சுமார் 45 வயதுடைய ஒரு பெண்மணி நாடி பலன் கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன? காரியமாக பலன் தெரிந்துகொள்ள வந்துள்ளீர்கள்' என்றேன்.
அந்தப் பெண்மணி கொஞ்சம் யோசித்துவிட்டு, "எனக்கு 22 வயதில் திருமணம் நடந்தது. எனது 28 வயதிற்குள் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து விட்டது. எங்கள் குடும்ப வாழ்க்கையில் 16 ஆண்டுகள் என் கணவரும், நானும் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஆனால் கடந்த ஆறேழு ஆண்டுகளாக எங்கள் இருவருக்கும் தாம்பத்திய உறவேயில்லாமல் போய்விட்டது.
என் கணவரும், குழந்தைகளும், நானும் ஒரே வீட்டில்தான் வசிக்கின்றோம்.
அவரும் உத்தியோகம் பார்த்து, சம்பாதித்து, எங்கள் தேவைகள் அனைத்தையும் எந்த குறையுமில்லாமல் நிறைவேற்றி வருகின் றார். எங்கள் இருவருக்குள்ளும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் கணவன்- மனைவி உறவு மட்டுமில்லாமல் போய்விட்டது. ஒரே வீட்டில் சந்நியாசிகள்போல் வாழ்ந்து வருகின்றோம்.
கணவருக்கும், எனக்கும் ஒற்றுமையில்லை என்று கூறி, பல ஜோதிடர்களிடமும், வாக்கு, குறி சொல்பவர்களிடம் சென்று பலன் கேட்டபோது, அவர்கள் பலவிதமான காரணங்களைக் கூறி, பலவிதமான பரிகாரங்களையும், பூஜை, விரதங்களையும் கடைப்பிடித்து செய்யச் சொன்னார்கள்.
அவை அனைத்தையும் செய்தேன்.
மேலும் புத்தங்களில் வரும் பரிகாரங்களையும் செய்தேன். ஆனால் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. பணம்தான் விரைய மானது.
எனக்கு மிகவும் நெருக்கமான தோழி ஒருத்தியிடம், எனது இந்த நிலையைப் பற்றிக் கூறினேன். அவள்தான் அங்கும், இங்கும் நிம்மதி குலைந்து அலைந்துகொண்டு இருக்காதே, அகத்தியர் ஜீவநாடி பார்த்தால் இதற்குண்டான காரணத்தை அகத்தியர் கூறுவார் என்று கூறினாள். அதனால்தான் ஜீவநாடியில் பலன் அறிந்துகொள்ள தங்களை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
அம்மா, உங்கள் கணவருக்கு வேறு பெண்களுடன் ஏதாவது தொடர்புள்ளதா? என்று கேட்டேன்.
அவருக்கு வேறு பெண்கள் தொடர்புள்ளதாகவும் தெரியவில்லை. வேலைக்குச் சென்று சரியான நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விடுவார். நண்பர்கள் வீடு, சுற்றுலா, பொழுது போக்கிடம் என எங்கேயும் செல்லமாட்டார். வேலையில்லை என்றால் வீட்டைவிட்டு வெளியில் செல்லமாட்டார். வீட்டிலேயேதான் இருப்பார்.
ஜீவநாடி ஓலைக்கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி, அவரின் கேள்விக்கு பதிலையும், பலனையும் கூறத் தொடங்கினார்.
இவள் விருப்பப்பட்டுதான், அவனைத் தேடிச்சென்று திருமணம் செய்து கொண்டாள். இவர்கள் இருவருமே போன ஜென்மத்திலும் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்கள். போன பிறவியில், இவள் கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்டு, அவனை விட்டுப் பிரிந்து, தான் பிறந்த வீட்டிற்குச் சென்று, அங்கே வாழ்ந்து மரணம் அடைந்தாள். போனபிறவி குடும்ப வாழ்க்கையில் அனைத்தையும் முழுமையாக அனுபவித்து வாழவில்லை.
இந்த பிறவியில், தான் வெறுத்து, ஒதுக்கிச் சென்ற முற்பிறவி கணவனையே மணந்து, போன ஜென்மத்தில் வாழமுடியாமல் விடுபட்டுபோன தாம்பத்திய உறவு கணக்கினை, 16 ஆண்டுகள் இப்பிறவி குடும்ப வாழ்வில் அவனுடன் வாழ்ந்து முடித்தவுடன், கணவன்- மனைவி உறவில்லாமல் முடிந்துவிட்டது.
இவளின் பூர்வ ஜென்ம புண்ணியத்தால், கணவன்- மனைவியிடையே, கருத்து வேறுபாடு, விவாகரத்து, வழக்கு, பிரிவு, இருவரில் யாராவது ஒருவர் இறந்து போதல் என ஏற்படாமல், தாம்பத்திய உறவினை மட்டும் தடுத்து, ஒரே வீட்டில், சந்நியாசிகள்போல் இருவரையும் வாழவைத்துவிட்டது.
கணவன்- மனைவி இருவரிடையே தாம்பத்திய உறவு இருந்திருந்தால், இருவரில் யாராவது ஒருவர் இறந்துபோய் இருப்பார்கள். கணவன் உறவில்லையென்றால் கணவன் இறந்து போனதற்கு சமம். மனைவி உறவு ஒரு ஆணிற்கு இல்லையென்றால் மனைவி இறந்து போனதற்கு சமம் என்பதை புரிந்துகொள்ளச்சொல். இவளின் முன் ஜென்ம பாவம் உறவைத் தடுத்துவிட்டது. புண்ணியம் உயிருடன் இருவரையும் பூமியில் வாழவைத்துக்கொண்டு இருக்கின்றது.
இந்த பிறவியில், கணவனுடன் இவளின் தாம்பத்திய கணக்கு முடிந்தது. கணவனையும், குழந்தைகளையும் நேசித்து, குடும்பத்தில் அமைதியாக இருந்து, நல்லபடியாக வாழச்சொல். இவள் வாழ்வில் உண்டான காரியத்திற்கு இதுதான் காரணம். இவள் கேள்விக்கு இதுதான் பதில் என்று கூறிவிட்டு ஓலையிலிருந்து அகத்தியர் மறைந்தார்.
கணவன்- மனைவி பிரிவு என்பது, ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து தனித்தனியே வாழ்வது மட்டுமல்ல. ஒரே வீட்டில் இருவரும் வசித்தாலும் உறவில்லாமல் வாழ்வதும் பிரிவுதான் என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
அம்மா உங்கள் வாழ்வின் நிலைக்கு, அகத்தியர் கூறிய விளக்கத்தை புரிந்து கொண்டு, மனக்குழப்பம், கலக்கத்தை நீக்கி, மகிழ்ச்சியாக வாழுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன்.