பொதுவாக திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பெண் அல்லது ஆண் ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது; எனவே இதேபோன்ற செவ்வாய் தோஷமுள்ள வரனைப் பாருங்கள் என்று கூறுவார்கள்.
செவ்வாய் இருக்குமிடமும் பார்வையும்
செவ்வாய் 2-ஆம் வீட்டில் இருந்தால் அவர் தனது ஏழாம் பார்வையால் ஜாதகரின் எட்டாம் வீட்டை நோக்குவார். எட்டாம் வீடென்பது ஆயுள் ஸ்தானம்.
செவ்வாய் நான்கில் இருந்தால் அவர் தனது நான்காம் பார்வையால் ஏழாம் வீட்டைப் பார்ப்பார். ஏழாம் வீடு களத்திர ஸ்தானம்.
செவ்வாய் 7-ல் இருந்தால் தனது எட்டாம் பார்வையால் ஜாதகரின் இரண்டாம் வீட்டை உற்று கவனிப்பார். இரண்டாம் வீடு குடும்ப ஸ்தானம்.
செவ்வாய் எட்டில் இருந்தால் தனது ஏழாம் பார்வையால் இரண்டாம் வீடு எனும் குடும்ப ஸ்தானத்தை முறைத்துப் பார்ப்பார்.
செவ்வாய் 12-ல் இருந்தால் தனது எட்டாம் பார்வையால் ஜாதகரின் ஏழாம் வீட்டை அவதானிப்பார்.
இப்போது கவனியுங்கள். ஒரு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் 2, 4, 7, 8, 12-ல் இருப்பின், அந்த செவ்வாயின் கொடிய பார்வை அந்த ஜாதகரின் குடும்ப வாழ்வுக்குத் தேவையான இடங்களை பலமிழக்கச் செய்கிறது.
இதேபோல் பொருத்தம் பார்க்கும் இன்னொரு வரனுக்கும் இவ்வித தோஷம் இருப்பின், அவருக்கும் பலமிழக்கும் தோஷமும், இவரின் தோஷமும் சமன்படுத்தப்படும். இரண்டு மைனஸ் சேர்ந்தால் ஒரு பிளஸ் என்பார்களே- அதுபோன்றது தான்.
இந்த 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் ராசி அல்லது லக்னத்திற்கு எங்கிருந்தாலும் பொருத்தலாம் என ஜோதிட நூல்கள் எடுத்துரைக்கின்றன. செவ்வாய் இவ்வாறு தனது பார்வையால் தான் தோஷம் கொடுக்கும் இடத்தைப் பார்ப்பதால், அது இருவருக்கும் இருப்பதாலும் தோஷநிவர்த்தி என எடுத்துக் கொள்ளலாம்.
மேலும் செவ்வாய் தோஷத்திற்கு இன்னொரு காரணமான உடலுறவு, காமம் ஆகியவற்றை பெண்ணுக்கும் ஆணுக்கும் சமன்செய்யவும் உள்ள தாகக் காணக் கிடைக்கிறது.
செவ்வாய் தோஷம் பற்றிய இன்னொரு விஷயம் என்னவென் றால், செவ்வாய் மாங்கல்ய காரகன் மற்றும் ரத்த காரகன். இந்த தோஷ நிவர்த்தி ஆண்- பெண்ணின் ரத்தம் சம்பந்தமான கோளாறுகளை சமன்செய்யும் மற்றும் மாங்கல்யம் வலுப்பெறும்.
பொதுவாக செவ்வாய் தோஷ ஜாதகர்கள் முருகனை வழிபடுவது வழக்கம். அங்காரகனுக்கு அரளிப்பூ, சிவப்பு ஆடை சாற்றி வழிபடுவது நல்லது. மேலும் வீரபத்திரரை வழிபாடு செய்வதும் நன்று. இயன்றபோதெல்லாம் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் தானம் செய்வது நல்லது. அதுபோல துவரம் பருப்பு சாம்பார் சாதம் விநியோகமும் நல்லது. உங்கள் வீட்டுக் குழந்தைகள் ஓரளவு திருமண வயதைத் தொடும்போதே, அவர்களின் ஜாதகம் பார்த்து இவ்விதம் செவ்வாய் தோஷம் இருப்பின் முடிந்தபோதெல்லாம் மேற்கண்ட பரிகாரங்களைச் செய்து வந்தால் திருமணத்தின்போது சிரமமில்லாமல் நல்ல வரனாக அமையும்.