ராசர முனிவர் கிருஷ்ணரின் அவதார நிகழ்வை மைத்ரேய முனிவருக்குக் கூறிவருகிறார்.

"மைத்ரேயரே, தேவர்களைப் போன்றே, விஷ்ணுவின் முந்தைய அவதாரங் களில் அவரை எதிர்த்து செயல்பட்டு அவரால் கொல்லப்பட்ட அசுர வம்சத்தினரும் கிருஷ்ணாவதாரத்தில் பூமியில் பிறந்தார்கள். கிருஷ்ணர் பிறப்பதற்குமுன்பே அவர்கள் பூமியில் பிறந்துவிட்டதால், அவர்களை தெய்வசக்தி கொண்டு அழிக்கமுடியாது என்பதை அறிந்துதான் கிருஷ்ணர் மனிதனாகப் பிறந்து மனித வாழ்வை வாழ்ந்தார். இனி அசுரர்கள் யாரெல்லாம் எங்கெங்கே பிறந்தனர் என்பதைக் கூறுகிறேன்.

dd

விஷ்ணுவின் முந்தைய அவதாரங்களில் அசுரர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கிய இரண்ய கசிபு என்பவனை பகவான் நரசிம்மாவதாரம் எடுத்து அழித்தார். அவன் மீண்டும் அளவற்ற வீரியமும் பராக்கிரமமும் கொண்டு மூவுலகையும் வசப்படுத்தும் சக்தியுடைய இராவணனாகப் பிறந்தான். இராமாவதாரத்தில் மகாவிஷ்ணு இராமனாகப் பிறந்து இராவணனைக் கொன்றார். இப்பிறவியில் அவனே பாண்டவர்களின் தாய் குந்திதேவியின் தங்கையான "சிரத சிரவது' என்பவளுக்கு சிசு பாலன் என்னும் பெயரில் மகனாகப் பிறந்தான்.

மதுராபுரி மன்னன் உக்ரசேனனுக்கு கம்சன் என்பவன் மகனாகப் பிறந்தான். இந்த கம்சன் தான் முற்பிறவியில் பராக்கிரமம் மிக்க அசுரர்களின் தலைவனாக இருந்து விஷ்ணுவால் கொல்லப்பட்ட காலநேமி என்பவன். கிருஷ்ணா வதாரத்தில் கிருஷ்ணரின் தாயான தேவகியின் அண்ணன்- கிருஷ்ணனின் தாய்மாமன் ஆவான்.

கம்சனுக்குத் துணையாக அரிஷ்டன், தேனுகன், கேசி, நரகன், பிரலம்பன், சுந்தன், பாணன், பூதகி போன்ற இன்னும் பல சக்திமிக்க அசுரர்கள் பூமியில் பிறந்தனர்.

முன்னொரு சமயம் பூமி நீரில் மூழ்கியபோது, மகாவிஷ்ணு வராக அவதாரமெடுத்து தன் கொம்புகளால் பூமாதேவியை கடலின்மேலே தூக்கி வந்தார். அப்போது விஷ்ணுவின் ஸ்பரிசத் தால் பூமாதேவி கர்ப்பமுற்று நரகாசுரனைப் பெற்றெடுத்தாள். நரகாசுரன் விஷ்ணுவின் மகன்.

ஜராசந்தன் என்பவன் கம்சனின் மாமனார் ஆவான். கிருஷ்ணாவதாரத்தில் அசுரர்களும் தேவர்களும் உறவினர்கள்தான்.''

"பராசரரே, ஒரு ஆன்மாவின் முற்பிறவி, இப்பிறவி, மறுபிறவி பற்றிய என் சந்தேகம் நிவர்த்தியானது. பூமியில் ஆன்மாவின் பிறவித் தொடர்ச்சி உண்மைதான் என்பதைப் புரிந்துகொண்டேன். மகாவிஷ்ணுவும் மற்ற தேவர்களும் முந்தைய அவதாரங்களில் என்ன செயல்களைச் செய்து சாபங்களுக்கு ஆளாவார்கள்? அந்த சாபங்களை என்ன விதமான யாகம், மந்திர ஜெபம், தானம், விரதமென பரிகாரங்களைச் செய்து நிவர்த்தி செய்து கொண்டார்கள் என்பதையும் கூறுங்கள்.''

"மைத்ரேயரே, நீ இரண்டு கேள்விகளைக் கேட்டாய். அதில் உனது இரண்டாவது கேள்விக்கு பதில் கூறுகிறேன்.

இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் பாவக்கடன், சாபக்கடன், பித்ருக்கடன், புத்திர கடன், களத்திர கடன், சகோதர கடன், பணக் கடன் என்று ஏதாவதொரு கடனைத் தீர்த்து முடிக்கவே இந்த பூமியில் பிறக்கிறார்கள். இந்த முற்பிறவிக் கடன்களைத் தீர்க்க கடவுளுக்கு பூஜை, யாகம், மந்திரஜெபம், விரதம்போன்ற பரிகாரங்களைச் செய்தால் கடவுள் அனைத்தையும் தீர்த்துவிடுவார் என்று நம்பிக்கை சார்ந்த செயல்களை மக்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்யச்சொல்லி பலர் பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய செயல்கள் நடைமுறையில் பயன் தருவதில்லை.

மைத்ரேயனே, ஒரு மன்னனைப் புகழ்ந்து பாடி மகிழ்வித்து புலவர்கள் பொன், பொருளைப் பரிசாகப் பெறுவார்கள். அதுபோல ஹோமம், யாகம், பூஜைகளின் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தும் கடவுளைப் புகழ்ந்து சொல்வது தான். இத்தகைய புகழ்ச்சிகளுக்கு கடவுள் மயங்கமாட்டார். அதனால்தான் பிரார்த்தனைகள் பலிப்பதில்லை.

ஒரு மனிதன் கடவுளின் அருள்பெற்று, வாழ்வில் குறைகள் தீர்ந்து விரும்பியதை அடையும் சக்தி எங்குள்ளது என்பதை கிருஷ்ணர் தன் நடைமுறை செயல்மூலம் வெளிப்படுத்தியுள்ளார். கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது ஒருமுறை மண்ணை அள்ளித் தின்றார். இதனைக்கண்ட யசோதை கண்ணனை மிரட்டி வாயைத் திறக்கச்சொல்லிப் பார்த்தாள்.

வாயில் மண் தெரியவில்லை. கண்ணனின் வாய்க்குள் வானம், பூமி, மும்மூர்த்திகள், தேவர்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், கடல், மலை, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், ஆயர்கள், யசோதை என அனைத்தையும் வாய்க்குள் பார்த்தாள். இந்த நிகழ்வின்மூலம் கடவுள் இல்லாத இடமே இல்லை. அவர் ஓரிடத்தில் இல்லை. அனைத்திலும் உள் கடந்து அதனுள் இருக்கிறார் என்ற உண்மையை கிருஷ்ணர் மக்களுக்கு அறியச் செய்தார்.

ஒவ்வொருவரும் தன்னுள் இருக்கும் கடவுளையும், தான் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களிலும் உள்ள கடவுள் சக்தியையும் அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் கடவுளைத் தேடித்தேடி எங்கெங்கோ மக்கள் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனும் கண்ணன்தான்.

அவரைப்போன்ற சக்தியுடையவர்கள்தான். ஒருவன் தனக்கு அருள்புரியும் கடவுள் தனக் குள்தான் இருக்கிறார் என்பதை அறிந்து வாழவேண்டும். அப்போதுதான் கடவுளின் கடாட்சத்தைப் பெறமுடியும். துன்பங்கள், தடைகள் நீங்கி வாழமுடியும். தன்னுள்ளே இருக்கும் இறைவனை அறிந்துகொள்ளாமல் பரிகார பூஜைகள் செய்துகொண்டு அலைபவருக்கு கடவுளின் கடைக்கண் பார்வை கிடைக்காது. ஒரு மனிதன் தன்னுள் இருக்கும் கடவுள் சக்தியை வசியப் படுத்தி வாழ்வில் உயர்ந்த நிலையை அடையும் வழியைக் கூறுகிறேன்; அறிந்துகொள்!

(தொடரும்)

செல்: 99441 13267