நம் அன்றாட வாழ்க்கையில் உடல்நலம் காக்கவும், வாழ்நாளில் வளங்கள் பெருகவும் தாவரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன.
அவற்றுள் பூமிக்கடியில் வேர் விட்டு கிழங்கு தரும் தாவரங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் மஞ்சள் தலைசிறந்த மூலிகையாக உள்ளது. பல செல்வ வளத்தைத் தரும் என்னும் உண்மை ஓலைச் சுவடிகளில் அழியாத சுவடாகப் பதியப்பட்டுள்ளது. சாதாரண மாக வார சந்தைகளிலும் சாலை ஓரத்திலும் கூடையில் கொட்டி விற்பனை செய்யப்படும் இந்த மங்களப் பொருளுக்கு இருக்கும் சக்தியை சித்தர் பாடல் வர்ணித்து கூறுகிறது. இதன் உண்மையான பொருளை அறிய முற்பட்டால் மனித உடலிலுள்ள கழுமலம் என்னும் பாவங்களை அகற்றி இந்த பூமியிலுள்ள புருஷார்த்தங் கள் என்று தர்ம சாஸ்திரங்கள் வர்ணித்துக் கூறும் சௌபாக்கி யங்களை வசியப்படுத்தி மனித இனத்திற்குத் தந்து வாதம் பித்தம் தொடர்பான நோய்களை அகற்றி உடலுக்கு தங்க நிறத்தைக் கொடுத்து பொலிவுடன் வாழ வைக்கிறது.
அம்பிகையின் அருளைச் சொல்லும் மந்திரத் தொகுப்பான ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமத்தில் 556-ஆவது நாமாவளியில் "ஹரித்தான்னைக ரசிகாயை நமக' என்று, தேவி மஞ்சள் வண்ண சாதத்தில் பிரியமுடையவள் என்று கூறப்பட்டுள்ளது. லலிதா திரிசதியில் 116-ஆவது நாமாவளி, "ஹரித்ரா குங்குமாதித்தாயை நமக' என்று, அம்பிகை மஞ்சளி லும் குங்குமத்திலும் வாசம் செய்பவள் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.
ஆதிசங்கரர் தனது சௌந்தர்ய லஹரி நாற்பத்து நான்காவது பாடலில், அம்பாளின் நெற்றி வகிட்டு அழகை வர்ணிக்கும்போது "சீமந்த ஸரணீ' என்னும் சொல்லால், பெண்களின் நடு வகிடு சீமந்தம் என்றும், இங்கு தேவி மகாலட்சுமி வடிவத்தில் வாசம் செய்கிறாள் என்றும், அதனால் இதை பதிவிரதைகளின் லட்சுமி வாசஸ் தானம் என்றும் குறிப்பிட்டு, அங்கே மஞ்சளும் குங்குமமும் திலகமாக இடுவது வழக்கென்றும் குறிப்பிடுகிறார்.
மகாமேரு, ஸ்ரீசக்கரம் என்னும் பீடத்திற்கு ஆத்மபூஜை செய்யும்போது, "ஹரித்ரா குங்குமஞ்சைவ சிந்தூரம் கஜ்ஜலம் ததா: சௌபாக்கிய த்ரவ்யம் சம்யுக்தம் க்ருஹான பரமேஸ்வரி' என்று, மஞ்சளின் சௌபாக்கியம் அருளும் தன்மையை தான் செய்த உபசாரத்தால் விளக்குகிறார்.
மஞ்சளின் பெருமை
மங்களகரமான பொருளென்று எல்லாராலும் போற்றப்படும் மஞ்சள். முன்பு போர்க்காலங்களில் அம்பு பட்ட காயத்திற்கு மருந்தாகப் பயன்பட்டது. விழுப்புண்ணுக்கும் மனப் புண்ணுக்கும் மருந்து மஞ்சள் என்றால் மிகையல்ல. கல்லீரலைக் காப்பாற்றுதல், உடல் வெப்பத்தை சீராக்குவது, பயனில்லாத வாயுவை வெளியேற்றுவது, பெண்களுக்கு உடல்நலம், முக அழகு தருவது, பொருளாதார வளம் கொடுப்பது போன்ற நற்பலன்களைக் கொடுத்துவருகிறது.
மணம் மிகுந்த மஞ்சளின் அறிவியல் பெயர் பெர்பெரிஸ் அரிஸ்டாட்டா. மலையாளத்தில் மன்னல், கன்னடத்தில் அரிசனா, ஹிந்தியில் ஹால்டி, தெலுங்கில் பாஸ்பு, வங்காள மொழியில் அஸ்தி காச், மராட்டியத்தில் வெனிவேல் என்று வெவ்வேறு பெயர்கள் வழக்கத்தில் உள்ளன.
18 வகையில் ஹரித்ரா
மஞ்சளின் குணங்களுக்கேற்றபடி அதன் தெய்வத்தன்மை விளக்கப்பட்டுள்ளது. பதார்த்த குண சிந்தாமணியும் மூலிகை ஆராய்ச்சி நூல்களும் இதை விளக்கிக் கூறுகின்றன. சிவபெருமானுடைய அங்கத்தில் 18 வகை கலைகள் அடங்கியிருப்பதாக சிவாகம விதிகள் கூறுகின்றன. உலகில் 18 வகை மஞ்சள் விளைவது சிலருக்கே தெரியும். கஸ்தூரி மஞ்சள், கிழங்கு மஞ்சள், விரளி மஞ்சள் (கறி மஞ்சள்) ஆகிய மூன்று வகை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
ஹரித்ரா- மஞ்சள் நிறம் கொண்ட சாதாரண வகை. பீதம்- மஞ்சள் நிறத்தோடு காணப்படுவது; நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. யோஷித் ப்ரிய- பெண்களுக்கு முக அழகைக் கூட்டுவது. ஹட்ட விலாசினி- கன்னங்களுக்கு நல்ல மெருகூட்டுவது. வன ஹரித்ரா- காடுகளில் விளைந்து மருத்துவத்துறைக்கு மூலப்பொருளாகப் பயன்படுவது. வன அரிஸ்டா- காடுகளில் அலைந்து திரியும் புழு பூச்சிகளை அகற்றி மக்களைக் காப்பது. தார்விலி வழிபாடுகள், யாகங்களுக்குப் பயனாகும் சக்திவாய்ந்த மஞ்சள் வகை. பீததாரு- மரக்கட்டைபோல் வளர்ந்து மருத்துவத்திற்கும் அலங்கார வேலைபாடுகளுக்கும் பயன்படுவது; திருமண விழா, இல்ல விழாக்களில் மேடை அணிகலனாகப் பயன்படுவது.
ஹரித்ரு- நீண்ட மரமாக மஞ்சள் நிறத்தில் வளர்ந்து, பொடி மருந்துக் கலவையாகவும், பூஜையறை அலங்கார வேலைகளுக்கும், ஆயுர்வேதத் துறையில் மருந்து கஷாயத்திற்கும் பயன்படுவது. ஆம்ர கந்தம்- உணவுக்கு சுவை கூட்ட மாங்காய், இஞ்சி, ஊறு காயாக சேர்க்கப்படுவது; ஆண் களுக்கு உயிரணுவை வளர்ப்பது; சடராக்னியைத் தீர்ப்பது; இடுமருந்து, கொடிய விஷம், இழுப்பு நோய், விக்கலைத் தீர்ப்பது. சுரபி தாரு- வாசனைகொண்ட கட்டைமரம். யாகங்களில் மகாலட்சுமி பூஜைசெய்ய யாகக் கூட்டுப்பொருளாக சேர்க்கப்படுவது.
காஞ்சனி- உடலுக்கு மென்மை தருவது; பெண்களின் அழகுக் கலைக்கான முக்கிய பொடியாகவும், குழைவுப் பொருளாகவும் சேர்க்கப்படுவது. நிசம்- உடலுக்கு மென்மையையும் குளிர்ச்சியையும் தருவது. வரவர்ணினி- தங்கமயமான நிறம் தருவதுடன், வாசனைக்கும் தெய்வ ஆராதனைக்கும் பயன்படுவது. கிருமிக்ன- பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினைக்கு அரு மருந்து; உடல் கிருமிகளை அழித்து வெளியேற்றுவது.
பர்ஜன்யம்- கன்னிப் பெண்கள், ஆண்கள், ஆடல் கலைஞர்களுக்கு மிருதுப் பொருளாகி குளிர்ச்சி தருவது. பசம்பசா- உடலுக்குள் புகுந்து அசம்பா விதங்களை ஏற்படுத்தும் சக்திகளை செயலிழக்கச் செய்து, தேக பக்குவநிலை கொடுப்பது. பத்மபத்ரா- காட்டில் வளரும் அபூர்வமான தெய்வ சக்தியுடைய மஞ்சள். இதன் இலைகள் தாமரை இதழ்கள்போல விரிந்து அழகாகக் காட்சிதரும்.
காட்டு மஞ்சள், மர மஞ்சள் என்னும் பத்மபத்ரா என்னும் சக்திவாய்ந்த மஞ்சள்மூலம் தசாஞ்சனம் செய்வது முற்காலத்தில் வழக்கத்தில் இருந்ததை ஏடுகள்மூலம் அறியமுடிகிறது. இவ்வகையில் பத்மபத்ரா என்னும் மஞ்சளை விதிப்படி பூஜைசெய்வது செல்வவளம் பெருக்குகிறது.
பத்ம ஹரித்ரா மஞ்சள் செடிக்கு சாப நிவர்த்தி செய்ய, பன்னீர், மஞ்சள்நீர் தெளித்து, மஞ்சள்நூல் காப்பு அணிவிக்கவேண்டும். "ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன் உயிர் உடலில் நிற்க' என்று கூறி, பஸ்மம் தெளித்து வெள்ளிக்கிழமை, பௌர்ணமியில் எடுத்துவர வேண்டும். "இரண்ய வர்ணம் ஹரிணீம்' என்னும் ஸ்ரீசுக்த மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். வெட்டுப்படாமல் துண்டுசெய்து சுத்தி முறைப்படுத்த வேண்டும். பசுவின் கோமயத்தில் ஒரு நாள் வைத்து, வில்வம், துளசி, விளா, எலுமிச்சை, நாவல், மாவிலை இட்ட நீரில் கொதிக்க வைத்து, பன்னீரால் அலசி எடுக்கவேண்டும். பிறகு ரசாஞ்சனம் என்னும் காட்டு மஞ்சளுடன் வெந்நீரிலிட்டு எடுத்து சுத்தி செய்தால் ஈர்ப்புத் தன்மை உண்டாகும்.
மாந்திரீகர்கள் தந்திர வேலைக்கான தாந்த்ரீக மந்திரங்களை இதற்குள் புகுத்தினால் எதிர் விளைவை உண்டாக்கும். விஷயம் தெரியாதவர்கள் இதில் ஈடுபட்டு தங்களிடமுள்ள வித்தைகளுக்கு ஊறு செய்துகொள்ள வேண்டாம். காண்பதற்கு விரளி மஞ்சள்போலவே காட்சி தரும் இதனுள் கண்ணுக்குப் புலப்படாத பசுமைக் கோடுகள் இருக்கும். பூஜையறையில் வைத்து மகாலட்சுமி தேவியின் தியானம் கூறி பிரார்த்தனை செய்து வர பண வரவுண்டாகும்.
மகாலட்சுமியின் மூர்த்தி ரகசியம்
ஆலய மந்திரார்த்தங்களை வெளிப் படுத்தும் மூர்த்தி தியானங்களில் வரும் லட்சுமி தியானத்தின் நான்காம் வரியில், 'பத்ம பத்ரா' என்னும் சக்திவாய்ந்த- தனம் ஈர்க்கும் மஞ்சள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
"ஓம் ஹஸ்தீ கண்டாக்ர கும்பாப்யாம்
சிச்யயமான சிரருஹாம் பிரசாரிதப
தத்வந்தாம் பத்ம பத்ர நிவேஷணாம்'
என்னும் மந்திர வரிகளே இதற்கு உதாரணமாக விளங்குகிறது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூல்நிலையத்திலுள்ள ஓலைச்சுவடிமூலம் வெளியான லட்சுமி மூலமந்திர ரகசியம் இங்குள்ள தியான வரிகள்.
"ஓம் ஹேமவர்ணாம்' என்று தொடங்கி "விஷ்ணு வல்லபாம்' என்று ஒரு அணுவாகம் ஆறு வரிகளில் அமைந்து பத்ம பத்ராவின் மகிமையை எடுத்துக்காட்டுகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்றால் அவர் பூஜையறை, படுக்கையறை, கார் நிறுத்துமிடம், தான் வைத்துள்ள பூஞ்செடிகள், மொட்டை மாடி போன்றவற்றை சுற்றிக்காட்டுவார்.
அதேநேரத்தில் பீரோவைத் திறந்து தன்னிடம் இவ்வளவு பணம் கையிருப்பு, நகைகள் உள்ளன என்று காட்டுவாரா? இது மனித இயல்பு. இந்த தகவலை இங்கே சொல்லக் காரணமுண்டு. தங்களுக்கு வரும் செல்வ வளத்திற்கான காரணத்தை யாரிடமும் சொல்லமாட்டார். விவசாயத்தில் பசுமைப் புரட்சிகண்டு நெல்மணிகளைக் குவித்து பண வளம் காண்கிறோம். அதைப் போல சக்திவாய்ந்த மஞ்சள் எனும் தெய்வீகப் பொருளை வணங்கி அதன்மூலம் வீட்டில் மங்களப் புரட்சியைக் காணலாம்.
வலம்புரிச் சங்கு, கல்லால மூலிகை, ஸ்ரீ சக்கரம், சுதர்சனம், தனதா சக்தி ஆகியவற்றை பூஜையறையில் வைத்திருந்தும் பணவரவின்மை, வியாபார மந்தநிலை இருக்கக் காரணமென்ன? வீட்டில் சஞ்சாரம் செய்யும் நபர்களின் கிரக சஞ்சாரம் சரியாக இல்லாததுதான். அதற்குப் பரிகாரம் தேடவேண்டும்.
அமைந்த லக்னம் தனத்திற்குக் காரணமா?
12 லக்னங்களில் பிறந்தோர் எல்லாருக்கும் அதீத செல்வச் சேர்க்கை ஏற்படுவதில்லை. இதை ஜாதகநிலை கூறும். பிருஹத் ஜாதகம் எடுத்துரைக்கையில், "போற்றியதோர் மேடமதில் உதித்த பேர்க்கு
புகல்கிறேன் தீர்க்காயுள் கல்வி செல்வம்'
என்று சொல்கிறது.
"தேசமெல்லாம் புகழ்ந்திடுவார் செல்வமுண்டு செழித்திடவே வாழ்ந்திடுவார் ஆயுள் தீர்க்கம்'
என்று ரிஷப லக்னத்தாருக்கு உபதேசிக்கிறது. தனுசு லக்னத்தில் உதித்தோருக்கு,
வடவரைப்போல் தனம் குவிப்பான் மனது
நோகான் வாழ்வுண்டு மக்களுண்டு மதித்துக் கூறே...'
என்று எடுத்துச்சொல்கிறது.
இவ்வாறு மற்ற லக்னத்தாருக்கும் பூமியில் இறைவனால் படைக்கப்பட்ட தெய்வீகப் பொருட்கள்மூலம் தனயோகம் கிடைக்க, வீட்டிலுள்ள இருவரில் யாருக்கு யோகமுள்ளது என்று அறிந்து வழிபடுதல்வேண்டும். இந்த யோகங்களை அடைய தேவ ரகசியங்கள் ஏழு உண்டு. குலதெய்வ வழிபாடு தவறாதல், ஆன்மிகம் தவிர்க்கும் மது, லாகிரி வஸ்துகளைத் தொடாதல், பிற வர்ணத்தார் வழிபாட்டை இல்லத்தில் இணைக்காமல் செயல்படுதல், தர்மங்களைக் கடைப்பிடித்தல், பிறரை வஞ்சிக்காமல் வாழுதல், ஆலய பூஜைக்கு முடிந்தவரை சென்று வருதல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்.
முற்காலத்தில் மகள், மகன் வீட்டிற்கு சீர்வரிசை கொண்டுசெல்லும்போது வெற்றிலை, பாக்குடன் பச்சை மஞ்சள் மூன்று வைத்துக் கொடுப்பதும், சுமங்கலிப் பெண்கள் வீட்டுக்கு வந்தால் மஞ்சள், தாம்பூலத்துடன் தருவதும், மகாலட்சுமி அவர்கள் வீட்டுக்கும் சென்று வளம் தரட்டும் என்ற நல்ல எண்ணத் திலேயே.
கர்நாடகா, கேரளத்துக் கோவில்களில் பகவதி தேவியருக்கு முழுநிலவு நாளில் இவ்வகை மஞ்சள் மாலை சாற்றப் படுவதுபோல, ஸ்ரீ சக்தி ஆலய பிருந்தாவன மகாலட்சுமிக்கு பௌர்ணமிக்கு 108 பத்ம ஹரித்ரா வகை மஞ்சள் மாலை சாற்றப் படுகிறது. மஞ்சள் காப்பினில் மனம் மகிழ்ந்திடும் தேவி அனைவருக்கும் நிறைந்த செல்வ வளம் ஊட்டட்டும்.
செல்: 95511 84326