Rahu Benefits + Remedies! Puratathi to Revathi

25. பூரட்டாதி

இது கும்பத்தில் 20 டிகிரிமுதல் 30.00 டிகிரிவரையும். மீனத்தில் 0 டிகிரிமுதல் 3.20 டிகிரிவரையும் உள்ளது. இதன் சார அதிபர் குரு ஆவார். எனில் இங்கு ராகு+குரு எனும் கணக்கு வரும். நீங்கள் எந்த லக்னம், ராசியில் இருப்பினும், பூரட்டாதியில் ராகு நின்ற பலன்:

மச்சம்: இடது தொடையில் மச்சம் உண்டு.

Advertisment

குணம்: இவர்கள் நல்லவர்களாக எத்தனை கஷ்டப்பட்டுக் காண்பித்துக் கொண்டாலும், இவரைப் பிறர் முழுமையாக நம்ப மாட்டார்கள். ஏனெனில் எந்த நல்ல- கெட்ட விஷயத்திலும், நேர் சீர் பாதையில் செல்லத் தெரியாது. எல்லா செயல்களிலும் ஒரு கள்ளம், கபடம் ஒளிந்திருக்கும். அதிலும், ஆன்மிக விஷயங்களில் சற்று ஏமாற்றுத்தனம் பண்ணுவர். ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, "ஏம்பா கூட ஒரு சைபர் சேர்த்து, பத்தாயிரம் என்று ஒரு ரசீது தருகிறாயா' என கூலாக கேட்பார். கோவில் பணியாளர் மயங்கி விழுந்துவிடுவார். போலி தங்கம் விற்பதில் கில்லாடியாக இருப்பார். ரொம்பவும் தன்னைப் பற்றியும், தன் குடும்பம் பற்றியும்பெருமையடித்துக் கொள்வார். ரொம்ப கர்வமும், தலைக்கனமும் இருக்கும். பயண விஷயங்களில் ரொம்ப கப்ஸா விடுவர். ஒரு பாவரான ராகு, தர்ம கிரகம் குருவின் காலில் செல்லும்போது, ஜாதகரை கொலாப்ஸ் ஆக்கிவிடுவார்.

நல்ல பலன்+தொழில்:பூரட்டாதி எனும் குருவின் சாரம் ஏற்று நிற்கும் ராகு, கல்வி சம்பந்தமான புதுமைகளை செய்யச் செய்வார். இவர்கள் ஆசிரியர்கள் அல்லது விரிவுரையாளராக இருப்பின், மிக போற்றத் தக்க அளவில் எளிதாக பாடம் சொல்லிக் கொடுப்பர். கொஞ்சம் தங்கத்தில், பெரிய- பெத்த நகை செய்யும் வல்லுனராக இருப்பர். சட்ட ஆலோசனைகளை, வேறுபாடாக, குதர்க்கமாகக் கூறுவார். இவர்கள் கிரிமினல் வழக்கறிஞராக இருந்தால், எந்த மோசமான வழக்குகளிலும், வெற்றிபெற்றுவிடுவர். குறுக்கு வழிகளைக் கையாண்டு தலைமைப் பதவி, கௌரவப் பதவிகளைப் பெற்றுவிடுவார். மற்றவர்களை மானாவாரியாக விமர்சிப்பார். சிலசமயம் இந்த விமர்சனம் செம அடி வாங்கிக்கொடுத்துவிடும். குரு எழுதுவதைக் குறிப்பார். ராகு இவரின் காலில் செல்லும்போது, பச்சைப் பச்சையாக, கொச்சையாக எழுதுவார். கடல் சம்பந்த ஆராய்ச்சியிலும், அதன் பவளப்பாறை பற்றியும் வெகு ஆர்வமாக ஈடுபடுவார். புதிதாக மடம் தொடங்கி, அதன் தலைமை குரு ஸ்தானத்தில் அமர்ந்து நல்ல ஜாலியாக இருப்பார். சாரநாதர் குரு நல்ல சுபத்தன்மையில் இருப்பது அவசியம்.

கெட்ட பலன்கள்:ராகு, நிற்கும் பூரட்டாதியின் சாரநாதர் குரு. இந்த குரு அசுபத் தன்மையில் இருப்பின், இந்த ஜாதகர் தர்மம் சார்ந்த அனைத்து அட்டூழியமும் செய்வார். கோவிலுக்கு போனால், நைஸாக பெண்களைக் கிள்ளிவிட்டு, அவர்கள் அலறுவதை ரசித்துப் பார்ப்பார். மடம் ஆரம்பித்து, "ஒன்லி லேடிஸ்' என்று போர்டு மாட்டி, செம கும்மாளம் அடிப்பார். போலி தங்கம் விற்பனை செய்வார். பள்ளியில் தகாத செயல் செய்து போக்சோவில் கைதாவார். கோவிலில் பணி செய்தால்,அங்குள்ள சாமி சிலைகளை வெளிநாட்டுக்குக் கடத்திவிடுவார். இவர்கள் ஜோதிடர்களாக இருந்தால், பரிகாரம் என்ற பெயரில் வெகு மோசடி செய்து, சிறையில் கம்பி எண்ணுவர். இவர்கள் உயர்குலத்தில் பிறந்திருந்தால், ஆசாரக் கேடாக நடந்துகொள்வர். கோபுர கலசம் சம்பந்தமான சிக்கலில் மாட்டுவர். மது குடித்துவிட்டு மல்லாந்து விடுவர். ஆன்மிகம் சம்பந்தமாக நிறைய பொய் சொல்லித் திரிவர். "சாமி கும்மிடுகிறவன் முட்டாள்' என இறுதியாக அறுதியாக தீர்க்கமாக முடிவு உரைப்பர்.

Advertisment

நோய்: கால் ஆணி, கை, கால், உடல் அசைவின்மை, குடல் இறக்கம் போன்ற நோய் ஏற்படக்கூடும்.

நாடிஜோதிடம்: ராகுவை பாட்டனார் என்றும், குருவை ஜாதகர் என்றும் கூறும். எனவே ஜாதகரும், தாத்தாவும் சேர்ந்து மது அருந்துவது போன்ற இன்னபிற கெட்ட வழக்கங்களில் ஈடுபடுவர்.

பரிகாரம்: மேல்மலையனூர் சென்று வணங்கலாம். அருகிலுள்ள துர்க்கையை குங்குமம், மஞ்சள், மஞ்சள் வஸ்திரம் கொண்டு வணங்கவும். சிவனுக்கு விளக்கேற்றவும்.

26. உத்திரட்டாதி

இது மீனத்தில் 3.20 டிகிரிமுதல் 16.40 டிகிரி வரை உள்ளது. இதன் சார அதிபர் சனி ஆவார். எனில் ராகு+சனி என்றாகும். உங்கள் லக்னம், ராசி எதுவாக இருப்பினும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு நின்றால் உண்டாகும் பலன்:

மச்சம்: மூட்டுகளில் மச்சம் இருக்கும்.

குணம்: ராகுபகவான், உத்திரட்டாதி எனும் சனி சாரத்தில் நிற்கும்போது, ஜாதகர் இருவேறு குணங்களுடன் இருப்பார். ராகு பெரும்போக்கான கிரகம். சனி சுருக்கம், மந்த குணம் கொண்ட கிரகம். எனவே சிந்தனை என்பது வானளாவியதாக இருக்கும். செயல் என்பது கடுகு சைஸில் அமையும். "மனுசனா பிறந்தாநாலு இடம் சுத்திப் பார்க்கணும்' என பெரிசாக பிளான் எல்லாம் போட்டு, செலவுக்கணக்கை பார்த்தபிறகு, "அட, செல்போனில் படம் பார்த்துக்கொள்ளலாம். எல்லாம் ஒண்ணுதான்' என்று கூறிவிடுவர். இப்படியே ஒவ்வொரு செயலையும் பெரிதாகப் பேசிவிட்டு, கடைசியில் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவர். இவரது குடும்பத்தினர் நிலைதான் வெகு பரிதாபமாக இருக்கும். நாளடைவில் இவர் என்ன சொன்னாலும், யாரும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.

நல்ல பலன்+தொழில்: ராகு நின்ற சாரநாதர் சனி சுபத்தன்மையோடு இருப்பின், இவர்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள். இவர்கள் வாழ்வில் எத்தனைக் கீழ்நிலையில் இருப்பி னும், தங்களது வேலைத் திறமையால் முதல் இடத்துக்கு வந்துவிடுவர். இதில் குறிப்பாக, இவர் எல்லாரையும்போல் செயலாற்றாமல், புதுமையான, வேறு கோணத்தில் தனது வேலையைக் கச்சிதமாக செய்து முடிப்பார். இவரது மாற்றமான ஆற்றல், அனைவரையும் இவரது பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும். தோல் தொழிற்சாலையில் கண்டிப்பாக முதன்மை இடத்துக்கு வருவர். மேலும் வேலைக்கு ஆட்களை கணக்கெடுக்கும், நியமிக்கும், ஒழுங்குபடுத்தும் பணி இவர்களுக்கு ரொம்ப ஆகிவரும். ஊர் குப்பையை சுத்தப்படுத்தும் தொழிலை ஏற்று நடத்தி, நல்ல புகழடைவர். முடிவெட்டுவதில், புதுமையைக் கையாண்டு வெகு புகழ்பெறுவர். பழைய கட்டடங்களைப் புதுமையாக மாற்றுவதில் கெட்டிக்காரர்களாக விளங்குவர்.

கெட்ட பலன்கள்: ராகு நின்ற சாரநாதர் சனி நீசமாகி, அசுபத் தன்மையோடு இருப்பின், உலகிலேயே மகா அயோக்கியராக இருப்பார். கஞ்சனாக இருப்பார். நீசத்தனமான எண்ணமும், செயல்களும் உடையவர்கள். இவர்களின் முயற்சிகளில் தடை ஏற்படுவதால், எப்போதும் வன்மத்துடன் சிடுமூஞ்சியாக இருப்பர். இவர்களுக்கு ஏனோ, எப்போதும் ஒருவித மனபயம் இருந்துகொண்டேயிருக்கும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்கள் செய்வதால், அதிலும் பெரும்பாலும் வெளிநாடு சம்பந்தமான செயல்கள் செய்வதால் ஒருவித பதட்டமும், எந்த நேரம் கைதாகிவிடுவோமோ என்ற அச்சமும் மனதில் உழன்றுகொண்டேயிருக்கும். கடவுள் நம்பிக்கை சுத்தமாக இராது. இந்த இணைவு உள்ளோர். குருவி என்ற பெயரில் அயல்நாட்டுப் பொருட்களைக் கடத்திவரும் தொழிலைச் செய்வர். ராகு என்ற பெரும் பாவர், சனி என்ற மற்றொரு பாவரின் காலில் நிற்கும்போது ஜாதகர்களுக்கு நேர்மையான எண்ணம் என்றால் என்ன எனக் கேட்கும் நிலை அமையும்.

நோய்: எலும்புருக்கி நோய், வாதம், கால்களில் நரம்பு சுருட்டிக்கொள்ளல், குடலிறக்கம், கால்பாதம் குளிர்ந்து போதல்.

நாடி ஜோதிடம்: ராகுவை பாட்டனாராகவும், சனியை நோய்காரகனாகவும் குறிப்பிடு கிறது. எனவே உங்கள் பாட்டனார் ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார். அல்லது நீங்கள் ரொம்ப உழைக்கும் மனிதராக இருப்பீர்கள்.

பரிகாரம்: பொதுவாக ராகு+சனி சேர்க்கைக்கு பைரவர் வழிபாடே ஏற்புடையதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் புன்னை நல்லூர் மாரியம்மன் போன்ற மகா மாரிகளை வணங்கவும் துர்க்கைக்கு விளக்கேற்ற, நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவும்.

27. ரேவதி

இது மீன ராசியில், 16.40 டிகிரிமுதல் 30.00 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் புதன் ஆவார். எனில் இங்கு ராகு+புதன் எனும் இணைவு ஏற்படும். உங்கள் லக்னம்,ராசி எதுவாக இருப்பினும், பிறந்த ஜாதகத் தில் ராகு, ரேவதி நட்சத்திரத்தில் நின்றால் உண்டாகும் பலன்:

மச்சம்: கணுக்காலில் மச்சம் இருக்கும்.

குணம்: இவர்களைப்போல் படுபுத்திசாலிகள் உலகிலேயே இருக்கமாட்டார்கள். ஆனால் என்ன ஒன்று, அனைத்தும் எதிர்மறை சிந்தனைகளாகவே இருக்கும். ஒரு சொல் சொன்னாலும், ஒருசெயல் செய்தாலும் அதில் ஒரு "க்'கன்னா இல்லாமல் இராது. ஒரு நக்கல், நையாண்டி, குதர்க்கம், இடித்துரைத்தல், பிறரை புண்படுத்துதல், அடுத்தவர் வெதும்பி நிற்பதைக்கண்டு மகிழ்தல் என நிறைய வேண்டாத குணங்களைக் கொண்டிருப்பார். சிலர் வெகு முற்போக்கான எண்ணங்களைக்கொண்டு செயல்படுவார்கள். இவர்களின் இந்த எதிர்மறை செயல்களை, பிறரால் எளிதில் ஜீரணம் செய்ய இயலாது. அடிக்கடி தன் யோசனைகளை மாற்றுவார். இவரால் செய்ய இயலாத செயல்களின் திட்டங்களை பகுத்துரைப்பார். சிந்தனைக் கோளாறு உடையவர்கள். கற்பனை வாழ்வில் வாழ ஆசைப் படுபவர்கள்; பொய்யான வாக்குறுதி கொடுப் பவர்கள்.

நல்ல பலன்+தொழில்கள்: ராகுபகவான் ரேவதி எனும் புதன் சார நட்சத்திரத்தில் நிற்கும்போது, எந்த யோசனையையும் வேறுவிதமாக சிந்திப்பார்கள். ஊர் ஒருவிதமாகச் செல்லும்போது, இவர்கள் மட்டும் வேறுவிதமாகச் செல்வர். இவர்கள் விஞ்ஞானிகள் வேலைக்கு மிகச்சரியானவர்கள். பத்திரிகைத் துறைக்கு மிகப் பொருந்துவர். கிரிமினல் வழக்கறிஞர் ஆவார்கள். வெளிநாட்டு ஒப்பந்தப் பிரிவில் அமர்வர். கப்பல் துறையில் சுங்க வரி வசூலிப்பார். நிறைய கள்ளக் கணக்கு எழுதி, வருமான வரித்துறையை அழ அழ வைக்கும் ஆடிட்டர் ஆகிவிடுவார். ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எனும் பங்கு வர்த்தகத்தில் முதன்மை பெறுவர். கற்பனையை கண்டபடி மேயவிடும் எழுத்துத் துறையில் பிரகாசிப்பார். பொய்யான விளம்பரப் படங்களில் நடிப்பார் இதற்கெல்லாம் ராகுவின் சாரநாதர் சுபத்தன்மையுடன் இருக்கவேண்டும்.

கெட்ட பலன்கள்: ராகுபகவான் ரேவதி நட்சத்திரத்தில் நின்று, சாரநாதர் புதன் அசுபத் தன்மை பெற்றிருந்தால், இந்த ஜாதகரை மாதிரி போக்கிரியைப் பார்க்கவே முடியாது. கள்ளநோட்டு, போலி பத்திரம், போலி சர்டிபிகேட் இவை தயாரிப்பதில் கில்லாடியாக இருப்பார். கள்ளக்கணக்கு எழுதுவதில் அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. காசை வாங்கிக்கொண்டு, ஒரு சார்பாக செய்திகளைத் திரித்துக் கூறுவார். அதிக காசு கொடுத்து ட்யூஷன் எடுக்கும் மாணவர்களுக்கு மட்டும் தாராளமாக மார்க் போடுவார். ஜோசியராக இருப்பின், ஜாதகரை திகிலடையச் செய்து, பின் பரிகாரம் என்ற பெயரில் பணம் கறந்துவிடுவார். போலி பக்திமானாக இருப்பார். இவர் வந்தாலே, பெண்கள் தலைதெறிக்க ஓடி விடுவர். இவர்கள் கொஞ்சம் அதர்வண வேதம் கற்று, பின் "செய்வினை செஞ்சுடுவேன்' என பயங்காட்டிப் பிழைப்பர்.

நோய்: பாதங்களில் ஒழுங்கற்ற தன்மை; அஜீர்ணக் கோளாறு, மூளைக்கோளாறு, பேச்சுக் குழறல், காதில் சீழ் போன்ற நோய்கள் வரக்கூடும்.

நாடிஜோதிடம்: ராகுவை பாட்டனார் என்றும், புதனை இளைய சகோதரன் அல்லது தாய்மாமன் என்றும் கூறுகிறது. மேலும் புதன் அறிவு சம்பந்தப்பட்டவர். எனவே பாட்டனார் அல்லது தாய்மாமன் அல்லது இளைய சகோதரன் எதிர்மறை சிந்தனையில் கேடிகளாக இருப்பர் எனக்கொள்ளலாம்.

பரிகாரம்: புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்கலாம். அருகில் உள்ள துர்க்கைக்கும், நரசிம்மருக்கும் இனிப்பு பானகம் வைத்து வணங்குவது நல்லது.

(அடுத்த இதழிலிருந்து கேது...)

செல்: 94449 61845