நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இப்பூவுலகில் பிறந்த அனைவருமே நோயற்ற வாழ்க்கை வாழ்வதைத்தான் விரும்புவார்கள். கலியுகமாக விளங்கக் கூடிய இக்காலங்களில் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழு துள்ள சூழ்நிலையில் இயற்கையிலுள்ள சுகாதாரக்கேடுகள், சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் இல்லாத சூழ்நிலை போன்றவற்றால் மக்கள் பலவிதமான ஆரோக்கிய பாதிப்புகளை அடைகிறார்கள் என்றாலும், ஒருவரின் ஜனன ஜாதகரீதியாக 6, 8-ஆம் பாவங்களும் பலமாக இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை வாழமுடியும். ஒருவருக்கு எவ்வளவுதான் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் இருந்தாலும் ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருந்தால் மட்டுமே எதிலும் வெற்றிபெற முடியும். குறிப்பாக சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிசெய்து விடலாம். நீண்ட ஆயுள் இருப்பதுதான் முக்கியமாகும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 6, 8-ஆம் பாவம் பலமாக இருந்தால், பாவகிரக சேர்க்கை, பார்வை பெறாமல் இருந்தால் அவருக்கு நீண்ட ஆயுள் நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.

6, 8-ஆம் வீட்டில் பாவகிரகம் அமையப் பெற்றாலும், 6, 8-ஆம் அதிபதி பாவ கிரக சேர்க்கையோ, அல்லது பார்வையோ பெற்றா லும் நீசம் பெற்றோ, வக்ரம் பெற்றோ, பகை பெற்றோ பலவீனமாக அமைந்தாலும், அந்தந்த கிரகங்களின் அமைப்புக்கேற்றவாறு உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக அந்தந்த பலவீனமாக கிரகங்களின் தசை புக்திக் காலங்களில் நோய்களின் பாதிப்புகள் அதிகமிருக்கும்.

பொதுவாக ஒவ்வொரு கிரகத்தின் காரகத்துவத்துக்கேற்றவாறு உண்டாகக்கூடிய நோய்களை பற்றிப் பார்ப்போம்.

Advertisment

ff

சூரியன்

சூரியனால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிறு கோளாறு, மூலம், இதயநோய், தோல்வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகளால் கண்டம், மரம், விஷம் மற்றும் பாம்பால் கண்டம், திருடர்களால் கண்டம், கண் நோய், தெய்வக் குற்றம் மூலம் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

சந்திரன்

மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை பாதிப்பு, உணவு செரிக்காத நிலை, தைரியக் குறைவு, சீதபேதி, குடல்புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மை இழக்கும் நிலை உண்டாகும். ஜலத்தால் கண்டம், தண்ணீரிலுள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மை இல்லாத நிலை போன்ற பாதிப்புகள் உண்டாகும். சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படும்.

செவ்வாய்

செவ்வாயால் கண்களில் பாதிப்பு, குடல்புண், கால்கை வலிப்பு, உஷ்ண நோய், தோல் நோய்கள் உண்டாகும். விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம் உண்டாகும். எதிரிகளிடம் சண்டை போடும் நிலை, உடன்பிறப்புகளிடையே சண்டை போடும் நிலை, உடலின் மேல்பாகத்தில் நோய் உண்டாகும். தொழுநோய், தோலின் மேல் பாகத்தில் நோய் போன்றவை உண்டாகும்.

புதன்

நரம்புத் தளர்ச்சி, வாய்ப்புண், கண்களில் பாதிப்பு, தொண்டை மற்றும் மூக்கில் பாதிப்பு, மனநிலை பாதிப்புகள் உண்டாகும். வேகமாகப் பேசும் நிலை, இயற்கைச் சீற்றத்தால் உடல்நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், மூளைக்கு அதிக நெருக்கடி உண்டாகும் அமைப்பு ஏற்படும். தோல் வியாதி, மஞ்சள் காமாலை, கனவால் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு நோய்கள் உண்டாகக்கூடிய நிலை ஏற்படும்.

குரு

குருவால் ஞாபக மறதி, வயிறு பாதிப்பு, பெண்கள் என்றால் கர்ப்பப்பை பாதிப்பு, காதுகளில் பாதிப்பு, குடல் புண் மற்றும் பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலையில் பாதிப்புகள் போன்றவை உண்டாகின்றன.

சுக்கிரன்

சுக்கிரனால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக்கோளாறு, கண்களில் கோளாறு, ரத்த சோகை, ரகசிய உறுப்பில் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படும். பெண்களுடன் உடலுறவு கொள்ள முடியாத நிலை, உடலுறவு கொள்ள பயப்படும் நிலை, பெண்களால் பயம் போன்ற நோய்களும் ஏற்படும். நெருங்கிய நண்பர்களை இழக்கக்கூடிய அமைப்பு போன்றவையும் உண்டாகும்.

சனி

சனியால் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஊனம் உண்டாகக் கூடிய நிலை, வயிற்றுக் கோளாறு, உடலில் உஷ்ணம் அதிகரித்து அவற்றால் நோய் உண்டாகக்கூடிய அமைப்பு, உடலில் மந்தமான நிலை, சோர்வு போன்றவை உண்டாகும். விபத்துகளால் உடல் ஊனம் உண்டாகும் அமைப்பு, இயற்கைச் சீற்றத்தால் உடல்நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

ராகு

ராகுபகவானால் தொழுநோய், மூளையில் நோய், இதயக் கோளாறு, நெருப்பால் பயம் போன்றவை உண்டாகும். விஷத்தால் கண்டம், கால்களில் எதிரிகளால் பாதிப்பு, விபத்தால் கண்டம் போன்றவை உண்டாகும்.

கேது

கேது பகவானால் வயிற்றுக் கோளாறு, இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பூசாரி மற்றும் பிராமணர்களால் தொல்லை போன்றவை உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டிலோ, ஆயுள், ஆரோக்கிய ஸ்தானமான 8-ஆம் வீட்டிலோ பலவீனமாக கிரகங்கள் அமையப் பெற்றாலும், 6, 8-ஆம் அதிபதியுடன் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகும். மேற்கூறியவாறு கிரக காரகத்துவ ரீதியாக 6, 8-ல் சூரியன் இருந்தால் உஷ்ண நோய்கள், இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகளும், தேய்பிறைச் சந்திரனிருந்தால் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் தண்ணீரால் கண்டமும், செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால், வெட்டுக் காயங்கள், விபத்து போன்ற அனுகூலமற்ற பலன்களும் ஏற்படும். 6, 8-ல் அமையப் பெறுகின்ற கிரகங்களின் தசைபுக்திக் காலங்களில் நம் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.