ஜீவநாடி படித்துப் பலன்கேட்க வருபவர் கள் பலர் ஒரேயொரு கேள்வியைத்தான் அதிகமாகக் கேட்கிறார்கள். "ஐயா, இதுவரை நிறைய பேரிடம் ஜோதிடம் பார்த்துப் பலன் கேட்டுள்ளோம். ஒரே ஜாதகத்திற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமான பலன்களைக் கூறுகிறார்கள். இதில் எது சரியானது? எது சரியில்லாதது என்று தெரியவில்லை. எவர் கூறுவதை நம்பி செயல்படுவதென்று தெரியவில்லை. குழப்பம்தான் அதிகமாகிறது. மேலும், மிகப்பெரிய ஜோதிடர்கள் டிவியிலும், பேப்பர்களிலும் கூறும் பலன்கள் நடைமுறையில் நடப்பதில்லை. இதற்குக் காரணம் என்ன?

ஜோதிடர்கள் ஜாதகம் பார்த்துப் பலன்களைக் கூறிவிட்டு, பிரச்சினைகள், தடைகள் விலக நிறைய பரிகாரங்களை செய்யச் சொல்கிறார்கள். அவர்கள் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று, பணம் செலவுசெய்து, பரிகார பூஜைகள், ஹோமம், யாகங்களைச் செய்தும் பிரச்சினைகள் தீரவில்லை; தடைகள் விலகவில்லை. பரிகாரத்தால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இப்போது ஜோதிடம்மீதே நம்பிக்கை குறைந்துவிட்டது. ஜோதிடம் உண்மையா? அல்லது பலன்கூறும் முறை தவறானதா?

ஜீவநாடியில் சித்தர்கள் கூறும் பலன் களாவது எங்களுக்கு நல்ல தீர்வைத் தருமா?

வாழ்வில் சிரமம் தீர்ந்து நன்மை கிடைக்குமா?'

Advertisment

என்பது போன்ற கேள்விகளைத் தான் கேட்கிறார்கள். "பாலஜோதிடம்' வாசகர் களும் இதே கேள்வியைக் கேட்கிறார்கள்.

அதற்குத் தகுந்த பதிலை அறிந்து கொள்ளுங்கள்.

கணிதமுறை ஜோதிடம் வேதத்தில் ஒரு அங்கம் என்று கூறுகிறார்கள். வேதம் யாரால், எப்போது எழுதப்பட்டது என்று யாருக்கும் தெரியவில்லை என்று சிலரும்; வேதம் சுயம்புவாகத் தோன்றியது என்று சிலரும் கூறுகிறார்கள். ஆனால் காளிதாசர், வராஹமிஹிரர், ஆரியபட்டர் போன்ற இன்னும் பல வானியல் ஆய்வாளர்கள் கிரக சஞ்சார நிலையை ஆய்வுசெய்து, அவரவர் அனுபவம், ஆய்வுமுறைகளை ஜோதிட சுருதிகளாக எழுதி வைத்துள்ளார்கள்.

Advertisment

வானியல் ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக மாறுபட்டு பல வழிமுறைகளில் பலன்களை எழுதிவைத்துள்ளனர்.

இந்த நூல்களைப் படித்துவிட்டுப் பலன் கூறும் ஜோதிடர்களும் அவரவர் கற்ற வழியில் பலன்களைக் கூறுகிறார்கள். அதனால்தான் ஜோதிடப் பலன்கள் ஒரு நிலையில் இல்லை. ஜோதிடப் பலன் பார்க்கச் செல்பவர்களுக்கு குழப்பமும், ஒரு முடிவெடுக்கமுடியாத நிலையும் ஏற்படுகிறது. மேலும் வாக்கியம், திருக்கணிதம் என இருவித பஞ்சாங்க முறையிலும் பலன்கூறி குழப்பத்தை அதிகமாக்கிவிட்டார்கள்.

பஞ்சாங்கம் வானில் கிரகங்களின் நகர்வுகளையும், இருக்கும் இடத்தையும் கூறுமே தவிர, மனித வாழ்வில் உண்டாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் வழியைத் தராது. பஞ்சாங்கத்தின்மூலம் கிரகங்களின் நிலையை அறிந்து ஜோதிடர்கள் பலன்கூறுவார்கள்.

ஒருவரின் வாழ்க்கையில், அவ்வப்போது உண்டாகும் பிரச்சினைகள், சிரமங்கள் தீர்வதற்கு வழிகேட்டு, வேதமுறை கணித ஜோதிடர்களிடம் செல்லும்போது, அவர்கள் உங்கள் ஜாதகத்திலுள்ள கிரக அமைப்பு, நடப்பு தசை, புக்தி, கோட்சாரநிலை என இன்னும் பலமுறைகளில் கணக்கிட்டு நடப்பு தசை சரியில்லை. சூரியன் கெட்டுவிட்டது. சனி மறைவென்று கிரகங்களுக்குப் பலன் களைக் கூறுவார்களே தவிர, உங்கள் பிரச் சினைகள், காரியத்தடைகள் ஏற்பட்டதற்கு மூலகாரணத்தை அறிந்து கூறாமல், கோவில், குளம், பூஜை, ஹோமம், யாகம் என ஏதாவதொரு பரிகாரத்தைக் கூறி அனுப்பு வார்கள். நீங்களும் நம்பிக்கையுடன் பரிகாரங் களைச் செய்கிறீர்கள்.

rr

உதாரணமாக ஒருவர் தனக்கு வந்த வயிற்றுவலி தீர்வதற்கு மருத்துவரிடம் சென்றால், அவர் வயிற்றுவலி ஏற்பட்டதற்கு மூலகாரணத்தை முதலில் சோதனைசெய்து கண்டுபிடிப்பார். சாப்பிடாமல் பசியினா லும், அதிகம் சாப்பிட்டுவிட்டால் அஜீரணத் தாலும் வயிற்றில் புண் (அல்சர்) அல்லது கட்டி இருந்தாலும், இதுபோல் இன்னும் பலவிதங்களில் வயிற்றில் வலி உண்டாகலாம்.

மருத்துவர் நோய்நாடி, மூலகாரணத்தைக் கண்டறிந்து, நோய்தீர மருந்து தருவார். மேலும் எதிர்காலத்தில் வலிவராமல் முன்னெச் சரிக்கையாக இருந்து தடுத்துக்கொள்ள சரியான பத்திய முறைகளையும் கூறுவார். மருத்துவர் கூறுவதை முறையாகக் கடைப் பிடித்து வாழ்ந்தால் வருங்காலத்தில் நோய் வராமல் நாமே தடுத்துக்கொள்ளலாம்.

சித்தர்கள் கூறிய தமிழ் ஜோதிட முறையில் ஒருவர் வாழ்வில் உண்டாகும் சிரமம், தடைகளுக்கு மூலகாரணமாகவுள்ள முற்பிறவி பாவ- சாப- தோஷப் பதிவுகளை அறிந்து, அதிலிருந்து விடுபடவும், இனிவரும் எதிர்கால வாழ்வில் பாவ- சாபத் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமலிருக்க சரியான நிவர்த்தி வழிமுறைகளைக் கூறுவது. உடல்நோய்க்குத் தீர்வுதரும் மருத்துவம்போல் முற்பிறவி பாவ- சாபப்பதிவுகள் நிவர்த்தியாக வழிகூறுவது சித்தர்கள் கூறிய தமிழ்முறை ஜோதிடம்.

வேதமுறை கணித ஜோதிடம், பலன் கேட்டு வந்தவர்களுக்கு பலன் கூறுவது; பரிகாரங்களைக் கூறுவது, தமிழ்முறை ஜோதிடம் பலன் கேட்டு வருபவர்களின் பிரச்சினைகள் தீர நிவர்த்தி முறைகளைக் கூறி வழிகாட்டுவது.

ஒருவர் எவ்வளவு பெரிய பாவச் செயல்களைச் செய்தாலும், அந்த பாவத்தை ஏதாவதொரு பரிகாரத்தைச் செய்து தீர்த்து விடலாம் என்று கூறுவதால்தான் பலர் துணிந்து அதிகமாகப் பாவங்களைச் செய்கிறார்கள். பாவம் செய்தால் அதற்குப் பரிகாரமில்லை; அதற்குரிய தண்டனையை அனுபவித்துதான் தீரவேண்டும் என்று கூறினால், மக்கள் பாவம்செய்ய பயப் படுவார்கள்.

ஜோதிட முறையில் உண்டாகும் குழப்பம் பற்றி புராணத்தில் கூறியுள்ள ஒரு கதையை அறிவோம். ஒருமுறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் ஜோதிடம் பற்றி விவாதம் நடந்தது. அப்போது சனிபகவான், "கிரகங்களின் சஞ்சார நிலையைத் துல்லிய மாக அறிந்து கணக்கிட்டுப் பலன்கூறும் திறமை உள்ளவர்கள் யாராவது பூலோகத்தில் உள்ளார்களா?'' என்று கேட்டார்.

தேவ சபையில் இருந்த பிருகு மகிரிஷி சனிபகவானைப் பார்த்து, "கிரகங்களின் சஞ்சார நிலையை மிகச் சரியாகக் கணித்துப் பலன்கூறும் ஆற்றல் உள்ளவர்கள் நிறைய பேர் பூலோகத்தில் இருக்கிறார்கள்'' என்று கூறினார்.

இந்த உண்மையை அறிய சனிபகவான் உஜ்ஜயினி நகரத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து, "தம்பி, நான் காளிதாசனைப் பார்க்க உஜ்ஜயினி நகரத்திற்குச் செல்லவேண்டும். நகரத்திற்கு செல்லும் வழி இதுதானா?'' என்று கேட்டார்.

ஆடு மேய்ப்பவன், "நீங்கள் எதற்காக காளிதாசரைப் பார்க்கச் செல்கிறீர்கள்?'' என்று கேட்டான்.

"காளிதாசன் மிகப்பெரிய ஜோதிட ஞானம் உள்ளவரென்றும்; கிரகங்களின் சஞ்சாரநிலையைத் துல்லியமாகக் கணித்து ஜோதிடப் பலன்கள் கூறுவதில் வல்லவ ரென்றும் கேள்விப்பட்டேன். அவரிடம் ஜோதிடம் சம்பந்தமான சில விளக்கங் களைக்கேட்டுத் தெரிந்துகொள்ளச் செல்கிறேன்'' என்றார்.

சனி பகவான் கூறியதைக் கேட்ட இடையன், "இதற்காக நீங்கள் அவ்வளவு தூரம் சென்று காளிதாசரைக் காண வேண்டியதில்லை. நீங்கள் கேட்கவேண்டியதை என்னிடமே கேளுங்கள். விளக்கம் சொல்கிறேன்'' என்றான்.

சனிபகவான் அவனைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "சரி; இவனையும் சோதித்துப் பார்ப்போம்' என்று நினைத்து அவனிடம், "சனிபகவான் இப்போது எங்குள்ளார் எனக் கூறு'' என்றார்.

ஆடு மேய்ப்பவன் ஏதேதோ கூட்டிக் கழித்துவிட்டு, "சனீஸ்வரபகவான் இப்போது, உஜ்ஜயினி நகருக்கு அருகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்'' என்றான்.

இடையன் கூறியதைக்கேட்ட சனிபகவான் வியந்து போனார். ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு கிரகங்களின் சஞ்சார நிலையை இவ்வளவு துல்லியமாகக் கூறும் வானியில் ஜோதிடத் திறமை இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட சனிபகவான், கிரக சஞ்சாரத்தைக் கொண்டு வாழ்க்கையின் விதிப்பலன் கூறும் சூட்சும ரகசியங்கள் இவ்வளவு வெளிப்படையாக இருப்பது நல்லதல்ல என்றெண்ணி, இனிவரும் காலங்களில் பூலோக மனிதர்களால் கிரக சஞ்சாரநிலை, கிரகங்களைக் கணக்கிட்டு ஜோதிடர்கள் கூறும் பலன்கள் சரியாக இருக்கக்கூடாது. கிரகநிலை மறைந்தே இருக்கட்டும் என்று சாபம் தந்துவிட்டார்.

சனியின் சாபத்தால் கிரக சஞ்சாரநிலை கணக்கிலும், ஜோதிடப் பலன்கூறும் முறைகளிலும் பல குழப்பங்கள், வேறுபாடுகள் உண்டானது. கணிதமுறை ஜோதிடர்கள் கூறும் பலன்களும் நடக்காமல் போனது சனி சாபத்தால்தான் என்றொரு கதையுண்டு.

ஜோதிடம் பொய்யில்லை. கிரகங்களின் சஞ்சாரநிலை, ராசி, லக்னம், தசை, புக்தி போன்ற இன்னும் பலவற்றை கணக்கீடு செய்வதில் தவறும், பலன்கள் கூறுவதில் தவறுகளும் இருக்கலாம் அல்லது சனி பகவான் சாபத்தாலும் வேதமுறை கணித ஜோதிடப் பலன்கள் நடக்காமல் போகலாம்.

(தொடரும்)

செல்: 99441 13267