ஜோதிடரீதியாக மக்களிடையே நிலவும் பெரிய சந்தேகம் என்னவென்றால், அது ராகு- கேது தோஷத்தைப் பற்றியதுதான். ஜாதகம் பார்க்கவரும் பெரும்பாலானோர் தங்கள் ஜாதகத்தில் ராகு- கேது தோஷம் இருக்கிறதா, ராகு பாதிப்பைத் தருமா என்று கேட்கிறார்கள். சிலர் ஒருபடி மேல்சென்று ராகு- கேதுவை மையமாக வைத்து காலசர்ப்ப தோஷமா அல்லது யோகமா என்று கேட்கிறார் கள். இதற்கு ஒரு விளக்கம் தரவே இந்தக் கட்டுரை.

நவகிரகங்களில் ராகு- கேது நிழல் கிரகங்கள். ராகு எந்த ராசியில் இருக்கிறதோ அதற்கு 7-ல் கேது இருக்கும். இரண்டும் பின்னோக்கிச் செல்பவையாகும். ஒரு ராசியில் 18 மாதங்கள் சஞ்சாரம் செய்யும் ராகு- கேதுவுக்கு சொந்த வீடில்லை. எந்த வீட்டில் உள்ளனவோ அதனை சொந்த வீடாகக்கொண்டு பலனைத் தரும்.

பொதுவாக ராகு- கேது ஜென்ம லக்னத்திற்கு 3, 6, 10, 11-ல் இருந்தால் நற்பலனைத் தரும். அனுபவரீதியாக ராகு- கேது நின்ற வீட்டதிபதி பலமாக இருந்தால் நற்பலன் கிடைக்கிறது. நீசம், பகை பெற்றிருந்தால் கெடுபலன் ஏற்படுகிறது. அதுபோல ராகு- கேதுவை மையமாக வைத்து பேசப்படும் காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் ஆகியவைபற்றி எந்த மூலநூல்களிலும் கருத்துகள் இல்லை. பின்னர் வந்த ஜோதிடர்கள்தான் காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என தங்கள் அனுபவங்களை எழுதி வைத்துள்ளனர்.

Advertisment

raghu

குறிப்பாக, திருமணப் பொருத்தம் பார்க்கும்போது நன்கு விஷயம் தெரிந்த ஜோதிடர்கள் தெளிவான வழி காட்டுகிறார்கள். ஆனால் அரைகுறையாக ஜோதிடம் தெரிந்த சிலர் மேலோட்டமாகச் சொல்லும் கருத்துகளால் பலருக்குத் திருமணம் தாமதமாவது மட்டுமல்லாமல், வரன் பார்க்கும் பெற்றோர் கடுமையான மன உளைச்சல் அடைகிறார்கள்.

ராகு- கேது ஆகியவை திருமண வாழ்க்கைரீதியாக ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்ப்போம். ஒரு ஜாதகத்தில் 7-ஆம் வீடு களத்திர ஸ்தானமாகும். 2-ஆம் வீடு குடும்ப ஸ்தானமாகும். 7-ஆம் வீடு திருமண வாழ்க்கை, கணவன்- மனைவி உறவு எப்படியிருக்கும் என அறிய உதவுகிறது. 2-ஆம் வீடு குடும்ப ஒற்றுமை, குடும்பத்திலுள்ள உறவினர்கள் ஒற்றுமை ஆகியவற்றை அறிய உதவுகிறது. ஆண்கள் ஜாதகத்தில் களத்திர காரகனாக சுக்கிரனும், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் விளங்குகிறார்கள்.

திருமண வாழ்வு மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதற்கு 2, 7-ஆம் வீடுகள் மற்றும் ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன், பெண் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருப்பது அவசியம். 2, 7-ல் ராகு- கேது இருப்பதும், ஆண்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி மற்றும் சுக்கிரன் ராகு- கேது சேர்க்கை பெறுவதும், பெண்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி மற்றும் செவ்வாய் ராகு- கேது சேர்க்கை பெறுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 7-ஆமதிபதி மற்றும் செவ்வாய், சுக்கிரனுக்கு முன் ராகு- கேது மிக அருகில் இருப்பது- அதாவது 7-ஆமதிபதி மற்றும் செவ்வாய், சுக்கிரனுக்கு 2 அல்லது 3 டிகிரிக்கு முன்பு ராகு- கேது இருப்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

ஒரு ஜாதகத்தில் 2, 7-ல் ராகு- கேது இருப்பதைவிட செவ்வாய், சுக்கிரனுக்கு முன்பு இருக்கும் ராகு- கேது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. அப்படிபட்ட நிலையில் ராகு- கேது தசை அல்லது புக்தி திருமணத்திற்குப்பிறகு வந்தால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

ஜென்ம லக்னத்திற்கு 2, 7-ல் ராகு- கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு மணவாழ்க்கை நன்றாக இருக்காது என கூறிவிடமுடியாது. 2, 7-ல் ராகு- கேது இருந்து திருமணத்திற்குப்பிறகு 10- 15 வருடங்களுக்கு ராகு- கேது தசை வராம-ருந்தால் ராகு- கேதுவால் பாதிப்புகள் இருக்காது, அதுபோல திருமணத்திற்குமுன்பே ராகு- கேது தசை முடிந்துவிட்டால் கெடுதி இருக்காது.

ஜோதிடத்தில் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு முறைகள் இருந்தாலும், பாரம்பரிய முறைப்படி ஜாதகக் கட்டத்தில் 2, 7-ல் ராகு- கேது இருந்து, பாவகக் கட்டத்தில் ராகு- கேது இடம் மாறியிருந்தால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. 2-ல் ராகு- கேது அமைந்து, திருமணத்திற்குப்பிறகு 2-ல் அமைந்த ராகு- கேது தசை வந்தால், அக்காலத்தில் சூழ்நிலை காரணமாக ஜாதகர் ஓரிடத்தில்- குடும்பம், மனைவி, பிள்ளைகள் ஓரிடத்தில் இருக்கும் நிலை; அடிக்கடி வேலை நிமித்தமாகப் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். கூட்டுக் குடும்பமாக இருக்கமுடியாது.

7-ல் ராகு- கேது அமைந்து, திருமணத்திற்குப் பிறகு வரும் காலத்தில் ராகு- கேது தசை நடைபெற்றால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு, மண வாழ்வில் மகிழ்ச்சிக் குறைவு ஏற்படுகிறது. சில இடங்களில் பிரிவினைவரை செல்கிறது. கணவன்- மனைவி இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் சிறப் பாக இருந்தால் சிறுசிறு பாதிப்புகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள். குறிப்பாக 7-ல் ராகு- கேது இருந்தால் சொந்தத்தில் திருமணம் செய்யாமல், அந்நியத்தில் வேறு பிரிவு அல்லது கலப்புத் திருமணமாக அமையும்போது வாழ்க்கை ஒற்றுமையாகச் செல்கிறது. பொதுவாக ராகு முஸ்லிம் மதத்தையும், கேது கிறிஸ்துவ மதத்தையும் குறிக்கும்.

சில இடங்களில் கூர்ந்து கவனித்துப் பார்த்தால், ஒரு ஜாதகத்தில் 7-ஆம் வீடு, 7-ஆமதிபதி, களத்திர காரகன் ராகுவின் ஆதிக்கத்தில் வலுவாக இருந்து, சூரியன், சந்திரன் பாவகிரக சாரம்பெற்று பாதிக்கப்பட்டிருந்தால், அந்த ஜாதகர் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நபரைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. அதுபோல ஒரு ஜாதகத்தில் 7-ஆம் வீடு, 7ஆமதிபதி, களத்திர காரகன் கேதுவின் ஆதிக்கத்தில் வலுவாக இருந்து, சூரியன், சந்திரன் பாவகிரக சாரம்பெற்று பாதிக்கப்பட்டிருந்தால் அந்த ஜாதகர் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த நபரைத் திருமணம் செய்ய நேரிடுகிறது.

திருமண வாழ்க்கைரீதியாகப் பார்க்கும்போது திருமணத்திற்குப்பிறகு 2, 7-ல் உள்ள ராகு- கேதுவின் புக்தி வரும் காலத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. திருமணவயது காலத்தில் 2, 7-ல் ராகு- கேது இருந்து, அதன் புக்தி நடைபெற்றால் திருமணம் நடைபெற தடை- அப்படி நடந்தாலும் ஒற்றுமைக் குறைவு ஏற்படுகிறது. சில இடங்களில் ராகு- கேது புக்தி நடைபெற்றால் திருமண முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். குறிப்பிட்ட புக்தி முடிந்தபிறகு நல்லது நடக்கும்.

ராகு- கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இருந்தால் களத்திர தோஷமென சிலர் கூறுகிறார் கள். ஆனால் திருமண வாழ்க்கைரீதியாக அவ்வாறு ஏற்படுவதில்லை.

அதுபோல 5-ல் ராகு- கேது இருந்தால் குழந்தை பிறக்காது என கூறுகிறார்கள். 5-ல் ராகு- கேது இருப்பதால் மட்டும் குழந்தைப் பிறப்பில் சிக்கல் வராது. 5-ல் அமையும் கிரகம், 5-ஆமதிபதி, புத்திர காரகன் குரு, ஆண்கள் ஜாதகத்தில் 3-ஆம் வீடு, செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களில் அமைப்பை வைத்துதான் குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்யவேண்டும்.

8-ல் ராகு- கேது இருந்தால் மாங்கல்ய தோஷம் என்கிறார்கள். 8-ல் பாவிகள் இருந்தால், திருமணத்திற்குப்பிறகு அந்த கிரகத்தின் தசை, புக்தி நடைபெற்றால், ஆண் என்றால் மனைவிவழி உறவினர்கள் வழியிலும், பெண் என்றால் கணவன்வழி உறவினர்கள் வழியிலும் ஒற்றுமைக் குறைவு உண்டாகிறது.

ராகு- கேது தோஷமிருந்தால் திருமணத்திற்குப் பிறகு உடனே ராகு- கேது தசை வந்தால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துமே தவிர, மற்றபடி பாதிப்புகள் ஏற்படாது. ராகு- கேது தோஷம் இருப்பவர்களுக்கு அதே தோஷம் உள்ளவரைத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கருத்திலும் அதனை தீவிரமாக ஆராய்ந்துதான் முடிவெடுக்கவேண்டும் ஒரு ஜாதகத்தில் 2, 7-ல் ராகு- கேது இருந்தால் தோஷம், ராகு- கேது பிடிக்குள் கிரகங்கள் இருந்தால் தோஷமென எடுத்துக்கொண்டு, திருமணப் பொருத்தங்கள் பார்த்து முடிவெடுக்கக்கூடாது.