பராசர முனிவர் கிருஷ்ணரின் அவதார நிகழ்வை மைத்ரேய முனிவருக்குக் கூறிவருகிறார்.
"மைத்ரேயனே, ஒருசமயம் எனது பாட்டனார் வசிட்ட முனிவரைக் காண புலத்திய ரிஷி வந்தார். நானும் அப்போது அருகில் இருந்தேன். புலத்தியர் தான் ஒருமுறை மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, "அனந்த
சயனா, பூமியில் மனிதர்கள் கடவுள் அருளைப்பெற்று, காரிய சித்திகளை அடைய என்ன வழி?' என்று கேட்டாராம். அதற்கு மகாவிஷ்ணு, "புலத்தியனே, பூமியில் வாழும் மக்கள் கடவுள் அருள்பெறவும், தான் செய்யும் செயல்களில் வெற்றிபெறவும் பிரவிர்த்தி (முயற்சி), புத்தி, யுக்தி (உபாயம்), சாதனம் (செயல், தொழில்), நிவர்த்தி (நீக்கம்) இவற்றைப் பயன்படுத்தி வாழவேண்டும். இவற்றையறிந்து எவனொருவன் செயல்பட்டு வாழ்கின்றானோ,
அவன் செயலில், தொழிலி-ருந்து அருள்புரிவேன். சாதனத்தைக் கைக்கொண்டால்தான் எதுவும் சாத்தியமாகும். பிரவிர்த்தி, யுக்தி, சாதனம், சாத்தியம், நிவர்த்தி இந்த ஐந்துமே பஞ்சாட்சர மந்திரம்; கடவுள்வசிய மந்திரமாகும்' என்றா ராம் மகாவிஷ்ணு.
மைத்ரேயனே, ஒருவன் மற்றவனிடம் நூறு பொன்னோ, ஒரு பொருளோ வாங்கிவிட்டால், வாங்கியவனிடம் அதேபோன்று திரும்பக் கொடுத்தால்தான் அந்தக் கடன்தீரும். வாங்கியதைத் திரும்பக் கொடுக்காமல், பூஜை, விரதங்கள் இருந்தால் கடன்தீருமா?
ஒருவன் தன் கடனைத் தீர்க்க ஏதாவதொரு உபாயம் செய்து, தனக்கு சரியான ஒரு தொழிலைச் செய்ய தீர்மானித்து, அந்தத் தொழில் செய்யத் தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி முயற்சிசெய்து உழைத்தால் பணம் கிடைக்கும், அந்த பணத்தால் கடனை நிவர்த்திசெய்து நிம்மதியாக வாழலாம். இங்கு தொழிலைத் தேர்வுசெய்வது அறிவு, புத்தி. தொழிலைச் செய்வது முயற்சி. தொழிலுக்கு உதவும் கருவிகள் சாதனம். அதனைக்கொண்டு பணம் சம்பாதித்து கடனைத் தீர்ப்பது சாதனையாகும். இதில் கடவுள் உதவி எப்படி கிடைக்கும் என்பதையும் கூறுகிறேன்.
ஒருவன் விறகுவெட்டி, அதனை விற்று ஜீவனம் செய்பவன். விறகைவெட்டி விற்றுப் பிழைக்கலாம் என்பது அவன் புத்தியில் உருவான உபாயம். தன் உடல் சக்தியால் உழைப்பது, தொழிலைச் செய்வது அவன் முயற்சி. இவையிரண்டும் மனிதன் செயல்.
அவன் விறகு வெட்டும் கோடரியும் வெட்டப் படும் மரமும் சாதனம். இதில் கோடரியிலும், மரத்தினுள்ளும் கடவுள் இருக்கிறார். சரியான யோசனையும் உழைப்பும் உள்ளவர் களுக்கு கடவுள் அருள் கிடைக்கும்.
எந்த வேலையும் செய்யாமல், "கடவுள் காப்பாற்றுவார்- படைத்தவன் பணம் தருவான்' என்று கடவுளை வணங்கிக்கொண்டு இருப்பவர்களைக் கடவுள் காப்பாற்றமாட்டார். ஆனால், கடவுள் பற்றிய கதைகளைக் கூறி, கடவுள் சம்பந்தமான பூஜைப் பொருட்களை விற்றும், ஹோமம், யாகங்களைத் தொழிலாகச் செய்துகொண்டும் இருப்பவர்களை கடவுள் காப்பாற்றுவார். ஏனென்றால், இவர்கள் கடவுளை மூலதனமாக வைத்து தொழிலைச் செய்து பிழைக்கிறார்கள். ஒருவன் செய்யும் தொழிலும், தொழில் செய்ய உதவும் கருவிகளிலும்தான் கடவுள் இருக்கிறார்.
தொழிலைச் செய்து சம்பாதிக்கும் பணத்தை தனது தொழில் விருத்திக்கும், தனது குடும்பத்தினர் நலனுக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். செய்யும் தொழில், தொழில் கருவிகள், தொழில் செய்யுமிடம் இவற்றில்தான் கடவுள் இருக்கிறார். தன்னைப்பெற்ற தாய்- தந்தை, தன்னை நம்பிவந்த மனைவி, தான் பெற்ற பிள்ளைகளின் வாழ்வு வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் செலவுசெய்து, அவர்களை மகிழ்வித்து வாழவைப்பவனுக்கு, முற்பிறவிகளில் உண்டான பித்ரு தோஷம், புத்திரசாபம், களத்திரசாபம் போன்ற அனைத்தும் நிவர்த்தி (நீக்கம்) ஆகும். செய்யும் தொழிலில் மகாவிஷ்ணுவும், அதில் சம்பாதித்து சேமிக்கும் பணத்தில் லட்சுமிதேவியும் வாசம் செய்கிறார்கள்.
கிருஷ்ணர், கலியுகத்தில் உண்மை- பொய் தெரிந்து, புத்தியினால், பொருளால் பாவ- சாபம் தீர்த்து எப்படி வாழவேண்டுமென்று வாழ்ந்து காட்டினார்.
மைத்ரேயனே, இனி மகாவிஷ்ணும் மற்ற தேவர்களும் ஒவ்வொரு அவதாரத்திலும் என்ன பாவங்களை யாருக்குச் செய்தார்கள் என்பதைக் கூறுகிறேன்.
இராமாவதாரத்தில், இராமர், தன்னைப் பெற்று வளர்த்த தாய்- தந்தைக்கு ஒரு மகன் செய்யவேண்டிய எந்த புத்திர கடமையையும் செய்யவில்லை. இராமர் சீதையைத் திருமணம் செய்துகொண்ட கொஞ்ச நாட்களிலேயே பெற்றவர்களைப் பிரிந்து வனவாசம் சென்றுவிட்டார். இராமர் தன் வாழ்க்கையின் இறுதிவரை பெற்றவர்களைப் பராமரிக்கவில்லை. இதனால் இராமருக்கு பித்ரு தோஷம் உண்டானது.
லட்சுமணனும் தன் பெற்றோரைப் பிரிந்து, அண்ணன் இராமருடன் காட்டிற்குச் சென்றுவிட்டான். இவனும் வயது முதிர்ந்த தாய்- தந்தைக்கு ஒரு மகன் செய்யவேண்டிய புத்திர கடமையைச் செய்யாததால், பித்ரு சாபத்திற்கு ஆளானான்.
இராமர், தான் விரும்பி மணந்த, தன்னை நம்பி வாழவந்த மனைவி சீதையின் கற்பின்மீது ஒரு குடிமகன் சுமத்திய பழிக்காக, அவளை கர்ப்பிணி என்றும் பாராமல் காட்டிற்கு அனுப்பிவிட்டான். கணவனைப் பிரிந்த சீதை வயிற்றில் குழந்தையுடன், கணவனின் பாசம், பராமரிப்பு, பாதுகாப்பு இல்லாமல், காட்டில் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அவரின் பாதுகாப்பில் வாழ்ந்து லவன், குசன் என்னும் ஆண் குழந்தைகளைப் பெற்றாள்.
(தொடரும்)
செல்: 99441 13267