மனிதர்களிடையே ஆன்மிகம், ஜோதிடம்,சார்ந்த நிகழ்வுகளில் பலவகையான நம்பிக்கைகள் நிலவி வரும் சூழலில், முன்ஜென்மம் என்கின்ற கருத்து அனைவரிடமும் ஆழமாகப் பதிந்துள்ளது.
இதன் அடிப்படையில் நமது ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் எந்தெந்த பாவகத்தில் அமர்ந்துள்ளது, அந்த அமர்வுக்கும், நமது முன்ஜென்மத்திற்கும் என்ன தொடர்பு, அவை எந்த உணர்வை அல்லது செயல்பாட்டினை குறிகாட்டு கின்றது என்பதையும், ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம்.
அதேபோன்று எதைச் சார்ந்த மீதமும், ஆணவங்களும், நம்மை ஆட்டிப் படைத்திருக்கின்றன என்றும், எந்த உறவிடம் நாம் விட்டுக் கொடுத்துச் செல்லவேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
சூரியன்
தலைமை கிரகம் என்றும், ஆன்ம காரகன் என்றும், போற்றப்படும் சூரியன் தற்பொழுது எந்த பாவகத்தில் அமர்ந்துள்ளதோ, அந்த பாவகம் தொடர்பான ரகசியத்தை நாம் முற்பிறவியில் கையாண்டிருப்போம்.
ஆனால் இப்பிறவியில் சூரியன் அமர்ந்த பாவகம் தொடர்பான ரகசியங்களை வெளிச்சம் போட்டு நாமே காட்டிவிடுவோம்.
இது லக்னத்திற்கு சிம்மம் எந்த பாவகமாக வருகின்றதோ, அந்த பாவகமும். சூரியன் அமர்ந்த வீட்டையும், சார்ந்த எந்த ரகசியத்தையும் இப்பிறவியில் கடைப்பிடிக்காமல் இருப்பது சிறப்பு.
இதன் அடிப்படையில்தான் எட்டாம் இடத்தில் சூரியன் அமரப்பெற்ற ஜாதகர்கள் யார் கூறும் ரகசியத்தையும் எளிதில் வெளிப்படுத்தி விடுவார்கள்.
சந்திரன்
மனோகாரகன் சந்திரன் அமர்ந்த பாவகரீதியான பயன்கள் நமக்கு முற்பிறவியில் தடையின்றி தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்திருக்கும்.
இப்பிறவியில் சந்திரன் சார்ந்த பாவகம் அளிக்கும் பயன் சற்று சுணக்கமாகவும், தொடர்ந்து கிடைக்காமலும், இருக்கும்.
சந்திரன் ஒரு விஷயத்தைக் கொடுக்கும் பொழுதே அதை நம்மால் இயன்றவரை பயன் படுத்திக்கொள்ளவேண்டும். மறுத்தால் எதிர் பார்க்கும்பொழுது கிடைக்காது.
சந்திரனின் ஆளுமையில் இருக்கும் பாவகம் ஆசைகளின் தன்மையில் ஆர்ப்பரிக்கும் எனவே இந்த பாவகம் சார்ந்த ஆசைகளை அளவாகப் பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.
செவ்வாய்
அங்காரகன் என்று போற்றப்படும் செவ்வாய் அமரும் பாவகம் சார்ந்த லட்சியங்களை நாம் நிறைவேற்றாமல் பிறவியை முடித்திருப்போம்.
அதன் பயனாக இந்தப் பிறவியில் லட்சியத்தை அடையவேண்டிய பிரயத்தனங்களை எடுப்போம்.
இந்த பிறவியில் செவ்வாய் நம் லக்னத்திலிருந்து எந்த பாவகத்தில் இருக்கின்றதோ அந்த பாவகமும், லக்னத்திற்கு மேஷமும், விருச்சிகமும், எந்த பாவகமாக வருகின்றதோ அந்த பாவகம் சார்ந்த லட்சியங்களே பெரும்பாலும் அந்த ஜாதகருக்கு இருக்கும் இதற்காகவே போராடக்கூடிய சூழலை காலநிலையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
புதன்
கலைகளுக்கு எல்லாம் காரகமான புதன், இப்பிறவியில் எந்த பாவகத்தில் அமர்ந்துள்ளதோ அந்த பாவகம் தொடர்பான யோசனையோ அல்லது தெளிவோ இல்லாமல் முற்பிறவியில் இருந்திருப்போம்.
இப்பிறவியில் புதன் அமர்ந்த பாவகம் சார்ந்தும், புதனின் வீடுகளான மிதுனம், கன்னி, உங்களது லக்னத்திற்கு எந்த பாவகத்திற்கு பொறுப்பேற்கின் றதோ, இவை சார்ந்த யோசனைகளை உங்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும்.
இந்த பாவகங்கள் சார்ந்து நீங்கள் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.
குரு
புத்திரகாரகன் என்று போற்றப்படும் குருபகவான் உங்களது ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்ந்துள்ளதோ, அந்த பாவகம் தொடர்பான தர்மத்தையும், நியாயத்தையும், கடைப்பிடிக்காமல் முற்பிறவியில் உங்களது வாழ்வினை கடத்தி வந்திருப்பீர்கள்.
இப்பிறவியில் குரு அமர்ந்துள்ள இடமும் குருவின் ஆளுமை வீடுகளான தனுசு, மற்றும் மீனமும், சார்ந்த சங்கடங்களும், பிரச்சினைகளும், உங்களை சூழ்ந்து காணப் படும்.
சுக்கிரன்
களத்திர காரகன் என்று போற்றப் படும் சுக்கிரன் எந்த பாவகத்திற்குப் பொறுப்பேற்றுள்ளாரோ, அந்த பாவகம் தொடர்பான காரகங்களுக்கோ அல்லது இடங்களுக்கு உங்களால் செலவு செய்திருக்க முடியாது, இதற்காக எந்தவிதமான பொருட்செலவோ அல்லது நேரச் செலவோ நீங்கள் ஒதுக்கி இருக்க முடியாது.
இதன் காரணமாக இப்பிறவியில் சுக்கிரன் பொறுப்பேற்றுள்ள பாவகங்கள் சார்ந்தே உங்களின் மொத்த செலவுகளும் இருக்கும்.
சனி
ஆயுள் காரகன் என்று போற்றப்படும் சனி பகவான் உங்களின் ஜாதகத்தில் எந்த பாவத்தில் அமர்ந்து தனது சிறப்பான செயலை ஆற்றுகின்றாரோ, அந்த பாவகம் சார்ந்து முற்பிறவியில் அகங்காரத்திலும், ஆணவத்திலும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதிலும், இருந்திருப்போம்.
இப்பிறவியில் சனி அமர்ந்துள்ள பாவகமும். அவரின் சொந்த வீடுகளான மகரம், கும்பம், ஏற்றுள்ள பாவகங்களும், உங்களுக்கு தாமதமான சூழலில்தான் வேலை செய்யும்.
சனி அமர்ந்துள்ள பாவகம் தொடர்பான உறவுகளைப் பற்றி வெளியில் சிறப்பாக பேசுவதைத் தவிர்க்கவும்.
ராகு
போகக்காரகன் என்று போற்றப் படும் ராகு, முற்பிறவியில் எந்த பாவகம் சார்ந்த ஆசையை நாம் நிறைவேறாமல் இறந்தோமோ, அந்த பாவகத்தில் இப்பிறவியில் இடம் பிடித்திருப்பார்.
ராகு அமர்ந்த வீட்டின் பாவகம் நமது லக்னத்திற்கு எத்தனையாவது பாவகமாக வருகின்றதோ, அந்த பாவகத்திற்கு நாம் செய்யப்படும் செலவுகளும், வேலைகளும், இறுதிவரை திருப்தியை அளிக்காது.
இப்பிறவியில் ராகு அமர்ந்த பாவகத்திற்காகவே நமது ஓட்டம் அமைந்திருக்கும்.
கேது
ஞானகாரகன் என்று போற்றப்படும் கேது பகவான் அமர்ந்த இடம் தொடர்பான பாவகத்தில் கடமையை நாம் முற்பிறவியில் நிறைவேற்றாமல் இருந்திருப்போம்.
இப்பிறவியில் கேது அமர்ந்த இடத்திற்கான கடமையை நமக்கு பிடிக்கின்றதோ, இல்லையோ- நிச்சயமாக ஏதோ ஒரு கட்டாயத்தின் பெயரளவிலாவது செய்யும் சூழலை இந்த பிரபஞ்சம் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும்.
இந்த கிரகங்கள் அமர்ந்துள்ள இடம் சார்ந்து நமது செயல்பாடுகளை இலகுவாக அமைத்துக் கொண்டால் வாழ்வில் பெரும் துன்பங்கள் இல்லாமல் சுபிட்சத்தை மட்டும் கையாண்டு சிறப்பைக் காணலாம்.
செல்: 80563 79988