இந்தத் தொடரைப் படித்துவிட்டு நிறைய வாசகர்கள், "கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தான் எழுதிவருகிறீர்களே தவிர, அவர் பாவ- சாபம் தீர்த்த பூஜை, ஹோமம், வழிபாடு போன்ற பரிகார முறைகள் எதனையும் கூறவில்லையே' என்று கேட்டனர்.
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தனது முற்பிறவி செயல்களையும், முன்னோர்களின் வாழ்க்கையில் நடந்த செயல்கள் பற்றியும் அறிந்துகொண்டால்தான் இப்பிறவி வாழ்க்கையில் அவன் அனுபவிக்கும் நன்மை- தீமைகளுக்கான காரணத்தை அறிந்துகொள்ளமுடியும், வம்ச வரலாற்றை அறிந்துகொள்ளாதவர்கள், தன்வாழ்வின் நிகழ்வுகளுக்கான காரணத்தை அறிந்து தடுத்துக்கொள்ளத் தெரியாமல் பணம் செலவுசெய்து, பரிகாரத்தைச் செய்து அலைந்து கொண்டிருப்பார்கள்.
கிருஷ்ணரின் முந்தைய அவதார செயல்களை அறிந்துகொண்டால்தான் கிருஷ்ணரின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு காரணகாரியம் தெரியும். எனவேதான் வரலாற்றிலுள்ள சில பாவ- சாப நிகழ்வுகளை சுருக்கமாக- முன்னோட்ட மாக எழுதியுள்ளேன்.
ஒருவருக்கு பாவ- சாபங்கள் எவ்வாறு உருவாகின்றது என்பதை அறிந்துகொண்டால், பரிகாரம் பற்றிய உண்மை- பொய் பற்றி தெரிந்துகொள்ளமுடியும். வேதமுறை கணித ஜோதிடத்தில், ஒரு மனிதனின் வாழ்வில் உண்டாகும் நன்மை- தீமை, உயர்வு- தாழ்வு, தடைகளுக்கு கிரகங்கள்தான் காரணமென்று கூறுகிறார்கள். கிரக தோஷங்களால் உண்டாகும் பாதிப்புகள் நீங்க பலவிதமான பரிகார பூஜைகளைக் கூறுகின்றனர். இந்த பரிகாரங்களைச் செய்ததால் பலன் யாருக்குக் கிடைத்தது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
முற்பிறவி பாவ- சாப தோஷங்கள் கிரகங்களால் உண்டாவதல்ல. கிரக வழிபாடு, பரிகார ஹோமம், சாந்தி பூஜை போன்ற செயல்களால் பாவ- சாப- தோஷங்களைத் தீர்த்துக்கொள்ளமுடியாது என்பதை மக்கள் தெரிந்துகொள்ளவே, பெருமாள் கோவில்களில் நவகிரகங்களை வைத்து வழிபாடு செய்வதில்லை. கிருஷ்ணரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள், தங்கள் சிரமம், தடைகளுக்குப் பரிகார பூஜைகளை செய்வதில்லை. கண்ணன் காட்டிய வழிகளைப் பின்பற்றி வாழ்ந்து தடைகளை விலக்கி, வாழ்வில் உயர்வடைகிறார் கள். ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் ஒரு பாவச் செயல், அடுத்த பிறவியில் பலவித நிலைகளில் பாதிப்பைத் தரும்.
அதேபோல் ஒரு பாவத்திற்கு செய்யும் பரிகார நிவர்த்தி பல பாவங்களை நிவர்த்திசெய்து போக்கிவிடும்.
உதாரணமாக, ஒருவன் சாப்பிடும் உணவு, அவன் சரீரத்திற்கு சக்தியைத் தந்து நலம்பெறச் செய்கிறது. ஒருவன் உணவுண்ணாமல் மது, சாராயம் போன்றவற்றைக் குடித்துக்கொண்டேயிருந்தால், அவன் உடல் சக்தியிழந்து நலிவடைந்து விடுகிறது. அவன் பொருள், சொத்துகளை அழித்து வாழ்வில் சிரமமடைகிறான்.
உணவை உண்டு உடலை நன்கு வைத்துக் கொண்டவன், நன்கு உழைத்து பணத்தைத் தேடி வைத்துக்கொண்டு சுகமாக வாழ்கிறான்.
இந்த இரண்டும் தனி மனிதனின் செயல்கள். உணவை உண்டு உடல் நலம், பணம், பொருளைப் பெறுவது அவனுக்கு புண்ணியத்தையும், மது அருந்தி சரீரத்தையும் கெடுத்துக்கொண்டு, சொத்துகளையும் அழிப்பது அவனுக்கு பாவப் பலனையும் தருகிறது. ஒருவன் தன்வாழ்வின் நடைமுறைச் செயல்களில் தனக்கு நல்லது எது? கெட்டது எது என்றறிந்து, கெட்டதை நீக்கி, நல்லதைக் கடைப்பிடித்து வாழ்வதே சரியான பரிகாரமாகும்.
ஒருவருக்கு பாவமும், புண்ணியமும், நன்மையும், தீமையும் அவரவர் செய்யும் செயல்களால்தான் உண்டாகின்றதே தவிர, கிரகங்களால் அல்ல. ஒருவர் தன்வாழ்வில் தொழில், செல்வம், திருமணம், புத்திரர், பதவி, புகழ் என அனைத்தையும் அடைவதும், இருப்பதையெல்லாம் அழித்து சிரமத்தை அடைவதும் அவரவர் செயல்களால்தான். பாவமும், புண்ணியமும் உங்களிடம்தான் உள்ளது. அதற்கு சரியான பரிகாரமும் உங்களிடம்தான் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
வாசக அன்பர்கள் சிலர், தங்கள் சிரமங் களைக் கூறி, நான் எந்தக் கடவுளை, எந்த கோவிலில் சென்று வணங்கவேண்டுமென்று கேட்டுள்ளீர்கள். கிருஷ்ணரின் சக்தி ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் உள்ளது. கண்ணன் அனைத்து உயிரினங் களின் உள்ளே இருக்கின்றார். இதனை கிருஷ்ணர் ஒரு செயல்மூலம் நம்மை அறியச்செய்துள்ளார்.
கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் போது, மண்ணை அள்ளித் தின்றார். இதனைக்கண்ட தாய் யசோதை, அவரின் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தாள். அவரின் வாயிலுள்ளே, அனைத்து தெய்வங்களும், தேவர்களும், கிரகங்களும், எல்லா லோகங்களும், அவற்றில் வசிக்கும் உயிரினங்கள், கடல், மலை, நதி, வானம் மற்றும் கண்ணனும், யசோதையும் காட்சியாக அவள் கண்ணுக்குத் தெரிந் தார்கள் என புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடவுள் தூணிலும், துரும்பிலும், அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் இருக்கிறார். அதனால் கடவுளைத்தேடி அலையவேண்டாம். நம்முள் இருக்கும் கடவுள் சக்தி துணை கொண்டு, பாவ- சாபப் பதிவுகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே கிருஷ்ண தத்துவமாகும்.
(தொடரும்)
செல்: 99441 13267