இன்றைய காலத்து பிள்ளைகளுக்கு பலமணி நேரம் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தைவிட்டு கொஞ்சம்கூட நகராமல் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து பக்கம் பக்கமாக சாப்ட்வேர் எழுதமுடியும். சில மணிநேரம் விடாமல் மொபலை தேய்க்கமுடியும். அவர்களின் "அவருடன்', மணிக்கணக்காக அலைபேசியில் பேசமுடியும்.
ஆனால் பாருங்கள், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க சொல்லுங்க! அது முடியாதுங்க. சோம்பேறி தனமா? அல்லது இவர்களாகவே தங்கள் வாழ்க்கை முறையை இவர்கள் மாற்றிக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
தூங்கி எழுந்ததும் கைகளை அந்த பக்கம் இந்த பக்கம் நகர்த்திவிட்டு உட்கார்ந்தால், சூடாக, காபி வந்து இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். இது சரியா? தவறா? என்ற வாதத்திற்கு நாம் போக போவதில்லை.
அரைநிமிட நேரம்கூட இறைவனை தியானம் செய்ய முடிய வில்லையே என்று அருணகிரிநாதர் "சரண கமலாலயத்தை அரைநிமிட நேர மட்டில் தவ முறையில் தியானம் வைக்க அறியாத' என்று அருளி இருக்கும்போது, நம்மால் எப்படி என்று யோசிக்கிறீர்கள்; புரிகிறது.
காலம் தாழ்த்தல் (ல்ழ்ர்ஸ்ரீழ்ஹள்ற்ண்ய்ஹற்ண்ர்ய்) கூடாது என உளவியலார் சொல்லி அறிவுறுத்திய போதும், நம்மால் இதை தவிர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை. வாய்ப்புகளைத் தவறவிட்ட பிறகுதான் சிலருக்கு அப்பவே இதை செய்து இருந்தால் என்ற ஞானம் பிறக்கும். சிலருக்கு கோபம்கூட வரும்.
இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரத்தில், (ஸ்ரீர்ழ்ல்ர்ழ்ஹற்ங் ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்) எதையாவது செய்து "அந்த' இடத்தை அடையவேண்டும். அது எந்தவழியாக இருந்தாலும் பரவாயில்லை என்று புதிய மரபுகள் வேறு நம்மை சுற்றி துரத்திக்கொண்டு இருக்கிறது.
இதே சிந்தனையுடன் குடும்பத்திற்கு வந்தால், அங்கே நாம் நினைப்பதற்கு எதிராக எல்லாம் எதிர்பாராதவிதமாக நடக்கும். விட்டுட்டுபோகவும் முடியாமல், சேர்ந்து இருக்கவும் முடியாமல், பொறுமையுடன் பாரத்தை சுமந்துகொண்டு, மன அழுத்தத்தை, அந்த பக்கம் ரத்த அழுத்தத்தை, இந்த பக்கம் என பிடித்துக்கொண்டு, விழி பிதுங்கி நிற்பவர்களுக்குதான் ஒரு ஆறுதல் தரும் தலத்தை பற்றிய குறிப்புகளை இந்த வாரம் சிந்திக்க கொண்டுவந்து உள்ளேன்.
யானை வழிபட்ட திருக்கோவில் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆம். திருவானைக்கா. குரங்கு வழிபட்ட தலம், அணில் வழிபட்டதலம், காகம் வழிபட்ட தலம் என உங்களுக்கு தெரிந்திருக் கும். ஆம் அது, குரங்கணில் முட்டம். மயிலாக வழிபட்ட தலம், சென்னையிலுள்ள மயிலாப்பூர்- இப்படி நிறைய சொல்லமுடியும்.
ஆனால் பாருங்கள் உருவத்தில் சிறிய உயிர். அது எங்கிருந்து வருகிறது என்று தெரியாது. எங்கே போகிறது என்று தெரியாது. எங்கே வாழ்கிறது என்று தெரியாது. ஆனால் ஒரு இனிப்பையோ, தின்பண்டத்தையோ தெரிந்தோ- தெரியாமலோ போட்டுவிட்டால் அடுத்த நொடியில் ஒரு கூட்டமாக வந்திற்கும். ஆம்; அந்த உயிர் எறும்புதான்.
சுறுசுறுப்பாக இருக்க உதாரணம் சொல்லும் அந்த எறும்பு வழிபட்ட திருத்தலம் இங்கே நம்ம தமிழ் நாட்டில் இருக்கிறது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறது அல்லவா..? ஆம் இந்த திருத்தலத்து இறைவனுக்கு எறும்பீசர் என்பதே திருநாமம் ஆகும். இந்த கோவில் அமைந்த ஊருக்கு பெயர் எறும்பூர்தான். இறைவன் கொலு வீற்றிருக் கும் கோவிலை குறிப்பிடும்போது, "திரு' சேர்த்து சொல்லவேண்டும் என்ற நியதிப்படி அது திரு எறும்பூர். அட போங்க அய்யா, இப்படி ஒரு ஊரா என்று உங்களுக்கு சிந்தனை வரலாம்.
திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர் என்ற இந்த ஊரில்தான் எறும்பீசர் திருக்கோயில் இருக்கிறது. எத்தனை கோபம்கொண்ட மனிதராக இருந்தாலும் இந்த தலத்து இறைவனை முறையாக வழிபாடு செய்து வெளியேவந்தால், கோபம் இல்லாமல் போய்விடும் என்று சொல்வதுபோல அவர் நடத்தையில் மாற்றம் வருவதைக் காணலாம்.
அதற்காக ஒருமுறை போய்விட்டு வந்து ஆயுள் முழுவதும் மாறிவிடுவார் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் கனவு கானல் நீராகதான் இருக்கும்.
அப்பர் சுவாமிகள் அருளிச்செய்த திருக்குறுந்தொகை மற்றும் திருத்தாண்டகம் என இரு பதிகங்கள் பாடல்பெற்ற திருத்தலம் இது.
இந்த திருத்தலத்திலுள்ள சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. லிங்கம் எறும்புகள் வழிபட என புற்றாக இருப்பதால் நீர் ஊற்றி அபிஷேகம் செய்வதில்லை. எண்ணை காப்பு மட்டும்தான். எறும்புகள் வழிபட சுவாமி குனிந்து கொடுத்ததால் லிங்கம் வட புறம் சாய்ந்து இருக்கும். தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும் சிரித்த முகத்துடன் நம்மை ஆற்றுப்படுத்த அருள்பாலிக்கின்றார்.
இந்த கோவில் கல்லை குடைந்து சுமார் 125 படிக்கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டு பிராகாரங்களைக்கொண்ட இந்த திருத்தலம் முழுவதும் கற்களால் கட்டப்பட்டு உள்ளது. கருவறை நுழைவாயில் இரண்டிலும் விநாயகர் திருவுருவ சிலை இருக்கிறது.
மலைக்கோவில் புராணப்படி இதற்கு பிப்பிலீலீச்வரர் என குறிப்பிடபட்டுள்ளது. தென் திசை நோக்கிய அம்பாள் சன்னதி, இவற்றுடன் கருவறைக்கு பின்புறம் முருகன், வள்ளி, தெய்வயானையுடன் இருந்து அருள்பாலிக்கிறார் சோதிடரீதியாக பிதுர் சாபம் உள்ளவர்கள் (பிதுர் தோஷம் வேறு), வீட்டில் மரண நிகழ்வின்போது, சடலத்தை வைத்துக்கொண்டு சண்டையிடுதல், அதனால் குடும்ப பகை வளர்த்தல் போன்ற மனதில் தீரா குடும்ப பகையை வைத்தல் போன்ற நிலையில் உள்ளவர்கள் இந்த கோவிலில் பரிகாரம் செய்யலாம்.
இந்த கோவிலிலுள்ள நவகிரகங்களில் தலைமை கிரகமான சூரியன் தனது இணைகள் எதிர் எதிரே இருக்கும்படி அமைந்திருப்பது குடும்ப பகை விலகி மனதில் அமைதி நிலவும் என்பதை குறிக்கும்படி அமைந்திருக்கிறது.
கருவறைக்கு பின்புறமுள்ள முருகன் சன்னதியின்கீழ் உள்ள அறுகோண சக்கரத்தினை பூஜைசெய்து முறையாக வழிபாடு செய்துவந்தால், உடல் சோர்வு, காலம் தாழ்த்துதல் போன்ற நிலையில் இருந்து நீங்கி, மன உற்சாகம் பெற்று தொடங்கிய காரியங்களில் வெற்றியே நிச்சயம் கிடைக்கும். உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் ஆலோசனைப்படி அவர்கள் குறிப்பிட்டு சொல்லும் வழிபாட்டு முறைகளை நேர்த்தியாக செய்து பலன்பெற வேண்டுகிறோம்.
திரு எறும்பியூர் என்ற இந்த திருத்தலம் திருச்சி தஞ்சை சாலையிலுள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் வசதிகள் உண்டு. சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த திருக்கோவில் திருவெறும்பூர் என்று நடைமுறை வழக்கத்தில் அழைக்கப்படுகிறது. அமைதியான சூழலில் கூட்டம் குறைவாகவே இருக்கும் இந்த திருக்கோவில் மலை ஏறி செல்லும்படி இருக்கும். மலையில் செல்ல சாலை வசதி இல்லை. நடந்து மலை ஏறி செல்லமுடியும்; சிரமம் இருக்காது.
வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் அவசியம் ஒருமுறை இந்த திருத்தல பயணம் செய்து, பிதுர் சாபம் நீங்கவும், மனதில் உற்சாகம் பிறக்கவும் வாழ்வில் எல்லா நலனும் பெற்று வாழ வேண்டுகிறோம்..
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172