனக்கு சம்பந்தமே இல்லாத பலரைக்கொன்றும் பாவங்களை அடைந்தார். இந்த ஏழு அவதாரங்களில் ஏற்பட்ட சாபங்களை நிவர்த்திசெய்யவும், தனது மனைவியான பூமாதேவியின் பாரத்தைக் குறைத்து, அவளின் கஷ்டத்தை நீக்கவும், ஏழு அவதாரங்களில் தொடர்ந்துவரும் அசுரர்களின் பகையை நீக்கவும், ஒவ்வொரு அவதாரத்திலும் தன்னுடன் இணைந்து பூமியில் பிறந்த தேவர்கள், கிரகங்கள், பஞ்சபூதங்களுக்கு உண்டான சாபங்களை நீக்கி, தன்னுடன் அவர்களும் இந்த பூமி தொடர்பை முடித்துவிட்டு, மோட்ச மடையவும் எட்டாவது அவதாரமான கிருஷ்ணாவதாரம் எடுத்து ஒரு காரணத் துடன் இந்த பூமியில் பிறந்தார்.
கிருஷ்ணர் தனது ஏழு பிறவிகளில், யார் யாருக்கு எந்தவிதமான பாவங்களைச் செய்தாரோ, இந்த எட்டாவது அவதாரத்தில் அவர்களைத் தேடி அறிந்து, தான் செய்த செயல்களுக்கு உண்டான பரிகாரத்தையும், சாபநிவர்த்தியையும் செய்துமுடித்தார்.
அசுர குலத்தையும், வம்சத்தையும் அழித்து, அசுரர்களின் பகைத் தொடர்ச்சியை முடித்தார்.
அசுரர்களை கொன்று அழித்ததால், பூமியில் பாதியளவு பாரம் குறைந்தது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த மகாபாரதப் போரில் ஏராளமானவர்கள் மரணமடைந்ததால் பூமியின் பாரம் முழுவதுமாகக் குறைந்தது. பூமாதேவியின் சிரமத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தந்தார்.
கிருஷ்ணரின் பிறப்பின் நோக்கம் நிறைவேறியது. இனி இந்த பூமியில் வாழ முடியாது; தனது ஆயுள் காலம் முடிந்து விட்டது என்பதை உணர்ந்து திவ்ய லோகம் செல்ல முடிவுசெய்தார். மனிதர்களானாலும், கடவுள் என்றாலும், இந்த பூமியில் எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்து முடித்து விட்டால் அதன்பிறகு ஒரு நிமிடம்கூட இந்த பூமியில் உயிருடன் இருக்கமுடியாது.
கிருஷ்ணரும், அவரின் மனைவியரும், யாதவர்களும் உயிருடன் இருந்தனர். அவர் களின் இறுதிக்காலம் தொடங்கிவிட்டது; தன்னைச் சேர்ந்த யாதவர்கள் பெற்ற சாபம் செயல்படத் தொடங்கிவிட்டது என்பதையும் புரிந்துகொண்டார்.
ஒரு சமயம் யாதவர்கள், "பிண்டாரசம்' என்ற தீர்த்தக் கரையில், விசுவாமித்திரர், கண்வமுனிவர், நாரதர் ஆகியோரை தங்கள் கர்வத்தால் கேலி செய்தார்கள். மேலும் கண்ணனின் மனைவியான ஜாம்பவதிக்குப் பிறந்த சாம்பனுக்கு ஒரு கர்ப்பிணிப் பெண்போல் வேடமிட்டு, அந்த மூவரையும் நோக்கி, "சுவாமிகளே, இந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?' என்று பரிகாசமாகக் கேட்டார்கள். கோபம்கொண்ட முனிவர்கள், "உங்கள் யாதவ இனத்தையே அழிக்கும் இரும்பு உலக்கை பிறக்கும்' என்று சாபமிட்டுச் சென்றார்கள்.
முனிவர்கள் சாபமிட்டதுபோல் சாம்பன் இரும்பு உலக்கையைப் பெற்றெடுத்தான்.
அந்த உலக்கையை இடித்துப் பொடிசெய்து, நீரில் கரைத்துவிட்டார்கள். அந்த இரும்புத் துகள்கள் கோரைகளுடன் கலந்து கோரை களாக நதிக்கரையில் வளர்ந்துநின்றன.
கிருஷ்ணர் அவதாரக்காலம் முடியும் சமயத்தில், கிருஷ்ணரும் மற்றும் யாதவர்கள் அனைவரும், பிரபாசத் தீர்த்தத்திற்கு சென்றார் கள். அங்கு யாதவர்கள் மது அருந்தினர். போதை அதிகமாகி அவர்களுக்குள் கலகம் ஏற்பட்டு, அங்குள்ள கோரையைப் பிடுங்கி அடித்துக்கொண்டார்கள். கோரைகள் இரும்பு போன்று உறுதியாக இருந்ததால், கோரையில் அடிபட்டு ஒவ்வொருவராக இறந்தனர்.
கிருஷ்ணர் அவர்களைத் தடுக்கப்போக, அவர்கள், கிருஷ்ணரையும் எதிரியாக நினைத்து, அவரையும் அடித்தார்கள். இதனால் கோபம்கொண்ட கிருஷ்ணர் தானும் கோரையைப் பிடுங்கி யாதவர்கள் அனைவரையும் அடித்துக்கொன்றார். எந்த யாதவகுலம் இவரைக் காப்பாற்றியதோ, எந்த யாதவகுல மக்களை இவர் காப்பாற்றினாரோ அந்த யாதவ இனத்தையே கொன்றொழித் தார். யாதவர்கள் இனமும் அழிந்தது.
கிருஷ்ணரின் குழந்தைகள், உறவுகள், யாதவர்கள் என அனைவரும் இறந்தபின்பு, கிருஷ்ணர் மட்டும் தனித்திருந்தார். கிருஷ்ணரின் இறப்பு, இராமாவதாரத்தில் இராமர் செய்த செயலால் உண்டான ஒரு சாபம். அந்த சாபத்தின் படிதான் கிருஷ்ணரின் மரணம் நிகழவேண்டும் என்பது விதி.
இராமாவதாரத்தில் இராமர், வானர மன்னன் வாலியை ஏழு மராமரங்களுக்குப் பின்னே மறைந்திருந்து, போர் தர்மத்தை மீறி அம்பெய்து கொன்றார். இறக்கும்போது வாலி, இராமனைப் பார்த்து, "இராமா, நீ யார் என்றுகூட எனக்குத் தெரியாது. நான் உனக்கு எந்த தீமைகளையும் செய்ய வில்லை. ஒரு வீரனைப்போல் என்னை நேருக்கு நேர் நின்று கொல்லாமல், ஒரு கோழையைப் போல் மறைந்திருந்து தாக்கிவிட்டாய். தர்மம், நியாயம் தவறி அஸ்திரத்தைப் பயன்படுத்திவிட்டாய். உனது அடுத்த பிறவியில், உன்னை யாரென்றே தெரியாத ஒருவனால் கொல்லப்படுவாய். எனக்கு ஏற்பட்டது போன்றே உன் மரணம் அமையும்' என்று சாபமிட்டுவிட்டு, வாலி இறந்தான். வாலியின் சாபம் செயல்படத் தொடங்கியது.
பிரபாச தீர்த்தம் அருகிலுள்ள வனத்தில், புதர்கள் மறைத்துக்கொண்டிருந்த ஒரு மரத்தின் அடியில், ஒரு முழந்தாளின்மீது மற்றொரு காலைத் தூக்கி வைத்துக்கொண்டு, கிருஷ்ணர் நித்திரையில் இருந்தார். அந்தப் பக்கமாக வந்த வேடன் ஒருவன், புதர்களின் இடைவெளியில் தெரிந்த கால் கட்டை விரலைப் பார்த்து, அது ஏதோ ஒரு மிருகம் என்று நினைத்து அம்பெய்தான். அம்பு விரலில் பாய்ந்தவுடன் கிருஷ்ணரின் உயிர் பிரிந்து திவ்யலோகம் சென்றது. வாலியின் சாபத்தையும் தீர்த்து முடித்துவிட்டுதான் கிருஷ்ணர் அவதாரத்தை முடித்தார்.
(தொடரும்)
செல்: 99441 13267