ஒரு பெண் கர்ப்பமுற்றிருக்கிறாள் என்றால், அந்த கர்ப்பத்தைக் காத்து, அந்த கர்ப்பத்தில் வளரும் சிசுவின் நிலையை இன்றைய விஞ்ஞான முறையில் சொல்லிவிடுவார்கள். ஸ்கேன் செய்த ரிப்போர்ட்டை அந்த தம்பதிகளுக்குத் தரமாட்டார்கள் என்றபோதும், மருத்துவர்கள் அதைவைத்து மருத்துவ ஆலோசனை சொல்வார்கள்.
இயற்கையும் அன்னைதானே. "அப்படின்னா?' என்று நீங்கள் கேட்கவருவது புரிகிறது.
பஞ்சாங்கம் பார்க்கும் நபரா நீங்கள்? இல்லையென்றாலும் காலண்டரில் தினமும் தேதியைக் கிழிப்பவரா நீங்கள்... அப்படி தேதி யைக் கிழிக்கும்போது, அதிலுள்ள சில வற்றைப் பார்த்து அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், கரிநாள் என்று படித்திருப்பீர் கள். அதில் கர்ப்போட்ட நாள் என்றும் கவனித்திருக்கலாம். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதியைப் பாருங்கள்.
இது விசேட தினமோ அல்லது மார்கழி மாதக் கோவில் திருநாளோ அல்ல; அடுத்த வருட மழைக்கணிப்பு முறைகளில் ஒன்று தான் இது.
சூரியனின் சுழற்சியை மையமாகக் கொண்டுதான் சூரியவழி மாதங்கள் பின் பற்றப்படுகின்றன. இதுதவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங் களாகவும், பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர் என்ற அடிப்படையை நாம் அறிவோம்.
அந்தவகையில் தனுர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனுசு ராசியைக் கடக்கும்போது பூராட நட்சத்திரத்தைக் கடக்க பதினான்கு நாட்களை எடுத்துக் கொள்கிறது. இந்த நாட்களில் கருமேகங்கள் தெற்குநோக்கி நகர்வதை அனுபவத்தில் கண்டுகொள்ளலாம்.
இதெல்லாம் இயற்கை என்று கண்டுகொள்ளாமல்- ரசிக்கத் தெரியாமல் இருப்பவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். வளரும் சமுதாயத்திற்கு நாம் இதைச் சொல்லித்தர வேண்டாமா? நமது சோதிட அறிவின் நுட்பத்தையும் இயற்கைத் தத்துவத்தையும் நாம் மட்டுமல்ல; அடுத்த தலைமுறைகளும் அறிந்துகொள்ள வேண்டாமா?
இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்களாகும். இந்த ஆண்டு 29-12-2021 முதல்- அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் என புரிந்துகொள்ளவும்.
ஒரு பெண்ணின் பத்துமாத கர்ப்ப காலத்துடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண். ஒன்பது மாதம் கழித்துப் புரட்டாசிக்குப் பின் மகப்பேறு அடைவாள்.
அதே கோணத்தில்தான் இயற்கை அன்னை, இந்த நாட்களில் மழை முறையாக சூல்கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழிவின் அளவும் முறையாக இருக்குமென்று பொருள் கொள்ளலாம்.
அடுத்த ஆண்டில் பெறும் மழையை, வானிலை ஆராய்ச்சி மையம் என எதுவுமில்லாத பொழுதிலேயே நமது சோதிட சாத்திரம் சொல்லித் தந்திருக்கிறது என்றால், சோதிட அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது அவசியமல்லவா?
ஒரு எளிய விவசாயிக்கு தனுசு மாதம், பூராட நட்சத்திரம் எல்லாம் தெரியாமல் இருக்கலாம். அதனால், மார்கழி மாத அமாவாசையிலிருந்து அடுத்துவரும் பதினான்கு நாட்கள் "கர்ப்போட்ட நாட்கள்' என்று நினைவில் வைத்துக்கொள்வார்கள்.
இந்நாட்களில் லேசான தூறல், மெல்லிய சாரல் போன்று மழை இருந்தால், மேகம் சரியாகக் கருகட்டி இருக்கிறதென்று பொருள். இதனால் அடுத்த ஆண்டு நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று விவசாயிகள் புரிந்துகொள்வார்கள். மானா வாரிப் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் புரிந்துகொண்டு செயல்பட இது வசதியாக இருக்கும்.
அப்படில்லாமல், இந்த கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ, கடும் வெய்யில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டதென்று பொருள் கொள்ளலாம்.
எனவே மார்கழியில் கனமழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என்பதைக் குறிப்பால் சொல்கிறது இந்த கர்ப்போட்டம்.
இந்த காலகட்டத்தில் எத்தனை மில்லிமீட்டர் மழை எந்தப் பகுதியில் பதிவாகிறது என்பதை, ஆறு மாதங்களை நாட்களாக மாற்றி அந்த தொகையில் பெருக்கி, அடுத்த ஆறுமாத்தில் எவ்வளவு மழை பெய்யுமென்பதை அறிந்துகொண்டு, அதன்படி தேவையான பயிர்களைத் தேர்வுசெய்துகொள்ள சோதிடம் காட்டும் வழிதான் இந்தக் குறிப்பு.
இந்த காலகட்டத்தில், சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு முன்னர் பூமியின் அச்சு அசையாமலிருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, கர்ப்போட்ட நாள் என்றால் என்னவென்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
"எனக்கென்ன விவசாய நிலமா இருக்கு? நான் என்ன விவசாயமா செய்யறேன்' என்று ஒதுக்கித்தள்ளாமல், வசதி இருப்பவர்கள் வீட்டிலேயே தோட்டம் (Home Garden) போடலாம். வாய்ப்பில்லாதவர்கள் வீட்டுக்குள்ளே வளர்க்கும்- வெளிச்சமும் பராமரிப்பும் அதிகம் தேவையில்லாத தாவரங்கள் (Indore Plants) வளர்க்கலாம்.
கொஞ்சம் வசதியுள்ளவர்கள் சிறிய நிலப்பகுதியை வாங்கிப் பசுமை பராமாரிப்பு செய்யலாம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு, "காலண்டர்ல கர்ப்போட்டம்னு போட்டிருக்கு. இது ஏதோ பண்டிகைபோல' என்று நினைத்து பாயசம் வைத்துக் குடித்தால் என்ன பயன் கிடைக்கும்?
மழைவரும் நாட்களைத் தெரிந்துகொள்ள வானிலை அறிக்கைக்கு டிவியைப் பார்த்துக் கொண்டிருப் பதற்கு முன், இந்த சோதிடக் குறிப்புகள் எத்தனைப் பயனுள்ளதாக இருந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக உள்ளதல் லவா!
செல்: 94443 27172