பூராடம்
பூராடம் 20-ஆவது நட்சத்திரம். காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு ஒன்பதாம் வீடான தனுசு ராசியில்
அமைந்துள்ளது. இந்த ராசியின் அதிபதி குருபகவான். பூராட நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இதன் வடிவம் கட்டில் கால் அல்லது தண்டம் எனக் கூறப்படுகிறது. இதன் வசிப்பிடம் வீட்டின் கூரையாகும். இதன் அதிதேவதை வருணன். பூராடம் என்னும் சமஸ்கிருத சொல்லின் பொருள் முந்தைய வெற்றி என்பதாகும். பூராடம் என்பதை பூர்வ, ஆஷாட என்று பிரிக்கலாம். பூர்வ என்றால் முந்தைய என்றும் பொருள். ஆஷாட என்றால் வெற்றி. இதன் தமிழ்ப் பெயர் முற்குலம்.
பூராடம் சுக்கிரனின் நட்சத்திரம் என்பதால் வீடு, வாகனம் வாங்க ஆடை, ஆபரணங்கள், முத்து, பவளம் வாங்க உகந்த நாள். இந்த நட்சத்திரநாளில் நீண்டதூரப் பயணங்கள், உல்லாசப் பயணம், யாத்திரைகள் செல்லலாம். கல்விக்குக் காரகன் புதன் என்றால், கல்வியில் நிபுணத்துவத்தைத் தருவது சுக்கிரன். உயர் கல்வியை, ஆராய்ச்சித் திறமையைக் குறிக்கும் தனுசுவின் வீட்டில் அமைந்த நட்சத்திரம் என்பதால் உயர்கல்வி சம்பந்த மான முயற்சியில் ஈடுபடுவதற்கு பூராடம் உகந்த நட்சத்திரமாகும்.
பூராடம் போராடும் என்ற பழ மொழிக்கு ஏற்ப போராடி வாழ்க்கையில் நினைத்ததை அடைவார்கள். அதிகம் அலட்டிக் கொள்ளாத, உடலை வருத்திக்கொள்ளாத வேலையில் இருப்பார்கள். அதிக அலைச்சல் இல்லாத, உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்கும் திறமைஇவர்களுக்கு இருக்கும்.ஆசிரியர், கல்வி ஆலோசகர், வங்கிப் பணி, இன்சூரன்ஸ் ஏஜென்ட், நூலகர், கணக்காளர், காசாளர், வரி ஆலோசகர், பட்டயக் கணக்காளர், நிதிநிறுவனம், வட்டித்தொழில், அடகுக் கடை, வாகன விற்பனை,ஆடம்பரப் பொருள் விற்பனை, ஆலய பிரசாதக் கடை, புத்தக வெளியீட்டாளர், டிராவல் ஏஜென்சி, ஆன்மிக சுற்றுலா தொழில், அரசியல் தொடர்பான காரியங்கள், பினாமியாக இருத்தல், நில அளவையாளர், நில அளவீட்டுப் பொருள் விற்பனை, கல்வி நிலையங்கள் நடத்துதல், மருத்துவமனை நிர்வாகம், ஷேர் மார்க்கெட் தொடர்பான தொழில், ரியல் எஸ்டேட், பழமையான பொருள் சேகரிப்பு மற்றும் விற்பனை, கட்டுரைகள் எழுதுவது, பத்திரிகைத் துறை, பணமாற்று தொழில், புதுவித ஆடை வடிவமைப்பாளர், ரெடிமேட்ஷோரூம், மின்சாதன ஆடம்பரப் பொருட்கள் விற்பனை போன்ற தொழில் அமையும்.
இந்த பூராட நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு நுகத்தடி போன்றும், மாட்டின் கொம்பு போன்றும் இருக்கும், தேவலோக கோமாதா பூராட நட்சத்திரம். இந்த கோமாதாவின் கொம்பில் தேவர்கள் இருப்பதாக ஐதீகம். பூராடம் உடலில் தொடைப்பகுதியைக் குறிக்கும். தொடைப் பகுதி செல்வ வளத்தைக் குறிக்கும். தொடை பருத்திருப்பவர்கள் அசையா சொத்துகளை வாங்கிக் குவிப்பவர்களாக இருப்பார்கள். எளிமையான வீடாக இருந்தாலும் ஆடம்பரமான வீடாக வைத்திருப்பார்கள்.
பொதுவாக ஜோதிடத்தில் குருபகவான் தனகாரகன். நாடி நூல்களில் சுக்கிரன் தனகாரகன். குருவினுடைய வீட்டில்அமர்ந்த சுக்கினுடைய நட்சத்திரம் பூராடம் என்பதால் பொருளாதார வளர்ச்சியுண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் தனலட்சுமியை வழிபட்டுவந்தால் பண வசதி பெருகும். இந்த நட்சத்திரநாளில் சென்னிமலைக்குச் சென்று முருகனை வழிபட்டால் கடன் தொல்லைகள் நீங்கும்.
உத்திராடம்
27 நட்சத்திரங்களில் 21-ஆவது நட்சத்திரம் சூரியனின் உத்திராட நட்சத்திரம். இந்த சமஸ்கிருத சொல்லுக்குப் பொருள் பிந்தைய வெற்றி. இதன் தமிழ்ப் பெயர் கடைகுலம் என்பதாகும். இதன் உருவம் கட்டில்கால், விரிந்த நிலையிலுள்ள வில், யானைத் தந்தம். உத்திராட நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், 2, 3, 4-ஆம் பகுதி மகர ராசியிலும் அமைந்துள்ளது. காலபுருஷ லக்னம் மேஷம். தனுசு ஒன்பதாம் வீடாகும். மகரம் பத்தாம் வீடாகும். தனுசு ராசியாதிபதி குரு மகர ராசியின் அதிபதி சனி. காலபுருஷ தத்துவப்படி தர்மகர்மாதிபதி யோகம் என்பது குரு, சனி சேர்க்கையாகும்.
ஒருவருடையஜாதகத்தில் குரு, சனி சேர்க்கை இருந்தால் நல்ல உத்தியோகம் கிடைக்கும். எந்தப் பிரச்சினையும் இல்லாத வாழ்க்கைஅமையும்.இந்த நட்சத்திரம் வரும்நாளில் விரதமிருந்து ஐயப்பனை, சங்கரநாராயணனை வழிபட, நல்ல உத்தியோகம், தொழில் அமையும். குருவின் வீட்டையும் சனியின் வீட்டையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக அமைந்த நட்சத்திரம். இதன் அதிபதி சூரியன் என்பதால் அரசாங்கப் பதவி ஏற்க, அரசு உதவிகளை நாட, முடிசூட்ட, பட்டாபிஷேகம் செய்ய, மதச்சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய, ஆலயத் திருப்பணிகளைச் செய்ய, வீடுகளில் சங்கு ஸ்தாபனம், வாஸ்து சாந்தி, நவகிரக சாந்தி, பித்ரு சாந்திகள் செய்ய உகந்தது.
கர்ப்பதானம், நிகேஷம் நடத்த, வீட்டிற்குத் தேவையான மெத்தை, சோபா போன்ற ஆடம்பரப் பொருள்கள் வாங்கலாம். உத்திராட நட்சத்திரத்தின் வசிப்பிடம் வண்ணான் துறை. இது நீர் நிலைகளைக் குறிக்கும். எனவே கிணறு வெட்ட உகந்த நாள். பல பிரபலங்கள் உத்திராடத்தில் பிறந்துள்ளனர். அவர்கள் இந்த நட்சத்திரத்துடன் தொடர்புடைய உறுதியான மற்றும் லட்சிய குணங்களை வெளிப்படுத்தி,அந்தந்த துறைகளில் பெரும் வெற்றியையும் அங்கீகாரத்தையும் அடைந்துள்ளனர். இதில் பிறந்தவர்கள் பொருளாதார நிபுணர், வனத்துறை, நூலகர், விளையாட்டுத் துறை, பாதுகாப்புப் பணி, உடற்பயிற்சி, நீதிபதி, இராணுவத்துறை, கல்வித்துறை, ஊடகத்துறை, அரசு ஒப்பந்தம், கட்டுமானம்,நிர்வாகம், சட்டமன்ற உறுப்பினர், மருத்துவர் போன்றவற்றில் மிளிர்கின்றனர்.
சரியான தொழிலோ அல்லது உத்தியோகமோ அமையாதவர்கள் கார்த்திகையில் ஐயப்பனுக்கு மாலை போட்டு, அம்மாதம் வரும் உத்திராட நட்சத்திரத்தன்று சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வழிபட்டால் நிச்சயமாக நல்ல உத்தியோகம் கிடைக்கும். சபரிமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த நட்சத்திரத்தன்று சங்கரன்கோவில் சங்கரநாராயணரை வழிபடலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்ஜென்ம நட்சத்திரநாளில் அல்லது பவுர்ணமி திதியில் சித்தர்களை ஜீவசமாதியில் சென்று வழிபடலாம்.
திருவோணம்
திருவோண நட்சத்திரம் மகர ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி சந்திரன். மகர ராசியின் அதிபதி சனிபகவான். இந்த நட்சத்தித்திற்கு சமஸ்கிருதத்தில் ஸ்ரவண நட்சத்திரம் என்று பெயர்.அதாவது கவனித்தல் அல்லது கேட்டல் என்று பொருள். வானில் பார்க்கும்போது மூன்று பாதச் சுவடுகளைப்போலவும்அல்லது முழம் அளக்கும் கோல் போலவும் காட்சியளிக்கும். இது பெருமாள்அவதரித்த நட்சத்திரம் என்பதால் திரு என்ற அடைமொழி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் ஆலயங்கள் ஆகும். ஆயுதம் பயிலவும், ஆயுதப் பிரயோகம் செய்யவும், ஆலய கும்பாபிஷேகம் செய்வதற்கும், ஆலய திருப்பணிகள், மதம் சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடவும் உகந்த நட்சத்திரமாகும். இதன் அதிபதி சந்திரன் நீர் கிரகம் என்பதால் நீர்நிலைகள் வெட்ட, குளம் வெட்ட, சமுத்திர யாத்திரை செய்ய,சிறப்பு. வேத சாஸ்திரங்கள் கற்க உகந்தது. புதிய விரதங்களை செய்ய தொடங்கலாம்.
யாகம், ஹோமம், சாந்திப் பரிகாரங்கள், ஹோம சாந்தி செய்ய, மந்திரங்களை உச்சாடனம் செய்யத் துவங்கலாம். கீர்த்த யாத்திரை செய்தல், புண்ணிய நதிகளில் நீராடல் போன்றவற்றுக்கு உகந்ததாகும். வேதம் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் திருவோண நட்சத்திரம் வரும்நாளில் திருவனந்தபுரம் சென்று அங்குள்ள
அனந்தபத்மநாதனை வழிபட, சாஸ்திரப் புலமை, பாண்டித்தியம் ஏற்படும். சுயதொழில், வியாபாரம் செய்பவர்கள் திருவோண நட்சத்திரத்தில் மகாவிஷ்ணுவை வழிபட, தொழில் விருத்தி, வியாபார விருத்தி உண்டாகும்.
இதில் பிறந்த பலர் உணவுத்துறை, கப்பல் துறை, வாகன ஓட்டுநர், ஏற்றுமதி- இறக்குமதி, நிர்வாகி, மேலாளர், ஐடி துறை, சங்கம், ஆலோசகர், பதிவுத் துறை, பேராசிரியர், மனநல மருத்துவர், கல்வெட்டு, ஆராய்ச்சி, இசை, ஓவியம், நாட்டியம், நடனம், செல்போன், கதை எழுதுபவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மொழி ஆராய்ச்சியாளர்கள், மீன் வளர்ப்பு, மீன் வியாபாரம், பால் வியாபாரம் போன்றவற்றில் சிறந்து விளங்குகிறார்கள்.
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் சென்று அரங்கநாதரையும், மகாலட்சுமியையும் குரு, சந்திர, சுக்கிர ஹோரைகளில் அல்லது திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் வழிபட, வளமான எதிர்காலம் உண்டாகும்.
தொடரும்....
பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
செல்: 98652 20406