சுமார் 58 வயதுடைய ஒருவர், சுமார் 30 வயதுடைய ஒரு பெண்ணையும், ஒரு வயதான அம்மையார் என மூன்று பேர், ஜீவநாடியில் பலன்கேட்க, வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, "என்ன விஷயமாக பலன்கேட்டு தெரிந்துகொள்ள வந்துள்ளீர்கள்' என்றேன்.
"இவள் என் மகள், இந்த அம்மாள் எனது மாமியார். எனது மகளுக்கு இப்போது 30 வயது முடிந்துவிட்டது. இவள் திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது. நிறைய ஜோதிடர்களிடம் இவள் ஜாதகத்தைக் கொடுத்துப் பலன் கேட்டபோது, "சில ஜோதிடர்கள் இவளுக்கு செவ்வாய் தோஷமுள்ளது என்றும், இன்னும் சில ஜோதிடர்கள், ராகு- கேது சர்ப்ப தோஷமுள்ளது. இதுபோன்ற தோஷங்கள் இருப்பதால்தான், இவளின் திருமணம் தடையாகிக்கொண்டே வருகின்றது என்று கூறி, மேலும் இதுபோன்று தோஷமுள்ள ஆணுக்குத்தான் திருமணம் செய்துவைக்க வேண்டும்'' என்று கூறினார்கள்.
இந்த தோஷங்கள் நீங்கி திருமணம் நடக்க ஒவ்வொரு ஜோதிடரும், ஒவ்வொருவிதமான பரிகாரங்களையும், கோவிலில் சென்று பிரார்த்தனைகளை யும் செய்யச் சொன்னார்கள். ஜோதிடர்கள் கூறிய முறையில் அனைத்தையும் செய்து முடித்தோம். ஆனால் திருமணம் மட்டும் கூடிவரவில்லை; நடக்க வில்லை.
ஜோதிடர்கள் கூறியது போன்று, செவ்வாய் தோஷம், ராகு- கேது சர்ப்ப தோஷமுள்ள பையன்களை தேடிப்பிடித்து, இருவரின் ஜாதகத்தையும் கொடுத்துப் பலன் கேட்டபோது, பத்து பொருத்தம் சரியாக இல்லையென்று சிலரும், இன்னும் சில ஜோதிடர்கள் நட்சத்திரப் பொருத்தமில்லையென்றும், இன்னும் சில ஜோதிடர்கள், சிலரின் ஜாதகத்தைப் பார்த்து, இருவர் ராசியும் 6-க்கு 8 (சஷ்டாங்கம்) தோஷமாக உள்ளது. இதனால் இந்தப் பையன்களுக்கு திருமணம்செய்து வைக்கக்கூடாது என கூறிவிட்டார்கள்.
என் மகளுக்கு திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனது நண்பர் ஒருவர், நீயும் எல்லா ஜோதிடர்களையும் பார்த்து, அவர்கள் சொன்ன பரிகாரங்களையும் செய்துவிட்டாய். இப்போது நான் சொல்வதை நீ கேட்டு செய்வாயா? என்றார். எனது மகள் திருமணம் சம்பந்தமாக நீ கூறியபடியும் செய்கின்றேன் என்றேன். எனது நண்பர் தங்களைப் பற்றிக்கூறி, அகத்தியர் ஜீவநாடியில் பலன் கேட்டுப்பார். உன் மகள் திருமணம் பற்றிய விளக்கமும், திருமணத்தடைக்கு காரணமும் தெரியும் என்றார். அவர் கூறியதைக் கேட்டுத்தான் நாடியில் பலன் கேட்க வந்துள்ளேன்'' என்றார்.
அவர் கூறிய அனைத்தையும், பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஓலைக்கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவாகத் தோன்றி பலன் கூறத் தொடங்கினார்.
இவன் மகளின் திருமணத் தடைக்கு, கிரகமோ, தோஷங்களோ காரணம் இல்லை. இதோ என் முன்னே அமர்ந்துள்ளாளே, இவனின் மாமியார், இவள்தான் காரணம். பேத்தியின் திருமணத்தை, இந்த பாட்டிதான் ஏதேதோ கூறி தடைப்படுத்தி வருகின்றாள்.
இவனும், தன் மாமியாரின் பேச்சை மீற முடியாமல் தடுமாற்றத்துடன் உள்ளான்.
அகத்தியர் கூறியதைக் கேட்ட அந்த அம்மாள், என் பேத்தியை நான்தான் வளர்த்தேன். நானே அவள் திருமணத்தை தடுப்பேனா? உண்மையில் அகத்தியர்தான் அப்படி கூறுகின்றாரா? அல்லது நீங்களாக கூறுகின்றீர்களா? என்று என்னைக் குறை கூறினார்.
அவர் கூறியதைப் பொருட்படுத்தாமல், ஓலையைத் தொடர்ந்து படித்தேன். இவன் ஒரு மதத்தைச் சேர்ந்தவன். இவன் மனைவி வேறொரு மதப்பிரிவைச் சேர்ந்தவள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி, திருமணம் செய்துகொண்டனர். இந்த மகள் பருவம் அடைந்த சில வருடங்களில், இவன் மனைவி மரணம் அடைந்துவிட்டாள். இவன் மாமியார், இந்த அம்மாள்தான், இவன் வீட்டிலேயே தங்கியிருந்து இந்தப் பெண்ணை வளர்த்தாள்.
இந்த அம்மாளுக்கு இவர்களைவிட்டால் வேறு ஆதரவு, உறவுகள் கிடையாது. இவள் தன் பேத்தியை, தனது மதத்தைச் சேர்ந்தவனுக்குத்தான் திருமணம்செய்து வைக்கவேண்டும். திருமணம் முடிந்தபின்பு, நானும் என் பேத்தியுடன்தான் வசிப்பேன் அல்லது திருமணம் முடிந்தாலும், அவள் வீட்டிற்கு மாப்பிள்ளையாக இங்கே வந்துவிடவேண்டும் என இதுபோன்ற சில கோரிக்கைகளை வைப்பதால் திருமணம் செய்துகொள்ள சம்மதித்த பையன்களும், பெண் வேண்டாம் என்று கூறிச் சென்று விட்டார்கள்.
இந்தப் பெண்ணும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறி பிடிவாதமாக உள்ளாள். இந்தப் பெண் வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையை மணந்துகொள்ளும் அமைப்பு இவள் திருமண விதியில் இல்லை. அப்படி மாப்பிள்ளை அமையமாட்டான்.
அதேபோன்று வெளிநாடு சென்று, வேலை பார்த்து வாழும் தொழில் அமைப்பும் கிடையாது. பாட்டியும், பேத்தியும், தங்கள் கற்பனைகளையும், ஆசைகளையும், பிடிவாதத்தை விட்டுவிட்டால், இந்தப் பெண்ணிற்கு வரன் அமைந்து திருமணம் நடக்கும்.
இந்தப் பெண்ணின் திருமணம் சம்பந்தமான விஷயத்தில், இவளின் பாட்டி, தன் சுயநல ஆசைகளை ஒதுக்கிவிட்டு, தலையிடாமல் ஒதுங்கி இருக்கவேண்டும். இவளின் பாட்டிதான் நந்திபோல் குறுக்கே இருந்து, திருமணத் தடையை உருவாக்கி வருகின்றாள். இந்தப் பெண்ணும் தன் விதியை அறிந்து, வெளிநாட்டு மோகத்தை விட்டுவிட்டு, திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறியவர், மேலும் இவளுக்கு கணவனாக அமையப் போகின்றனைப் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியதைக் கேட்ட அவள் பாட்டியும், "இனி எனது ஆசைகளையும், சுயநலத்தையும் விட்டு விடுகின்றேன். அகத்தியர் அடையாளம் காட்டி கூறியதுபோன்று மாப்பிள்ளை வந்தால், எந்த மறுப்பும் இன்றி திருமணம் செய்துவைத்து விடுகின்றோம்'' என்று கூறினார். நந்தி விலகினால் நன்மையே நடக்கும் என்று கூறி அனுப்பிவைத்தேன்.
கிரகங்களால், தோஷங்களால், பத்து பொருத்தங் களால், ஜோதிடர்களால் மட்டும் ஆண்கள், பெண்களின் திருமணம் தடையாவது மட்டுமல்ல. குடும்பத்திலுள்ள உறவுகளாலும், அவரவர் விரும்புவதுபோல் மணமகன், மகணமகள் அமையவேண்டும் என்ற பிடிவாதத் தாலும், திருமண விதி தெரியாமல் செயல்பட்டு வாழ்ந்து, சுபகாரியத்தைத் தடையாக்கிகொள் கின்றார்கள் என்பதை நானும் அறிந்து, புரிந்து கொண்டேன்.
செல்: 99441 13267