"ஜோதிடத்தால் எதிர்காலத்தை சொல்லமுடியாது; ஜோதிடம் அறிவியல் அல்ல' எனச்சொல்லி, ஜோதிடத்தையும் ஜோதிடரையும் எதிர்க்கும் பகுத்தறிவுவாதிகளும்; ஜோதிட- ஆன்மிகப் பரிகாரங்களைச் செய்தும் வாழ்க்கையில் நல்லது நடக்கவில்லை என விரக்தியில் இருப்பவர்களும் புலம்பக் காரணம், பொதுவாக பன்னிரண்டு ராசிகளுக்கும் சொல்லப்படும் கோட்சாரப் பலன்களை மட்டும் தெரிந்துகொள்வதால்தான். ஒவ்வொரு மனிதனும் துல்லியமான பலன்களை அறிந்துகொள்ள வேண்டுமானால் சுய ஜாதகம் அவசியம். குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சிப் பலன்களைவிட, தனி நபருக்கு சுய ஜாதகத்தில் நடக்கும் தசையின் பலன்களே ஜாதகரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
பொதுவாக புகழ், செல்வத்துடன் இருப்பவர்களைப் பார்த்து, "எனக்கும் அவருக்கும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசிதான். ஆனால் எனக்கு மட்டும் அவை கிடைக்கவில்லை' என்று ஆதங்கப்படுபவர்கள் உண்டு. "எதுக்கும் லாயக்கில்லாதவன் திடீர்னு கோடீஸ்வரனாகிட்டான்; மொடா குடிகாரன் திடீர்னு குடிய விட்டுட்டான்; விவாகரத்தானவங்க ஒண்ணுசேர்ந்துட்டாங்க; பரம்பரையா இருந்த பங்காளி சண்டை மறைஞ்சு சொந்தம் சேர்ந்துட்டாங்க' என்பதுபோன்ற- நடக்காதென நினைத்த அதிசயம், ஆச்சரியம் நடந்து, ஜாதகருக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தருவது தசை மாற்றம் நிகழும்போதுதான். அதேபோல், "நேத்து நல்லா இருந்தவர் இன்னிக்கு விபத்தில மாட்டிக்கிட்டாரே; நல்ல வருமானம் வந்து நல்லா பொழச்சாங்க- ஆனா திடீர்ன்னு கடன் எப்படி வந்தது? வீட்டை வித்துட்டு ஊரவிட்டே எங்கயோ போயிட்டாங்க' என்னும் அதிர்ச்சிகளைத் தருவதும் ஜாதகரின் தசை மாற்றத்தால்தான். பிறப்பிலிருந்து ஒவ்வொரு தசை மாறும்போதெல்லாம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டே தீரும்.
"வருஷாவருஷம் எத்தனையோ கிரகப் பெயர்ச்சிப் பலன் கேட்கிறேன். ஆனா என் வாழ்க்கை அப்படியேதான் இருக்கு' என புலம்புபவர்களும்; "நான் உழைப்ப நம்பி வாழறேன்- ஜோதிடத்தை நம்பி வாழ்ந்தா பொழைக்க முடியுமா? போய் பொழப்ப பாருங்க' என பேசுபவர்களும் உண்டு. கோட்சார கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் எதிர்பார்த்தபடி சிலருக்கு பலிக்காமல் போவதற்குக் காரணம், அவரவர் சுய ஜாதகமே. சுய ஜாதகத்தில் நடக்கும் தசையைப் பொருத்தே வாழ்க்கையில் நல்லது- கெட்டது நடைபெறும். "திருடப் போனாலும் திசை அறிந்து செல்' என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், ஜாதகத்தில் தசை யோகமாக அமைந்தால், தீமை செய்பவன், கெட்டவன் என உலகமே அறிந்திருந்தாலும் தண்டனை பெறாமல் சொகுசாக வாழ்வார்கள். உலகில் நல்லவன்- கெட்டவன், உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்று எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும், ஒருவருக்கு அமையும் தசையே ஜாதகரை அரசனாகவோ அடிமையாகவோ மாற்றும்.
பிறந்த நட்சத்திரத்திற்கான தசைகள்
ஒருவரின் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் தசை வரையறுக்கப் படும். பிறந்த தசையிலிருந்து அடுத்தடுத்த தசைப்படி, ஆயுள்வரை தசைக்கேற்ப பலன்கள் நடக்கும்.
பிறந்த நட்சத்திரத்திற்கான நட்சத்திர அதிபதியே ஜாதகரின் பிறந்த நேர முதல் தசையாகும். ஒவ்வொரு தசையும் குறிப்பிட்ட வருடங்கள் கொண்டது. உதாரணமாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசை சூரிய தசை. அதன் வருடம் ஆறு. பிறந்த ஜாதக அடிப்படையில் சூரிய தசை இருப்பு வருடம் முடிந்தபின், சந்திர தசை பத்து வருடங்கள் என (அட்டவணையில் உள்ளபடி) செவ்வாய், ராகு தசை என தொடர்ந்து நடைபெறும். மனிதனின் முழு ஆயுள் 120 வருடங்கள். அந்த 120 வருடத்தையே ஒன்பது கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுத்துள்ளனர்.
யோக தசை
பொதுவாக லக்னாதிபதி, ராசியாதிபதி, தனாதிபதியான இரண்டாமதிபதி, சுகாதிபதியான வீடு, வாகன யோகம் தரும் நான்காம் அதிபதி, பஞ்சமாதிபதியான பூர்வபுண்ணிய ஐந்தாமதிபதி, பாக்கியாதிபதியான ஒன்பதாம் அதிபதி, தொழில் அதிபதியான பத்தாமதிபதி, லாபாதிபதியான பதினொன்றாம் அதிபதி ஆகிய தசை அனைத்தும் ஜாதகர் வாழ்க்கையில் நல்ல மாற்றம் மற்றும் ஏற்றத்தைத் தரும். கேந்திர (1, 4, 7, 10), திரிகோண (1, 5, 9) அதிபதி கிரகங்கள் சுபவலுப்பெற்று தசை நடந்தால், சாதாரண நிலையில் இருப்பவரையும் கோடீஸ்வரராக மாற்றி புகழ், அந்தஸ்தைத் தந்துவிடும். கெட்ட தசை என எதிர்பார்க்கும் தசையும்- அதாவது கெடுதல் தரும் கிரகம் கெட்டிருந்து தசை நடந்தால் விபரீத ராஜயோகத்தால் நற்பலனை வாரிவழங்குவார். 2, 7-க்குடையவர் தசை, 4, 9-க்குடையவர் தசை என இரண்டு சுப ஸ்தான தசை மற்றும் இரண்டு கேந்திர, திரிகோண தசைகள் அதியோக நன்மையைத் தரும். ஜாதகத்தில் சுபகிரக வலிமை, கிரக இணைவு, சுபகிரகப் பார்வை- குறிப்பாக நடக்கும் தசைநாதன் நின்ற நட்சத்திர சாரம் சுபத்தைப் பெற்றால் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையே தரும். தசைக்கு புக்திநாதன் இருக்கும் இடத்தைப் பொருத்தும், தசையில் சில புக்திகள் நன்மையான பலனைத் தரும்.
பாதக தசை
யோகத்துடன் சந்தோஷமாக- நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது 3, 6, 8, 12-க்குடையவர்கள் தசை வருமானால் அதிர்ஷ்டம் தருவதுபோல் ஆரம்பித்து பாதகத்தை தசை முழுவதும் செய்துவிடுவார். வாழ்வில் மூன்றாவது தசையாக நீச தசை, நான்காவது சனி தசை, ஐந்தாவது செவ்வாய் தசை, ஆறாவது குரு தசையாக வந்தால் எண்ணற்ற தீங்கு நேரும். நெருங்கியவர் இழப்பு, சிறைவாசம், தீராநோய், கண்டம், அவமானம், எதிரியால் தொல்லை, கடனால் பாதிப்பு, தற்கொலை, கொலைப்பழி என பலவித கொடுமைகள் நடக்கும். சுப பலம்பெற்றால் கெடுபலன்கள் குறையும்.
அர்தாஷ்டமச்சனி, கண்டச்சனி, அஷ்டமச் சனி, கர்மச்சனி, ஏழரைச்சனியுடன்கூடிய சந்திர தசை வந்தால் எண்ணிப்பாராத பல சங்கடங்களைத் தருகிறது. சில நேரங்களில் கோட்சாரப் பலன்கள் நன்றாக இருந்தாலும்கூட, தசையின் தீயபலன் தவிர்க்க முடியாத தாகிவிடும். இதுதான் கஷ்டம் என சொல்ல முடியாத கஷ்டத்தை அனுபவிக்க நேரும்.
நல்ல தசை என எதிர்பார்த்த தசை சிலநேரம் பாதக நட்சத்திரத்தில் அமர்வதும், தீயகிரகப் பார்வை, சேர்க்கையும் நற்பலனைத் தடுத்துவிடும். ஆறு, எட்டுக்குடையவன் தசைகளில் கடன், நோய், எதிர்ப்பு வலுப்பெறும்; தீய பழக்கவழக்கத்தால் சிறைசெல்ல நேரும். மூன்று, ஆறுக்குடையவன் தசை தொடங்கியதும் உடன்பிறந்தவர்கள் எதிரியாகி, உடனிருப்பவர்களால் வஞ்சிக்கப்பட்டு நாடோடியாகத் திரிவர். எந்த லக்னமாக இருந்தாலும் பாதகாதிபதி வலுப்பெற்று தசை நடந்தால் "ஏன்டா பொறந்தோம்' என்று வருத்தப்படுமளவு செய்துவிடும். மாரகாதிபதி தொடர்புபெற்றால் மாரகத்தைத் தந்துவிடும். பாதக தசை நடக்கும்போது பெயர், புகழ், செல்வம், செல்வாக்கை இழந்து வறுமை கொண்டவனாக மாற்றிவிடும். எவ்வளவு பெரிய அறிவாளியையும் முட்டாளாக்கிவிடும்.
கலப்பு தசை
கலப்பு அதிபதிகள் தசை- அதாவது 3, 9-க்குடையவன் தசை, 6, 9-க்குடையவன் தசை என மறைவிட அதிபதிகள் மற்றும் யோகாதிபதிகள் தசை இணைந்து செயல்படும்போது, தசையில் நன்மை- தீமை கலந்து நடக்கும். அதாவது 3, 6, 8, 12-ஆமதிபதிகள் மற்றும் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ஆமதிபதிகள் இணைந்த தசைகளாக நடக்கும்போது ஆதிபத்திய வலுவைப் பொருத்து முதல் பாதியில் நன்மை நடந்தால் இரண்டாம் பாதியில் தீமை நடக்கும். லக்னத்தைப் பொருத்தும், தசாநாதருக்கு புக்தி நாதர்கள் இருக்கும் நிலையைப் பொருத்தும் கலவையான பலன்களே நடைபெறுகிறது. இதில் உயிர்ச்சேதம், பொருட்சேதம், மாரகத்திற்கு ஒப்பான கண்டம், சிறைவாசம், தீய பழக்கவழக்கம் மற்றும் பொருளாதார வரவு, பதவி உயர்வு, புகழ், வீடு, வாகன யோகம் என இரண்டும் கொடுக்கும். இழப்பால் லாபம், லாபத்தால் இழப்பு என தசை நடைபெறும். யோக தசை நடைபெறும் காலத்தில் ஏழரைச்சனி நடந்தால்கூட கிடைக்கவேண்டிய முழுப் பலன் கிடைக்காமல் போய் விடும்.
விபரீத யோக தசை
பாதகாதிபதி நீசம், வக்ரம், கிரகப் பார்வையால் பலமிழத்தல், கிரக இணைவு, அஸ்தங்கம் என 3, 6, 8, 12-க்குரியவர்கள் பாதிக்கப்பட்டு தசை நடந்தால், தீய பலன்கள் மாறி விபரீத ராஜயோகத் தால் தசை நற்பலன் தரும்.
"அவ்வளவுதான்; வாழ்க்கை முடிந்துவிடும்' என நினைக் கும்நேரத்தில் திடீர் அதிர்ஷ்டத்தால் பணம், புகழ் சேரும் யோகத்தைத் தந்துவிடும். மூன்றாமதிபதி ஆறா மிடத்திலோ, எட்டாம திபதி பன்னிரண்டாமிடத் திலோ, பன்னிரண்டாமதிபதி மூன்றிலோ, ஆறாமதிபதி எட்டாமிடத்திலோ மாறி நின்றாலும்; செவ்வாய், சனி, சூரியன் போன்ற பாவகிரகங்கள் மறைவிட அதிபதியாக இருந்து மறைவிடத்தில் நின்று தசை நடந்தாலும் நினைத் துப் பாராத யோகம், கோடீஸ்வர வாழ்க்கையைத் தந்து விடும். பொதுவாக லக்னப்படி தீமை தரக்கூடிய கிரகங்கள் ஜாதகத்தில் பாதிக் கப்பட்டு, பலவீனமாகி, கெட்டுப்போயிருந்தால் விபரீத ராஜயோகத்தால் நன்மையான பலன்களைப் பெற்றுவிடலாம்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல் : 96003 53748