வகிரகங்களில் பூமியை வேகமாக சுற்றக்கூடிய சந்திரனுக்கு வளர்பிறை, தேய்பிறை தோற்றம் உண்டு. சந்திரன் வெண்மை நிறமாக காட்சி அளிக்கின்றது. பூமிக்கு மிக அருகிலுள்ள கிரகமும் சந்திரன் ஆகும்.

ஒரு தாயின் மனமும் உடலும் எப்போதும் தான் பெற்ற பிள்ளைகளையே சுற்றிக்கொண்டிருக்கும்.

அதுபோல் சந்திரன் பூமியில் வசிக்கும் ஜீவராசிகளையே சுற்றிவருவதால் இந்த சந்திரனை தாய்க்கு ஒப்பீடு செய்து மாதா காரகன் என்று அழைக்கிறோம்.

சந்திரன் எப்படி மறைந்து தேய்ந்து பின் வளர்ந்து வருகிறதோ அதுபோன்றே மனித உடல் தோன்றி வளர்ந்து பின் தேய்ந்து மறைந்து போகும். இந்த ஒப்பிட்டின் அடிப்படையில்தான் சந்திரனின் உடல் காரகன் எனவும் அழைக்கப்படுகிறது. வேகமாக சுழலக்கூடியக் தன்மையைக்கொண்டது சந்திரன். மனிதனின் மனமும் வேகமாக மாறக்கூடியது. அதனால் சந்திரன் மனோ காரகன் என்றும் அழைக்கப்படுகின்றது.

Advertisment

cc

சூரியன் மட்டுமே சுய ஒளியில் பிரகாசிக்கும் கிரகம். மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியை பிரதிபலிக்கின்றன. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கிரகங்களில் சந்திரன் மட்டும்தான் ஒளியை மிகவும் அதிகமாக பிரதிபலிக்கிறது. பௌர்ணமி நாட்களில் இரவு விளக்கு போன்று காட்சியளிக்கிறது. அந்த வெளிச்சத்தில்தான் நமக்கு இரவிலும் அனைத்தையும் காணமுடிகிறது. இதன் அடிப்படையில் சந்திரனை பிறர் தயவால் கிடைக்கும் புகழுக்கு காரகமாகவும் மேலும் இடது கண்ணுக்கும் அதிபதியாக நிர்ணயித்திருக்கிறார்கள்.

பௌர்ணமி காலங்களில் கடல்நீர் பொங்கிவருவதை அனைவரும் அறிவோம். நீர்நிலைகள் சந்திரன் கட்டுப்பாட்டில் உள்ளதை இது குறிக்கிறது. பௌர்ணமி, அமாவாசை காலங்களில் கடல் கொந்தளிப்பதுபோல மனித உடலிலும் ரத்த ஓட்டத்தின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் ரத்தம் மற்றும் உடலிலுள்ள அனைத்து சுரப்பிகளும் சந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவே கருதப்படுகின்றது.

தாயே தன் குழந்தைக்கு பாலூட்டி, சோறு ஊட்டி பாதுகாப்பளிக்கிறார்.

எனவே தாய்க்கு காரகமான சந்திரனே உணவு பொருட்களுக்கும் திரவ பொருட்களுக்கும் காரகனாக இருக்கிறது.

கடல் சந்திரனின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் கடலில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் சந்திரனுக்கு உரியது என கூறப்படுகின்றது. உதாரணமாக வெண் சங்கு, வெண்பவளம் நீரில் வளரும். அல்லி நீரிலே நின்று வளரும். நெல் தானியம் போன்றவை சந்திரனின் காரகத்துவமாக கருதப்படுகிறது.

விரைவில் அழுகி போகும் காய்கறிகள், பழங்கள் முதலில் சந்திரனின் காரகப் பொருட்களாக கொள்ளப் படுகிறது.

சந்திரன் தோற்றம் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே மனசஞ்சலம் இருப்பவனாக சந்திரன் கருத்தப்படுகிறான்.

சந்திரன் வேகமாக சுற்றக்கூடிய கிரகமாக இருப்பதைபோல கடலின் அலைகள்போல மனதிலும் உடலிலும் சந்திரன் அசைவுகளை ஏற்படுத்துகிறான். இதன் காரணத்தால்தான் மனமாற்றம், உடலுக்கு இடமாற்றம் இவற்றை தருபவனாக சந்திரன் கருத்தப்படுகின்றான்.

பல மூலிகைகள் சந்திர ஒளியில் வளர்வதாக கூறப் படுகின்றது. எனவே மூலிகைகளைக் குறிக்கும் கிரகமும் சந்திரன் ஆகும்.

சந்திரன் வெண்மையாக காணப்பட்டாலும் அதன்மீது சில கரும்புள்ளிகளும் தென்படுவதைக் காணலாம். எனவே மனிதர்களுக்கு உண்டாகும் களங்கத்தை சந்திரன் குறிப்பதாக கூறப்படுகின்றது.

எந்த ஒரு கிரகத்தின் கதிர்களும் சந்திரனை தாண்டிதான் பூமி வந்தடைய வேண்டும். எந்த ஒரு கிரகமும் சூரியனின் ஒளியைதான் பிரதிபலிக்க வேண்டும்.

எனவே சூரியனை ராஜா என்றும்; சந்திரனை ராணி என்றும் அழைக்கிறார்கள்.

இத்தகைய அரிய சிறப்புகள்கொண்ட சந்திரன் நாம் ஜாதகத்தில் தரும் யோகங்கள் அளப்பரியது. பெரும்பாலான யோகங்கள் சந்திரனை முன்னிட்டு சொல்லப்படுகின்றது.

சந்திரனுக்கு கேந்திரத்தில் குருபகவான் என்ற சுபர் இருக்கும்பொழுது குரு சந்திர யோகம் போன்ற அமைப்பையும் கஜகேசரி யோகம் போன்ற எதிரிகளை பந்தாடக்கூடிய யோகத்தையும் வழங்குகிறது.

குரு செவ்வாயுடன் சேரும்பொழுது மங்கள யோகம் என்னும் வீடு, நில பலன்கள், அதிகாரம் சிறப்புமிக்க பதவிகளைத் தரும் யோகத்தைத் தருகிறது.

பௌர்ணமி நிலையில் குருவைவிட அதிக சுபத்தன்மை கொண்டிருக்கும் சந்திரன் தரும் அதியோக அமைப்பு அளப்பரியது.

பொதுவாக வளர்பிறை சந்திரனுக்கு 6, 7, 8-ல் இருக்கும் சுபகிரங்கள் அதிக வலிமை அடைகின்றன.

ஒரு கிரகம் நீசம் அஸ்தமனம் பாவத்தன்மை போன்ற எந்த நிலையிலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் அமையும்பொழுது அவற்றின் பாவத்தன்மை நீங்கி புனிதத் தன்மை அடைகின்றன. இதற்கு சந்திரன் முழு ஒளியுடன் அல்லது பௌர்ணமி நிலையில் இருப்பது மிக அவசியமாகும்.

எப்படி ஒரு முழு ஒளிபொருந்திய பௌர்ணமி சந்திரன் குருவைவிட அதிக சுபத்தன்மை பொருந்தியவரோ அதேபோல் முழு தேய்பிறை நிலையில் இருக்கும் சந்திரன் சனியைவிட அதிக பாவத்தன்மை கொண்டவராக கருதப்படுகிறார்.

எந்த ஒரு யோகத்தினையும் லக்ன அடிப்படையில் கணக்கிடுவதுபோல சந்திரன் அடிப்படையில் பல்வேறு யோகங்கள் கணக்கிடப்படலாம்.

சந்திரனின் வலு குறைந்தவர்கள் நல்ல தாயார் கிடைப்பதும், உணவு, நீர் சம்பந்தப்பட்ட வகைகளில் பிரச்சினைகளைச் சந்திப்பதும், மனம் ஒரு நிலையற்ற தன்மையைக் கொண்டிருப்பது போன்ற தீய பலன்களை ஏற்படுகின்றன.

பொதுவாக சந்திரன், ராகு- கேது போன்ற சனி போன்றவர்களுடன் நெருங்கி இருப்பது நல்லதல்ல.

செவ்வாய்- சூரியன் போன்ற அசுபத் தன்மை கிரகங்களுடன் சேர்ந்து இருப்பது இவருக்கு நண்பர் என்ற முறையில் பெரிய பாதிப்புகளைத் தருவதில்லை. சில நேரங்களில் அதிகாரமிக்க பதிவிகளைத் தருவதற்கும் இந்த இணைவு பொறுப்பாகிறது.

தாய் என்னும் சந்திரனை நாள்தோறும் வணங்கிவருதல், உணவு, நீர் போன்றவற்றை தரமானதாக தேர்ந்தெடுப்பது, அவ்வப் பொழுது மனதிற்கு இதமான பயணங்களை மேற்கொள்வது இவையனைத்துமே சந்திரனை வலுப்படுத்தும் எளிய வாழ்வில் பரிகாரங்களாகும்.

பௌர்ணமி தினங்களில் சந்திர ஒளியை உள்வாங்கி தியானம் மேற்கொள்வது அனைத் துப் பரிகாரங்களிலும் சிறப்பானதாகும்.

மனம் வலுத்தவனுக்கே உலகம் வசமாகும். சந்திரன் என்னும் மனம் வலுப்பட எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் அவன் சாதாரணமாக கடந்துசெல்வான்.

செல்: 93857 19579