ஜோதிடத்தை விரும்புபவர், விரும்பாதவர் என அனைவரது வாழ்க்கையும் நவ கிரகங்களாலேயே வழிநடத்தப்படுகிறது. மனிதர்களின் வாழ்வில் ஒவ்வொரு விநாடியை யும் நவகிரகிரங்களே தீர்மானிக்கின்றன.

மனிதனும், மனித வாழ்க்கையும் மிகவும் விலைமதிக்க முடியாத செல்வமாகும். இத்த கைய செல்வம் ஒரு மனிதனின் முன்வினைப் பயனுக்கேற்ப அமைகிறது.

விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவை இருந்தாலும், பலர் வாழ்வில் ஏதாவதொரு விதத்தில் தொடர் பிரச்சினைகள், இழப்புகள், விரயங்கள், மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இதை ராகுகால வழிபாட்டால் சரிசெய்ய முடியும்.

நவகிரகங்கள் ஒன்பது. நிழல் கிரகங்களான ராகு- கேது தவிர்த்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது. ராகு- கேதுக்கள் சூட்சும வடிவில் உலாவரும் நிழல் கிரகங்கள் என்பதால், நாட்களுக்கு பதில் ஒவ்வொரு நாளும் ராகுகாலம் மற்றும் எமகண்டத்திற்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராகுகாலம் மற்றும் எமகண்ட நேர வழிபாட்டிற்கு நம் வாழ்வில் நடக்கும் பல பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை உள்ளது. இந்தக் கட்டுரையில் ராகுகால வழிபாட்டால் உண்டாகும் சுபப் பலன்களைப் பார்க்கலாம்.

Advertisment

ராகுகால அட்டவணை

ஞாயிறு: மாலை 4.30- 6.00, திங்கள்: காலை 7.30- 9.00, செவ்வாய்: மலை 3.00- 4.30, புதன்: பகல் 12.00- 1.30, வியாழன்: பகல் 1.30- 3.00, வெள்ளி காலை: 10.30- 12.00, சனி: காலை 9.00 - 10.30.

தினமும் ஒன்றரை மணி நேரம் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த நேரமாக ஒதுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் சுபகாரியங்கள், சுபகாரியப் பேச்சுகள், புதிய தொழில் துவங்குவது, புதுவீடு புகுவது, புதிய பொருட்கள் வாங்குவது, புதிய வேலையைத் துவங்குவது ஆகிவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. ஆன்மிகரீதியாக சுபகாரியங்கள் துவங்குவது ராகு காலத்தில் தவிர்க்கப்பட்டாலும், இது வழிபாட்டிற்குரிய மிக முக்கியமான நேரமாக சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வரும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி- அதைப் போக்கி, நன்மைகளை வரமாகப் பெறுவதற்கு ஏற்ற காலமென்றால் அது ராகுகாலம்தான்.

Advertisment

பொதுவாக ராகுகாலத்தில் ராகுவின் அதிதேவதை துர்க்கை வழிபாடு பரவலாக உள்ளது. ராகுகாலத்தில் உக்கிர தெய்வங்களுக்கு சக்தி அதிகமாக உண்டு. அதனால் ராகுகாலத்தில் துர்க்கை, காளி, பிரத்யங்கரா தேவி, சண்டி, சூலினி, காலபைரவர், சரபேஸ்வரர், நரசிம்மர், வீரபத்திரர் போன்ற உக்கிர தெய்வங்களை வழிபட்டால் கேட்ட வரம் உடனே கிடைக்கும். அதிலும் ராகுகாலத்தில் விளக்கேற்றி வைத்து எந்த கோரிக்கையை வேண்டினாலும், என்ன பிரச்சினையைச் சொல்லி முறையிட்டாலும் அது உடனடியாகத் தீரும். சகலவிதமான சர்ப்ப தோஷங்களும் விலகும்.

அமிர்தகடிகை

ராகுகாலத்தை பாம்பாக வைத்து, முதல் அரைமணி நேரம் தலைப்பாகம்; இரண்டாம் அரைமணிநேரம் உடல்பாகம்; மூன்றாம் அரைமணி நேரம் வால்பாகம் எனப் படுகிறது. இதில் இறுதி அரைமணி நேரம்தான் அமிர்தகடிகை எனும் விசேட காலமாகும். இந்த நேரம் பரிகாரங்கள் செய்ய மிகவும் உகந்த நேரமும், மிகவும் பலன் தரக்கூடியதுமாகும். கடைசி அரைமணி நேரம் செய்யப்படும் பூஜைகள், பரிகாரங்கள் நிச்சயம் காரியசித்தி தரும்.

ஒவ்வொரு கிழமைகளில் வரும் ராகு காலத்திற்கு சில குறிப்பிட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தியுண்டு. இந்த ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்குமென்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமை

இது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிவரை ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் என்பதால் மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் வேளையில், நாம் சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும், சூரிய தசை, புக்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதகரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு- கேது தோஷம். கிரகண தோஷம், அகலும். ராகு தசையால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் நீங்கும்.

தந்தை- மகன் உறவில் சுமூகம் ஏற்படும். இதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் அகலும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றிகிட்டும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யலாம்.

ss

திங்கட்கிழமை

சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாள். ராகுகாலம் காலை 7.30 முதல் 9.00 மணிவரை. கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சந்திர தசை, புக்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதகரீதியான சந்திர தோஷம் அகலும். சந்திரன், கேது சேர்க்கைக்கு மிகச்சிறந்த தீர்வு கிடைக்கும். கெட்ட பெயர், அவமானத்திலிருந்து மீளமுடியும். சந்திர தோஷம், ஜல கண்டம் அகலும். இடது கண், மாதவிடாய், கருப்பை தொடர்பான நோய் நிவர்த்தியாகும். மன சஞ்சலம், மன அமுத்தம் , மனோவியாதி, ஞாபக மறதி நீங்கும். மேலும் பலன் பெற பச்சரிசி உணவை தானம் செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை

இந்த நாளில் செவ்வாயின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். ராகுகாலம் மலை 3.00 மணிமுதல்- 4.30 மணிவரை. மேஷம், விருச்சக லக்னம், ராசியினருக்கும், செவ்வாய் தசை, செவ்வாய் புக்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதகரீதியான தோஷம் அகலும். செவ்வாய் தோஷம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் அகலும். கடன் நிவர்த்தியாகும்.

உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும். சொத்து தொடர்பான வம்பு, வழக்கு வில்லங்கங்களிலிருந்து மீளமுடியும். இனம்புரியாத நோய், அடிக்கடி விபத்து, கண்டம் அகலும். விளையாட்டு வீரர்கள், இராணுவம், காவல்துறையினர் போன்றவர்களுக்கு ஏற்றம் மிகும். ரியல் எஸ்டேட், கட்டடக் கலைஞர்களுக்கு தொழில் அபிவிருத்தி ஏற்படும். பலனை அதிகரிக்க மாதுளை சாறால் அபிஷேகம் செய்யவேண்டும்.

செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிமுதல் - 4.30 மணிவரையிலான அமிர்தகடிகை நேரத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை சாதம் படைத்து, எலுமிச்சை மாலை அணிவித்து, ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு தாம்பூலம், தட்சிணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கித் திருமணம் நடக்கும்.

இந்த நேரத்தில் துர்க்கையம்மனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப் பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டால் அனைத்துவித தரித்திரமும் நீங்கும்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்ரகாளி அவதரித்த நேரம். அந்த நேரத்தில் காளியை வழிபட்டால் சகல சர்ப்ப தோஷங்களும் விலகும்.

புதன்கிழமை

புதன் பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள். ராகுகாலம் பகல் 12.00 மணிமுதல் 1.30 மணிவரையாகும். மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர் களுக்கும், புதன் தசை, புக்தி நடப்பவர் களுக்கும் ஜனன ஜாதகக் குற்றம் நீங்கும். புதன் நீசம்பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளைகளும் படிக்கும். குழந்தைகள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். கணக்குப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். இளவயது குழந்தைகளின் தவறான நட்பால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். நண்பர்களிடையே நல்ல நட்பு நீடிக்கும். வங்கிக் கடன் தீரும். காலி நிலம் தொடர்பான சர்ச்சைகள் அகலும். தோல் வியாதி, நரம்பு மண்டல பாதிப்பு நீங்கும்.

ஜோதிடர்களுக்கு வாக்கு வண்மை அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு வேலையில் இருந்துவரும் இடர்கள் குறையும். பத்திரம், அடமானம், ஜாமின் பிரச்சினைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். பூமி லாபம் கிட்டும் புதனை வலிமைப்படுத்த பச்சைப் பயறு சுண்டல் தானம் நல்ல பலன் தரும்.

வியாழக்கிழமை

குரு கடாட்சம் மிளிரும் நாள் வியாழக் கிழமை. பகல் 1.30 மணிமுதல் 3.00 மணிவரை ராகுகாலமாகும். தனுசு, மீன ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குரு தசை, புக்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக நீதியான தோஷம் நீங்கும். பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். குரு நீசம், குரு அஸ்தமனம் பெற்றவர்களுக்கு கெடுபலன் குறையும். தர்மகர்மாதிபதி யோகப் பலன் முழுமையாகக் கிடைக்கும்.

கோவில் தர்மகர்த்தா, நீதிபதிகள் பதவியிலிருந்த பிரச்சினை தீரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப மங்கல நிகழ்வுகள் ஏற்படும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். அடமானத்தில் இருக்கும் நகை மீண்டுவரும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வாராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க மஞ்சள்நிற லட்டை தானம் தரவேண்டும்.

வெள்ளிக்கிழமை

சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்தது வெள்ளிக்கிழமை. ராகுகாலம் காலை 10.30 முதல் பகல் 12.00 மணிவரை. ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கும், சுக்கிர தசை, புக்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதகக் குற்றம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பரப் பொருள்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

11 வெள்ளிக்கிழமைகள் துர்க்கையம்மனை அமிர்தகடிகை நேரத்தில் (11.30- 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை, பழம், பாக்கு வைத்து வணங்கி, சுமங்கலிப் பெண்களுக்குக் கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும்.

15 வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமிக்கு மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவதொரு பூவினால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும். மேலும் சுபப்பலன் அதிகமாக வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் அர்ச்சனை செய்யவேண்டும்.

சனிக்கிழமை

சனிக்கிழமைகளில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ராகுகாலம் காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரை. மகரம், கும்ப ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்களுக்கும், சனி தசை, புக்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஜாதகத்தில் சனி நீசம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கு தொழில் முடக்கம் தீரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சை, குலதெய்வக் குற்றம் அகலும். கடன் வாங்கி, வட்டியும் அசலும் கட்ட, முடியாமல் தவிப்பவர்களுக்கு நலம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். எதிரிகளின் தொல்லை அகலும். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, கர்மவினைத் தாக்கம் குறையும். தீராத நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். நோயினால் ஏறுபடும் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்துசென்ற உறவுகள் மீண்டும் சேருவார்கள் எதிரி தொல்லைகள் விலகும்.

வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள், வெளிநாட்டுத் தொடர்புடைய விஷயங்கள் நிறைவேறும். முன்னோர்கள் செய்த பாவமும் குலத்திற்கு ஏற்பட்ட சாபமும் நீங்கும். முந்தைய ஏழு பிறவிகளில் செய்த பாவம், முன்னோர்கள்- ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்களால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும். இழப்புகள், விரயங்கள் ஏற்படாது. மனக்கவலை, வறுமை நிலை, இயற்கையால் பாதிப்பு அறவே நீங்கும். மேலும் பலனை அதிகரிக்க ராகுகாலத்தில் விநாயகருக்கு அறுகம்புல் மாலைசாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நிவேதனம் செய்து வழிபாடு செய்யவேண்டும்.

ஒவ்வொரு நாளும் தங்களுடைய பல கடமைகளுக்காக ஒடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் வாழ்க்கையை எளிமையாக்குவது ஜோதிடம். மனித வாழ்க்கைப் பயணம் சுமுகமாக ஜோதிடம் கூறும் தீர்வு ராகுகால வழிபாடு. தினமும் ராகுகாலமான ஒன்றரை மணி நேரத்தை இறைவழிபாட்டிற்கு ஒதுக்கி வைத்தால் வாழ்க்கை இலகுவாகும்.

செல்: 98652 20406