விதியை மதியால் வெல்லமுடியுமா என்ற கேள்விக்கு விடை முழுமையாகக் கிடைத்துள்ளதா என்றால் இல்லை என்றே கூறலாம். தன் வாழ்வில் முன்கூட்டியே என்ன நடக்குமென்பதை யாராலும் அறியமுடியாது. எல்லா வளங்களையும் பெற்று எப்பொழுதுமே சந்தோஷமாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் நினைத்ததெல்லாம் கிடைக்கப்பெற்றாலும், முழுத்திருப்தி அடையாமல் எதையாவது தேடிக்கொண்டேதான் இருக்கிறான். ஏதாவது பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் போராடவும் துணிகிறான். தன்னால் முடியாவிட்டால் யாரையாவது துணைக்கு அழைக்கிறான். அதையும்மீறி, மனித சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் காரியங்களுக்குத் தீர்வுகாண இறைவனைத் தேடி ஓடுகிறான்.

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கமிருக்கும். ஜனன காலத்தில் ஏற்படும் கிரக தோஷங் களுக்கும், நடப்பிலிருக்கும் தசாபுக்திகளால் ஏற்படும் கெடுபலன்களுக்கும், கோட்சாரரீதியாக ஏற்படும் கிரகங்களின் பலாபலன்களுக்கும் உரிய பரிகாரங்களைச் செய்தால், விதியை மதியால் வெல்ல முடியாவிட்டாலும் தலைக்கு வந்தது தலைபாகையுடன் போயிற்று என மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.

ஜனன ஜாதகத்தில் நவகிரகங்களின் அரசனாக விளங்கும் சூரியன் பலமிழந்தோ, ராகுவுக்கு மிக அருகிலோ அல்லது 8, 12-ஆம் பாவங்களில் அமையப்பெற்றோ, சூரிய தசை, புக்தி நடைபெற்றால் தந்தைக்குக் கெடுதி, உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண்களில் கோளாறு, தோல்வியாதி, இதய நோய் போன்றவை ஏற்படுகிறது.

இதற்குப் பரிகாரமாக சிவனை வழிபடுவது, பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. இரவில் படுக்கச் செல்லும்போது கொஞ்சம் கோதுமையை தலையின் அடியில் வைத்துப் படுத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் அதை காகத்திற்கு போடுவது நற்பலனை உண்டாக்கும். சந்தியா வந்தனம், காயத்திரி ஜெபம் போன்றவற்றை உச்சரிப்பதன்மூலமும் சூரியனால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் விலகும்.

Advertisment

மனோகாரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன் பலமிழந்தோ, ராகு- கேதுவுக்கு மிக அருகிலோ அல்லது 6, 8, 12-ஆம் பாவங்களில் அமையப்பெற்றோ காணப்பட்டு, தசை, புக்தி நடைபெற்றால் தேவையற்ற மனக் குழப்பங்கள், மனநிலை பாதிக்கக்கூடிய அமைப்பு, உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை, சோம்பல் தன்மை, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் சந்திர தசை அல்லது சந்திர புக்தி நடைபெறும் காலங்களில் உண்டாகும்.

ss

Advertisment

இதற்குப் பரிகாரமாக வேங்கடாசல பதியை வழிபாடு செய்வது, திருப்பதிக்குச் சென்றுவருவது உத்தமம். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடுகளையும் மேற்கொள்ளலாம். சந்திரனால் பாதிக்கப் பட்டவர்கள் ஒன்பது நாட்களுக்கு கொஞ்சம் பச்சரிசியைத் தலையடியில் வைத்துப் படுத்துக்கொள்ளவேண்டும். ஒன்பதாவது நாள் அதை சாதமாக வடித்து ஜாதகரின் தலையைச் சுற்றி முச்சந்தியில் வீசியெறிய கெடுதல்கள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.

ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பகவான் 8, 12-ல் அமையப்பெற்றாலும், வக்ரம்பெற்றா லும், பாவிகள் சேர்க்கைப்பெற்று பலமிழந்து காணப்பட்டு தசை, புக்தி நடைபெற்றா லும் ஜாதகருக்கு ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கக்கூடிய அமைப்பு, வெட்டுகாயங்கள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், கால்- கை வலிப்பு போன்றவை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும்.

இதற்குப் பரிகாரமாக முருகப் பெருமானை வழிபடுவது, கிருத்திகை விரதம், சஷ்டி விரதங்கள் மேற்கொள்வது மிகவும் உத்தமம். தினமும் கொஞ்சம் துவரையை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கவேண்டும். கிருத்திகை தினத்தன்று அதை வேகவைத்து காக்கைக்குப் போடுவது மிகவும் நல்லது. முருகனுக்குப் பாலாபிஷேகம் செய்யலாம்.

ஜனன காலத்தில் 6, 8, 12-ல் புதன் அமையப்பெற்றாலும், புதன் நீசம்பெற்றோ பாவிகள் சேர்க்கைப்பெற்றோ, வக்ரம் பெற்றோ அமைந்து தசை, புக்தி நடைபெற்றா லும் ஞாபக மறதி, மனநிலை பாதிப்பு, கல்வியில் தடை, மஞ்சள் காமாலை, மூக்கில் பாதிப்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கை- கால் மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும்.

இதற்குப் பரிகாரமாக மகாவிஷ்ணுவை வழிபடுவதும், விஷ்ணு சகஸ்ர நாமத்தைக் கூறுவதும் நற்பலனைத் தரும். தினமும் பச்சைப் பயறை தலையணையடியில் வைத்துத் தூங்கவேண்டும். அமாவாவை யன்று பச்சரிசியையும் பச்சைப் பயிறையும் சேர்த்து பொங்கல் செய்து காகத்திற்கு வைக்கவேண்டும். இதன்மூலம் புதனால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் விலகும்.

ஜனன காலத்தில் குருபகவான் 6, 8, 12 ஆகிய வீடுகளில் மறையப் பெற்றாலும், வக்ரம் பெற்றாலும், நீசம் பெற்றாலும் அதன் தசை, புக்தி நடைபெற்றால் பொருளாதாரத் தடை, புத்திர தோஷம், ஞாபக மறதி, வறுமை, காதுகளில் பாதிப்பு போன்றவை உண்டாகிறது.

இதற்குப் பரிகாரமாக தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய்தீபமேற்றி, கொண்டைக் கடலை மாலை, மஞ்சள் வஸ்திரம் சாற்றி, முல்லை மலர்களால் அர்ச்சனைசெய்வது உத்தமம். இரவில் ஒன்பது நாட்களுக்கு பச்சைக் கடலையை தலையணையின் அடியில் வைத்து உறங்கி, பின்பு அந்த கடலையை ஜாதகரின் ஜனன நட்சத்திரம் வரும் சமயத்தில் ஏழை பிராமணர் களுக்கு தாம்பூல தட்சணையுடன் வைத்து ஜாதகரின் தலையைச் சுற்றிக் கொடுக்க வேண்டும். காகத்திற்கும் கொஞ்சம் போட வேண்டும். ஒன்பது நாட்கள் ஏழைகளுக்கு அன்னமிடவேண்டும். இவ்வாறு செய்வதால் குருவால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறையும்.

களத்திரகாரகன் என வர்ணிக்கபடக்கூடிய சுக்கிரன் ஜனன ஜாதகத்தில் பலமிழந்து காணப்பட்டாலும், 6, 8, 12-ல் அமையப்பெற்றா லும், வக்ரம் பெற்றாலும் களத்திர தோஷம் உண்டாகிறது. அதன் தசை, புக்தி நடைபெற்றால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு, ரத்த சோகை, ரகசிய நோய்கள் போன்றவை உண்டாகிறது.

இதற்குப் பரிகாரமாக மகாலட்சுமியை வழிபடுவது, கோமாதா பூஜை செய்வது உத்தமம். ஒன்பது நாட்களுக்கு கொஞ்சம் மொச்சையைத் தலையின் அடியில் வைத்துறங்கி, அதை வேகவைத்து காக்கைக்குப் போடவேண்டும். சுக்கிர பகவானுக்கும் தீபமேற்றி வழிபடுவதன்மூலம் சுக்கிரனால் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் விலகும்.

ஆயுள்காரகன் என வர்ணிக்கப்படும் சனிபகவான் ஜனன காலத்தில் நீசம்பெற்றோ, ராகு சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் சேர்க்கைபெற்றோ, வக்ரம்பெற்றோ, 8, 12-ல் மறைவுபெற்றோ இருந்தால், உடல் ஆரோக்கிய பாதிப்பு, எதிர்ப்பு சக்திக் குறைவுண்டாகும். ராகு, செவ்வாய் சேர்க்கைபெற்று 6, 8-ல் இருந்தால் அதன் தசை, புக்திக் காலத்தில் எதிர்பாராத விபத்துகளை சந்திக்க நேரிடும்.

இதற்குப் பரிகாரமாக சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தினமும் தலையணையின் அடியில் சிறிது எள்ளை வைத்துறங்கி, மறுநாள் வடித்த சாதத்துடன் இந்த எள்ளைக் கலந்து காக்கைக்கு வைக்கவேண்டும். ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். இவ்வாறு ஒன்பது வாரங்கள் செய்துவர, சனியால் ஏற்படும் கெடுபலன்கள் விலகும். சனிக்கிழமைகளில் ஆஞ்சனேயரையும் வழிபடலாம்.

சர்ப்ப கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய ராகுபகவான் ஜனன ஜாதகத்தில் சாதகமற்று அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெற்றால், குடும்பத்தில் பிரச்சினை, நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலை, வயிறு சம்பந்தப் பட்ட பாதிப்புகள், அலர்ஜி பிரச்சினை போன்றவை உண்டாகும். எதிர்பாராத விபத்துகள் ஏற்படும்.

இதற்குப் பரிகாரமாக துர்க்கா தேவியை ராகு காலங்களில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபடுவது உத்தமம். சரபேஸ்வரரையும் வழிபடலாம். 48 நாட்களுக்கு நாகப் பிரதிஷ்டை செய்து பாலாபிஷேகம், நெய் நைவேத்தியம் செய்யவேண்டும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் விரதமிருந்தால் தோஷம் விலகும்.

ஞானகாரகன் கேது ஜனன ஜாதகத்தில் சாதகமற்று அமைந்திருந்தால் வயிற்றுக் கோளாறு, மனக்குழப்பம், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலையுண்டாகும்.

இதற்குப் பரிகாரமாக விநாயகப் பெருமானை தினமும் வழிபடுவது உத்தமம். 48 நாட்களுக்கு நாகப்பிரதிஷ்டை செய்து நைவேத்தியம், பாலாபிஷேகம் செய்வதன்மூலம் கேதுவால் ஏற்படும் கெடுபலன்கள் விலகும்.