கைநிறைய பணம் இருக்கிறது. சொந்த வீடு, வாகன யோகம், வருடத்திற்கு ஒருமுறை ஆன்மிகச் சுற்றலா, கேளிக்கை சுற்றுலா, குலதெய்வ பூஜை என குடும்பத்துள் சிரிப்பலைகள் வெளிவந்தாலும், ஏதோவொரு மனக்குறை இருந்து வாட்டு கிறதென்று, புத்திர சோகத்தையோ, வாரிசில்லாத நிலையையோ, தொழில் எதிரிகளையோ குறிப்பிடுவார்கள். இத்தனையும் கொடுத்த இறைவன் சில குறைகளைக் கொடுத்திருப்பது ஏன்?

ஆராய்ந்து பார்த்தால், பித்ருக்கள் என்னும் நம் முன்னோர்களின் தோஷங் கள் கடுமையாக இருப்பதைக் காண்கி றோம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையன்று "மறந்துவிட்டதை மாளயத்தில் விட்டுவிட்டேன்' என்று சொன்னபடி, எள்ளும் நீரும் விட்டுவிட்டு மறந்துவிடுகிறோம். ஆனால் அதற்கு முழுமையான தீர்வு காண, முதல் மூன்று அமாவாசைகளிலும் சேர்த்து தர்ப்பணம் செய்து தோஷத்திற்கு விடை கொடுக்க லாம்.

ஜாதகத்தில் தெரியுமா?

பொதுவாக ஜாதகத்தில் சூரியனோ, சந்திரனோ, ராகு- கேதுக்களோடு சேர்ந் திருப்பின் குடும்ப சந்தோஷத்தைக் கெடுத்துவிடும் என்பர். இப்படி எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் பித்ரு தோஷம்.

Advertisment

மேலும் சூரியன் ஜீவன ஸ்தானத்தில் மறைவதும், சூரியனுக்கு இடமளித்த கிரகம் தனது சொந்த வீட்டிற்கு 6, 8, 12-ல் மறைவதும், லக்னத்திற்கு 6, 8, 12-ல் சூரியன் மாந்தியுடன் இருப்பதும் முழுமையான பித்ரு தோஷம். பூர்வபுண்ணிய ஸ்தானம், 12-ஆம் பாவமான மோட்ச ஸ்தானத்தில் சனி, ராகு- கேதுக்கள் வரும் சமயம் சூரியனது சேர்க்கை ஏற்பட்டால் பித்ருக்கள் பார்வை உண்டு.

ஐந்தாம் இடத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானம், 9-ஆமிடத்திற்கு பித்ரு தோஷ கர்ம ஸ்தானம், பந்து (உறவினர்) கர்ம ஸ்தானம் என்றவகையில், இந்த இடங்களில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால் பித்ருக்களது பார்வை எக்காலத்திலும் இருக்குமென்று ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன.

தர்ம சங்கிரஹம் சொல்வது

Advertisment

பித்ருக்கள் தேவர்களாக இருப்பின் யாகத்தாலும், சொர்க்கம் சென்றோர்- வேதவான் அன்னமளித்தலாலும், எமலோகவாசிகளாக (பிள்ளைகள் திதி செய்யாமையால் சொர்க்கம் செல்ல தடை உண்டானவர்கள்) இருப்பின் பிண்டத்தை சமர்ப்பிப்பதாலும், மனிதர்களாக இருந்தால் அன்னதானத்தாலும், தன் முன்னோர் நரகவாசியாக இருந்தால் விக்ர அன்னமாகிய பிண்ட உதிரி சாதத்தாலும், அறியமுடியாத பித்ருக்கள் நம் குடும்பத்திலிருந்து திருப்பதியடையாதவர்களாக இருந்தால் காக்கைக்கு வைக்கப்படும் பிண்டத்தாலும் திருப்தி அடைவார்கள்.

dd

பித்ரு தோஷ நிவர்த்தி விதிகள்

தோஷநிவர்த்தி தலங்களுக்குச் சென்று புனித நீராடல், திலஹோமம் செய்து அன்னபிண்டம், அந்தன தானம், வஸ்திரதானம் செய்வது ஆகியன. மேற்சொன்ன பித்ரு தோஷங்களை நிவர்த்திசெய்வதற்கு எளிய வழிகளில் ஒன்று பலராலும் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

மகாபாரத்தில் ஆதி பர்வம் என்னும் பாகத்தில்

ஜரத்காரு மகரிஷியின் திருக்கதை உள்ளது. அதைப் படித்து அவரை குருவாக எண்ணி வணங்குவதால் தோஷங்கள் நீங்கிவிடும் என்ற தேவரகசியம் சொல்லப்படுகிறது. ரிஷ்ய ஸ்ருங்க மகரிஷியை நினைத்தால் மழை வர்ஷிக்கும். ஜரத்காரு மகரிஷி திருக்கதை படித்தால் பித்ருக்களின் பரிபூரண ஆசீர்வாதம் கிடைக்கும். அமாவாசை தினம், தங்களது தாய்- தந்தையர் உயிர்நீத்த திதிகளில் புனித தீர்த்தக்கரைகளுக்குச் சென்று எள் தர்ப்பணம் செய்துவிட்டு, வெற்றிலை, பாக்கு, பழம், வஸ்திர தானம் செய்துவிட்டு, அங்கேயோ அல்லது வீட்டுக்கு வந்து தீபமேற்றியோ மகரிஷியின் புண்ணிய கதையைப் பொறுமையோடு படித்து, ஒரு ஆலமரக்கிளையை எடுத்துவந்து அதில் மஞ்சள் நூல் கட்டி ரிஷியை ஆவாஹனம் செய்து ஆரத்திசெய்து வணங்கவேண்டும். மனைவி, மக்களோடு வணங்கி திருநீறு அணிவதால் முன்னோர் தோஷம் அகன்று மங்களமுண்டாகும்.

யார் இந்த ஜரத்காரு?

இந்தப் பாரதநாட்டை பரீட்சித்து மன்னன் ஆட்சிபுரிந்து வந்தபோது வாழ்ந்த அந்தணர் வம்சத்தில் யாயாவர் பிரிவைச் சேர்ந்த மகரிஷியின் திருக்குமாரர்தான் ஜரத்காரு மகரிஷி.

மிகக் கடுமையான விரதமிருந்து தவங்களை மேற்கொண்டார். வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாகவே இருக்க முடிவுசெய்து எல்லா புண்ணியத் தலங்களுக்கும் சென்றுவந்தார்.

பகல் முழுவதும் சுற்றிவரும் அவர் இருள் வந்தபின் அங்கேயே தங்கி காட்டில் கிடைக்கும் கிழக்கு கனிகளை உண்டு, எதுவும் கிடைக்காத நேரத்தில் காற்றையே உணவாகக் கொள்வார். காலப் போக்கில் அவரது உறுதியான உடல் தளரத் தொடங்கியது. அதுவே அவரது பெயருக்குக் காரணமாக விளங்கியது. ஜராலி பலவீனமானவர், வயது முதிர்ந்தவர். காருலி உறுதியான உடலமைப்பு, ஆரோக்கியமான என்று பொருள்.

மரத்தில் தொங்கிய மகரிஷிகள்

தன் கால்போன போக்கில் காட்டு வழியே சென்ற அவர் விசித்திரமான காட்சி யைக்கண்டு வியந்து நின்றார். ஒரு குளக்கரை யில் பட்டுப்போன ஆலமரக் கிளைகளி டையே, பட்டுப்போகாத கிளை நீர்நிலைப் பக்கமாக நீண்டிருக்க, அதன் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கிய சில முனிவர்கள், "எங்ளைக் காப்பாற்ற யாருமே இல்லையா?' என்று ஓலமிட்டபடி இருந்தனர். மரத்தின் வேர்ப்பாகங்களை எலி ஒன்று கடித்துக் கொண்டிருக்க, மரம் எந்நேரத்திலும் நீரில் விழுந்து முழுகிவிடும் நிலையில் இருந்தது.

அவர்கள் அருகேசென்று, "இப்படித் தலைகீழாகத் தொங்குகிறீர்களே! இது ஏதேனும் விரதமுறையா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள் சொன்ன பதில் இவரைச் சிந்திக்க வைத்தது.

காலதேவனே எலியாக...

மிகுந்த உடல்வலியோடு காணப்பட்ட அவர்கள், "முனிவரே! நாங்கள் அனைவரும் பாவ ஆன்மாவாக, ஆண் சந்ததி இல்லாமல் தவித்துக்கொண்டுள்ளோம். எங்களைக் கரையேற்றும் பித்ருபூஜை செய்ய சந்ததி இல்லாததால் நரகத்திற்குச் செல்ல இருக்கி றோம். ஜரத்காரு என்பவனது முன்னோர்கள் தான் நாங்கள். அவன் எங்களை கவனிக்க வில்லை. இந்த ஆலமரம் எமது வம்சாவளி யைக் குறிக்கிறது. ஜரத்காருவே இதிலுள்ள கடைசி வேர்ப்பகுதி.

காலதேவனே எலிவடிவில் வந்து வேர்கள், விழுதுகளைக் கடித்து அறுத்து விட்டு, எங்களை முன்னோர் என்ற ஆதாரமில்லாத அனாதைகள்போலச் செய்யத் துடிக்கி றான். ஜரத்காரு திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமல் உயிர்விடுவானேயானால் அவனுடன் சேர்ந்து நாங்கள் அனைவரும் பாதாள உலகத்திற்குச் செல்ல நேரிடும்'' என்றனர்.

முனிவர்கள் சொன்னதைக் கேட்டவர் தன் நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து தான் யார் என்பதையும் கூறினார்.

"எனது முன்னோர் பெருமக்களே! உங்களது விருப்பத்தை நிறைவேற்றி வைப்பேன். நீங்கள் அனைவரும் நரகக் குழிக்குள் சென்றுவிடாமல் காப்பேன்'' என்று உறுதியளித்தார். அவர் தன் வாழ்க்கைத் துணையைத் தேடிப் பல கிராமங்களுக்கும் சென்றபோது, வயது முதிர்ந்தவர் என்பதால் அவருக்குப் பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

நாக வம்சத்தில் வந்த பெண் ஜரத்காரு!

ஒருகாலத்தில் நாகர் உலகத்திலுள்ள எல்லா நாகங்களையும் அழிக்கவேண்டும் என்று, ஜனமேஜயன் என்ற மன்னன் வேள்வி ஒன்றை பெரும் பொருட்செலவில் நடத்திக்கொண்டிருந்தான். இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று மகாவிஷ்ணுவை சரணடைந்தான் நாகர்களின் மன்னனாகிய கார்க்கோடகன்.

மகாவிஷ்ணு, "பூவுலகத்தில் திருமானூர் அருகிலுள்ள காமரசவல்லிக்குச் சென்று, அங்கு கோவில் கொண்டிருக்கும் சௌந்தரேஸ்வர சிவனை வழிபாடுவாயாக.'' என்றிட, அவ்வாறே செய்தான். சிவனார் அவன்முன் தோன்றி, அவனது குலத்தை அழிவிலிருந்து காப்பதாக அருள்செய்து, மற்ற விவரங்களை நான்முகன் எடுத்துக்கூறுவார் என்று மறைந்தார்.

நான்முகனிடம் சென்று கார்க்கோடகன் விவரம் கேட்க, "யாயாவர் வம்சத்தில் தோன்றும் ஒரு தவக்குழந்தையால்தான் நாகர் வம்சம் அழிவிலிருந்து காப்பாற்றப் படப் போகிறது'' என்றார்.

இதை கார்க்கோடகன் தன் மனைவி வாசுகியிடம் சொன்னபோது, அவள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து தனது அழகான சகோதரி, ஜரத்காரு என்ற மானஸா தேவியை, மகரிஷி ஜரத்காருவுக்குத் திருமணம் செய்துவைத்து அனைத்துவிதமான சீர்வரிசைகளையும் செய்துவைத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தாள்.

சொல்வாக்குத் தவறியதால் சோதனை!

ஜரத்காரு மகரிஷியைக் கரம்பிடித்த ஜரத்காரு என்னும் மானஸா தேவி இல்லறம் நடத்த அவரோடு காட்டுவழியே புறப் பட்டாள். அந்த நேரத்தில் மகரிஷி, "என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும்போது எனக்குக் கீழ்ப்படிய மறுத்தால், என் மனைவி என்றும் பாராமல் துறந்து சென்று விடுவேன். பிரிந்துவிட்டால் மீண்டும் சேர்ந்துவாழ வாய்ப்பே கிடையாது'' என்று உறுதியாகக் கூறினார்.

அவளும் மிகக் கவனமாக இல்லறம் நடத்திவந்தாள். ஒருநாள் மதிய வேளையில் உணவு சாப்பிட்டபிறகு தன் மனைவியின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந் தார் மகரிஷி.

சூரிய அஸ்தமனமாகிற நேரம் நெருங்கிய போது, பூஜை மற்றும் அனுஷ்டானங்களைச் செய்யும் நேரத்தில் இப்படி உறங்குகிறாரே! எழுப்பினாலும் தவறாகப் போய்விடும்;. எழுப்பாவிட்டாலும் கடமையிலிருந்து தவறியது போலாகிவிடும் என்று சங்கடப் பட்டவள், பூஜைக்குத்தானே எழுப்புகிறோம் என்று அவரது உறக்கத்தைக் கலைத்தாள்.

பிரிந்த தம்பதியர்

உறக்கம் கலைந்து எழுந்த மகரிஷி கோபமடைந்து, "ஏன் என்னை எழுப்பினாய்?

நான் உறங்கும்போது சூரிய பகவான் மறைந்துவிடமாட்டார் என்பதை நான் அறிவேன். எனது சொல்லையும் மீறி நீ நடந்துகொண்டதனால் நிபந்தனையின்படி நாம் இருவரும் இந்த நிமிடத்திலிருந்து பிரிந்துவிட வேண்டியதுதான். நீ உனது சகோதரி வீட்டுக்குச் சென்றுவிடு'' என்று சொல்லிவிட, ஜரத்காரு பலமுறை பணிந்து கேட்டபோதும், மகரிஷி மனம் மாறாமல், "இனி நல்லதுதான் நடக்கும்'' என்று உறுதி கூறினார்.

அப்போது அவள், "தங்களுக்கும் எனக் கும் பிறக்கப் போகும் பிள்ளையால் தான் நம் முன்னோர்களுக்குப் பித்ரு சாப தோஷநிவர்த்தி கிடைக்கப் போகிறது. நான் இன்னும் தாய்மை நிலை அடையாமல் தங்களைவிட்டுப் பிரிந்து செல்கிறேனே!'' என்று கண்ணீர்விட்டாள் ஜரத்காரு.

அதற்கு மகரிஷி, "அப்பாவிப் பெண்ணே! கவலையை விடுவாயாக! நீ விரும்பியபடியே ஒளி பொருந்திய கதிரவனைப்போலவும், குளிர்ச்சி மிகுந்த சந்திரனைப்போலவும் முகப்பொலிவோடு உள்ள ஆண் மகனுக்குத் தாயாகவாய்!'' என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் சென்றுவிட்டார்.

வம்சத்தைக் காக்கவந்த ஆண் வாரிசு

இறைவன் அருளால் பத்து மாதங்கள் கழித்து அழகான ஆண் குழந்தையை அவள் பெற்றெடுத்தபோது, நாகர்கள் ஒன்றுகூடி, "வம்சத்தைக் காக்கப் பிறந்தவன்' என்ற பொருள் விளங்கும்படி "ஆஸ்திகன்' என்ற பெயரிட்டு மகிழ்ந்து கொண்டாடினர். அடுத்துவந்த நான்கு ஆண்டுகளிலேயே ஆஸ்திகன் சியவன மகரிஷியிடம் சீடனாகச் சேர்ந்து அனைத்து வேத பாடங்களையும் கற்றுத் தேர்ந்தான்.

ஆஸ்திகனுக்கு உபநயனச் சடங்கு நிறைவேறியதும், தன் முன்னோர்கள் பாவ விமோசனம் பெற்று நற்கதியடைய பண்டிதர் களை அழைத்து, பித்ரு தோஷநிவர்த்தி தர்ப்பணம், பதினாறு தலைமுறை பித்ரு தோஷங்களை அகற்றும் மாத்ரு சோடசீ பிண்ட பூஜைகளைச் செய்து, பித்ரு துதிகளையும் கூறி தானதர்மங்களோடு செய்து தன்வம்சம் கரையேறும்படி செய்தான். உடனே அவனது வம்சத்தில் வந்த மகரிஷிகள் அனைவரும் சாபங்கள் நீங்கி மோட்சம் பெற்றனர்.

கங்கைக் கரையில் காலை சூரியக் கதிர்கள் வெளிவரும்போது அந்த ஆஸ்திகனின் வேத மந்திர ஒலி இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது-

"ஓம் தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம்

ஸ்வர்க்யம் சத்ரு விநாசநம்

குல ஸந்தாரகம் சேதி

ச்ராத்த மாஹீர் மநீஷிண:'

எல்லாரும் முன்னோர்களைத் தவறாது வழிபட்டு குலவிருத்திக்கு வழிதேடுங்கள் என்பதாக!

செல்: 95511 84326