மேஷ ராசியிலிருந்த ராகு, மீன ராசிக்கு ஜென்ம ராகுவாக மாறினார். ராகுவால் மீனம், கடகம், விருச்சிக ராசிக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். மீனம், கடகம், விருச்சிகத்தில் கிரகங்கள் இருப்பவர்கள், ராகு- கேது தசை நடப்பவர்கள் அதிக துன்பத்தை அடைவர். மீனத்தில் கடந்த எட்டு மாதங்களாக, ரேவதி நட்சத்திரத்தில் ராகு பயணித்து ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு கடும் சோதனையையும், வேதனையையும் தந்துவந்தார். அதே போல் ஆயில்யம், கேட்டை நட்சத்திரக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் சந்திரனுடன் ராகு சேர்ந்தவர்கள் ஏமாற்றம், துரோகம், போலீஸ், கோர்ட் படியேறவேண்டி இருந்திருக்கும். தாயார், பெண்களுக்கு பாதிப்பு, பெண்களால் பாதிப்பு என நோய், எதிரி, கடனால் ஒரு பாதிப்பை சந்தித்தே வந்திருப்பர்.
இனி ராகு ரேவதி நட்சத்திரத்திலிருந்து ஜூலை 8 முதல் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் எட்டு மாதங்கள்- அதாவது 2025 மார்ச் 16 வரை இருப்பார். ராகு- கேது ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற 18 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். ஒரு ராசியில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். ஒன்பது நட்சத்திர பாதங்களைக் கடக்க வேண்டும். ராகு ஒரு நட்சத்திர பாதத்தில் இரண்டு மாதம் என 18 மாதம் எடுத்துக் கொள்வார். இதனால் உத்திரட்டாதி, பூசம், அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆசையைத் தூண்டி கடும் மன உளைச்சல் தருவார். கூடுதலாக மேற்கண்ட நட்சத்திரங்களில் கிரகங்கள் இருந்தாலும் வீண் சங்கடங்களைத் தருவார். குறிப்பாக சந்திரனுடன் ராகு, கேதுக்கள், ஆறு, எட்டு, பன்னிரண்டாம் கிரகம், பாதகாதிபதி, மாரகாதிபதி கிரகங்கள் சேர்க்கை, பார்வை தொந்தரவைத் தரும். உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதத்தை சேர்ந்தவர்களுக்கு கடந்த இரண்டு மாதத்திற்குமுன்பே அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத சூழ்நிலையைத் தந்திருப்பார்.
அதேபோல் கேது பயணிப்பது அஸ்த நட்சத்திரம். அதில் கிரகம் இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். ராகு- கேதுக்கள் பயணிக்கும் கிரகப் பலன்கள் முற்றிலும் வினோதமாகவே இருக்கும். கவனமாக செயல்பட்டால் இழந்ததைப் பெறலாம். இல்லையென்றால் இருப்பதைத் தொலைக்க நேரும்.உத்திரட்டாதியில் இருக்கும் ராகு நவகிரகங்களைக் கடக்கப்போகும் பலன்கள்- பரிகாரங்கள்.
சூரியன்
ராகு, பிறந்த ஜாதகத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் சூரியன்மீது எட்டு மாதங்கள் பயணிக்கும்போது ஜாதகருக்கு ஏற்படப்போகும் பலன்கள்.நவகிரகங்களில் சூரியன் தலைமை கிரகம். அதன்மீது செல்லும்போது உயிர்க் காரகமான தந்தை, மூத்த குழந்தை, மாமனாருக்கு கண்டம் அல்லது அவர்களால் பாதிப்பை ஏற்படுத்துவார். என்னால் "எல்லாம் முடியும்; எனக்கு எல்லாம் தெரியும்; என் அறிவால்தான் முன்னேறி இருக்கிறேன்; யாருடைய அறிவுரையும் தேவையில்லை; என் வாழ்க்கையை நானாக செதுக்கி இருக்கிறேன்' என தற்பெருமை பேசியவர்களின் தலைகணத்தைப் போக்க, ராகு சூரியனைக்கடக்கும்போது, ஜாதகருக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லி புரியவைப்பார். சூரியன் பூசம், அனுஷ நட்சத்திரத்தில் இருப்பவர்களுக்கும் இதே பலன் பொருந்தும். சூரியன் மாரகாதிபதியாக இருந்தால் மாரகம், அதற்கொப்பான கண்டம், கௌரவம், தன்மான இழப்பை சந்திப்பர். நல்ல நிலையில் சுபத்தன்மையுடன் சூரியன் இருந்தால் புகழடைவர். பாதகாதிபதியாக சூரியன் இருந்தால் ஜாதகருக்கு ஏதாவது பாதகம் தரக்கூடிய கெடுபலனைத் தருவார். 6, 8, 12-ஆம் அதிபதிகளாக சூரியன் இருந்து அதனைக் கடந்தால் நோய், எதிரி, கடனால் பாதிப்பை அடைவர். சூரியனுடன் சுபகிரகங்கள் வலுத்து நின்றால் அரசாங்க லாபம், அனைத்தும் லாபகரமாகவே இருக்கும். சூரியனுடன் ராகு- கேதுக்கள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நெருங்கிய டிகிரியில் இணைந்திருந்தால் சொல்லெணா துயரம் ஏற்படும். சூரிய புக்தி, ராகு- கேது புக்தி நடந்து, ராகு சூரியனைப் பார்த்தால் மனம் நோகும் சம்பவங்கள் நடக்கும்.
பரிகாரம்: தினம் சூரிய நமஸ்காரம் செய்ய பெரிய ஆபத்துக்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். உயிர்க்காரகர்களான அப்பா, மூத்த குழந்தை, மாமனாரைப் பிரிந்திருத்தல் மனசங்கடத்தைத் தவிர்க்கும். குடும்பத் தலைவராக இருப்பவர்கள் குடும்பத்தைப் பிரிந்திருப்பது கெடுபலனைக் குறைக்கும். அரசு சார்ந்த பணிகளை ஒத்தி வைப்பது நல்லது. தலைகனத்தைத் தவிர்த்தால் தலைகுனிவு ஏற்படாது. தலைநிமிர்ந்து நடக்கலாம். அதிகாரம் செய்வதை நிறுத்தி அன்பால் காரியத்தை சாதிக்கவும். மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை செய்வது ஆரோக்கியத்திற்கு நன்று. வலது மூக்கு, தண்டுவடம், இதயத்தில் அக்கறை தேவை. கண் கண்ணாடி மாற்றிக்கொள்வது சிறப்பு. மொட்டைமாடியில் வெள்ளையடித்தல், பராமரிப்புப் பணி செய்தல் சிறப்பு. சிவன் கோவில் கோபுர நிழலைக் காண்பது நன்று. துர்க்கையம்மனுக்கு ராகு கால பூஜைசெய்வது சிறப்பு.
சந்திரன்
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந் தவர்கள் அதிக கவனத்துடன் எட்டு மாதங்கள் இருக்கவேண்டும். இது பூசம், அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்தும். சந்திரன் தாயார், மாமியார், மகள் மற்றும் பெண்களைக் குறிக்கக்கூடியவர். குடும்பத்தில் பெண்களால் தொல்லை, பெண்களுக்கு கண்டம் தரக்கூடிய நேரம். சந்திரனுடன் ராகு- கேது இணைந்த வர்களுக்கு அதிக பாதிப்பைத் தரும். வாழ்க்கையைப் புரட்டிப்போடக்கூடிய நேரம். சந்திரனுடன் பாவகிரக சேர்க்கை, பார்வை துன்பத்தை அதிகப்படுத்தும். சந்திரன் மனநிலைகாரகன், உடலைக் குறிக்கக்கூடிய கிரகம். அதனால் மனக்குழப்பம், தவறான முடிவுகளை எடுக்கச் செய்வார். நம்பி வந்தவர்களை ஏமாற்றியதற்கான காலமாக இருக்கும். துரோகம், வஞ்சகம், வன்மம் செய்தவருக்கு சோதனை, வேதனை கூடுதலாம். உடல்நிலையில் அக்கறை தேவை. தாய்வழி சொத்துப் பிரச்சினை உண்டாகும். நிறைவேறாத விஷயங்களில் ஆசை அதிகரிக்கும். பேராசை பெருநஷ்டம் தரும். எக்ஸ்ரே, ஸ்கேன் எடுத்துக் கொள்ள நேரும். ராகு- கேதுக்கள் தோல் வியாதியைத் தருவார். விஷத்தால் ஆபத்து, கண்டத்தைத் தருவர். "ஏன்டா பிறந்தோம்' என வருத்தப்படும் அளவு சம்பவங்கள் ஏற்படும். சுப வலுப்பெற்றவர்கள் சோதனையிலிருந்து மீளக்கூடிய காலம். விவசாயத்தில் தண்ணீர் பிரச்சினை தீரும். மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சந்திர புக்தி, ராகு- கேது புக்திகள் சோதனை அதிகம் தரும்.
பரிகாரம்: ஆசையைக் குறைத்துக்கொண்டால் அவதி குறையும். கடன் கிடைக்கிறது என்பதற்காக வாங்கி வம்பில் மாட்டிக்கொள்ளக் கூடாது. வெளிநாட்டுப் பயணத் தடை ஏற்பட்டு, பயணத்தால் லாபம் உண்டாகும். பெண் தெய்வ வழிபாடு நன்மை தரும். கேரள பகவதி அம்மன் வழிபாடு இழப்பை ஈடுகட்டக்கூடியதாக இருக்கும். பசியுடன் இருப்பவர்க்கு அன்னதானம் கொடுக்கவும். புனித நதிக்குச் சென்று நீராடி வருதல் வருத்தங்களைப் போக்கும். தாயாருக்கு பாதபூஜை செய்வது நன்மை சேர்க்கும். மூன்றாம்பிறை வழிபாடு, சந்திர னார் கோவில்சென்று வழிபடுதல் மற்றும் திங்கட்கிழமை ராகு காலத்தில் ராகுவிற்குப் பாலாபிஷேகம் செய்தால் கெடுபலன் குறையும்.
செவ்வாய்: ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும், பாவகிரகமான செவ்வாய்மீது செல்லும்போது கடும் நெருக்கடியைத் தருவார். உயிர் காரகத்தில் செவ்வாய் சகோதரர், கணவரைக் குறிக்கும் கிரகம். அதனால் கணவர், சகோதரருக்கு கண்டம், அவர்களால் மனக்கசப்பு உண்டாகும். செவ்வாய் ரத்தத்தைக் குறிக்கும். இதனால் ரத்த அழுத்தம், விபத்தால் ரத்தம் வெளியேறுதல், ரத்தம் சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தும். பல், எலும்பு பிரச்சினை, பிரசவத்தில் பிரச்சினை உண்டாகும். லக்னத்திற்கு செவ்வாய் எந்த அதிபதியோ, அந்த அதிபதியை பாதிக்கும். மாரகாதிபதி, பாதகாதிபதி, மறைவிட அதிபதிகளான 6, 8, 12-டுடன் தொடர்புகொண்டால் இழப்பு, விரக்தியைத் தருவார். ஜனன ஜாதகத்தில் செவ்வாய் ராகு- கேது இணைவு கடுமையைத் தரும். சனி, சூரியன், புதன், லக்ன பாவிகளாக இணைந்திருந்தால் அதிக சோதனை தரும் காலமாகவே இருக்கும். கோர்ட், கேஸ், பிரிவினை, பிரச்சினை தருவார். வாய் பேச்சால் வம்பு உண்டாகும். வீட்டில் இருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பாதிப்படையும். கட்டுமானப் பணி, ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்படையும். அதிக கோபம் உண்டாகும். செவ்வாய் புக்தி, ராகு, கேது புக்தி தொல்லை தரும்.
பரிகாரம்: ராகு கடல் ராசியான மீனத்தில் இருப்பதால் திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று பரிகாரம் செய்து கொள்வது, செவ்வாய்மீது ராகு செல்வதால் உண்டாகும் தோஷ பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உதவுதல், விட்டுக் கொடுத்தல், பங்கு துரோகம் செய்யாதவர்களுக்கு ராகு மேன்மையான பலன்களை வாரி வழங்குவார். செவ்வாய், ராகு ஸ்தலம் சென்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்வதால் அத்தனை பிணி, பீடை நீங்கும். விபத்து கண்டம், ஆயுள் தோஷம் நீங்கும். கார உணவுகள் உண்பதைத் தவிர்க்கவும். வெற்றிலை மாலை முருகருக்கு சாற்ற வெற்றிமேல் வெற்றி உண்டாகும். பைரவருக்கு உணவு, தேய்பிறை அஷ்டமி வழிபாடு வரும் துன்பத்தைத் தடுக்கும். ரத்த தானம் உற்சாகம் உண்டாக்கும்.
குரு: ஆண்களுக்கு குரு ஜாதகரைக் குறிக்கும் கிரகம். ராகு, பிறந்த ஜாதகத்தில் உத்திரட்டாதியில் இருக்கும் குருமீது, செல்லும்போது ஜாதகரின் உடல்நிலை, மனநிலையை பாதிக்கும். எதையும் தாங்கும் மனம் கொண்டவராக வாழ்ந்தவரை, எல்லாம் இழந்து துடிக்கும் நிலையைத் தருவார். யாரை நம்பி பணம் கொடுத்தாலும் நஷ்டம் ஏற்படும். பணம் திரும்பப் பெறுவதில் சோதனை உண்டாகும். ஏலச்சீட்டு, பாண்டு பணம் பாதிக்கும். தங்கம் அடகு வைக்க நேரும்.இந்த நேரத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பதை நிறுத்தி வைக்கலாம். முதலீட்டில் கவனம் தேவை. எந்த தெய்வத்தை வழிபட்டும், நான் வேண்டிய வரம் கிடைக்கவில்லையே என கடவுள்மீது கொண்ட நம்பிக்கையை இழப்பர். குழந்தை பிறப்பில் தாமதம், டெஸ்ட் டியூப் பேபி பிறக்க வழி கிடைத்தல், முறையற்ற வகையில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கௌரவக் குறை ஏற்படும். ஞாபக சக்தி குறையும். பொதுவாக ராகு ஆசையைத் தூண்டிக் கெடுப்பார். ரத்த உறவுக்காரரை இழக்க நேரும். பிள்ளைகளால் பாதிப்பு, புத்திர சோகம் விரக்தி உண்டாகும். பெரும் பணத்தை இழக்க நேரும். மூட்டுவலி உண்டாகும். சுயநலத்தால் அழிவுப் பாதைக்குச் செல்வர். தீயவழி சென்று பிரச்சினையில் மாட்டிக்கொள்வர். இனம்புரியா பயம் ஏற்படும். குரு புக்தி, ராகு- கேது புக்தி நடப்பவர்களுக்கு அதிக துன்பம் ஏற்படும்.
பரிகாரம்: வருகின்ற எட்டு மாதத்தில் ராகுவால் வரும் பிரச்சினைகளைத் தவிர்க்க, தப்பிக்க பரிகாரத்தைச் செய்துகொள்வது அவசியமானது. குரு ஸ்தலமான ஆலங்குடி சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்துகொள்வது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை வியாழன்தோறும் இட்டு வழிபடுவது சிறப்பு. திருச்செந்தூர் முருகனை வழிட்டுவர துன்பம் தீரும். குழந்தைகளுக்கு வியாழக்கிழமை குரு ஹோரையில் லட்டு வாங்கித் தருவது சிறப்பு. ஏழைக் குழந்தைகளுக்கு மஞ்சள் நிற ஆடைகள் கொடுப்பது சிறந்த பலன் தரும். குருபகவானுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு பலாப் பழ தானம் தருவதால் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க முடியும். வியாழக்கிழமை ராகு காலத்தில் பாலாபிஷேகம் திருநாகேஸ்வரத்தில் செய்துகொள்ளவேண்டும்.
சனி: செய்யும் தொழிலில் பாதிப்பு, சோம்பேறிதனம், ஏமாற்றி சம்பாதிக்கும் எண்ணம், மறைந்து வாழும் நிலை, திறமையை வெளிக்காட்ட முடியாத சூழல் உண்டாகும். ஆயுள் கண்டம், பங்காளி மரணம், வீட்டிற்குப் பிரச்சினை தேடிவருதல், ஆணவத்தால் அறிவை இழத்தல், முதுகெலும்பு, மூட்டுவாதம், பெருநரம்பு பிரச்சினை, உறவில் மரணம், ஈமகாரியம் செய்யும் நிலை ஏற்படும். தீயவர் சேர்க்கை, சிறைவாசம் ஏற்படும் சூழல், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை போன்ற கெடுபலன்கள் அதிகம் நடைபெறும் காலம். ஏதாவது ஒருவகையில் பயத்தைக் கொடுத்து மிரட்டுவார். லக்னத்திற்கு சனி எந்த வீட்டுக்குரியவரோ அந்த சுபப் பலனைக் கெடுத்துவிடுவார். வீட்டில் முதியவர் நலன் கெடும். பாதகாதிபதி, மாரகாதிபதி ஜாதகரை பாதித்துவிடும். சனி தசை, சனி புக்தி, ராகு, கேது புக்தி நடந்தால் கெடுபலன் அதிகமாகவும், தனித்த கிரகம் மட்டும் என்றால் சுமாரான பலனையும் தரும். சுபகிரகப் பார்வை திடீர் அதிஷ்டம், செல்வாக்கு, பெரும் பணத்தை அள்ளித் தருவார்.
பரிகாரம்: எட்டு வைக்கமுடியாத முதியவர்களுக்கு ஊன்றுகோல், வீல் சேர், வாகனம் வாங்கித்தர, தேங்கி நின்ற காரியங்கள் நடக்கும். முதியவர்களுக்கு உணவு, உடை தானம் செய்ய அதே குறை இருந்தால் நீங்கும். கொடுத்தால் வருமானம் வரும். கழிப்பறை தூய்மை செய்பவர், குப்பை அள்ளுபவர், கீழ்நிலை ஊழியர்களுக்கு உதவுதல் உத்தமமான பலன்களை அள்ளித்தரும். ஆஞ்சனேயர் வழிபாடு, மனித தலையற்ற தெய்வங்களை வழிபடுதல் சிறப்பைத் தரும். சனி, ராகு புக்தியிலிருந்து தப்பிக்க தெய்வ அருள் தேவை.
(தொடர்ச்சி அடுத்த இதழில்...)
செல்: 76675 98822.