கர்மவினைப்படி ஒரு மனிதன் வாழ்வில் அனுபவிக்கவேண்டிய அனைத்து இன்ப- துன்பங்களை வழங்குபவர் சனிபகவான்.
அதாவது பூர்வஜென்ம கணக் குப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயம் செய்பவர் சனிபகவான். அதனால்தான் நியாயத் தராசை ராசிச் சின்னமாகக் கொண்ட துலா ராசியில் உச்சமடைகிறார். சனி சுப வலுப்பெற்றால் மட்டுமே பிறப்புமுதல் இறப்பு வரை வசதியான வாழ்க்கை, நிறைந்த தொழில், நீண்ட ஆயுள் ஆகியவற்றை ஒரு மனிதன் பெறமுடியும்.
சனி ஒளியற்ற, இருளைச் சுட்டிக் காட்டக்கூடிய கிரகம். வாழ்வில் நடக்கும் மங்கலமில்லாத விஷயங்களை சுட்டிக் காட்டும் கிரகம். சனி. தூய்மையின்மை, அழுக்கு, தடை, தாமதம், சோம்பல், ஊனம் போன்றவற்றிற்குக் காரக கிரகமென்பதால், சுய ஜாதகத்தில் சனி பலம் குறைந்தால் வறுமை, கடன், நிலையில்லாத தொழில், கஷ்ட ஜீவனம், தடை, தாமதம் போன்றவை நிறைந்திருக்கும்.
இனி பன்னிரன்டு லக்னத்திற்கும் சனி தோஷம் போக்கும் பரிகாரங்களைக் காணலாம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு சனிபகவான் 10, 11-ஆமதிபதி. தொழில் ஸ்தானாதி பதி மற்றும் லாபாதிபதி. இவரே பாதகாதிபதி என்பதால் ஆட்சி, உச்சம் பெறுவதை விட சுபகிரக சம்பந்தம் பெறுவது, திரிகோணாதிபதி சாரம் பெறுவது என சூட்சும வலுப்பெற்றால் சிறப்பு. சனி சுப வலுப்பெற்றால் தொழில், வியாபாரம் சிறப் பாக இருக்கும். இவர்களது திறமைகள் வெளியுலகத்திற்குத் தெரியும்படியாக புகழ், அந்தஸ்துடன் இருப்பார் கள். ஒன்றுக்கு மேற்பட்ட லாபகரமான தொழில் புரிவார்கள். தொழிலதிபர் களுக்கு அரசின் உதவி கிடைக்கும். நிலை யான, நிரந்தரமான லாபம் நிறைந் திருக்கும். அதிகாரப் பதவிகள் தேடிவரும். அரசியல் ஆதாயமுண்டு. சனி வலுக் குறைந் தால், அசுப கிரக சம்பந்தமிருந்தால் நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடையிருக்கும். சிலருக்கு படித்த படிப்பிற்குத் தகுந்த தொழில், வேலை கிடைக்காது. பரம்பரையாக அடிமையாக கஷ்டமான வேலையில் சொற்பமான பணம் சம்பாதிப்பார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை சனி ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு சனி 9, 10-ஆமதிபதி. பாக்கியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி மற்றும் பாதகாதிபதி. சுய ஜாதகத்தில் சனி சுப வலுப்பெற்றால் தயாள குணம் கொண்ட வர்கள். முன்னோர்கள் வம்சாவளியாக சுயதொழில் செய்தவர்களாக இருப்பார்கள். பல புதிய தொழில் வாய்ப்புகள் தேடிவரும்.இது தர்மகர்மாதிபதி யோகமாகும். தந்தைவழி குலத்தொழிலைத் தொடர்ந்து செய்பவர்களாக இருப்பார்கள். பூர்வீக சொத்து, தொழில்மூலம் வருமானமுண்டு. தொழிலில் நேர்மை, நாணயமிருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்திடம் பாராட்டும் புகழும் பெறுவார்கள். அரசாங்கத்தில் உயர் பதவியுண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவார்கள்.செய்யும் தொழிலே தெய்வமென்று எண்ணக்கூடியவர்கள். சனி அசுப வலிமை பெற்றால் தொழில்மூலம் தன் சந்ததிகளுக்கு பாவம் சேர்த்து வைப்பார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை சனி ஓரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழபடவும்.
மிதுனம்
மிதுன லக்னத்திருக்கு சனி அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதி. இவர்களுக்கு சனி தசை வராதவரை மிதுன லக்னத்தினர் பாக்கியவான்கள். சனி தசைக் காலங்களில் சனிபகவான் எந்த நிலையில் இருந்தாலும் அஷ்ட மாதிபதி வேலையை நடத்தத் தவறு வதில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகள் சனி மகரத்தில் நின்றபோது அஷ்டமச் சனியினால் அல்லல்பட்ட மிதுன ராசியினரை விட மிதுன லக்னத் தினர்தான் அதிகம். அதுவும் சனி தசை நடந்த மிதுன லக்னத்தினர் சாமானியர்முதல் சாதனையாளர்கள் வரை பட்ட அவ மானம் சொல்லி மாளாது. இதை நான் தனிக் கட்டுரையாக "மிதுன லக்னமும் அஷ்டமச் சனியும்' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கி யிருந்தது "பால ஜோதிட' வாசகர் களுக்கு நினை விருக்குமென்று நினைக்கிறேன்.
பரிகாரம்: சனி தசைக் காலங்களில் அசைவ உணவைத் தவிர்த்து திருவண்ணா மலைக்கு கிரிவலம் சென்று வரவேண்டும்.
கடகம்
கடக லகனத்திற்கு சனி களத்திர ஸ்தானாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சனி மகரம், கும்பத்திலிருக்கும் காலங்களில் பிறந்த கடக லக்னத்தினர் பலர் திருமண வாழ்க்கையில் விவாகரத்தை சந்தித்தவர்கள். அல்லது 30 வயதிற்குமேல் திருமணம் நடந்தவர்கள். கிடைத்த திருமண வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போராடு பவர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகள் மகரத்தில் சனி இருந்த காலத்தில் 30, 35-க்கு மேலுள்ள பல கடக லக்னத்தினருக்கு திருமணம் நடந்தது. சனி கும்பத்திற்குள் அதிசாரத்தில் நுழைந்ததுமுதல் தற்போது மீண்டும் பெயர்ச்சியாகி கும்பத்தில் ஆட்சி பலம் பெற்றதுவரை விவாகரத்து வழக்கிற் காக அதிகம் வக்கீலையும், ஜோதிடரையும் சந்திப்பவர்கள் கடக லக்னத்தினர். சனி பகவான் கர்மக் கணக்கைத் தக்க சமயத்தில் நேர்செய்துவிடுவார் என்பதற்கு இதைவிட வேறெந்த சாட்சியும் தேவையில்லை.
பரிகாரம்: சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு சனி 6, 7-ஆமதிபதி. ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதி. சற்றேறக் குறைய கடக லக்னத்தினருக்கு சொன்ன அனைத்துப் பலன்களும் சிம்ம லக்னத்திற்கும் பொருந்தும். சனி தசைக் காலங்களில் திருமண வாழ்க்கையில் பிரச்சினையை சந்திக்காதவர்கள் கடனால், நோயால், ஜாமின் பிரச்சினையால் நிம்மதி இழக்கிறார்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை சூரிய ஓரையில் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு சனிபகவான் 5, 6-ஆமதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி. சனி சுப வலுப்பெற்றால் பூர்வபுண்ணியம் மிகுந்தவர்கள். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். தாத்தாவின் தொழிலைச் செய்து பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள். ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். குலதெய்வமே குழந்தையாகப் பிறக்கும். பிள்ளைகள் குல கௌரவத்தைக் காப்பாற்று வார்கள். அறிவாளியாக, புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். குலதெய்வ அருளுண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகிகள் அல்லது கௌரவப் பதவியில் இருப்பார்கள். அரசாங்கப் பதவி, அரசு உத்தியோகமுண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்டவசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சனி பலம் குறைந்தால் அதிர்ஷ்டம் குறைவுபடும். புத்திக்கூர்மை குறைவுபடும். புத்திர தோஷம் உண்டாகும். சிலருக்கு வம்சம் தழைக்காது. சிலருக்கு வாரிசுகளால் குடும்ப கௌரவம் கெடும். புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும். குலதெய்வ அருள் கிடைக்காது.
பரிகாரம்; பௌர்ணமி நாட்களில் குலதெய்வம், சிவன் வழிபாடு நடத்துவது நல்லது.
துலாம்
துலா லக்னத்திற்கு சனி 4, 5-ஆமதிபதி. சுக ஸ்தானாதிபதி மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி. சனி சுப வலுப்பெற்றால் முன்னோர்களால், குலதெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். பரம்பரை பூர்வீகச் சொத்து நிச்சயமுண்டு. அதிர்ஷ்டம், குன்றாத செல்வம், புகழ், கீர்த்தியுண்டு. குலப் பெருமை, கௌரவமுண்டு. புத்திரர்களால் நிம்மதி, சந்தோஷம் அடைவார்கள். பிள்ளைகள் பிறந்தபின்பு வளர்ச்சி மேலும் அதிகரிக்கும். சொத்துகள் குவிந்துகொண்டே இருக்கும். சொத்துகள்மூலம் நிரந்தர வருமானமுண்டு. பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், வாழ்நாள் முழுவதும் பூர்வீகச் சொத்தில் வசிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்களுக்கு இந்த அமைப்பிருக்கும். இவர்களின் செயல்பாடுகள் மிகுந்த நிதானத் துடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்கும். சனி அசுப வலுப்பெற்றால் பூர்வீகம், குலதெய்வம் தெரியாது. பெற்றவர்களின் நிம்மதியைக் குலைக்கும் குழந்தைகளே பிறக்கும்.
பரிகாரம்: குலதெய்வக் கோவில் அல்லது சிவன் கோவிலில் ஆல மர, அரச மரங்களை வளர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்திற்கு சனிபகவான் 3, 4-ஆமதிபதி. சகாய ஸ்தானாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதி. சனி சுப வலுப்பெற்றால் தைரியம், தன்னம்பிக்கை, திடகாத்திரம், ஆரோக்கியம், இன்பம், மகிழ்ச்சி உடையவர். தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சியுண்டு. இன்பம், செல்வம் அறிவு நிரம்பப் பெற்றவர். தாய்வழி ஆதரவுண்டு. தன்னைச் சார்ந்தவர்களும் உயர உதவுபவர். வீடு, வாகன வசதியுண்டு. உற்றார்- உறவினர் களால் போற்றப்படுவார்கள். ஆரம்பக்கல்வி, பள்ளிப் படிப்பில் முதன்மையான மாணவராகத் திகழ்வார்கள். சனி அசுப வலுப்பெற்றால் சில கெட்ட பழக்கங்கள் அல்லது உடல்நிலையைப் பாதுகாக்க நேரமின்மை போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கும். ஆரோக்கியக் குறைபாடுகள் மிகுதியாக இருக்கும். குடும்ப உறவுகளின் ஆதரவின்மை, பங்கு துரோகம் உண்டு. தாயன்பு கிடைக்காது. கல்வி தடைப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமை செவ்வாய் ஓரையில் ஆறு நல்லெண்ணெய் தீபமேற்றி முருகப் பெருமானை வழிபடவும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு சனிபகவான் 2, 3-ஆமதிபதி. தனாதிபதி, முயற்சி ஸ்தானாதி பதி. சனி சுப வலுப்பெற்றால் சுயமாக சிந்தித்து செயல்படுவார்கள். உடன்பிறந்த சகோதர- சகோதரிகளுடன் இணைந்து கூட்டுக் குடும்பமாக வசிப்பார்கள். அல்லது இவர்களுடைய பொருளாதாரம் உடன்பிறந்த வர்களுக்கே பயன்படும். அல்லது உடன்பிறந்த வர்களுக்காகவே வாழ்வார்கள். சகோதர ஆதாயமுண்டு. தன் தனித்திறமையால் தகவல் தொடர்பு சாதனங்கள்மூலம் அதிகம் சம்பாதித்து பிரபலமடைவார்கள். சனி அசுப வலுப்பெற்றால் வீட்டில் புலியாகவும் வெளியில் எலியாகவும் இருப்பார்கள். பிறரை நம்பாதவர்கள். ஞாபகசக்தி குறைவால் திறமையை வெளிப்படுத்த முடியாதவர்கள். சிலருக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் தங்காது.
பரிகாரம்: சனிக்கிழமை பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கவேண்டும்.
மகரம்
மகர லக்னத்திற்கு சனி ராசியாதிபதி மற்றும் தனாதிபதி. சுய ஜாதகத்தில் சனி சுப வலுப்பெற்றால் ஜாதகர் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். இவர் பிறக்கும்போது குடும்பம் சாதாரண நிலையில் இருந்தாலும், இவர் பிறந்தபிறகு வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜாதகரிடம் பொதுநல சிந்தனை மிகுதியாக இருக்கும். இடம், பொருள், ஏவல் பார்த்து வாக்குப் பிரயோகம் செய்வார். அதிகாரமான, தெளிவான பேச்சால் அனைவரையும் கவர்பவர். தனத்தைப் பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தைக் காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். எப்பொழுதும் தன் சுய பெருமைகளைப் பற்றி பிறரிடம் பேசிக்கொண்டே இருப்பார். இவர்கள் பூர்வீகத்தில் வருமானமீட்டி சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சனி அசுப வலிமை பெற்றால் கடன், வறுமை, கஷ்ட ஜீவனம், பூர்வகத்தில் வாழமுடியாத நிலை, குடும்ப உறவுகளிடம் மதிப்பு, மரியாதை இன்மை, பிறரை அண்டிப் பிழைத்தல் போன்ற நிலை நீடிக்கும். கண் தொடர்பான பிரச்சினை இருக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை குளத்து மீன்களுக்குப் பொரியிட வேண்டும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு சனிபகவான் ராசியாதிபதி மற்றும் விரயாதிபதி. ராசியாதிபதி சனியே விரயாதிபதியாகவும் இருப்பதால், தனக்கு நடக்கும் நல்லது- கெட்டது இரண்டிற்கும் ஜாதகரே காரணமாக இருப்பார். அதனால் சனி ஆட்சி, உச்சம் பெறக்கூடாது. சூட்சும வலுப்பெறவேண்டும். சனி சூட்சம வலுப்பெற்றவர்கள் வெளியூர், வெளிநாட்டில் வசித்தால் விரயமிருக்காது. பூர்வீகத்தில் வசித்தால் நிலையான வருமானம் இருக்காது. பிறருக்கு அடிமையாக தன் உழைப்பை விரயம் செய்து கஷ்ட ஜீவனம் நடத்தவேண்டும்.
பரிகாரம்: சனிக்கிழமை பித்ருக்களை வழிபடவேண்டும்.
மீனம்
மீன லக்னத்திற்கு சனிபகவான் லாபாதிபதி, விரயாதிபதி. சுய ஜாதகத்தில் சனி வலுப்பெற்றால் பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். ஜாதகர் செல்வாக்கு மிகுந்தவர். எதிலும் வெற்றி நிச்சயம். தன் சுய சம்பாத்தியத்தில் வீடு, வாகனம், சொத்து சுகம் போன்ற வசதிகளை அடைவார்கள். ஜாதகருக்கு மூத்த சகோதரத்தால், சித்தப்பாவால் ஆதாயமுண்டு. பிறவியில் ஏழையாக இருந்தாலும் இரண்டாம் திருமணத்திற்குப்பிறகு அசுர வளர்ச்சியுண்டு. சனி அசுப வலுப் பெற்றால் வெளிநாடு, வெளி மாநில வாழ்க்கை சிறப்பு. மூத்த சகோதரம், சித்தப்பாவுக்கு, இளைய மனைவிக்கு அதிக செலவு, விரயம் செய்ய நேரும். கடன் தொல்லையுண்டு. எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டம் இருக்கும். தொழிலுக்காக கடன்பட நேரும் அல்லது தொழில் கடனை அடைக்க முடியாது. சிலர் கடனுக்கு பயந்து தலைமறைவாக வாழநேரும்.
பரிகாரம்: சனிக்கிழமை சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவும். சனி முழுமையான இருள் கிரகமென்பதால் குருவைத் தவிர வேறு எந்த கிரகத்தாலும் சனியை சுபத்துவப்படுத்த முடியாது.
செல்: 98652 20406