ணித ஜோதிட முறையில் 12 ராசிகள், ஒன்பது கிரகங்களைக் கொண்டு பலன்கள் கூறப் படுகின்றது. இதில் ஒவ்வொரு கிரகமும் மற்றொரு கிரகத்தைவிட வலிமை வாய்ந்ததாகும். சூரியனைவிட சந்திரனும், அதைவிட செவ்வாயும், அதனைவிட புதனும், புதன் கிரகத்தைவிட குருவும், அதைவிட சுக்கிரனும், அதையும்விட சனியும் வலுவானவை.

தமிழ்முறை சோதிடத்தில் சனி கிரகம்தான் ஒருவருக்கு ஜீவனம், தொழில், பணம், சொத்து, பதவி, புகழ் என அனைத்தையும் தந்து அனுபவிக்கச் செய்வதும், எல்லாம் இருந்தும் எதனையும் அனுபவிக்க விடாமல் செய்வதும், எதனையும் தராமல் வறுமை, சிரமம், கஷ்டங்களைத் தந்து துன்பம் அடையச் செய்வதும் ஆகும்.

மனிதர்களின் வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமென்றால் நிதி (பணம்) யைத்தேடு என்று கூறுவார்கள். வாழ்வில் பணம், சொத்து பதவி, புகழ் என்று நிதியைத் தந்து, நிம்மதியைத் தருபவர் சனி பகவான்தான். கடவுளுக்குக்கூட பணம் இல்லையென்றால் கோவில், பூஜை, தேர்த்திருவிழா என எதுவுமில்லை. வருமானமில்லாத கோவிலில் பூசாரிகள்கூட பூசை செய்ய போகமாட்டார்கள்.

Advertisment

rr

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு தாய், தந்தை, மனைவி, குழந்தை, குடும்பம் என எதுவுமில்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால் பணமில்லாமல் வாழமுடியாது. செய்யும் தொழிலை தெய்வமாக மதித்து பொறுப்பாக உழைத்து, பணம் சம்பாதித்து, பணத்தைச் சேர்த்து வாழ்பவர்களை சனி பகவான் எந்த நிலையிலும் நெருங்கமாட்டார்; தொடமாட்டார். பணம் உள்ளவனை சனி எப்போதும் ஆசீர்வதித்துக்கொண்டே இருப்பார். பணம், சொத்து, பதவி, புகழை மேலும் மேலும் அள்ளித்தருவார்.

பணம் இல்லாதவனையும் தொழில் செய்து பிழைக்காதவனையும், பணம், சொத்தினை சேமித்து வைக்காதவனையும், பிறர் தன்னை மதிக்க வேண்டும் என்று கௌரவத்திற்காக பணத்தை செலவு செய்பவனையும், பக்தி, பயம், குரு என்று மாயைகளில் சிக்கி, பணத்தை விரயம் செய்பவனையும், எதிர்கால சிந்தனை இல்லாமல், முன்னோர்கள் தேடி வைத்த சொத்துகளை அழிப்பவனையும் சனி பகவான் தன் தோஷப்பார்வை யால் பார்த்து அவனை சிரமப்படச்செய்து விடுவார். அவர்கள் வாழ்வை இருளாகச் செய்துவிடுவார்.

சனி கிரகம் ஒருவர் ஜாதகத்தில் வலிமைபெற்று இருந்தால்தான் வாழ்க்கையில் உயர்வை அடையமுடியும். பிறப்பு ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் ஆட்சி, உச்சம், குருபார்வை பெற்று, எவ்வளவு வலிமையுடன் இருந்தாலும், சனி கிரகம் மட்டும் வலிமை குறைந் திருந்தால், இப்பிறவி வாழ்வில் அவன் எந்தவொரு பெரிய நன்மைகளையும் அடையமுடியாது; அனுபவிக்கமுடியாது.

பொதுவாக சனிகிரகம் வாழ்வில் தரும் தீமைகளை, மற்ற கிரகங்களாலோ அல்லது வேறு பரிகாரங்களைச் செய்தோ தடுக்கவும் முடியாது. அவற்றால் நன்மைகளை தரவும் முடியாது. சனி பகவானின் தீமைகளை தடுத்துக் கொண்டு, நன்மைகளையடைய நடைமுறை வாழ்வில் சனி பகவான் மகிழ்ச்சியடையும் படி செயல்பட்டால் போதும்; சனியின் பிடியிலிருந்து தப்பித்துவிடலாம்.

சனி கிரகத்தை கர்ம காரகன், ஆயுள் காரகன் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடுகின்றனர். தமிழில் கருமம் என்றால் செய்யும் செயல், தொழில் என்று பொருளாகும். "கர்மா' என்றால், முற்பிறவி வினைப்பதிவுகள் என்று பொருளாகும். கருமம் என்பதும் கர்மா என்பதும் வேறு வேறு அர்த்தமாகும் என்று புரிந்துகொள்ளவேண்டும்.

இன்றைய நாளில் சிலர் முற்பிறவி கர்மவினைப் பதிவுகளை கர்மாவை குறிப்பிடும் கிரகம் சனி பகவான் என்று தவறாக கூறுகின்றார்கள். சிலர் ஆயுளை நிர்ணயிக்கும் ஆயுள்காரகன் என்றும் கூறுகின்றார்கள். முற்பிறவி பாவலி சாபங்களுக்கும் ஆயுளுக்கும், சனிக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

முற்பிறவி பாவ- சாப- கர்மவினைகளுக்கும், ஆயுளுக்கும் காரகமான கிரகங்கள், ராகு- கேது கிரகங்கள்தான். கணிதமுறை ஜோதிடத்தில், லக்னத் திற்கு 10-ஆமிட ராசியை தொழில் ஸ்தானம் என்று கூறுவார்கள். ஆனால், சித்தர்கள் கூறியுள்ள தமிழ்முறை சோதிடத்தில், ஒருவரின் ஜீவனத்திற்கு தொழிலை நிர்ணயித்துத் தருபவர் சனிதான் என கூறியுள்ளார்கள். ஒருவருக்கு தொழிலில் உயர்வையும், வீழ்ச்சி, கஷ்டம், நஷ்டத்தையும் தருவது பிறப்பு ஜாதகத்தில் சனியுடன் இணைந்திருக்கும் மற்ற கிரகங் கள் தான்.

சனி பகவான் தொழிலைச் செய்து பிழைக்கும் வழியைத் தருபவர்தானே தவிர, கெடுப்பவரல்ல. ஆனால் இன்றைய நாளில், எல்லாரும் அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனி, ஏழரைச்சனி என இதுபோன்று இன்னும் பலவிதமாக சனியைப் பற்றிக் கூறி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சனியைப் பற்றி இதுபோன்று சிலர் கூறுவதைக் கேட்டு பயந்துகொண்டு, கோவில் கோவிலாக மக்கள் படையெடுத்துச் சென்று கொண்டும், பரிகார பூஜைகளை செய்து பணத்தை இழந்து, மேலும், மேலும் பொருளாதார சிரமங்களை அடைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பணத்தைச் சேர்ப்பதே சனி பகவானுக்கு பரிகாரமாகும். வேறு பரிகாரங்கள் பலன் தராது. சனி கிரகத்தை வசியம் செய்ய நினைப்பவர்கள். தொழில் செய்து, பணம் சம்பாதித்து, அந்த பணத்தைச் சேமிப்பதுதான் சனி வசிய சூட்சுமம். பூஜை, யாகம், வழிபாடுகள் அல்ல.

ஒரு மனிதன் தனித்திருந்தால் அவனால் எந்த ஒரு செயலையும் செய்யமுடியாது; ஏன்? பேசக்கூடமுடியாது. ஆனால் மற்றொருவர் உடனிருந்தால், அவருடன் பேசலாம்; இணைந்து செயல்படலாம். அல்லது ஏதாவது ஒரு கருவி கையில் இருந்தால், அதனைக்கொண்டு ஏதாவது ஒரு செயலைச் செய்யலாம். ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் ஒரு கிரகம் இருக்கும் ராசிக்கு, 1, 5, 9, 2, 12-ஆவது ராசிகளில் எந்தவொரு கிரகமும் இல்லையென்றால், அந்த கிரகம் தனித்திருப்பதாக அறிந்துகொள்ளவேண்டும்.

பிறப்பு ஜாதகத்தில் தனித்திருக்கும் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், நல்ல இடத்தில் இருந்தாலும், அந்த கிரகத்தால் எந்த ஒரு நன்மையையும் அடையமுடியாது என்பதே ஜோதிடம் சொல்லும் உண்மை.

இராமரின் ஜாதகத்தில், ஜீவனம், தொழில், பதவி, புகழ், செல்வம், சொத்து, வாழ்வில் நிம்மதி போன்றவற்றைக் குறிப்பிடும் உதாரண கிரகமான சனி உச்சம் பெற்று தனித்துள்ளது. சனி இருக்கும் ராசிக்கு, 1, 5, 2, 12-ஆவது ராசிகளில் எந்த கிரகமும் இல்லை. மேலும் வேறு கிரகங்களின் சம்பந்தமும் இல்லை. ஆனால் சனி இருக்கும் துலா ராசிக்கு, 9-ஆவது ராசியான மிதுனத்தில், ஒரே நட்சத்திர மண்டலத்தில் கேது கிரகம் உள்ளது. இது சனி, கேது சேர்க்கையாகும்.

முற்பிறவி சாபங்களையும், ரிஷிகளை யும், 18 சித்தர்களையும், பாமர மக்களை யும் குறிப்பிடும் உதாரண கிரகமாகும் கேது. இந்த சனி, கேது சேர்க்கை பாமர சாபத்தை குறிப்பிடுகின்றது. இராமரின் முந்தைய அவதாரங்களில் உண்டான பாமர சாபம் இப்பிறவியில் என்னவிதமான பலன்களை அவர் வாழ்க்கையில் தந்து அனுபவிக்கச் செய்தது என்பதை அறிவோம்.

சனியுடன் கேது இணைந்ததால், இராமருக்கு இளம் வயதிலேயே வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்ற ரிஷிகளின் தொடர்பு கிடைத்தது. சிறுவயதிலேயே, விசுவாமித்திரரின் யாகத்தை காவல் செய்ய அவருடன் காட்டிற்குச் சென்றார்.

தந்தையின் கட்டளையென்று, அரச உடை, ஆபரணங்களைக் களைந்து, பாமரர்கள் உடுத்தும் எளிய உடையை உடுத்தி காட்டிற்குச் சென்றார்.

இராமரின் வாழ்க்கையில் அரண்மனை, அந்தஸ்து, ஆடம்பரம் என வாழ்ந்த நாட்களைவிட, பாமரனாக வாழ்ந்த காலம்தான் அதிகம். பட்டத்திற்குரிய மூத்த மகனாகப் பிறந்திருந்த போதும், அரச பதவியை, முன்னோர்கள் தேடிவைத்த பூர்வீக சொத்துகளான நாடு, நகரம் போன்றவற்றையும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அரச பதவி, பட்டம் இழந்த இராமரின் முன்னோர் களில் ஒருவனான அரிச்சந்திரன்கூட தன் வாழ்வில் சுடுகாட்டில் பிணம் எரிக்கும் தொழில் செய்து பிழைத்தான். ஆனால் இராமர் எந்தவொரு தொழிலையும் செய்து பிழைக்க முடியாமல் தடுத்து விட்டது இந்த சனி, கேது சேர்க்கை.

(தொடரும்)

செல்: 99441 13267