சென்ற வாரம் தன தாரை, சம்பத்து தாரையை வளப்படுத்தும் பரிகாரங்களைப் பார்த்தோம். இந்த வாரம் மூன்றாவது தாரையான விபத்து தாரை பற்றிய சில தகவல்களையும் பரிகாரங்களையும் பார்க்கலாம். ஒரு குழந்தை ஜனித்தவுடன் குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடந்தால், குழந்தை பிறந்த நேரமே அதற்குக் காரணம் என்று பெற்றோர்களும், உற்றார்- உறவினர்களும் பெருமை அடைவார்கள். அதேபோல் ஏதாவது விபரீத விளைவு ஏற்பட்டால் குழந்தை பிறந்த நேரத்தால் வந்த விளைவு என்று இன்றும் பேசுவதை நாம் கேள்விப்படுகிறோம். "கடந்து போ அல்லது கண்டுகொள்ளாமல் போ; அதுதான் வாழ்க்கை' என்பதை உணராமல் குழந்தையின் பிறப்பால் ஏற்பட்ட பாதகம் என்கிறார்கள். அதேநேரத்தில் இது உண்மையல்ல என்று நான் வாதிடவும் விரும்பவில்லை. நல்லது நடந்தால் பிறருக்குத் தெரிந்தால் திருஷ்டி பட்டுவிடும் என்று மறைக்கும் சமூகம் ஏன் தீமையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பதே எனது கேள்வி.

ஒரு குழந்தை சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம். உத்திரட்டாதியில் பிறந்தால் பிறக்கும்போது சனி தசை நடக்கும். குழந்தை பிறந்த நேரத்தில் சனி தசை புதன் புக்தி நடந்தால் ஜென்ம தாரையில் சம்பத்து தாரையில் புக்தி என்று பொருள்.பெற்றோர்கள் மிகச்சாதாரண நிலையில் இருந்தாலும் பொருளாதார முன்னேற்றம் அதிகமாக இருக்கும். வீடு, வாகனம் என வாழ்வில் செட்டிலாகக் கூடிய விதத்தில் தொழில் சிறப்பாக இருக்கும். குழந்தை சனி தசை கேது புக்தியில் பிறந்தால் ஜென்ம நட்சத்திரத்தில் விபத்து தாரையின் புக்தி என்று பொருள். குடும்பத்தில் விரும்பத்தகாத சில இடப்பெயர்ச்சி, தொழில் முடக்கம், பூர்வீகத்தால் மன உளைச்சல் போன்ற சம்பவங்கள் நடக்கும். இந்த காலகட்டத்தில் பெற்றோர்களின் ஜாதகத்திலும் 3, 5, 7-ஆம் நட்சத்திரத்தின் தசை நடந்தால் விளைவு இரட்டிப்பு அசுபப் பலனை ஏற்படுத்தும். அதேபோல் பெற்றோர்களின் சாதகத்துடன் சம்பந்தமில்லாமல் சுபமோ, அசுபமோ நடக்காது என்பதை ஆணித்தரமாக உரைக்கலாம்.

ஒரு மனிதன் படித்து முடித்து சுயமாக இயங்கத் துவங்கும்போது மூன்றாம் நட்சத்திரத்தின் தசை என்றால் சமுதாயத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அதிக போராட்டத்தை சந்திக்க நேரும். தன தாரை, சாதக தாரையின் தசை என்றால் மிக குறுகிய காலத்தில் வாழ்க்கை வசந்தமாகும். அசுப தாரையின் தசை குறுகிய கால தசையாக இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் எளிதில் மீள முடியும். நீண்டகால தசையாக இருந்தால் மீள உரிய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

asf

3. விபத்து தாரை

இதன் அதிபதி ராகு. ஜென்ம நட்சத்திரத்திற்கு மூன்றாவது நட்சத்திரம் விபத்து தாரை. அதாவது 3, 12, 21-ஆவது நட்சத்திரங்கள் விபத்து தாரையின் நட்சத்திரங்கள். உதாரணமாக ஒருவர் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திர நாட்கள் விபத்து தாரையாகும். இந்த தாரையின் அதிபதி ராகு என்று வைத்திருப்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பது வியப்பாக உள்ளது. ராகு என்றாலே பதைபதைக்க வைக்கும் செயல்தானே. ஒருவர் வாழ்க்கையில் விரும்பத்தகாத விளைவு ஏற்படுகிறது என்றால் அங்கு ராகு பகவான்தானே முன்நிற்கிறார். கண்ணிமைக்கும்முன்பு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதற்குக் காரணகர்த்தா ராகு பகவான்தான். ஒருவரின் ஊழ்வினைக்கு ஏற்ப நிழலாக நின்று நிஜத்தை வெளிப்படுத்தும் கிரகம். இருட்டில் நடந்த ரகசியம் வெளியில் தெரியாது என்று நினைத்து நடத்தும் தவறுகளை வெட்டவெளிச்சம் போடும் அதிகாரி என்றால் அது மிகையாகாது.

Advertisment

விபத்து என்றால் வெறும் விபத்தை மட்டும் குறிப்பிடுவது அல்ல. வாழ்க்கைப் பாதையை தடுமாற வைக்கும் விபரீத விளைவுகள் அனைத்தும் விபத்து தாரையில் அடங்கும். காரியத்தடை, சோதனைகள், துன்பங்கள், துயரங்கள், மனநிம்மதிக் குறைவு, வாகன விபத்து, பொருள் திருட்டு, மிகுதியான விரயம் போன்றவற்றை சந்தித்தால் அன்று விபத்து தாரையின் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. மாதத்திற்கு மூன்று நாள் விபத்து தாரையின் நட்சத்திரத்திற்கே இந்த சிரமம் என்றால் விபத்து தாரையின் நட்சத்திரத்தின் தசையை யோசிக்கவே பயமாக இருக்கிறதல்லவா? இப்படிதான் மனித வாழ்க்கையில் கிரகங்கள் தன் ஆதிக்கத்தை செலுத்துகிறது.

ஜென்ம நட்சத்திரத்திற்கு 3-ஆவது தாரையான விபத்து தாரை நட்சத்திரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தினால் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். தெளிவான திட்டமிடுதல் இருக்காது. சகோதரர் கலகம் நிறைந்தவராக இருப்பார். பயணங்களால் ஆதாயமின்மையும் அசௌகரியமும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். ஊசப பாதிப்பு இருக்கும். டாக்குமென்ட் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், உயில், பாகப் பிரிவினை பிரச்சினைகள் ஜாதகரை வழிநடத்தும்.

அண்டை அயலாருடன் இணக்கம் இருக்காது.

Advertisment

ஆபரணங்கள், சொத்துகள் அடமானத்தில் இருக்கும். பாகப் பிரிவினை சுமூகமாக இருக்காது. வாழ்க்கையில் வளர்ச்சி இருக்காது. ஒப்பந்தங்களால் மன உளைச்சல் இருக்கும்.

சுய ஜாதகத்தில் விபத்து தாரையின் நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி விபத்து தாரை நட்சத்திர சார கிரகத்திற்கு லக்ன சுபரின் பார்வை இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்படாது.

இதன் தசை காலங்களில் வாழ்வில் அனைத்து விதமான சகாயமும் பெற்றிடமுடியும். வாழ்நாள் முழுவதும் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழ், அதிகார வர்க்கத்தின் தொடர்பு, இளைய சகோதரத்தால் ஆதாயம் ஏற்படும்.

தினப் பொருத்தமும் தாரா பலமும்

"தினம்' என்றால் "நாள்' அல்லது "நட்சத்திரம்' என்று பொருள். எனவே இந்த பொருத்தத்தை "நட்சத்திரப் பொருத்தம்' அல்லது "தாரா பலன்' என்று குறிப்பிடுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட நாளின் சாதகத்தை அறிய தாராபலம் பார்ப்பது, வாழ்க்கையின் சாதகத்தை அறிய தாரா பலன் பார்ப்பது மிக அவசியம். திருமணப் பொருத்தங்களில் முதலாவது பொருத்தமான தினப் பொருத்தமே இந்த தாரா பலனாகும். பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆண் அன்றாட வாழ்க்கையில் அந்த பெண்ணுக்கு சாதகமாக நடப்பானா? பாதகமாக நடப்பானா என்பதை அறிந்துகொள்ள தினப்பொருத்தம் பார்க்கப்படுகிறது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பாக நடந்துகொண்டால்தான் அன்றாட வாழ்க்கையை சுமூகமாக நடத்திச்செல்ல முடியும். தினப்பொருத்தம் இருந்தால் கணவன்- மனைவியின் ஆயுள், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்தப் பொருத்தம் இருந்தால் இருவரும் இணக்கமாக நடந்து கொள்வார்கள். இந்த பொருத்தம் இல்லையென்றால் இருவரும் பகைவர்களாக, புரிந்துகொள்ளும் தன்மை இல்லாமல் இருப்பார்கள். பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணி அதை 9-ஆல் வகுக்க மீதி

1 ஆக வந்தால் சுமார் என்றும்

2, 8 ஆக வந்தால் சுமாருக்கு மேலானது என்றும்

3 , 5, 7 ஆக வந்தால் பொருந்தாது என்றும்

4, 6, 9 ஆக வந்தால் மிகப்பொருத்தம் என்றும் முடிவு செய்யவேண்டும்.

இதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளன. அது இந்த கட்டுரைக்கு அவசியமில்லை. இதுபோல் பெண்ணின் நட்சத்திரத்திற்கு 3-ஆவது நட்சத்திரத்தை இணைத்தால் கருத்து வேறுபாடு பிரிவினை ஏற்படுத்தும். வெகு சிலர் குல கௌரவத்திற்காக வெறுப்புடன் வாழ்வார்கள்.

எனவே விபத்து தாரையில் சுப காரியங் களை, வெளியூர் பயணங்களைக் கண்டிப் பாகத் தவிர்க்கவேண்டும். சில தவிர்க்க முடியாத செயல்களுக்கு குலதெய்வ வழிபாடு அவசியம். 3-ஆவது நட்சத்திர தசை காலங் களில் சுய ஜாதக ஒப்பீடு மிக அவசியம்.

விபத்து தாரை நாட்களில் அல்லது விபத்து தாரை தசாபுக்திக் காலங்களில் அதிக அசுபங்களை அனுபவிப்பவர்கள் வெற்றிலை மாலை அணிவித்து வீரபுத்திரரை வழிபட தீவினைகள் தீண்டாது.

(தொடரும்...)

செல்: 98652 20406