10. மகம்
இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் இடம்பெற்றுள்ளது. இதன் சாரநாதர் கேது. மக நட்சத்திரத்தில் கேது நிலைகொண்டிருந்தால் அங்கு கேது+கேது எனும் அமைப்பு உருவாகும்.
இஷ்ட தெய்வம்: இவர்கள் தங்கள் குலதெய்வம் தவிர, பிற தெய்வங்களை ஏறிட்டும் பார்க்கமாட்டார்கள். கூடவே தங்கள் மூதாதையர், பித்ருக் கள் சம்பந்த சடங்குகள், சம்பிரதாயங் களை மிக பலமாகவே நடத்துவர்.
குணம்: இவர்களுக்கு எப்போதும் தன் ஆரோக்கியத்தின்மீது வெகு கவலை யுண்டு. மேலும் யாரோ தனக்கு செய்வினை வைத்துவிட்டாரென எப்போதும் புலம்பித் திரிவர். மனமயக்கம் இருந்துகொண்டே யிருக்கும். போன ஜென்மத்து பாவம் நிறைய இருக்கிறதென இவர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவர். அதனால்தான் வாழ்வு போராட்டமாகவே இருக்கிறதென பெரும் சந்தேகமும் குழப்பமும் அடைவர்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது எனும் கிரகம் மருந்துகளை முக்கியமாக வேர் சம்பந்தமானதைக் குறிப்பது. இடம்கொடுத்த சிம்ம ராசி அதிபர் ஆரோக்கியத் தைக் குறிப்பார். எனவே இவ்வமைப்பு உள்ளவர்களுக்கு மருத்துவ ஆர்வ மிருக்கும். சிலர் சித்தா, ஆயுர் வேதம் போன்ற இயற்கை மூலிகை சார்ந்த மருத்து வராக மிளிர்வர். சிலர் அரசு மருத்துவமனையில் சேவை யாற்றுவர். மூலிகைத் தயாரிப்பு, மருந்துகள் செய்வது என மும்முரமாக இருப்பர். கேது தோல் நோய்களைக் குறிப்பவர். எனவே இவ்வமைப்பு உடையோர், தோல் நோய், சரும நோய் மருத்துவத்தில் சிறப்படைவர். இவர்களில் சிலர் பூர்வீகக் கோவில்களில் பூஜைகள் செய்வர் மற்றும் குலதெய்வக் கோவில்களில் பூஜை, யாகம் போன்ற தெய்வீக ஈடுபாடு கொண்டிருப்பர். பரம்பரை வைத்தியத்தில் தாத்தாவைப்போல் சிறப்பு பெறுவர்.
கெடு பலன்கள்: கேது எனும் குழப்ப கிரகம், தனது சுய சாரத்தில் செல்கிறார்.
எனவே இவர்கள் மிகவும் குழம்பிய மனமுடையவர்கள். தெளிவாக சிந்திக்க இயலாது. எப்போதும் சற்று பயந்த சுபாவமாகத் திரிவர். சிலசமயம் சற்று "ஒருமாதிரி' நடந்துகொள்வர். சற்று மனப்பிறழ்வு ஏற்படும். இவ்வமைப்பில் சிலருக்கு வலிப்பு நோய்போல் ஏற்பட்டு, உணர்விழந்து விடுவர். கேது பகவான் தனது சுய சாரத்தில், சூரியனின் வீட்டில் செல்லும்போது, அந்த ஜாதகரைத் தனித்தியங்கவிடாமல், ஒரு கிரகண நிலை கொடுத்துவிடுகிறார்.
நாடி ஜோதிடம்: கேது பாட்டனாரை யும், அந்த ராசி பூர்வீகத்தையும் குறிக்கிறது. இதன்மூலம் பூர்வீக இடத்தில் இவரின் தாத்தாவின் அருமை பெருமைகளை அறிய இயலும். அது நல்லவிதமாகவும் இருக்கலாம்; கெட்டவிதமாகவும் இருக்கலாம்.
பரிகாரம்: திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கவும். கும்பகோணம் நாகேஸ்வர ஸ்வாமி திருக்கோவிலை வணங்கவும். இவ்வமைப்பு உள்ளவர்கள் விநாயகர் அல்லது சித்தர்களுக்கு நிறைய விளக்கேற்றி வழிபடவும். அழகர்மலை ஸ்ரீராமதேவர் சித்தரை வணங்கலாம்.
11. பூரம்
இது சிம்ம ராசியிலுள்ள நட்சத்திரம். இதன் சாரநாதர் சுக்கிரன். பூர நட்சத்திரத்தில் கேது இருப்பின் அங்கு கேது+சுக்கிரன் எனும் இணைவு ஏற்படும்.
இஷ்ட தெய்வம்: குலதெய்வத்தை, அதிலும் அங்குள்ள ஆணும் பெண்ணுமான உக்ர தெய்வத்தை விரும்பி வணங்குவர். அந்த தெய்வங்கள் மாடன், மாடத்தி எனுமளவில் அமைந்திருக்கும்.
குணம்: இவர்களுக்கு யாராவது நன்கு அலங்கரித்துக்கொண்டால் ஆகவே ஆகாது. "இது என்ன சீவி சிங்காரிச்சிக்கொண்டு' என எரிச்சல் படுவர். இவர்கள் ஒழுக்கம், கற்பு சார்ந்து நிறைய குழப்பமும் எதிர்மறை எண்ணமும் உடையவர்கள். இவர்கள் வீட்டிலுள்ள பெண் பிள்ளைகளின் நிலை பரிதாபம்தான்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: கேது எனும் அழுக்கு கிரகம், சுக்கிரன் எனும் அழகு கிரக சாரத்தில் நிற்கும் நிலை.
எனவே இதன் வெளிப்பாடாக இவர்கள், முகத்தில் மரு, புள்ளிகள், கரும்படை போன்றவற்றை நீக்கும் அழகியல் மருத்துவ வேலைபார்க்க இயலும். உடலை இளைக்கச் செய்யும் சிறப்பு மருத்துவப்பணி செய்வர். தொப்பையைக் குறைத்து, மனிதர்களைப் பார்க்க சகிக்கும்படி செய்வர். உடல் முழுவதும் மூலிகை எண்ணெய் மசாஜ் செய்து, சுளுக்கெடுத்து, சுளுவாக்குவர். முதுமை தெரியாமல் என்றும் இளமையாக இருக்கும் மருத்துவ முறையைப் பின்பற்றி, கலையுலகினரைக் கவரச் செய்வர். இன்னும் வழுக்கை மண்டையில் முடி முளைக்கச் செய்வர். ஆக, இதுபோன்ற ஜிகினா வேலைகளைச் செய்வர். இவர்களின் தொழில் காசுள்ள பணக்காரர்களுக்கு உள்ளதாக அமையும். அவர்களைப் பளிச்சென்று, வசீகரமானவர்களாக மாற்றிவிடும் வித்தை அறிந்தவர்கள். கெடுபலன்கள்: ஊரில், நாட்டில் நிறைய பேருக்கு காதல் வரும்தான். ஆனால் இந்த அமைப்புள்ளோர், காதல் செய்யலாமா என்று மண்டைக்குள் ஒரு குட்டி பல்ப் எரிய ஆரம்பிப்பதற்கு முன்பே, படக்கென்று உடைக்கப்பட்டு விடும்.
இவர்களுக்கும் காதலுக்கும் சரிப்பட்டே வராது. இந்த அமைப்பினர், காதல் என்று ஆரம்பிக்கும் முன்பே பட்டென்று அடி விழும். ஆயினும், வயதானால்கூட காதலிக்கும் ஆசை இவர்களை விடவே விடாது. கைகூடவும் விடாது. ஒருமாதிரி வாழ்க்கை வறண்டேதான் இருக்கும்.
நாடிஜோதிடம்: கேது பிரிவுகாரகன். சுக்கிரன் மனைவியைக் குறிப்பார். இதனால் இவ்வமைப்பு ஜாதகர்களுக்கு மனைவியுடன் நீடித்த நிலையான இருப்பு சரிப்படாது. கெமிஸ்ட்ரி ஒத்தே வராது. இந்தப் பிரிவுக்கு, ஆரோக்கியமும் இவரின் தந்தையும் காரணமாகக் கூடும்.
பரிகாரம்: சீர்காழி அருகே அமிர்த ராகுத் தலமான செம்மங்குடி திருக்கோவில் வழிபட நல்லது. இவ்வமைப்பு உள்ளவர்கள் கோவிலில் சுவாமி திருமணம் நடக்கும்போது, நிறைய மாங்கல்யக் கயிறுகளை வாங்கி விநியோகம் செய்வது நல்லது. பெண்கள், அதற்குண்டான விசேஷத்தின்போது, மாங்கல்யக் கயிறை மாற்றி, புதிதாக அணிந்துகொள்ளவும்.
அழகர்மலை ராமதேவர் சித்தரை வணங்கவும்.
12. உத்திரம்
இந்த நட்சத்திர 1-ஆம் பாதம் சிம்ம ராசியிலும், 2, 3, 4-ஆம் பாதங்கள் கன்னி ராசியிலும் விரவியுள்ளது. உத்திர நட்சத்திர சாரநாதர் சூரியன். கேது இங்கு அமர்ந்திருந்தால், அங்கு கேது+சூரியன் எனும் அமைப்புண்டாகும்.
இஷ்ட தெய்வம்: இவர்கள் சங்கரநாரயணர் போன்ற தெய்வத்தை விரும்பி வணங்குவர். இதுபோல் ஸ்ரீரங்கநாதர், அனந்த பத்மநாப சுவாமி ஆகிய தெய்வங்களும் இவர்களின் இஷ்ட தெய்வமாக அமையும்.
குணம்: இவர்களுக்கு, தங்களின் வேலை போய்விடுமோ- அடுத்த தொழில் எப்போது கிடைக்குமோ என ஒரு இனம் புரியாத பதட்டம் இருந்துகொண்டே இருக்கும். மேலும் ஏதேனும் நோய் பாதிப்புக்கு ஆளாகிவிடுவோமோ எனும் பதட்டமும் சந்தேகமும் இருந்துகொண்டே இருக்கும்.
அதிர்ஷ்டமும் தொழிலும்: எப்போதுமே கேது, சூரியன் சம்பந்தம் ஒரு கிரகண நிலையைக் கொடுத்துவிடும். இதற்கேற்றாற்போல், இவர்களின் வேலை, தொழில் அமையும். சிலர் சிறைச் சாலையில் பணிபுரிவர். சிலருக்கு மருத்துவமனை யில் ஆபரேஷன் தியேட்டர், எக்ஸ்லிரே எடுக்குமிடம் போன்ற இருள் சார்ந்த இடத்தில் வேலை கிடைக்கும். சிலர் பிணம் சார்ந்த இடத்தில் வேலை செய்வர். படுத்த படுக்கையாக இருக்கும் முதியோரை கவனிக்கும் துறையில் வேலை கிடைக்கும். மனநல மருத்துவமனை, காப்பகங்கள் போன்ற அதிகம் வெளியே புழங்காத- சற்று இறுக்குமான இடங்களில் வேலை செய்வர். இவர்களின் வேலைகளில் சேவை மனப்பான்மையும் பரிவும், அக்கறையும் கலந்திருக்கும். பொதுவாக மேற்கண்ட இடங்களில் பணிபுரிய பலரும் மிக யோசிப்பர். ஆனால் ஒரு கிரகண நிலை அமைப்புடைய இவ்வித ஜாதகர்கள் இதனை வெகு சாதாரணமாக செய்து முடிப்பர்.
கெடுபலன்கள்: இவர்களுக்கு நான்கு பேரிடம் கலந்து பழகப் பிடிக்காது. இதற்கேற்றவாறு இவர்களின் வேலையும் அமைந்துவிடும். அது சரி; "பிணவறையில் வேலை பார்க்கிறேன்' என்று நெஞ்சு நிமிர்த்தி சொல்ல இயலுமா? இதனால் சற்று தயக்க மனதுடன் வாழ்நாட்களை நகர்த்துவர். வாழ்வு நிலை அதிக வெளிச்சமாக இல்லாமல், சந்தியா காலத்தைப்போல் ஓடும்.
நாடிஜோதிடம்: கேது தயக்கத்தையும், சாரநாதர் சூரியன் தந்தையையும் குறிப்பார். ஆகவே தந்தை இருந்தால், அவருடன் சண்டை ஏற்பட்டு, அவரது முகத்தில் விழிக்காமல் இருப்பர். அல்லது தந்தை ஏதோ காரணத்தால் இவரைவிட்டுப் பிரிந்திருப்பார்.
பரிகாரம்: அரக்கோணம்- வளர்புரம் அருகே வளைகுளம் உள்ளது. இங்கு அமைந்துள்ள திருநாகேஸ்வரரை வணங்கு வது நல்லது. விநாயகர் மற்றும் கேதுவுக்கு விளக்கேற்றுவதும்; உடைத்த கோதுமைக் குறுணையால் செய்த நைவேத்திய விநியோகமும்; சிவனை வணங்குவதும் சிறப்பு. கரூர்- கருவூராரை வணங்குவது நல்லது.
(அடுத்த இதழில் அஸ்தம், சித்திரை, சுவாதி....)
செல்: 94449 61845