இன்றையநாளில் ஜோதிடர்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய பிள்ளைகளின் திருமணத்திற்காக ஆண்டுக் கணக்கில் வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான்.
ஜாதகம் வருகிறது, பொருத்தங் கள் பார்க்கப்படுகிறது. அதன்பிறகு எந்தவித பதிலும் வருவதில்லை.
திருமணத்திற்காக செய்யாத முயற்சியில்லை, பதிவுசெய்து வைக்காத இடமில்லை. எதிர் பார்த்தபடி ஜாதகம் வருவதில்லை.
எப்படியோ பேசிமுடித்து நிச்சயம் செய்து திருமண ஏற்பாடு கள் நடந்து வருகிறது. அந்த நேரத்தில்திருமணம் தடைப்பட்டு விடுகிறது.
சிலருடைய வாழ்வில் மண மேடை வரையில் வந்து தாலி கட்டும் நேரத்தில்கூட ஏதோ காரணத்தால் திருமணம் நின்றுபோகிறது.
இதற்கெல்லாம் என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள முடியாமல், இருக்கும் இடத்தைவிட்டு இல்லாதஇடம்தேடி ஏதேதோ கோவில்களுக்கு போய்வருபவர்களும், சொல்பவர்களின் பேச்சையெல்லாம் கேட்டு பரிகாரம், பூஜை என்று செலவழித்துக் கொண்டிருப்பவர்களும் இங்கே பலபேர் இருக்கின்றனர்.
அடித்தட்டில் இருந்து உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் வரையில் நாற்பது வயதைக் கடந்த பின்னும் திருமணம் ஆகாமல் வரன் தேடித்தேடி அலுத்துப் போனவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நோக்கமே இப்பதிவு.
ஒவ்வொருவரின் ஜாதகத்திற்குள்ளும் அவர் அவருடைய வாழ்க்கைக்குரிய வழி மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்க்கையில் தடைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் தோஷங்களும் மறைந்திருக்கிறது.
இந்த தோஷங்கள்தான் வேலை வாய்ப்பில் தடை, தொழிலில் தடை, திருமணத்தில் தடை, குழந்தை பிறப் பில் தடை, தீராத நோய் என்று வாழ்க்கையில் சோதனைகளுக்கு மேல் சோதனைகளை உண்டாக்கிவருகிறது.
இத்தகைய கொடிய தோஷங்கள் பற்றி தெரிந்தவர்கள் ஜோதிடத்தில் நன்றாக ஆழ்ந்த ஒருசிலர் மட்டும்தான்.
இத்தகைய ஜோதிடர்களிடம் செல்லாமல்,ஜாதகம் பார்த்ததும் ""குரு பார்வை வந்துவிட்டது, இந்த வருடம் திருமணம் நடந்து
விடும்'' என்று சொல்லக்கூடிய ஜோதிடர்களின் பேச்சை நம்பி நம்பி பல ஆண்டுகள் கடந்தபின்னும் திருமணம் நடக்காமல்
ஜோதிடத்தையே வெறுத்தவர்களும் இங்கே பலருண்டு.
பூஜை செய்தால் சரியாகிவிடும், கழிப்பு கழித்தால் சரியாகிவிடும் என்று சொன்னவர்களை நம்பி ஆயிரம் ஆயிரமாய் செலவு செய்தும் எந்தப் பலனும் கிட்டாமல் மனம் உடைந்துப் போனவர்களும் இங்கே உண்டு. திருமண வாழ்க்கைக்காக தவமிருந்து, வயதை தொலைத்துக் கொண்டிருப்போரின் வாழ்க்கையில் புதிய விடியலை உண்டாக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் திருமணத் தடைகளை உண்டாக்கிடும் ஜாதகதோஷங்கள் என்னும் இக்கட்டுரையை உங்களுக்காக எழுதியுள்ளேன்.
திருமணத்திற்காக வரன் தேடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் ஜாதகத்திற்குள்ளும் இருக்கும் தோஷங்கள் பற்றியும், அதற்குரிய மிகமிக எளிய பரிகார முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் நான் எழுதியுள்ளேன்.
ஜோதிடம் என்பது ஆழ்கடல் போன்றது. இந்தக் கடலுக்குள் முழுதாக மூழ்கி எழுந்தவர்கள் என்று இன்றுவரை யாரையும் சொல்லிவிட முடியாது. ஒருவர் கற்றதை மற்றவர் கற்றிருக்க மாட்டார் என்றாலும் ஒவ்வொரு ஜோதிடரும் ஏதோவொரு பாவத்தில் சிறப்பானவராக இருப்பார்.
இக்கட்டுரையில், நான் கற்றதையும், என்னுடைய ஜோதிட வாழ்க்கையில் நான் தெரிந்துகொண்டதையும் உங்களுக்காக வழங்கியுள்ளேன்.
பதினெட்டு வயதில் திருமணம் செய்துகொண்டு இருபது வயதில் குழந்தை பாக்கியம் காண்பவர்களாக பலர் இருக்கும் நிலையில ஒருசிலருக்கு மட்டும் நாற்பது வயது கடந்த நிலையிலும் திருமணம் நடக்காமல் இருப்பது ஏன்? என்ற எனது ஆராய்ச்சிக்கு கிடைத்த விடைகள்தான் கிரக தோஷங்கள் என்பது.
திருமணத்தை முடிக்க முடியாமல் தடைபோட்டுவரும் இந்த தோஷங்கள் என்ன? என்ன? இந்த தோஷங்களைப்பற்றி நாம்
எப்படி தெரிந்துகொள்வது? எந்தவகையில் எப்படி பரிகாரம் செய்வது? என்றுதானே கேட்கிறீர்கள்....
உங்கள் கேள்விக்குரிய விடைகள் இதோ...
திருமணம் நடத்துவதைத் தடுத்துக்கொண்டிருக்கும் தோஷங்களில் பிரதானமானவை... பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், கால சர்ப்ப தோஷம், புனர்பூ தோஷம், ராகு- கேது தோஷம் என்கிற நாக தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை ஆகும்.
இந்த தோஷங்களில் பித்ரு தோஷத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்...
பித்ரு தோஷம்...
ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதை எப்படி தெரிந்து கொள்வது?
இதற்காக ஜோதிடரிடம்தான் நீங்கள் போகவேண்டும் என்பதில்லை... உங்களுடைய ஜாதகத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதிலுள்ள ராசிக்கட்டத்தைப் பாருங்கள்.
ஜாதகத்தில் ஒவ்வொருவருக்கும் லக்னம் மாறும்... உங்களுடைய லக்னம் எதுவோ அந்த வீட்டில் ல/ என்று போட்டிருக்கும்.... யார் எந்த லக்னமாக இருந்தாலும் சரி... ல/என்று குறிப்பிட்டுள்ள வீட்டையே ஒவ்வொரு வரும் தங்களுடைய முதலாவது வீடாக எடுத்துக்கொள்ள வேண்டும், லக்ன வீட்டை முதல் வீடாக வைத்து அடுத்தடுத்த வீடுகளை எண்ணி வரும்போது கடைசி வீடாக பனிரெண்டாவது வீடு வரும்.
இப்போது அடுத்த கட்டத்திற்கு வருவோம், லக்னம் என்ற 1-ஆவது வீட்டில் ராகு இருந்தால் 7-ஆவது வீட்டில் கேது இருப்பார். 1-ஆவது வீட்டில் கேது இருந்தால் 7-ஆவது வீட்டில் ராகு இருப்பார். இப்படி கிரகங்கள் அமைந்துள்ள ஜாதகம் என்றால் அந்த ஜாதகம் பித்ரு தோஷமுள்ள ஜாதகமாகும்.
இதேபோல், 3 மற்றும் 9-ஆவது வீடுகளில் ராகு- கேது இருந்தாலும், 5 மற்றும் 11-ஆம் வீடுகளில் ராகு- கேது இருந்தாலும் இந்த வகையான ஜாதகங்கள் எல்லாம் பித்ரு தோஷமுடைய ஜாதகங்களாகும்.
இதேபோல், உங்கள் ராசிக்கட்டத்தில் சூரியன் அமர்ந்துள்ள வீட்டில் சூரியனுடன் ராகுவோ- கேதுவோ இணைந்திருந்தாலும் அது பித்ரு தோஷமுடைய ஜாதகமாகும்.
அடுத்து, உங்கள் ராசிக்கட்டத்தில் சந்திரன் அமர்ந்துள்ள வீட்டில் சந்திரனுடன் ராகுவோ- கேதுவோ இணைந்திருந்தால் அதுவும் பித்ரு தோஷமுடைய ஜாதகம்தான்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பதைக் கண்டு பிடித்துவிட்டோம். இந்த தோஷம் உண்டானதற்கு காரணங்கள் என்ன?
தாய்- தந்தை வம்ச வழியாக வருவதாக கூறப்படும் இத்தோஷம், ஜாதகருடைய பித்ருக்களினுடைய ஆன்மா சாந்தி அடையாமல் போனதாலும், முற்பிறவியில் நம்முன்னோர்களோ அல்லது நாமோ கருச்சிதைவு செய்ததாலும், உடன்பிறந்தவர்களுக்குபாதகம் இழைத்ததாலும் உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இத்தகைய செயல்களால் உண்டாகும் பித்ரு தோஷத்தினால் ஜாதகரின் திருமணத் தில் தடையுண்டாகும், திருமணம் நடந்தா லும் அது விவாகரத்துவரை செல்லும். தம்பதி யரிடையே ஒற்றுமை இருக்காது. குடும்ப வாழ்க்கை எப்போதும் பிரச்சனையாகவே இருக்கும். ஒருசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், ரகசிய உறவு, கலப்புத்திருமணம், பெற்றோர்களுக்குத் தெரியாமல் ரகசிய வாழ்க்கை என்ற நிலை உண்டாகும். ஜாத கருக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள், முன்னேற்றம், வெற்றி, இறையருள் என்று எல்லாவற்றையும் இந்த தோஷமானது தடுத்துவிடும்.
இதற்கு என்னதான் பரிகாரம் என்று பார்க்கும்போது, முதன்மையான பரிகார மாக கூறப்படுவது புண்ணிய ஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று, ஆலயத்திற்கு எதிரிலுள்ள (கடல்) அக்னி தீர்த்தத்தில் மூழ்கி நீராடியபின் ஆலயத்திற்குள் உள்ள இருபத்தி இரண்டு புண்ணிய தீர்த்தங்களில் நீராடிவிட்டு தில ஹோமம் செய்து தனுஷ்கோடிக்கு சென்று பிண்டத்தை கரைத்துவிட்டு வந்து இராமநாதசுவாமியையும் அம்பாளையும் அர்ச்சித்துவந்தால் பித்ரு தோஷம் பரிகார மாகும், அதன்பிறகு திருமணத்தில் இருந்த தடைகள் முதல் மற்ற அனைத்து தடைகளும் அகலும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
காளஹஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ் வரம் போன்ற பரிகாரத் தலங்களிலும் பித்ரு தோஷத்திற்கு பரிகாரம் செய்யப்படுகிறது என்றாலும் இதற்குரிய பரிகாரத்திற்கு இராமேஸ்வரமே முதன்மையானதும் சிறப்பு மிக்கதாகவும் கூறப்படுகிறது.
பித்ரு தோஷத்திற்கு அடுத்தபடியாக கூறப்படுவது பிரம்மஹத்தி தோஷம்.
-தொடரும்
திருக்கோவிலூர் பரணிதரன்