4. ரோகிணி

இந்த நட்சத்திரம் ரிஷப ராசியில் 10.00 டிகிரிமுதல் 23.20 டிகிரிவரை உள்ளது. இதன் சாரநாதர் சந்திரன் ஆவார். இந்த ரோகிணியில் ராகுபகவான் நின்றால், அங்கு ராகு+சந்திரன் என்று கணக்கு வரும். நீங்கள் எந்த லக்னம் எந்த ராசி. எந்த லக்னமாக இருப்பினும் உள்ள பலன்.

மச்சம்: உங்கள் நெற்றியில் மச்சம் இருக்க வாய்ப்புண்டு.

குணம்: உங்களுக்கு நிறைய நல்ல பழக்க வழக்கமெல்லாம் இருக்கும். அமைதியாக அன்பாக பழகுவீர்கள். நிறைய பேருக்கு உதவி செய்வீர்கள். ஆயினும் ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த ராகு, அவ்வப்போது குசும்புத் தனத்தை கொண்டு தருவார். நீங்கள் எந்த ராசி, எந்த லக்னமாக இருப்பினும், மற்றய கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும், வாழ்வு சற்று சோபையின்றி இருக்கும். இதற்கு ஒரு ஜோதிட விதியே காரணமாகும். எந்த ஜாதகத்தில், ரோகிணி நட்சத்திரம், பாபர் சம்பந்தம் கொண்டதோ, அவரது வாழ்வு சோபிக்காது. நிறைவு தராமல் இருக்கும். இதனால் நீங்கள் சற்று ஏக்கத்தோடு, காலம் தள்ளுவீர்கள்.

Advertisment

நல்ல பலன்கள்+தொழில்: ராகுபகவான், ரோகிணி நட்சத்திரத்தில் நின்றால், ஜாதகரை பழமையும், புதுமையும் சேர்த்து தயாரிக்கும் திறமையைத் தருவார். அது பெரும்பாலும் உணவு சம்பந்தமாகவும், பானங்கள் சம்பந்தமாக வும் அமையும். அழகியவிலும், இவர்களின் திறமை தனித்தன்மையோடு பளிச்சிடும். இவர்கள் ஒரு நிமிடம்கூட ஓய்வாக இருக்க மாட்டார்கள். ஏதோ ஒன்றை செய்து கொண்டே இருப்பர். இவர்களின் செயல் ஆற்றும் திறமை, பிறரை மிரளச் செய்யும். தன்னோடு இருப்பவர்களை மிக பேணுவார். கூட இருப்பவர்கள் பசியாறி விட்டனரா என கவனித்துக்கொண்டே இருப்பர். அட டாஸ்மாக் கடைக்கு போனாலும், சுற்றி இருப் பவர்களுக்கு, தாராளமாக சரக்கு வாங்கிக் கொடுப்பர். இந்த நிலையில் பிறந்த பெண்கள், தான் மட்டும் அழகாக, மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கமாட்டார்கள். சுற்றியுள்ள பெண்களுக்கும், மேக்கப்போட்டு, அழகாக்கி பார்த்து, பரவசம் அடைவர். இதேபோல் ஆண்களும், தனக்கு நல்லதாக ஆடையோ, எதுவோ கிடைத்தாலும், தன் நண்பர்களையும் அதேமாதிரி வாங்கச் செய்து மகிழ்வர்.

கெட்ட பலன்கள்: ஒரு வேளை, சுக்கிரனும் நீசமாக, சந்திரனும் கெட்டிருந்தால், இவர்கள் மொடக்குடியன்களாக மாறிவிடுவர். மேலும் இவர்கள் என்ன செய்தாலும், விருத்தியின்றி அமையும். ஒரு காலகட்டத்தில், இவரை வாழ்வின் விளையாட்டுக்குச் சேர்த்துக் கொள்ளணுமா என யோசிப்பர். சிலரை வாழ்வு நிகழ்வுகளிலிருந்து ஒதுக்கி வைத்துவிடுவர்.

நோய்: முகத்தில் புள்ளிகள் தோன்றக் கூடும். எப்போதும் பார்த்தாலும் தும்பி கொண்டே இருப்பர். நீரில் விபத்துக்கள் ஏற்படும். பைத்தியம் பிடித்தற்கு நிகரான கோளாறு தோன்றும். மனநிலை ஊசலாடும். அடிக்கடி மயக்கம் வரும். அதிக மது போதை எடுத்துக்கொள்வதால், உண்டான அனைத்து வில்லங்கமும் உடலில் தோன்றும்.

Advertisment

தொழில்: வெளிநாட்டு- வெளியூர் பயணம் சம்பந்த தொழில் ஆகிவிடும். மதுக்கடை ஏலம், பானங்கள், திரவம், இனிப்பு பண்டங்கள் விற்பனையில் ஈடுபடுவர். பெரும்பாலும், இவர்கள் உணவு சார்ந்த தொழிலில் மனம் கொண்டு செல்லும். அது அனேகமாக அசைவ உணவு சார்ந்ததாக இருக்கும்.

நாடி ஜோதிட கணக்கு: நாடி ஜோதிடப் படி ரோகிணியின் சாரநாதர் சந்திரன் தாயாரை யும், சுக்கிரன் மனைவியையும் குறிப்பார். இதில் இந்த இரண்டு பேரும். தங்களது வாழ்வு நிலையில் வஸ்தாதாக பெரும் போக்காக இருப்பர். ரொம்ப ஈகோ கொண்டவர்களாக இருப்பர். தாயும், மனைவியும் தனித்தன்மையாக இருந்தால் பிழைத்தீர்கள். சேர்ந்திருப்பின் கதி அதோ கதிதான். இதிலுள்ள ராகு வம்பு, வழக்கு கொண்டு வந்துவிடுவார்.

பரிகாரம்: துர்க்கையை வணங்குவது சிறப்பு. பட்டீஸ்வரம், கனக துர்க்கை போன்ற மிகச் சிறப்பான, கேட்டவுடன் பலன் தரும் துர்க்கையை வணங்கவும். அருகிலுள்ள காளியை வணங்கினால், உங்கள் மனநிலை பாதிக்காமல், பார்த்துக்கொள்வாள். வெள்ளிக் கிழமை அல்லது திங்கட்கிழமைகளில், நல்ல காரமான பிரசாதங்கள்கொண்டு, அம்மனை வணங்கவும். நாலு பேர் மதிக்கும்படி வாழ இயலும்.

5. மிருகசீரிடம்

மிருகசீரிடம் நட்சத்திரம், ரிஷப ராசியில் 23.20 டிகிரியில் இருந்து, மிதுன ராசியில் 30.00 டிகிரிவரை பரவி உள்ளது. ரிஷப ராசி அதிபர் சுக்கிரன். மிதுன ராசி அதிபர் புதன் ஆவார். மிதுனத்தில் 0.00 டிகிரிமுதல் 6.40 வரை இருக்கும்.

உங்கள் பிறந்த ஜாதகத்தில், ராகுபகவான், மிருகசீரிட நட்சத்திரத்தில் நின்றால், அங்கு ராகு+செவ்வாய் என இருப்பதாக அர்த்தம் ஆகிறது. மிருகசீரிட நட்சத்திரத்தின் சார அதிபதி செவ்வாய் ஆவார்.

மச்சம்: மிருகசீரிடத்தில் அமர்ந்த ராகு புருவம் அருகில் மச்சம் தருவார்.

குணம்: நீங்கள் எந்த லக்னம், எந்த ராசியாக இருப்பினும், ராகுபகவான் மிருகசீரிட நட்சத்திரத்தில் நின்றால், உங்களுக்கு வெகு முரட்டுக்குணம் இருக்கும். ஒருவரை கொண்டாடினாலும் தலைக்கு மேலே வைத்து கொண்டாடுவீர்கள். அதுபோல, ஒருவரை பிடிக்கவில்லை என்றால், காலில் போட்டு மிதித்து, காணாமல் போக்கிவிடுவீர்கள்.

அதுபோல உங்கள் யோசனைகளும், விபரிதமாக எதிர்மறையாக அமையும். நீங்கள் எப்போது எதைச் செய்வீர்கள் என யாராலும் நிர்ணயிக்க இயலாது. எல்லாரும் ஒன் ஸ்டப் ஃபேக் என எப்போதும், தள்ளி நின்று அலர்ட்டாக இருப்பர்.

நல்ல பலன்கள்: ராகுபகவான், மிருகசீரிடத்தில் நிலை கொள்ளும் போது, செவ்வாய் சுபத்தன்மை பெற்றால், அரிய, பெரிய செயல்களை அசால்ட்டாக செய்ய இயலும், இவர்கள், சீருடை பணிகளான, இராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை என சவால்கள் நிறைந்த வேலைகளை செய்வர். குறிப்பாக, பூமியை குடைந்து செய்யும் வேலைகள், குழிக்குள் விழுந்த குழந்தைகள், உயிரினங்கள் என இவற்றைக் காப்பாற்றும் செயல்களைச் செவ்வனே செய்வர். இதற்கான மனஉறுதியும், துணிவும் நிறைந்தவர்களாக இருப்பர். இவர்கள் அன்பு காட்டுவதுகூட, அடாவடித்தனமாக இருக்கும். யாராயாவது, குசலம் விசாரிக்க ஒரு அறைவிட்டு, நல்லாயிருக்கியா என்பர். இவன் இப்படி கேட்டிருக்கவே வேண்டாமே, என நண்பர் முழியாய் முழிப்பர். தனது சுற்றத் தாருக்கு எந்த பிரச்சினை வந்தாலும், முதல் ஆளாக சென்று, அதற்குரிய நிவாரணம் தருவார்.

கெட்ட பலன்கள்: சாரநாதர் செவ்வாய் கெட்டிருந்தால், இவர்களின் முன் கோபம் இவர்களுக்கு எதிரியாகிவிடும். அதுபோல் மதுபிரியாரக மாறி, நிறைய மது அருந்தும் பழக்கமாகிவிடும். சூடான அசைவை விருந்தை எப்போதும் சாப்பிட்டு, உடல்நலத்தை இவரே பாழடிப்பார். இவர்களின் கோபமும், அவசரமும், இவர்கள் செய்த நல்ல உதவிகளை மறக்கடித்துவிடும்.

நோய்: இவர்களுக்கு அடிக்கடி, தொண்டையில் சளி கட்டிக்கொள்ளும். கழுத்து, தோள் வலி உண்டு. முகத்தில் தேமல்போல் வரும். இவர்களின் மது, போதை பழக்கங்கள், அவை சார்ந்த நோய் களைத் தரும். உடலில் அதிக உஷ்ணம் தோன்றி, அதனின் பின்விளைவுகளை இவர்களை பாடாய்படுத்தும்.

தொழில்: இவர்களுக்கு சீருடை பணிகளான இராணுவம், காவல்துறை ஆகிவரும்.

அதைவிட, இவர்கள் தீயணைப்புத்துறை சார்பு வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பர். சுரங்கம் தோண்டும் தொழிலில் முதன்மை யாக இருப்பர். சிலர் கைரேகை துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பர் அது போல் எக்ஸ்-ரே வேலையில் சிறப்புறுவர். மிகச்சிலர், போதை விற்பனை தொழில் செய்வர்.

நாடிஜோதிட கணக்கு: மிருகசீரிடத்தின் சாரநாதர் செவ்வாய். இவர் கணவரைக் குறிப்பார். இதில் ரிஷபமாக இருப்பின் அந்தக் கணவர் சற்று பிடிவாதக் கோபம் கொண்டவராக அமைவார். மிதுன மாக இருப்பின், அப்பெண்ணின் கணவர், மிக புத்திசாலித்தனமாக பொய்களைக் கூறி, மனைவியை குழப்பிவிடுவார். ஆண்களுக்கு, செவ்வாய், சகோதரனைக் குறிக்கும்.

எனவே, ராகு சம்பந்தம், சகோதரர்கள் பற்றிய எரிச்சலையும், கோபத்தையும் தரும்.

பரிகாரம்: துர்க்கையை, முருகரை வணங்கவும். நாக சுப்பிரமணியருக்கு, வெள்ளை வஸ்திரம் சாற்றி வணங்கவும். காளிக்கு, குங்கும அர்ச்சனை செய்து வழிபட, அமைதி கிடைக்கும்.

rr

6. திருவாதிரை

திருவாதிரை நட்சத்திர சாரநாதர் ராகு ஆவார். இவரின் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால், அவர் சுயசாரம் வாங்கியிருப்பதாக அர்த்தமாகும்.

மிதுன ராசியில் 6.40 டிகிரிமுதல் 20.00 டிகிரிவரை உள்ளது. மிதுன ராசியின் அதிபதி புதன் ஆவார். இங்கு திருவாதிரை நட்சத்திரத்தை ராகு ஏற்றிருப்பின், அது ராகு+புதன் என்றாகும்.

மச்சம்: ராகு, திருவாதிரை நட்சத்திரத்தில் நின்றால், இவர்களுக்கு கண்கள் அருகில் மச்சம் அமையும்.

குணம்: ஏற்கெனவே திருவாதிரை நட்சத்திரம் ராகு சார நட்சத்திரம்தான். இதில் ராகுவும், அதே நட்சத்திரத்தில் நின்றால் ராகு+ராகு என்றாகிவிடும். ஒரு ராகு என்றாலே கிலிதான். இதில் டபுள் ராகு இணைவு எனும்போது என்னத்தைச் சொல்ல. இடம் கொடுத்தவர் மிதுன புதன். எனவே இவர்களின் யோசனை, சிந்தனை, எண்ணம் எல்லாம் வேறுமாதிரி அமையும். எதிர் மறைத்தன்மை அதிகமிருக்கும். ஒரு குடும்பத்தில் அல்லது வேலை செய்யும் இடத்தில், எல்லாரும் ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும்போது, இவர் மட்டும் நான் ஏன் இதேமாதிரி செய்யணும் என அடம் பிடிப்பார். என் போக்கில்தான் போவேன் என்பார். சுற்றியுள்ளவர்கள், "முடியலே' என நொந்து கொள்வர்.

நல்ல பலன்கள்: ராகு சுப சம்பந்தம் பெற்றால் இவர்களின் சிந்தனை, யோசனை எல்லாரையும்போல் இராது. வேறுமாதிரி இருக்கும். அதன் மிகப்பெரிய பலன், இவர்களின் செயல்களில் மிளிரும். இந்த ராகு அமர்ந்துள்ள திருவாதிரை நட்சத்திரம், காலபுருசனின் 3-ஆமிடமான மிதுன புதன் வீடு. இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்களாக இருப்பர். எனவே திரைப்படம், டி.வி. சீரியல், பத்திரிகை, கைபேசி என எதையாவது வித்தியாசமாக எழுதி, மிகப்பெரிய புகழ் பெற்றுவிடுவர். வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள் அனுப்புவர். இதில் மிகச்சிலர், பாதிக்கடலில், ஆட்களை அம்போ வென்று விட்டுவிட்டு போய்விடவும் கூடும். பலர் வித்தியாசமாக யோசித்து, வயதானவர்களை பார்த்துக்கொள்ள ஆட்களை அனுப்புவதுமுதல் பாத்ரூம் கழுவ ஆட்களை அனுப்புவதுவரை, டிஷைன் டிஷைனாக சிந்திப்பர். கள்ளநோட்டு அடிப்பதிலும் வல்லவராக இருப்பர். இவர்கள் நகைச்சுவை மன்னர்களாக இருப்பதால், தொழிலின், கலை உலகின் அனைத்து தளத்திலும், வேடிக்கையாகி பேசி, முதன்மையாக வந்துவிடுவர். சிலசமயம் இவர்களின் செயல்பாடுகள், பிறர் மனதை நோகச் செய்யும்.

கெட்ட பலன்கள்: ராகு, அசுபர் சேர்க்கை பெறின், இவர்களின் செயல் களிலும், பேச்சிலும், வார்த்தைகளிலும் எப்போதும் ஒரு கள்ளத்தனமும், குசும்பும், நக்கலும் மிகுந்திருக்கும். இந்த இயல்பி னால், இவர்கள், பிறருக்கு நல்லது சொன்னா லும், யாரும் இவர்களை நம்பமாட்டாகள். இவன் நம்மை கிண்டல் பண்ணுகிறான் என்று கோபப்படுவார்கள். இதனால் தகுந்த சமயத்தில், பிறரிடமிருந்து, எந்த உதவியும் உங்களுக்கு கிடைக்காமல் போய்விடும். மேலும் உங்கள் சொற்கள் காத்ரம் பெறாமல், நீர்த்து போய்விடும். மேலும், உங்களை யாரும் நம்பவும் மாட்டார்கள். இவனை நம்பினால், நம்மை மாட்டி விட்டு விட்டு, இவன் தப்பிவிடுவான் எனும் அவப் பெயரும் உங்களுக்கு வந்து சேரும்.

நோய்: இவர்கள் பெரும்பாலும் தொண்டை சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவர். அடிக்கடி விக்கல் தொல்லை ஏற்படும். காதுநோய், காதில் சீழ் பிடித்தல் என இம்சை இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில், ராகு அமர்ந்த நிலையிலுள்ள ஜாதகர்கள் மது, போதை போன்ற கெட்ட பழக்கங்கள் அருகேகூட போகக்கூடாது. ஒருமுறை மாட்டிக் கொண்டால், அதிலிருந்து மீள்வது மிக கடினமாகிவிடும்.

தொழில்: இவர்களின் தொழிலில் பெரும்பாலும் மனித, தகவல் தொடர்புகள் இடம் பிடித்திருக்கும். அது சினிமா, டி.வி, பத்திரிகை சம்பந்தமாக நடிப்பு, எழுத்து என ஏதோ ஒன்று அமையலாம். பெரும்பாலோர், திரைக்குப்பின் நடக்கும், டைரக்ஷன், ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு பிண்ணனி பேசுவது என இவ்வித வேலைகள் செய்வர். சிலர் அணுசக்தி துறை, ஆராய்ச்சியாளர், பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி விரிவுரையாளர், கள்ள நோட்டு அடிக்கும் வேலை என இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவர்.

நாடி ஜோதிட கணக்கு: திருவாதிரை நட்சத்திரத்தின் சாரநாதர் ராகு. இவர் தந்தை வழி பாட்டானாரை குறிப்பார். இடம் கொடுத்த மிதுன புதன், தாய்மாமன், இளைய சகோதரனைக் குறிப்பார். எனவே உங்கள் தாத்தாவிற்கும், உங்கள் தம்பி அல்லது தாய் மாமாவிற்கும் ஆகி வராது. இந்த சண்டை, முறையற்ற காதலினால் உண்டாகும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகேயுள்ள திருபாம்புரம் சென்று வழிபடவேண்டும். அருகிலுள்ள கோவிலில், நாகம் செய்து காணிக்கை கொடுக்கலாம். நாகத்திற்கு வெள்ளிக்கிழமைகளில் பால் ஊற்றிவிட்டு, மஞ்சள் குங்குமம் சார்த்தி வழிபடவும். வருடத்திற்கு ஒருமுறையாவது, திருச்சி ஸ்ரீ ரங்க நாதப் பெருமாளை சேவிக்கவேண்டும்.

அடுத்த இதழில்...

புனர்பூசம், பூசம், ஆயில்யம்