பராசர முனிவர் கிருஷ்ணரின் அவதார நிகழ்வை மைத்ரேய முனிவருக்குக் கூறி வருகிறார்.
"மைத்ரேயனே, இயற்கை ஒவ்வொரு லோகத்திற்கும் மாற்றமுடியாத சட்டதிட்ட விதியை நிர்ணயித்துள்ளது. இயற்கையை மாற்றியமைக்கும் திறமை வேறு எந்த சக்திக்கும் கிடையாது. இதற்கு ஆதாரமாக கிருஷ்ணர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத் தைக் கூறுகின்றேன்.
கோவர்த்தன மலை ஆராதனை
மழைக்காலம் முடிந்து சரத் காலம் தொடங்கியவுடன், மழை மேகங்களுக்கு அதிபதியான இந்திரனுக்கு வருடந்தோறும் செய்யும் இந்திர ஆராதனை பூஜை யைச் செய்ய நந்தகோபன் ஆயர்களுக்குக் கட்டளையிட்டான். இதனையறிந்த கிருஷ்ணர் தன் வளர்ப்புத் தந்தையான நந்தனிடம், "பூமியிலுள்ள நீர் சூரிய கிரணங்களால் ஆவியாகி வானில் மேகமாகத் திரண்டு, மறுபடியும் பூமியில் மழையாகப் பொழிகிறது. இது இயற்கையின் நிகழ்வு. மழை பெய்வதற்கு இந்திரனோ, வேறு தெய்வங்களோ காரணமில்லை. நாம் ஏன் இந்திரனுக்கு பூஜை செய்யவேண்டும்?
ஆயர் குலத்தினரான நாம் காட்டில் அலைந்து, திரிந்து மாடுகளை மேய்ந்து, அவை தரும் பாலைக்கொண்டு, ஜீவனம் செய்கிறோம். நம்மைக் காப்பாற்றி வாழ வைக்கும் சக்தி எதுவோ அதுவே நாம் பூஜைசெய்து வழிபடவேண்டிய தெய்வம். ஆயர்களான நமக்கு பசுவே பிழைப்பையும் வாழ்வையும் தருகிறது.
ஆயர் குல மக்களான நாம், பசுக்களுக் குப் புல் தரும் வனங்களையும், அந்தவனம் செழிப்படைய மழை தரும் மலைகளை யும், பசுக்களையும் தான் தெய்வவமாக வழிபடவேண்டும். பூமியில் செயல்பட சக்தியில்லாத இந்திரனையும், தெய்வங் களையும் என் வழிபடவேண்டும்?
அவர்களால் நமக்குக் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை. அதனால், நாம் இந்த கோவர்த்தன மலைக்கும், நமது பசுக்களுக்கும் சகலவிதமான பூஜைகளையும் செய்து பக்தியுடன் தெய்வமாக வழிபடுவோம். பூமியில் செய்யும் பூஜைக் குப் பலன் தரமுடியாத தேவர்களுக்கு வழிபாடு செய்யவேண்டாம் என்றார் கிருஷ்ணர்.
கண்ணன் கூறியதைக்கேட்ட நந்த கோபன், "குழந்தாய், நீ சொல்வது உண்மை தான். உன் விருப்பப்படியே இப்போது கோவர்த்தன கிரிக்கும், நமது பசுக்களுக்கும் பூஜைசெய்து வணங்குவோம்' என்றான்.
இந்திரனுக்குப் பூஜை செய்யாததால் கோபம்கொண்ட இந்திரன், "சம்வர்த்தகம்' என்ற மேகக் கூட்டத்தை அழைத்து, ஆயர்பாடியில் பெரு மழையாகப் பெய்து, ஆயர்களையும், பசுக்களையும் அழித்து விடும்படி கூறினான். அந்த மேகங்களும் ஆயர்பாடி மூழ்கி அழியும்படி மழையைப் பொழிந்தன.
இந்திரனின் செயலையறிந்த கிருஷ்ணர், தன்மக்களிடம், "நான் இந்த கோவர்த்தன மலையைப் பெயர்த்து, மேலே தூக்கிப் பிடிக்கிறேன். நீங்கள் அனைவரும் அதனடியில் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள்' என்று கூறி மலையைப் பெயர்த்து உயரே தூக்கி, தன் ஒரு கையால் குடைபோல் பிடித்துக் கொண்டார். பசுக்கள், கன்றுகள் ஆயர்கள் என அனைவரும் அதன்கீழ் நின்று கொண்டார்கள்.
கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தூக்கி யாதவர்களைக் காப்பாற்றியதை அறிந்த இந்திரன், அவரிடம் போரிடும் எண்ணம்கொண்டு பூமிக்கு வந்தான். கிருஷ்ணரைக் கண்டவுடன் அவர் யார் என்பதை அறிந்து அவரை வணங்கி, "பெருமாளே, அடியேனை மன்னிக்க வேண்டும். மேலும் ஒரு விண்ணப்பம்.
அதனைத் தாங்கள் அருள் செய்யவேண்டும்.
பகவானே, இராமாவதாரத்தில் எனது அம்சமாகப் பிறந்த வாலியைக் கொன்றீர்கள். இந்த அவதாரத்தில் என்னுடைய அம்சமாக எனக்கும் குந்தி தேவிக்கும் பிறந்தவன் அர்ச்சுனன். பூமி பாரம் தீர்க்கும் உங்கள் செயல்களில் அவனையும் உங்களுக்கு உதவியாக வைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றவேண்டும்.'
இந்திரன் கூறியதைக்கேட்ட கண்ணன், "நான் இந்த பூமியில் வாழும் வரையில் அவனைக் காப்பாற்றுவேன். நான் இருக்கும் வரை அவனை எவரும் போரில் ஜெயிக்க முடியாது. அர்ச்சுனனுக்காகவே அவன் சகோதரர்களையும் காப்பாற்றுவேன்' என்று இந்திரனுக்கு வாக்குதந்தார்.
இந்திரன் சென்றபிறகு, நந்தகோபன் கிருஷ்ணரிடம் "மகனே, கடவுள் சக்தி எது என்பதைப் பற்றிக்கூறு' என்றான். "தந்தையே, ஒருவன் எந்தத் தொழிலைச் செய்து பொருள் சம்பாதிக்கிறானோ, எந்த தொழில் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றானோ அந்த தொழில்தான் அவனுக்கு தெய்வம். செய்யும் தொழிலையும், தொழிலுக்கு உதவும் கருவிகளையும் பூசித்து வணங்கவேண்டும்.
ஒருவன் தான்செய்யும் தொழில், செயல்கள் மூலம்தான் கடவுளின் உதவியைப் பெறமுடியும். தெய்வத்திற்கும் நமக்கும் தொடர்பை ஏற்படுத்தித் தருவது தொழில்தான். எந்த ஒரு தொழிலையும் செய்யாமல், கடவுளை பூஜைசெய்து, மந்திர பாராயணங்கள் செய்து கொண்டிருப்பவனை கடவுள் காப்பாற்றமாட்டார்.
ஏர் உழும் காளைமாடும், கலப்பை யும், விவசாயக் கருவிகளும்தான் விவசாயிக்கு தெய்வம். கடலை நம்பி தொழில் செய்பவனுக்கு சமுத்திரம்தான் தெய்வம். அதுபோல் அவரவர் செய்யும் தொழிலே அவரவருக்கு தெய்வம். தெய்வம் தரும் பொருள், புகழ், உயர்வு என அனைத்தையும் தொழில்மூலம்தான் ஒருவன் அடையமுடியும்' என்றார்.
மைத்ரேயனே, கிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகளில் இந்த கோவர்த்தன கிரி ஆராதனை மிக முக்கியமானது; முதன்மையானதாகும். ஒரு மனிதன் இப்பிறவியில் உயர்வான வாழ்வை அடைய, கடவுள் எந்த வழியில் உதவி செய்வார் என்ற சூட்சும ரகசியத்தை கிருஷ்ணர்மூலம் நாம் அறிந்துகொள்ள முடிந்தது இந்த நிகழ்வால்தான். பூமியில் கடவுள் சக்தி செய்யும் தொழிலில் தான் உள்ளது. தொழில் சம்பாதித்த பொருளை தொழில் உயர்வுக்கும், விருந்திக்கும், தன் குடும்ப உயர்விற்கும் பயன்படுத்தலாமே தவிர வேறு எந்த செயலுக்கும் பயன்படுத்தக்கூடாது என்று கிருஷ்ணர் நந்தனுக்குக் கூறினார். உன் கேள்விக்கும் இதுதான் பதில். கிருஷ்ணர் கூறியதையெல்லாம் கேட்ட ஆயர்கள்,
அவரைப் புகழ்ந்துப் பேசினார்கள். உடனே கிருஷ்ணர், "நானும் உங்களில் ஒருவன்தான். என்னை உங்கள் உறவினனாக எண்ணுங்கள். நானும் மனிதன்தான்; கடவுள் அல்ல' என்றார்.''
(தொடரும்)
செல்: 99441 13267