ரு திருமணம் நடக்கும்போது, மணமக்களை, "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நன்றாக வாழவேண்டும்' என வாழ்த்துகிறார்கள்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, முக்கியமாக ரஜ்ஜுப் பொருத்தம் உள்ளதா என்று கேட்பார்கள். அது மாங்கல்ய பலத்தைக் குறிப்பதால், பெண்- ஆணின் ஆயுள் பற்றிய கேள்வியாக ஆகிவிடுகிறது. அதற்கு ஈடான இன்னொரு பொருத்தம் யோனிப் பொருத்தமாகும். இதனை அனைவரும் தாம்பத்திய திருப்தியைக் குறிக்கும் கணக்காகக் கூறுவர். அது உண்மையும்கூட.

ஆனால், இந்த யோனிப் பொருத்தம் என்பது, தம்பதிகளின் நட்பை, இணக்கத்தை, ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் தன்மையை, "கெமிஸ்டரி' ஒர்க் ஆவதை, ஒருவரின் பழக்க- வழக்கம் அடுத்தவருக்கு சரிபட்டு பிடித்துப் போவதை, ஒவ்வொருவரின் உயர்வு- தாழ்வு, சுக- துக்கங்களில், "நான் இருக்கேன் கவலைப்படாதே' என்ற ஒரு மலையளவு ஆதரவு காட்டுவதைத்தான் மிகச்சிறந்த யோனிப் பொருத்தமாகக் கொள்ளவேண்டும்.

சில ஆண்களிடம், "ஏம்பா, வீட்ல எப்படி இருக்காங்க?'' என்று கேட்டுப் பாருங்கள்.

Advertisment

அவர் முகத்தில் சுரத்தே இல்லாமல், "ம்... இருக்கா'' என்பார். மனைவியிடம் கேட்டால், "எங்க வீட்டுக்காரரா, இருக்காரு...!'' என்று யாரையோ கூறுவதுபோல் சொல்வாள். சரி, "எத்தனை குழந்தைகள்?'' என்று கேளுங்கள்... "அதுவா, இரண்டு குழந்தைகள்'' என்று கூறுவர்.

ஆக, தம்பதிகளின் அன்யோன்யதிற்கும், குழந்தைப் பிறப்புக்கும் சம்பந்தமில்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. முதல் ஐந்து வருடங்களில், தம்பதிகளின் இளம்வயது காரணமாக ஏதோ பிள்ளை பிறந்துவிடுகிறது. பின்வரும் வருடங்களில் விதியே என்று காலம் கழித்தால், அது என்னவித தம்பதிகளின் வாழ்க்கை? வெறுப்புடன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, "எல்லாருக்கும் நல்ல கணவன்- நல்ல மனைவி... எனக்கு மட்டும் இப்படி வாய்த்துவிட்டதே! எல்லாம் போன ஜென்மத்துப் பாவம்' என மனம் புழுங்கி வெந்து, கண்ணீர் மறைத்து வாழ்வது ஒரு வாழ்க்கையா? இரவில் மட்டும் கணவன்- மனைவி என்பதல்ல. பகலிலும் அவர்கள் ஒருமித்த தம்பதியாக இருத்தல் அவசியம். உடல் சம்பந்தம் மட்டும் போதாது. உள்ள இணைவும் அதிமுக்கியம்.

இந்த யோனிப் பொருத்தத்தில், சில நட்சத்திரங்களுக்கு சில மிருகங்களைக் குறிப்பிடுவர். அதில் சிலவற்றுக்கு சில நட்சத்திரங்களைப் பகையென்று கூறுவர். இந்த மிருகங்களைக் கொண்டு ஜாதகர்களின் இயல்புகளைக் கூறலாம். அவர்களின் தினப்படி செயல்கள் எவ்வாறு அமையும் என்பதையும் அனுமானிக்கலாம்.

Advertisment

ff

நட்சத்திரங்களின் மிருகங்களையும், அதன் பகை நட்சத்திரங்களின் தன்மையையும் அவதானியுங்கள். உங்களுக்கே இது எவ்வளவு முக்கியமான பொருத்தம் என்று தோன்றிவிடும்.

அஸ்வினி, சதயம்- குதிரை அஸ்தம், சுவாதி- எருமை

இவை பகை மிருகங்கள் என கூறப்பட்டுள்ளது. குதிரை என்பது சுறுசுறுப்பு, வேகம், முதன்மை, கம்பீரம், அழகு, நேர்த்தி, ஆச்சர்யம் என்பது போன்ற மிக மேன்மையான செயல்களைக் குறிப்பது. இதன் எதிர் நட்சத்திர எருமையை நினைத்தால், குட்டையிலேயே ஊறிக் கொண்டிருப்பது, நகராமை, சோம்பேறித்தனம், அசுத்தம், அசமஞ்சத்தனம், முகச்சுளிப்பான தோற்றம் என இவையே நினைவுக்கு வரும். இப்படி சுறுசுறுப்பானவரும், மகா சோம்பேறியானவரும் ஒரு திருமணத்தில் இணைந்தால், அந்த வாழ்க்கை ரணகளமாகி விடாதா? நடைமுறை வாழ்க்கை நரகமாகிவிடும். எனவே இதனைச் சேர்க்கவேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பரணி, ரேவதி- யானை அவிட்டம், பூரட்டாதி- சிங்கம்

இந்த நட்சத்திரங்களுக்குள் பகை எனக் கூறப்பட்டுள்ளது. யானை, சிங்கம் ஆகிய இரண்டுமே காட்டின் முதன்மைத் தன்மை வாய்ந்த ராஜாக்கள். ஏறக்குறைய ஈடில்லா பலம் வாய்ந்தவை. இரண்டும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டால், காட்டையே துவம்சம் செய்துவிடுவர்கள். அதற்குக் காரணம் அவரவரின் தனித்தன்மையாகும். அதுபோலவே இந்த பகை மிருக நட்சத்திரத்தாரை திருமணத்தில் இணைத்தால், இருவருமே "ஈகோ' யுத்தத்தில் ஈடுபட்டு, வாழ்க்கையே நிம்மதி யின்றிப் போய்விடும். தம்பதிகள் ஒருவரையொருவர் இணையாக, இணைவாக நினைக்க வேண்டுமேயொழிய, "நான் பெரியவனா? நீ பெரியவளா' என நினைத்தால், அந்த இல்லறம் அவ்வளவுதான். எனவே, இந்த நட்சத்திரத்தைத் தவிர்க்குமாறு கூறப் பட்டுள்ளது.

கார்த்திகை, பூசம்- ஆடு பூராடம், திருவோணம்- குதிரை

இந்த பகை நட்சத்திரங்கள் இரண்டுமே சுறுசுறுப்பானவைதான். ஆனால் இரண்டின் சுறுசுறுப்பும் வேகமும் செயல்களும் வேறுபாடானவை. ஆடு மந்தையாக, தனித் தன்மையின்றி, பிற ஆடுகளைப் பின்பற்றிச் செல்லும் தன்மையும், பயந்த சுபாவமும் கொண்டது. ஆனால் குதிரையோ தனித் தன்மையும், மிகுந்த வீரமும் கொண்டது. ஒரு குதிரையானது ஆட்டினை ஒரு மிருகமாகவே மதிக்காது. அலட்சியமாகப் போய்விடும். இதுபோன்ற மனநிலை கொண்டவர்களை வாழ்வில் இணைத்தால், அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை, கண்ணில் படும் கொசு அளவுக்குத்தான் மரியாதையும் மதிப்பும் கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், அவர்களை வேலைசெய்யும் ஆட்களைப்போலதான் நடத்துவார்கள். இதனால் இணையில் ஒருவர் மனம் குன்றி, குறுகிப் போய்விடுவர். எனவே இந்த பகை நட்சத்திரத்தை இணைக்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

ரோகிணி, மிருகசீரிடம்- நாகம் உத்திராடம்- கீரி

இதனைத் தனியாக விளக்கத் தேவையில்லை. நாகமும் கீரியும் பார்த்தாலே, பாய்ந்து பிடுங்கியெடுத்து, சண்டையிட்டுக் கொல்லும் நிலைக்குப் போய்விடும். எனவே இந்த நட்சத்திரங்களை சேர்க்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அதுசரி... சண்டையில் தம்பதிகளுள் ஒருவர்தான் உயிரோடு இருத்தல் கூடும் என்ற நிலை நன்றாகவோ இருக்கும்?

திருவாதிரை, மூலம்- நாய் அனுஷம், கேட்டை- மான்

இந்த இரு மிருகங்களும், எங்கே பார்த்துக்கொண்டாலும் பரபரப்புதான். நாயைப் பார்த்து மான் மிரண்டு ஓட, நாயோ, "ஆஹா இன்னைக்கு நல்லா ஒரு சொங்கிப்பயல் மாட்டினான். விடவே கூடாது. ஓட ஓட விரட்டணும்' என்று பயில்வான் கணக்காக விரட்ட, மானோ என்ன செய்வதென தெரியாது மலங்க மலங்க விழித்துத் தவிக்கும். இதுபோன்றவர்களை இணைத்தால், ஒருவர் அதிகாரம் செய்ய, அடுத்தவர் பதுங்க நேரிடும். வாழ்நாள் முழுக்க இதே நிலையெனில், வாழ்வு சீராக இராது. மகிழ்ச்சியென்பதே இல்லாமல் போய்விடும். எனவே இதனைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. புனர்பூசம், ஆயில்யம்- பூனை மகம், பூரம்- எலி

இந்த பகை அமைப்புக்குத் தனியாக விளக்கம் தேவையில்லை. பெரும்பகையான இந்த மிருக நட்சத்திரங்களைத் தவிர்க்கும்படி கூறியுள்ளனர். ஓரிடத்தில் பூனையின் வாசனை லேசாக இருந்தாலே, எலி அந்த இடத்தைவிட்டு அலறியடித்து ஓடிவிடும் என்பார்கள்.

உத்திரம், உத்திரட்டாதி- பசு சித்திரை, விசாகம்- புலி

இந்த பகை அமைப்புக்கும் தனியாக விளக்கம் தேவையில்லை. புலியைப் பார்த்தாலே, பசு அலறியடித்து ஓடுவதும், பசுவைப் பார்த்தவுடன் புலி அதனை அடித்துக்கொன்று தின்பதுவும் நடைமுறை உண்மை. தம்பதிகள் ஒருவரைப் பார்த்து ஒருவர், "அடப்பாவி! கொல்ல வருகிறான்' என்று அலறி பயந்து ஓடினால் நன்றா கவா இருக்கும்? எனவே இந்த பகை கிரக நட்சத்திரங்களை விலக்கியுள்ளனர்.

எனவே யோனிப் பொருத்தம் என்றா லே, தாம்பத்திய சுகத்தை மட்டும் குறிப்பது என்றெண்ணாமல், அதன் உண்மையான, நுணுக்கமான, உள்ளீடான உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

கணவனும் மனைவியும் நல்ல தம்பதிகளாக மட்டுமல்ல; நல்ல சிநேகிதர் களாக இருக்கவேண்டும். அதுவே திருமண மென்னும் ஆயிரம் காலத்துப் பயிருக்கு நாம் கொடுக்கும் மரியாதை!

செல்: 94449 61845