"மைத்ரேயனே, உனது கேள்விகளுக்கு நான் விளக்கமாக பதிலைக் கூறுகிறேன். நீ கேட்கும் கேள்விகள் அனைத்து மக்களின் மனதிலும் உள்ளது.

அதற்குமுன் விஷ்ணுவின் அவதாரப் பிறப்பு பற்றிய சில விளக்கங்களைக் கூறுகிறேன்.

மகாவிஷ்ணுவின் ஆன்மா, ஒரு பிறவியில் இராமனாகவும், அடுத்த பிறவியில் கிருஷ்ணராகவும் பிறந்தபோதும், இந்த இரண்டு பிறவிகளின் வாழ்க்கை முறை, வாழ்க்கைநிலை ஒரேமாதிரி அமையவில்லை. இந்த இரண்டு பிறவிகளுக்கும் உள்ள வேறுபாடுகளையும், இராமன், கிருஷ்ணர் இருவரின் செயல்முறைகளையும் கூறுகிறேன்.

அதன்பிறகு உன் கேள்விகளுக்கு விடை கூறுகிறேன். இதனைத் தெரிந்துகொண்டால்தான், மைத்ரேயா, நீயும், இந்த பூமியில் பிறந்து வாழும் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமைகளுக்கான காரணத்தையும், தீமைகளைத் தடுத்து நன்மைகளை அடைந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளையும் தெரிந்துகொள்ளமுடியும். முற்பிறவி, அடுத்த பிறவிபற்றிய சந்தேகமும் தீரும்.

Advertisment

dd

கலியுகத்தில் மக்கள் எவ்வாறு தன் செயல்களால் பாவத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள் என்பதை இராமனின் வாழ்க்கைமூலமும், முற்பிறவி கர்மவினை பாவ- சாபத்தை எப்படி நிவர்த்திசெய்து கொள்ளவேண்டும் என்பதை கிருஷ்ணரின் வாழ்க்கை மூலமும் தெரிந்துகொள்வோம்.

இராமர் அயோத்தி மன்னன் தசரதனுக்கு அரச குமாரனாகப் பிறந்தார். இளம்வயதில் குலகுரு வசிஷ்டரிடம் கல்வி, வித்தைகள், அஸ்திரக் கலைகளைக் கற்றார். இளம் வயதில் அரச போக, சுக வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தார். பருவ வயதில், ரிஷிகள், முனிவர்கள் என பலருக்கு உண்டான துன்பங்களைத் தீர்க்க, அவர்களைக் காப்பாற்ற, அவர்களின் எதிரிகளையும், தனக்கு சம்பந்தமே இல்லாத அசுரர்களையும், இன்னும் பலரையும் தனது ஆயுத பலத்தால் கொன்று, உயிர்க்கொலை பாவத்தையும், எதிரிகளையும் தனக்குத்தானே உருவாக்கிக்கொண்டார்.

இராமர் தான் செய்யும் ஒவ்வொரு செயல்களால் தனக்கு நன்மைகளையும் உயர்வையும் தருமா அல்லது தீமைகளை, பாவ- சாபங்களை தருமா? நமது வம்ச வாரிசுகளின் வாழ்வில் பாதிப்புகளைத் தருமா என்பதைத் சிந்தித்து செயல்படாமல், ரிஷிகள், முனிவர்கள், தன்னிடம் உதவிகேட்டு வந்தவர்கள் கூறுவதைக்கேட்டு, ஒரு அடிமைபோல் செயல்பட்டு பிறரைக் காப்பாற்றினாரே தவிர, தன் மனைவி, குழந்தை, குடும்பம் இவர்களைப் பற்றிக் கவலைப் படவில்லை. பின்விளைவுகளைப் பற்றி சிந்தித்து செயல்பட்டு வாழவில்லை. பிறர் கூறுவதைக்கேட்டு அவர்களுக்கு நன்மைகளைச் செய்து தனது பிற்கால வாழ்வில் சிரமடைந்தார். தனிப்பட்டு வாழ்ந்தவர் இராமன். அதனால்தான் இராமனைப் போன்று வாழக்கூடாது என்று கூறுவார்கள்.

இராமரின் வாழ்க்கைமூலம் இன்றைய மக்கள் ஒரு உண்மைக் கருத்தை அறிந்து கொள்ளவேண்டும். மற்றவர்களுக்காக, நண்பர்களுக்காக பணம், பொன், பெண், பொருளுக்காக அடியாட்கள்போல் இருந்து, தனக்கு சம்பந்தமே இல்லாதவர்களைத் துன்புறுத்திக் கொலைசெய்தால், ஒருவருக்கு செய்த உதவியால் புண்ணியம் வந்துசேராது.

அதனால் பிறர் சொல்வதைக்கேட்டு மற்றவர்களுக்கு உதவிசெய்யும்முன்பு, அந்த செயலால் நமக்கு நன்மை உண்டாகுமா? நமது குடும்பம் பாதிப்பை அடையுமா? பொருளாதாரம் அழியுமா என்று யோசித்து செயல்படவேண்டும்.

கிருஷ்ணர் இராமனைப் போன்று ரிஷிகள், முனிவர்கள், மற்றவர்கள் கூறுவதைக்கேட்டு, தனக்கு சம்பந்தமில்லாதவர்களைக் கொல்லவில்லை. தன்னைக் கொல்லவந்த எதிரிகளை மட்டுமே கொன்றார். கிருஷ்ணர் யாரையும் எதிரியாக நினைக்க வில்லை. இராமாவதாரத்தில் உண்டான பகையால், கிருஷ்ணாவதாரத்திலும் அசுரர்கள்தான் இவரை எதிரியாக நினைத்தார்கள். ஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னைக் கொல்லவரும் எதிரியைக் கொல்வது பாவமாகாது. அது கொலை பாவக்கணக்கில் சேராது. தன்னையும், தன் குடும்பத்தாரையும் காப்பாற்றிக்கொள்ள ஒருவன் செய்யும் எந்த செயலும் பாவமில்லை. பிறருக்குகாகச் செய்தால்தான் பாவம்.

இன்றையநாளில் இராமனைப் போன்று, நிறைய பேர் எப்படி தன் வாழ்வில் உயர்வடைய வேண்டுமென்பதை, தன் சுய அறிவால் சிந்தித்து செயல்பட்டு வாழாமல், மடாதிபதிகள், குருமார்கள், ஆன்மிகவாதிகள், அரசியல்வாதிகள் கூறும் கதைகளையும், கருத்துகளையும் உண்மையென நம்பி, அதனைக் கடைப்பிடித்து வாழ்ந்து, தங்கள் தொழில், பணம், பொன், பெண் என அனைத்தையும் இழந்து, பின் வயது வாழ்வில் சிரமமடைந்து, இராமனைப் போல் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் நிறைய பேர் உண்டு.

இதுபோன்று, பிறரை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் கூறுவதை நம்பாமல், எதனையும் கடைப்பிடிக்காமல், இவர்களைவிட்டு கிருஷ்ணர் விலகியிருந்ததுபோல் வாழ்ந்து, தங்கள் வாழ்வில் தனக்கு எது நன்மை தரும்- எது தீமை தரும் என்பதைத் தன் சுய அறிவால், அனுபவத்தால் அறிந்து செயல்பட்டு வாழ்ந்தால் மட்டுமே கிருஷ்ணரைப்போல் வாழ்வில் உயர்வையடையமுடியும்.

கிருஷ்ணர் அரச குலத்தில் பிறந்திருந்தாலும், பிறந்த அன்றே தன்னைப் பெற்றவர்களைப் பிரிந்து, வனத்தில் மாடு மேய்த்துப் பிழைக்கும் ஆயர்குல மக்களுடன் இணைந்து, மூன்றாம் மனிதர் ஆதரவில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். இராமனைப் போன்று அரச சுகபோகத்தை அனுபவிக்கவில்லை. குருகுலம் சென்று கல்வி கற்கவில்லை. படிக்கவேண்டிய வயதில் காட்டில் மாடுகளை மேய்த்தார்.

(தொடரும்)

செல்: 99441 13267