சூரியன்- சரண்யூ தம்பதியருக்குப் பிறந்தவர்கள் அஸ்வினி குமாரர்கள் எனப்படும் அஸ்வினி தேவர்கள். என வேதம் சொல்கிறது. குதிரைமுகம் கொண்டவர்கள். இவர்கள் இரட்டையர்கள். இவர்கள் தேவ மருத்துவர்கள் ஆவர்.
அஸ்வினி தேவர்களில் ஒருவர் பெயர் நாசத்யா. (அசத்தியம் இல்லாதவர்), மற்றொருவர் தஸ்ரா. (ஒளி வீசுபவர்).
சிவபெருமானிடமும் மகாவிஷ்ணுவிடமும் இருந்து நான்முகனான பிரம்மதேவன், ஆயுர்வேத வைத்திய முறைகளை அறிந்து, அதற்கான விளக்கவுரை எழுதி தட்சப் பிரஜாபதிக்கு உபதேசித்தார்.
அவரிடமிருந்து அஸ்வினி குமாரர்கள் ஆயுர்வேத மருத்துவக் கலையைக் கற்றுக்கொண்டனர். தேவலோக மருத்துவர் பதவியை அடைய பரமசிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து, அந்த பதவியை அடைந்தார்கள்.
மகரிஷி ததீச்சர் பிரம்ம வித்யாவை இந்திரனிடமிருந்து கற்றுக்கொண்டார். இது நோயுற்ற மனிதர்களை இறக்கவிடாமல் காக்கும் மந்திரமாகும்.
இந்திரன் ததீச்சருக்கு பிரம்ம வித்யாவை எவருக்கும் கற்றுக்கொடுக்கக் கூடாதென்று ஆணையிட்டார். அஸ்வினி குமாரர்கள் ததீச்சரிடம் பிரம்ம வித்யாவைக் கற்றுக் கொடுக்குமாறு வேண்டினார்கள். ஒருவர் கேட்கும்போது கற்றுக்கொண்ட வித்தையை சொல்லித் தராமலிருப்பது அதர்மத்துக்கு துணைசெல்வதென்று ததீச்சர் கருதினார்.
இந்திரனுடைய ஆணையை அறிந்த அஸ்வினி குமாரர்கள், ததீச்ச்சரின் தலையை எடுத்துவிட்டு அவருக்கு குதிரைத் தலையைப் பொருந்தினார் கள். அதன்பிறகு ததீச்சர் பிரம்ம வித்யாவை அஸ்வினி குமாரர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். இதையறிந்த இந்திரன் கோபம்கொண்டு ததீச்ச்சரின் குதிரைத் தலையை வெட்டியெறிந்தார்.
அஸ்வினி குமாரர்கள் ததீச்சருக்கு மீண்டும் அவருடைய தலையைப் பொருத்தினார்கள். இதனால் ததீச்சர் அஸ்வஹீரா என்று மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார்.
அஸ்வினிகளைப் பற்றிய குறிப்புகள் ரிக் வேதம், புராணம் மற்றும் மகாபாரதத்திலும் உள்ளது. மனிதர்களுக்கு முதலில் மருத்துவம் பார்த்தவர்கள் இவர்கள்.
நோயாளிகளைக் குணப்படுத்துவது, ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை விரைந்துசென்று காப்பாற்றுவது. தொல்லையில் சிக்கியவர்களின் கஷ்டங்களை அகற்றுவது அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரே!
தீயில் சிக்கியோரையும், கடலில் அகப் பட்டோரையும் காப்பாற்றுபவர்கள் இவர் களே என ரிக் வேதத்தில் இருக்கிறது.
அஸ்வினி தேவர்கள் தங்களுடைய தேரில் சூரியனையும் சந்திரனையும் ஏற்றிச் செல்கின்றனராம், தேனையும் கொண்டு செல்கின்றனராம்.
அவர்களுடைய தேரை குதிரை, கழுதைகள், கழுகு அன்னங்கள் செலுத்துவதாக கவிகள் பாடியுள்ளனர். அவர்கள் இருக்கும் இடம் மலை உச்சி, ஆகாயம், அந்தர வானம், தாவரங்கள், வீடுகள் என்று பலவிதமாகச் சொல்லப்பட்டுள்ளன.
மகாபாரதத்தில், பாண்டுவின் இரண்டாவது மனைவி மாதுரி, அஸ்வினி தேவர்களைப் பிள்ளைகளாக அடைய வரம் வேண்டிப் பிறகு பிறந்தவர்களே நகுலனும், சகாதேவனும். இருவரில் சகாதேவன் ஜோதிடத்திலும், நகுலன் குதிரைகளைப் பழக்குவதிலும் வல்லவர்கள்.
அஸ்வினி தேவர்கள் தம் தந்தை சூரிய பகவானின் பன்னிரண்டு குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டும் சாரதிகளாகவும் இருப்பார்களாம்.
இவர்களது பெயரால் ஐப்பசி மாதம் சமஸ்கிருத மொழியில் "அஸ்வினா' என்று குறிக்கப் பெறுகிறது.
அஸ்வினி குமாரர்கள் எந்நேரமும் உலகைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்கள் நம்மில் யாரோ ஒருவரின் அருகில் வருகையில், நாம் என்ன மனதில் நினைக்கிறோமோ அது "அப்படியே பலிக்கட்டும்' என்று (அதாவது நாம் நல்லது நினைத்தாலும் கெட்டதும் நினைத்தாலும்) பாரபட்சமின்றி ஆசிர்வாதம் அளித்துவிட்டுப் போய் விடுவார்களாம்!
இதை சமஸ்கிருதம் மிக எளிதாக "ததாஸ்து' என்று சொல்கிறது. அதாவது "அப்படியே ஆகட்டும்' என்று பொருள் கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை என்பதே முதன் முதலில் அஸ்வினி குமாரர்களால்தான் உருவாக்கப்பட்டது. அவர்கள் மனித உடம்பில் நீர், நெருப்பு, காற்று ஆகிய மூன்று பூதங்களின் கைவரிசையால்தான் சுகமும், சுகக் கேடும் ஏற்படுகிறது என்கிறார்கள். அதாவது வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற மூன்று சக்திகளின் ஏற்ற- இறக்கத்தால்தான் நோய்கள் வருவதும், போவதும் நடைபெறுகிறது என்பது அவர் களின் கருத்து மனிதனை இயக்கவும் அதிஷ்டான தேவதைகள் உண்டு.
ஆன்மாவுக்கு- பரமாத்மா; மூக்கிக்கு-
அஸ்வினி குமாரர்கள்; வாக்கிற்கு- அக்கினி தேவன்; கண் புலனுக்கு- சூரியதேவன்; செவிப்புலனுக்கு- திக் தேவதைகள்; மனத் துக்கு- சந்திர தேவன்; தொடு உணர்ச்சிக்கு- வாயுதேவன்.
மேற்கண்டவை இயங்குவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அவற்றின் பின்னால் நின்று இயக்குபவர் அந்தர்யாமி யாகிய இறைவனே என்கிறார் ரிஷி யக்ஞவல்கி யர். (பிருகதாரண்ய உபநிடதம்) ரிக் வேதத்தில், காலிழந்த ஒருவருக்கு, தேவலோக வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் செயற்கையாக இரும்புக் காலைப் பொருத்தினார்கள் என்றும், கண்ணிழந்தவர்க்கு பார்வை வரச் செய்தார் கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
விநாயகரின் தலையை சூலம்கொண்டு எடுத்த சிவபெருமான், வடக்கில் தலை வைத்துப் படுத்திருக்கும் சிசுவின் தலையைக் கொண்டுவருமாறு தேவர்களிடம் கூறுகி றார். அவர்கள் ஒரு யானையின் தலையைக் கொண்டு வந்தனர். அஸ்வினி குமாரர்கள் அந்தத் தலையை விநாயகருக்குப் பொருத்தி னர். பிறகு சிவபெருமான் அவருக்கு உயிர் தந்தார்.
சோமயாகம் நடைபெறும் செய்திகேட்டு விஷ்ணு யாகம் நடக்கும் இடத்திற்கு வில்லோடு வந்து நிற்கிறார். வில்லின் வளைந்த மூங்கில் பாகத்தின் ஒருமுனை தரையில் இருக்கிறது. இன்னொரு முனை விஷ்ணுவின் தாடையில் இருக்கிறது. இந்த முனைகளுக்கிடையேதான் "நாண்' எனப்படும் கயிறு இழுத்துக் கட்டப்பட்டுள்ளது. வில்லைத் தன் தாடை மூலமாகவே நிலைநிறுத்தி நின்றார் மகாவிஷ்ணு. "யாகத்தின் சோம ரஸம் முழுவ தும் தனக்கே வேண்டும்; மற்ற தேவதைகளுக் குக் கொடுக்கக் கூடாது' என்பது அவரின் கோரிக்கை.
யாகம் நடத்துபவர்கள் செய்வதறியாது இருக்க, அந்த நேரத்தில் சில கறையான் பூச்சி கள், விஷ்ணு வுடைய வில்லின் நாண் வழியாக ஏறத் தொடங்கி, மெல்ல மெல்ல விஷ்ணுவின் தாடைப் பகுதியை நெருங்கின. கறையான்கள் நாணைத் தின்ன ஆரம்பிக்க.. திடீரென நாண் அறுந்தது. இழுத்து வளைத்துக் கட்டப்பட்டிருந்த வில்லின் மூங்கில் படாரென மேல் நோக்கி வேகமாக விசையோடு எழும்ப... அந்த கணத்திலேயே விஷ்ணுவின் தலையானது கழுத்திலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மேலே பறந்தது.
இதைப் பார்த்தவர்கள் பதறிபோய் "விஷ்ணு தான் யாகம்; யாகம்தான் விஷ்ணு. அப்படிப் பட்ட விஷ்ணுவின் தலையே தனியே போனதென்றால் யாகம் பாதியிலேயே நின்றுவிடுமே' என கலக்கப்பட்டு, நேராக அஸ்வினி குமாரர்களிடம் சென்று, விஷ்ணுவின் தலை தனியாகப் போனதைச் சொல்லி ஒட்டித்தர வேண்டினர்.
"நாங்கள் தைல வைத்திய சாஸ்திரப்படி விஷ்ணுவின் தலையை ஒட்டவைக்கிறோம்.
யாகத்துக்கு மறுபடி எந்தத் தடங்கலும் வராமல் துணை இருக்கிறோம். ஆனால், இதற்குப் பிரதியுபகாரமாய், யாகத்தில் எங்களையும் இணைத்து சோம ரஸத்தில் கொஞ்சம் எங்களுக்கும் தரவேண்டும்' என சொல்ல, வேறு வழியில்லாமல் அவர்கள் ஒப்புக்கொண்ட னர். பிறகு விஷ்ணு வின் தலையை தைலம் தடவி ஒட்டவைத்தனர் அஸ்வினி குமாரர் கள்.
துருக்கி நாட்டில் கண்டுபிடிக்கப் பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்படும் (கி.மு. 1380) கடவுளரில் அஸ் வினி தேவர் களும் இருக்கின்ற னர்! ரிக்வேதத் துதி வரிசையில் இவர் கள் பெயர்கள் இருப் பதால், கி.மு. 1400-க்கு முன்னரே ரிக்வேதம் சிரியா- துருக்கி பகுதிக்குச் சென்றுவிட்டது உறுதியாகிறது!
அஸ்வினி குமாரர்கள் குறித்து, ரிக் வேதத் தில் 376 இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
பகவானின் திருவருட் கிருபையால், அஸ்வினி தேவர்கள் நட்சத்திரங்களில் முதலாவதான அஸ்வினி நட்சத்திரமாக வானிலே ஒளிவீசும் பேறுபெற்றனர்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவானாவார்; தேவதைகள் குதிரைமுகம் கொண்ட அஸ்வினி தேவர்கள் ஆவர்.
செல்: 89035 51587