பத்தாமிட கர்மச்சனி

ராசிக்கு பத்தில் சனி கர்மச்சனியாகி நான்கு, ஏழு, பன்னிரண்டாமிடத்தைப் பார்க்கும். நான்காமிடமான தாயாருக்கு கண்டம், நோய், மருத்துவச் செலவு செய்யநேரும். தாய்வழி உறவுகளால் நன்மை இருக்காது. தீமையே நடக்கும். சிலருக்கு தாயாரைப் பிரிந்து வாழநேரும். கர்மச்சனியால் தாயார், தாய்வழியில் யாருக்காவது கர்மம்செய்ய வேண்டியதாகிவிடும். சுக ஸ்தானமாக இருப்பதால் கிடைக்கவேண்டிய சுகங்கள் எதுவும் கிடைக்காது. அலைந்து திரியவேண்டி வரும். வாகனத்தில் கவனமாகச் செல்லவேண்டும். போக்குவரத்தால் பாதிப்பு ஏற்படும். வயிறு, கை, கால்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் ஒத்துழைப்பு கிடைக்காது. நம் கஷ்டத்தைக் கொண்டாடுவார்கள். வாழ்க்கைத் துணைவருடன் சண்டை, சச்சரவு, துணைவருக்கு நோய், கண்டம், பிரிவைத் தரும். வெளிநாட்டுப் பயணம் குடும்பப் பிரிவைத் தரும். நண்பர்கள், தொழில் கூட்டாளியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிவர். நல்லது சொன்னாலும், செய்தாலும் நன்றியோ, நல்ல பெயரோ கிடைக்காது. தேவையற்ற விரயத்தை அடிக்கடி தரும். நிம்மதியில்லா தூக்கமே இருக்கும். ஏதாவது சிந்தனைகள் மனதை வாட்டும். ஏதோவொரு ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். விரயச்செலவு செய்யாமல் விட்டால் நிறைய அன்பானவர்களின் பகையை சம்பாதிக்க நேரும். வேற்று மொழி, இனத்தவரால் லாபமுண்டு. தொழில்ரீதியான அதிர்ஷ்டம் அனைத்தையும் சமாளித்து இன்பமாக வாழ வழிதரும். பணவரவு, புகழானது துன்பத்திலும் இன்பத்தையே தரும்.

ff

Advertisment

லாபச்சனி

ராசிக்கு பதினொன்றாமிடத் தில் சனி வந்தால் லாபச்சனி என்கிறோம். லாபச்சனி ஒன்று, ஐந்து, எட்டைப் பார்க்கி றார். மன வேதனைகள் மாறி சந்தோஷம் பிறக்கும். நமக்கும் நல்லது நடக்கிறதே என்கிற உண்மையைத் தெளிவாக மாற்றும். இதனால் இதுவரை இருந்த நோய் தீர்ந்து தோற்றப்பொலிவு உண்டாகும். மன நிம்மதியால் பேச்சு, பழக்க வழக்கம், நல்ல சிந்தனைகள் உருவாகி திருப்தியாக செயல்படவைக்கும். முதலில் தன்னைப் பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்கிற ஞானம் பிறக்கும். உடல், மன நிலையில் அக்கறை காட்டுவர். பூர்வபுண்ணிய பலத் தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திரர் களால் லாபம், புத்திரவழி சந்தோஷம் கிடைக்கும். பூர்வீகத்தால் நன்மை, உறவினர்கள் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

குலதெய்வ அருள் அத்தனைப் பிரச்சினை களையும் ஒதுக்கி வெற்றிக்கு உறுதுணை யாக நிற்கும். குலதெய்வத்திற்கு கோவில் கட்டுதல், கும்பாபிஷேகம் நடத்துதல் போன்ற ஆன்மிக காரியங்களைச் செய்ய வழி கிடைக்கும். எல்லாராலும் போற்றப் படும் பொற்காலமாக இருக்கும். லாபச்சனி யால் இதுநாள்வரை இருந்த கடன் தொல்லைகள் தீரும். திடீர் வரவு, புதிய சொத்துகளை வாங்கவைக்கும். எதிரிகள் போற்றக்கூடிய சூழ்நிலை உருவாகும். எவ்வளவு பேர் கெடுத்தாலும், நல்லது தடையின்றி நடந்துவிடும். செய்வினை, பில்லி சூன்யத்தால் பாதிக்கப் பட்டவரைக்கூட தீமை அண்டாது. சாதாரண நிலையில் இருந்தவரைக்கூட பிரபலமாக மாற்றி அதிஷ்டகரமான வாழ்வை அள்ளித் தருவார்.

கோட்சார சனியால் மாறுபடும் பலன்கள்

ரண்டரை ஆண்டுகளில் நன்றாக வாழ்ந்து கொண்டிருப்பவரைக் கெடுப் பதும், நொந்து வாழ்ந்துகொண்டிருப் பவரைக் காப்பதும் சனியால் மட்டுமே சாத்தியமாகிறது. சனி யோகப்பலன் தரும் இடமான- ராசிக்கு மூன்று, ஆறு, பதினொன்றாம் இடத்தில் கோட்சார சனி வரும்போது, தசாபுக்தி சாதகமாக இருந்தால் அதிர்ஷ்ட யோகத்தை அள்ளித்தருவார். சுமாரான தசாபுக்தியில் ஓரளவு நன்மை தருவார். மோசமான தசை நடந்தாலும் தன்னால் முடிந்த நன்மையைத் தந்துவிடுவார். சனி ராசிக்கு ஐந்து, ஒன்பது, பத்தாமிடத்திற்கு வரும்போது நன்மை- தீமை கலந்து பலன் தருவார். தசை நன்றாக இருந்தால் நன்மையும், தீமையானதாக இருந்தால் தீயதாகவும் தருவார். ஏழரைச்சனி, அர்தாஷ்டமச்சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனிக் காலங்களில் தசாபுக்தி நன்றாக இருந்தால் ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். மாரகாதிபதி, பாதகாதிபதி, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதிகள் தசை நடந்தால் ஜாதகருக்கு கண்டம், குடும்பத் தில் யாருக்காவதுஉயிரிழப்பு, பொருள் இழப்பைக் கொடுத்து நல்வாழ்வைக் கெடுத்து குடும்பத் தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி அலறவிடுவார். என்ன செய்வ தென்றே புரியாத நிலையைக் கொடுத்து விடுவார்.

கிரகம் சுபத்தன்மை பெற்று வலுத்து அதியோக தசை நடந்தால் கோட்சார சனி எந்த இடத்தில் இருந்தாலும் கெடுதலைக் குறைவா கவே தரமுடியும். விபரீத ராஜயோகம் பெற்றவர் கள் கெட்ட இடத்தில் நின்று கோட்சார சனி கெட்டி ருந்தால் பதவி, பணம், புகழ், அந்தஸ்தை, யாரும் நினைத்து பார்க்காத நேரத்தில், நினைத்துப் பார்க்கமுடியாத நன்மையைத் தந்துவிடுவார். சனி சுய ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்று லக்னத் திற்கு நட்பாகி வலுத்து நின்றால், வாழ்நாள் முழுவதும் நன்மையை வாரிவழங்குவார். கோட்சார சனியின் வக்ர காலத்தில் தரவேண்டிய பலன்களுக்கு நேர்மாறான பலன்களைத் தருவார்.

சனியின் அஸ்தமன காலத்தில் பலன்கள் பலவீன மாகும். ராசி, லக்னத்திற்கு சனி நட்பு கிரகமாக அமைந்தால் அதிக நன்மையும், பகையாக இருந்தால் சுமாரான பலன்களையும், நீசம் போன்று பலவீனமாக இருந்தால் கெடுபலனையும் அதிகப்படுத்துவார். ராசிக்கு கெட்ட கிரகமாக சனி இருந்து நீசமானால் நற்பலனைத் தந்துவிடுவார். யாராவது ஒரு பிரபலத்தை சொல்லி, "நானும் அவருடைய ராசிதான்; எனக்கு மட்டும் அவரைப் போல் நல்ல பலன்கள் ஏன் நடக்கவில்லை?' என கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரே ராசியில் இருப்பவர்களுக்கு கோட்சார சனி ஒவ்வொரு விதமான பலனைத் தருவதற்கு இதுபோன்ற பலவித காரணங்கள் உண்டு. பிரபலமாக இருப்பவர்களால் சராசரி மனிதர்கள்போல சுதந்திரமாக வாழவே முடியாது. பணம், புகழ் மட்டுமே நிம்மதி தராது. கிடைக்கும்வரை ஏக்கமாக இருக்கும். கிடைத்தபின்பே வேதனை அதிகம். புகழ் பெற்றவர்களும் இறந்துதான் போவார்கள். சில ஆண்டுகளில் இந்த உலகம் அவர்களை மறந்துபோகும். உண்மையில் பிரபலங்கள் வாழும் போது முழு சந்தோஷமாக வாழ்வ தில்லை. புகழைத் தக்கவைக்க போராடிக் கொண்டே இருக்கவேண்டும். சனி உண்மை யான வாழ்க்கையைப் புரிய வைத்து விடுவார்.

ராகு- கேது பெயர்ச்சி

பூமியின் நிழலென சொல்லப்படும் ராகு- கேதுக்கள் ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை, இருக்கும் ராசியிலிருந்து அடுத்த ராசிக்குப் பெயர்ச்சியாவர். பன்னிரண்டு ராசிகளையும் சுற்றிமுடிக்க ஒரு சுற்று 18 ஆண்டுகளாகும். மற்ற கிரகங்களைப்போல் அல்லாமல் ராகு- கேதுக்கள் எதிர் திசையில்- அதாவது இடமிருந்து வலமாக சுற்றும் தன்மை கொண்டவை. ராகு- சனியைப் போல பலனும், கேது- செவ்வாய்போல பலனும் தருவர். ராகு- கேது நிற்கும் நட்சத்திரம், பார்க்கும் கிரகத்தித்கேற்ப பலன் தருவர். ராசிக்கு நட்பு- பகையைப் பொருத்தும் பலன்கள் மாறுபடும். ராகு- கேதுக்களுக்கு வக்ரம், அதிசாரம் கிடையாது. ராகு- கேது ராசிக்கு மூன்று, ஆறு, ஒன்பது, பதினொன்றாமிடங்களில் நிற்கும்போது நன்மை தருவர். பொதுவாக ராகு நல்ல இடத்தில் இருக்கும்போது, கேது ராசிக்கு மோசமான இடத்திலும், கேது நல்ல இடத்தில் இருக்கும்போது ராகு மோசமான இடத்திலும் இருப்பார்கள். இதனால் நன்மை- தீமைகள் கலந்தே ராகு- கேதுக்களால் பலன்தர முடியும். முழு சுபரான குருவின் கோட்சாரப் பலனும், முழு பாவியான சனியின் கோட்சாரப் பலன் தரும் மாற்றத்தை ராகு- கேதுவால் ஜாதகருக்குத் தர இயலாது. சிறிய மாற்றங்களே நிகழும். தசாபுக்தியின் நிலையை மீறி ராகு- கேதுவின் பலன்கள் வேலை செய்யாது. நல்ல- தீய பலன்களை அதிகரிக்க ராகு- கேதுக்களால் சிறிதளவே உதவமுடியும். "ராகுபோல் கொடுப்பார் இல்லை; கேதுபோல் கெடுப்பார் இல்லை' என்பது பொதுப் பழமொழி. கோட்சாரப் பலனுக்குப் பொருந்தாது. ராகு கொடுத்துக் கெடுப்பதும், கேது கெடுத்துக் கொடுப்பதும் நடைமுறையில் ஏற்பட்டிருக்கிறது. ராகு- கேதுக்கள் சுய ஜாதக, தசை அடிப்படையிலேயே பலனைக் கொடுக்கமுடியும்.

மற்ற கிரகங்களின் பெயர்ச்சிப் பலன்கள்

வாழ்க்கையில் உடனடி மாற்றங்களைத் தரும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி தவிர ஏனைய ஐந்து கிரகங்களுக்கும் பெயர்ச்சியுண்டு. அவற்றுக்கு வக்ரம், அதிசாரம், அஸ்தமனம் உண்டு. ஒவ்வொரு கிரகங்களின் பெயர்ச்சிக்கும் கிரக பலத்தைப் பொருத்துப் பலன்கள் மாறும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரனின் பலன்கள் பெரிய மாற்றங்களைத் தராவிட்டாலும், அன்றாடம் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளுக்குத் துணை நிற்கும்.

சூரியன்

வருடத்தின் பன்னிரண்டு மாதங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ஒரு ராசிக்கு மாறுவார். கோட்சார சூரியன் ராசிக்கு மூன்று, ஆறு, பத்து, பதினொன்றாமிடங்களில் வரும் நான்கு மாதங்கள் மட்டுமே நல்ல பலன்களைச் செய்கிறார். மேலும் கோட்சார குருவின் பார்வை சூரியன்மீது படும் மாதங்களில் சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும். அதேபோல் சுபகிரகப் பார்வை, இணைவு, தொடர்பு ஏற்படும் மாதங்களில் கெட்ட பலன் குறையும். மற்ற இடங்களில் நிற்கும் சூரியனை, பாவகிரகமான செவ்வாய், சனி, ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன் பார்வை, இணைவு பெற்றால் தீய பலன்களையே தருவார். மாத, தினப் பலன்கள் கணிக்கப் பயன்படும் கோட்சார சூரியப் பெயர்ச்சியின் பலன்கள் பெரும் பாதிப்புகளைத் தரமுடியாது.

சந்திரன்

ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு சந்திரன், இரண்டு நாள், ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை மாறும். ராசிக்கு ஒன்று, மூன்று, ஆறு, ஏழு, பத்து, பதினொன்றில் சந்திரன் நிற்கும்போது அதிர்ஷ்டத்தையும் நற்பலனையும் தருவார். சுபகிரகப் பார்வை சம்பந்தம் உடல், மனம் இரண்டையும் நன்றாக வைத்துக்கொள்ளும். பாவகிரகப் பார்வை, இணைவு, தொடர்புபெறும் நாட்களில் மனக்குழப்பத்தைக் கொடுத்து தூங்கவிடாமல் செய்து உடலைக் கெடுக்கும்.

ராசிக்கு எட்டாமிடத்தில்- அதாவது அஷ்டம ஸ்தானத்திற்கு சந்திரன் வரும் நாள்தான் சந்திராஷ்டமம். சந்திராஷ்டமம் என்பது இரண்டு நாள், ஆறுமணிநேரம் இருக்காது. அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு பதினேழாவது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாள் மட்டுமே சந்திராஷ்டம நாளாகும். சந்திராஷ்டம நாளில் ஏமாற்றம், காரியத் தடை, நினைத்தது நடக்காததால் கோபம், எரிச்சல், வீம்பு, வம்பு, வழக்கு உண்டாகி உடல், மனச் சோர்வு உண்டாகும். சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி சண்டையிட நேரும். வளர்பிறைச் சந்திரனில் பிறந்தவர்களைவிட தேய்பிறைச் சந்திரனில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லா சந்திராஷ்டமும் தீமை தராது. சுபகிரகப் பார்வை பலம்பெறும் நாட்களில் நன்றாகவே இருக்கும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 96003 53748