ன்றைய சமுதாய சூழ்நிலை ஒரு மாறுபட்ட நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் மிக இளம் வயதில் திருமணம் நடை பெற்றது. தற்போதைய கால சூழ்நிலையில் கல்வி, வேலை வாய்ப்பு, மற்ற காரணங்களால் ஆண்- பெண்களுக்குத் திருமணம் என்பது தாமத மாகிறது. அடுத்து திருமணம் செய்துமுடித்த ஆண்- பெண்கள்கூட தாம் எதற்காகத் திருமணம் செய்து கொண்டோம் என்ற எண்ணத்தை மறந்து அவரவர்கள் அவரவர் களுடைய வேலைவாய்ப்பு, வெளிநாடு வாய்ப்பு, பதவி, தன் தகுதியை உயர்த்திக்கொள்ள படிப்புபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதில் இருக்கக்கூடிய நாட்டத்தை விட திருமணம் செய்து கொண்டதற்கான மையக் குறிக்கோளை மறந்து செயல்படுகிறார்கள். இதன் காரணமாக கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், நிம்மதியற்ற நிலை உண்டாகிறது. அது போல திருமணம் செய்து கொண்ட ஆண்- பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. அடுத்து குறிப்பாக இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் திருமணம், இல்லற வாழ்க்கை போன்றவை ஒரு குறிப்பிட்ட காலத்தில் செய்துகொண்டால் மட்டுமே அதன் பலனை அடையமுடியும். அடுத்து குழந்தை பெற்றுக்கொள்வதுகூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் பெற்றுக்கொண்டால்தான் அந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்து தரமுடியும். நீங்கள் தாமதமாக குழந்தை பெற்றெடுத்தால் அந்த குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை அமைத்துத் தருவதில் நிறைய இடையூறுகள் ஏற்படும்.

marriage

சரி; நான் கூறவந்த முக்கிய தகவலுக்கு வருகிறேன். நீங்கள் வேலைக்குச் செல்லுங்கள். உங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வதற்காக படியுங்கள். அடுத்து நவீன உலகிற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ள கடினமாக உழையுங்கள். அனைத்து செயலும் செய்வதுபோல திருமண வயது அடைந்தவுடன் எவ்வளவு விரைவில் திருமணம் செய்துகொள்ள முடியுமோ அவ்வளவு விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.

அடுத்து திருமணம் செய்து முடித்த பிறகு விரைவில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ளுங்கள்.

திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை பார்க்கின்றபொழுது, ஒரு ஆண் ஜாதகத்தில் லக்ன பாவத்திற்கு 7-ஆம் பாவமும், சுக்கிரனும் சிறப்பாக இருந்துவிட்டால் மணவாழ்க்கை மிகச் சிறப்பாக அமைந்துவிடும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் பாவமும், செவ்வாயும் சிறப்பாக அமைந்து விட்டால் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைந்துவிடும். இந்த விஷயத்தில் சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் வக்ரம் பெற்றால் அவர்களது இல்லற வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஒரு ஆண் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் சனி, சந்திரன் போன்ற கிரகங்கள் ஆதிக்கம் அதிகப்படியாக இருந்து சுக்கிரன் வக்ரகதியில் இருந்தால் மிகவும் ஆராய்ச்சி பூர்வமாக பார்க்கின்றபொழுது அவர்களுக்கு தன்னைவிட ஓரிரு வயது மூத்த பெண்ணையோ அல்லது சம வயதுள்ள பெண்ணையோ திருமணம் செய்யக்கூடிய நிலை உண்டாகிறது. ஒருசில இடங்களில் வயது குறைவான பெண்களால் அவமானங்கள் ஏற்படுகிறது.

ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரகதியிலிருந்து சுக்கிரனின் வீடு என்று சொல்லக்கூடிய ரிஷபம், துலாத்தில் பாவ கிரகங்கள் அமையப்பட்டிருந்தால் அவர்களது வீட்டில் இளைய சகோதரிகள் அல்லது பெண் உறவினர்கள்மூலமாக மனநிம்மதி குறைவுகள் உண்டாகிறது. ஏதாவது ஒரு குறை ஏற்பட்டு அது அந்த ஜாதகரின் வாழ்க்கையை பாதிக்கிறது. அதுபோல ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் என்ற கிரகம் மிக முக்கிய கிரகமாகும். செவ்வாய் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அவர்களது இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கிறது. செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தால் அவர்களுக்கு ஹார்மோன் தொடர்பான பாதிப்புகள் குறிப்பாக மாதவிடாய் கோளாறு, இல்லற வாழ்வில் நாட்டம் இல்லாத நிலை, திருமணம் செய்துகொள்வதில் ஒரு விருப்பம் இல்லாத நிலை, திருமணம் செய்து கொண்டாலும் கணவரிடம் விட்டுக்கொடுத்து செல்லாமல் வீண் வாக்குவாதங்கள் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் வக்ரம் பெற்றிருந்தாலும், கேது நட்சத்திரத்தில் அமையப்பட்டிருந்தாலும் அவர்கள் முடிந்தவரை இளம் வயதில் திருமணம் செய்துகொள்வது மிகவும் நல்லது. கால தாமதமாக திருமணம் செய்து கொள்கின்றபொழுது குழந்தை பாக்கியம் தடைப்படக்கூடிய அமைப்புகள், இல்லற வாழ்வில் பிரச்சினைகளை சந்திக்க கூடிய ஒரு நிலை உண்டாகிறது.

திருமண வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசுகின்றபொழுது அடிக்கடி உங்களிடம் தெரிவிக்கக்கூடிய கருத்து என்னவென்றால் 2, 7 -ல் பாவ கிரகம் இருந்தாலே வாழ்க்கை நன்றாக இருக்காது என்ற அர்த்தமில்லை. 2, 7-ல் பாவ கிரகம் இருந்தால் திருமணத்துக்குப்பிறகு வரக்கூடிய காலங்களில் 2, 7-ல் இருக்கக்கூடிய பாவ கிரகங்களில் தசை, புக்தி நடைபெறுகின்ற காலங்களில் தான் பிரச்சினைகள் உண்டாகிறது.

அடுத்து கணவனுக்கோ, மனைவிக்கோ கேது தசை அல்லது கேது புக்தி நடை பெற்றால் இல்லற வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு ஈடுபாடு இல்லாத நிலை உண்டாகிறது. ஒருவருக்கு ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருந்து மற்றொரு வர் ஜாதகத்தில் கேது தசையோ, கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற கிரகத்தின் தசையோ நடைபெற்றால் இருவருக்குள் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது.

அடுத்து பொருத்தங்கள் பார்க்கின்றபொழுது நிறைய விஷயங்கள் இருக்கிறது. பத்து பொருத்தம் என்பது மிகமிக முக்கியமான ஒன்றாகும். பத்து பொருத்தத்தில் முக்கிய பொருத்தமான யோனிப் பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். யோனி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் வந்துவிட்டாலே குறைந்த பட்சம் 6, 7 பொருத்தம் சாதாரணமாக வந்துவிடும்.

ஒருசிலர் மற்றவர்களை விரும்பி திருமணம் செய்துகொள்கிறார்கள். நான் விரும்பி திருமணம் செய்வதை தவறு என கூறவில்லை. திருமணம் செய்கின்றபொழுது கண்டிப்பாக யோனி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் இருக்கவேண்டும். சென்ற வாரம் ஒரு பெண் ஜாதகம் என்னிடம் வந்தது அந்த ஜாதகத்தை பார்த்து பலன் சொல்கின்றபொழுது ஜாதகி பிறந்தது மூல நட்சத்திரம். தற்போதுதான் இந்த பெண்ணுக்கு ஏழரைச்சனி முடிந்திருக்கிறது. ஜாதகத்தில் சிறுசிறு தோஷங்கள் இருப்பதால் மணவாழ்வில் விட்டுக் கொடுத்து சென்றால் வாழ்க்கை நன்றாக இருக்கும் எனக் கூறினேன். உடனே ஜாதகி யின் தாய் மாப்பிள்ளையின் நட்சத்திரம் அனுஷம் என்று கூறினார்கள். நான் உடனே இருவருக்கும் யோனி பொருத்தம் வராது. இருவருக்கும் இல்லற ஒற்றுமை சிறப்பாக இருப்பதற்கான ஒரு சாதகமற்ற அமைப்பு என கூறினேன். அதன்பின்பு ஒரு வாரம் கழித்து மாப்பிள்ளை ஜாதகத்தைக் கொண்டுவந்தார்கள். அந்த மாப்பிள்ளை ஜாதகத்தைப் பார்க்கின்றபொழுது மாப்பிள்ளைக்கு தற்போது 7-ல் உள்ள கேது தசை தொடங்கியிருக்கிறது.

நான் ஜாதகப் பலன் கூறுகின்றபொழுது சொல்லக்கூடிய கருத்து என்னவென்றால் கொடிய பாவ கிரங்களான சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் 1, 7-ல் இருப்பது நல்லதல்ல. அப்படியிருந்தால் அந்த கிரகங்களுடைய தசை, புக்தி திருமணத்திற்குப்பிறகு வந்தால் ஒற்றுமைக் குறைவு ஏற்படும் என கூறிவருகிறேன். நான் ஜாதகம் பார்த்த அந்தப் பெண்ணின் கணவரின் ஜாதகத்தில் கேது தசை வந்த கால காரணத்தாலும், இருவருக்கும் யோனிப் பொருத்தம் இல்லாத காரணத்தாலும் தற்போது இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு மறு வாழ்க்கை உண்டா என பலன் கேட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள்.

திருமணத்திற்காக ஒரு ஆண்- பெண்ணை இணைக்கின்றபொழுது தசவித பொருத்த மான பத்து பொருத்தமும் மிக முக்கியம். அது மட்டுமில்லாமல் ஜாதகத்தில் கிரகங்கள் வலு இழக்காமல் இருந்து 2, 7-ல் பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது.

ஜோதிடத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. தற்போது சில தகவல்களை உங்களிடம் பரிமாறி உள்ளேன்.