நமது வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், நோயற்றதாகவும் இருப்பதற்கு ஒருவகையில் நமது பூர்வபுண்ணியமும், நமது முன்னோர்கள் செய்த பாவ- புண்ணியங்களும் முக்கிய பங்குவகிக்கிறது. நமது முன்னோர்கள் புண்ணியங்கள் செய்திருந்தால் அதனுடைய நற்பலன்களைத் தற்போதைய பிறவியில் அடையமுடியும். பாவங்கள் செய்திருந்தால் அதனுடைய பிரதிபலனை தற்போது அனுபவிக்க நேரும். ஒரு தனி மனிதன் வாழ்வில் நல்லது நடைபெற இடையூறுகள்- குறிப்பாக திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவை நடைபெறவேண்டிய காலத்தில் நடைபெறாமல் தடைப்படுகிறது.
ஒரு ஜாதகத்தில் பூர்வ ஜென்மம், பூர்வபுண்ணியத்தைக் குறிக்கும் ஸ்தானங்கள் வலுவாக அமையப்பெற்றால் எவ்வித பாதிப்புமின்றி நிம்மதியான வாழ்க்கை உண்டாகிறது.
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீடு பூர்வபுண்ணிய ஸ்தானமாகும். ஐந்துக்கு 5-ஆம் வீடான 9-ஆம் வீடு தந்தை ஸ்தானமாகும். 9-க்கு 9-ஆம் வீடு தந்தையின் தந்தை ஸ்தானமாகும். ஆக, ஒருவர் ஜாதகத்தில் 5, 9-ஆம் பாவங்கள் வலுவாக இருந்தால் தந்தையாலும், தந்தை வழி உறவினர்கள்வகையிலும் அனுகூலங்களை அடையமுடியும். அதுபோல நவகிரகங்களில் தந்தை காரகன் சூரியன், பாரம்பரியத்தை குறிக்கும் கிரகமான குரு ஆகிய இருவரும் வலுவாக இருந்தால் பூர்வீகவழியிலும், தந்தைவழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். பெரியோர்களின் ஆசி கிடைக்கப் பெற்று, பூர்வபுண்ணியரீதியாக அனுகூலமான பலன்கள் அடையமுடியும். பெரியோர்களின் ஆதரவு, சிறப்பான மணவாழ்க்கை, அழகிய குழந்தைகளைப் பெற்றெடுக்கும் யோகம் ஏற்படும்.
காலபுருஷ தத்துவப்படி 5-ஆம் வீடும், சூரியனின் வீடான சிம்ம ராசியும் பலமாக இருத்தல் நல்லது. சூரியன் வலுவாக இருப்பது மட்டுமல்லாமல் சிம்ம ராசியில் பாவ கிரகங்கள் இல்லாமலிருப்பது பூர்வீகவழியில், பூர்வ புண்ணிய வகையில் அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.
அடுத்து பூர்வீக சொத்துகளைப் பற்றிப் பார்க்கும்பொழுது, ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப்பெற்றிருப்பது, 5-ஆமதிபதி ஆட்சி, உச்சம்பெற்றிருப்பது அற்புதமான அமைப்பாகும். தந்தை காரகன் சூரியன் வலுவாக இருந்தால் தந்தைவழியிலும், பூர்வீகவழியிலும் சாதகமான பலன்கள், பூர்வீக சொத்துவகையில் பொருளாதார ஆதாயங்களை அடையும் வாய்ப்புண்டாகும். ஒரு ஜாதகத்தில் 5-ஆமதிபதி கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றிருப்பது, ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதன் மூலம் பூர்வீக சொத்துரீதியாக பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். 5-ஆமதிபதி பரிவர்த் தனை பெற்றிருந்தால் பூர்வீக சொத்துகளை மாற்றியமைத் துக்கொள்ள முடியும். அதாவது பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டு வேறொரு சொத்தை வாங்கும் யோகம் உண்டாகிறது.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 5-ல் ராகு- கேது அமையப்பெற்றாலும், 5-ஆமதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும், நீசம்பெற்றாலும், வக்ரம் பெற்றா லும் பூர்வீக சொத்துவகையில் அனுகூலங்களை அடைய இடையூறுகள் ஏற்படுகிறது. 5-ஆமதிபதி ராகு- கேது நட்சத்திரங்களில் அமையப்பெற்றாலும், பகை நட்சத்திரங்களில் அமையப்பெற்றிருந்தாலும் பூர்வீக வழியில் அனுகூலங்களை அடைய இடையூறுகள் ஏற்படுகின்றன.
ஒரு ஜாதகத்தில் 4, 5-க்கு அதிபதிகள் இணைந்திருப்பது, 4, 5-ஆம் அதிபதிகள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது, 4, 5-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது அற்புதமான அமைப்பாகும். இப்படிபட்ட அமைப்பிருந்தால் பூர்வீக சொத்துவழியில் அனுகூலங்கள் ஏற்பட்டு அதன்மூலம் சொந்த வீடு, பூமி, மனை ஆகியவை அமையக்கூடிய அதிர்ஷ்டம் உண்டாகிறது. 5-க்கு அதிபதி பலம்பெறுவது மட்டுமல்லாமல் தந்தை காரகன் சூரியனும், தாய்காரகன் சந்திரனும் பலமாக இருந்தால் தாய்- தந்தையர் வகையில் பொருளாதார அனுகூலங்கள், பூமி, அசையா சொத்துகளை அடையும் யோகம் உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 5, 9-ஆம் வீடுகளையும், சூரியனையும் குரு பார்வை செய்தால் பூர்வீக சொத்துவழியிலும், தந்தைவழியிலும் அனுகூலங்கள் உண்டாகும்.
5-ஆமதிபதி, 6-ஆமதிபதி சேர்க்கைப்பெற்றா லும், 6-ல் அமைந்தாலும் பூர்வீக சொத்துவகையில் தேவையில்லாத வம்பு, வழக்குகள், இதன்மூலம் பூர்வீக சொத்துகளை இழக்கும் நிலையும் உண்டாகிறது. ஜென்ம லக்னத்திற்கு 5-ல் சனி, ராகு அமைவது, சிம்ம ராசியில் சனி, ராகு அமைவது நல்லதல்ல. 5-ஆமதிபதி நீசம்பெற்றாலும், பலவீனமாக இருந்தாலும் பூர்வபுண்ணிய தோஷமாகும். இப்படிப்பட்ட அமைப்பிருப்பவர்கள் பூர்வீக இடத்தில் இல்லாமல் வேறிடங்களுக்குச் சென்றுவாழ்ந்தால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுகிறது. அதுபோல பூர்வீக இடத்தில் முதலீடுகள் செய்யாமல் வேறிடங்களுக்கு, வேற்றூரில் சென்று முதலீடுகள் செய்யும்பொழுது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுகிறது.
பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 5, 9-ஆம் பாவங்கள், சிம்ம ராசி பாதிக்கப்பட்டால் பிறந்த ஊர், பூர்வீக இடத்தில் இல்லாமல் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று இருப்பதன்மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுகிறது.
அதுபோல சூரியன், ராகு அல்லது கேது சேர்க்கைப்பெற்றாலும், ராகு- கேது நட்சத்திரங்களில் அமைந்து பலவீனமாக இருந்தாலும், சூரியன், சனி சேர்க்கைப்பெற்றாலும் தந்தைவழி உறவினர்வகையில் நிம்மதிக் குறைவுகள், பகை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட அமைப்பிருப்பவர்கள் சிவத் தலங்களுக்குச் சென்று வழிபடுவது, குலதெய்வக் கோவிலில் வழிபடுவது நல்லது.